Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ 1

பகுதி 1

ஓம் விநாயகனே போற்றி

ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி



Advertisement

ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி

ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி

ஓம் அமிர்த கணேசா போற்றி

Advertisement

என்ற விநாயகரின் 108 போற்றியையும், தன் அருகே கிட்சன் மேடையில் வைக்கப்பட்டிருந்த தொலைபேசி வழியாக.. ஒன்றன் பின் ஒன்றாக‍, மெல்லிய ஒலியில் ஒலிக்க விட்டபடி.. தனது காலை நேர சமையலில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் அமிழ்தினியாள்.

Advertisement

அமிழ்தினியாள், பெயருக்கு ஏற்ற போல் இனிமையான பெண். அவள் முகத்தில் இருக்கும் சாந்தமும், மெல்லிய புன்னகையும் பார்க்கும் யாரையும் ஈர்க்கும் வல்லமை கொண்டது.

Advertisement

‘காலையிலையே குளித்து பூஜை முடித்துவிட்டாள்..’ என்பதற்கு தலையில் இருந்த ஈரமான துண்டும், அவள் முகத்தில் இருந்த திருநீறும், குங்குமமுமே சாட்சியாகியது.

முகத்தை அலங்கரித்த அவ்விரண்டும்.. சமையல் வெப்பத்தால் உண்டான வியர்வையால் லேசாக கலைந்திருந்தாலும், அதிலும் தனி அழகு அவளின் அந்த முகம்.

சோர்ந்து அமர்ந்து பழகாதவள். எதையும் நேர்த்தியாக செய்ய வேண்டும்.. என்ற உறுதி கொண்டவள்.

எந்த நிலையும்.. எடுத்த பணியை சிரத்தையாக முடித்தே தீரவேண்டும்.. என நினைப்பவள் என அவளின் குணத்தை சொல்லிக்கொண்டே போகலாம்.

மும்முரமாக சமைத்துக்கொண்டிருந்தவளை பின்னிருந்து இடையோடு கை கோர்த்து இறுக்கமாக அணைத்து அவளின் தோளில் தலைசாய்த்தது அந்த உருவம்.

அதுவரை இருந்த இதழ் பிரியா புன்னகை இப்போது இன்னும் விரிந்து போனது இனியாளுக்கு.

“என்ன.. அதுக்குள்ள தூக்கம் தெளிஞ்சிடுச்சா..?” என அதே புன்னகையோடு கேட்க,

“ஊகூம்..” என்ற முனங்கலே பதிலானது.

“அப்போ போய் தூங்கு..” என இனியாள் சொன்னதும்,

“ஊகூம்..” என மீண்டும் முனங்கி.. இன்னும் அவளை இறுக்கிக்கொள்ள,

இன்னும் விரிந்த புன்னகையோடே, “ஏன்..?” என்றாள் அந்த பக்கம் வரப்போகும் பதிலை உணர்ந்தவளாக.

“நீயும் வா தூங்க..” என அவள் நினைத்ததையே சொல்ல,

“ப்ம்ச், காலையே என்ன விளையாட்டு. போ, போய் நீ தூங்கு. எனக்கு வேல இருக்கு..” என உச்சு கொட்டி சொல்லி.. அந்த கைகளை விலக்க முயல,

‘முடியாது..’ எனும் விதமாய், அவள் தோளில் பதிந்த முகத்தை மறுப்பாய் ஆட்டியபடி கையை விலக்க மறுக்க,

தனது வலது கரம் கொண்டு கேசத்தை கோதிவிட்டவள்,

“என்னாச்சு என் தங்கத்துக்கு..?” என்றாள் பரிவாக.

“நீ எப்ப பாரு உன் பொண்ணுக்கு தான் இப்பார்ட்டெட் கொடுக்கறே..

அவள மட்டும் தினமும் உன்ன கட்டிக்கிட்டு தூங்க விடற தானே..!

நா மட்டும் தக்காளி தொக்கா..? முடியாது.. இன்னைக்கு அவ முழிக்கும் போது, நீ என்கிட்ட தான் இருக்கனும்.. நீ வா..” என மூக்கை சுழித்து செல்லக்கோபத்தோடு இனியாளின் கையை பற்றி இழுக்க,

“ஏய்.. என்ன விளையாடறையா..? அவ மட்டும் அதை எழுந்து பாத்தா, அப்புறம் வேற வினையே வேணாம்.

கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி இந்த அப்பார்ட்மெண்ட்டையே கதிகலங்க வச்சிடுவா.. இந்த விஷபரிச்சைக்கு நா வரல..” என மறுத்தவளை,

“முடியாது. இன்னைக்கு நானா.. அவளா.. ன்னு ஒரு கை பாத்தே தீருவேன்.

என்னோட இடுப்பு ஒசரம் கூட வளரல. ஆனா, அதுக்குள்ள பாகப்பிரிவினை பண்ணறா..!

நா அம்மா கூட படுத்தா, நீ பெட்டை விட்டு கீழ போய் படுன்னு சொல்றா.. நீயும் சிரிச்சிட்டு அவள கட்டிக்கறே..!

நைட்டே இதுக்கு ஒரு பஞ்சாயத்தை வச்சிணுக்கனும்.. தாய் கிழவி தூக்கம் கெட்டா.. என்னை உண்டு இல்லன்னு ஆக்கிடுவாங்க.. அப்படிங்கற ஒரே காரணத்துக்காக விட்டு கொடுத்தேன். இப்போ.. அதுக்கு அவள நா பழிவாங்கியே ஆகனும்.

நீ தான் சமையலை இன்னேரம் முடுச்சிருப்பியே..? ஒழுங்கா வா.. அவளை இன்னைக்கு நா வெறுப்பேத்தியே ஆகனும்..” என பிடிவாதமாய் நிற்க,

“அவ குழந்தை. அவகூட மல்லுக்கட்டறையே இது உனக்கே நல்லா இருக்கா..?!” என சலித்தபடி இனியாள் சொல்ல,

“நல்லா இல்ல தான். ஆனா அந்த குட்டிச்சாத்தானை வம்பு இழுக்காம இருக்க முடியலையே.. வாட் டு டூ..? அதோட இந்த பொசச்சீவ் வேற விட மாட்டிங்குது.

அதனால.. நீ என்ன பண்ணறே.. அடுப்ப அணைச்சிட்டு, என்கிட்ட வந்து படுக்கறே. அவள இன்னைக்கு நா வெறுப்பேத்தறேன்..” என சொன்னதும்,

“உங்க போதைக்கு நா ஊறுகாய் ஆக விரும்பல ராசாத்தி. ஆள விடு.

நீ குளிக்காம கொள்ளாம வந்து கட்டிக்கிட்ட அப்போவே.. கையில ரெண்டு போட்டு தள்ளி விட்டிருக்கனும்.

அது விட்டு பாவம் புள்ள ன்னு கொஞ்சினா.. என் மககிட்டையே என்னை மாட்டிவிட பாக்கறே..? ஓடி போயிடு.

உங்கள நம்பி இடையில வந்தா சித்தியும் மகளும் சேர்ந்து.. என்ன ஒரு வழியாக்கிடுவீங்கன்னு எனக்கு தெரியும்..” என சொல்லிவிட்டு தனது வேலையை கவனிக்க துவங்க,

“ச்சே.. நீயெல்லாம் ஒரு அக்காவா..? கொஞ்சம் கூட என் மேல பாசமே இல்ல. நா கோபமா போறேன்..” என்றவள்,

பேச்சிற்கு இடையே.. இனியாள் அங்கே தயாராக்கி வைத்திருந்த காஃபியை வேகமாக எடுத்து கொண்டு செல்ல,

“கோபமா போறவளுக்கு எதுக்கு காஃபி..? அந்த காஃபி டம்ளாரை வச்சிட்டு கிளம்பு..” என சிரித்தபடி சொல்ல,

“முடியாது. அது எனக்கு போட்ட காஃபி. நா தான் குடிப்பேன்..” என்று அதை வாயில் வைக்க போக,

“ஏழு கழுத வயசாகுது. பல்லு வெளக்காம கூட காஃபி கேட்குதா..? எல்லாம் இவள சொல்லனும்..” என்ற படி வந்த தனத்தின் குரலில்..

“அய்யோ மம்மீ…!” என்றபடி பதட்டத்தில் சட்டென மொத்தமாக வாயில் கவிழ்க்க பார்த்து பாதி அவள் முகத்திலும் உடையிலும் கொட்ட,

‘ஒய் மம்மீ…!’ என்ற பரிதாப பார்வை பார்த்த சம்யுக்தாவை கண்டு, இனியாளுக்கு சிரிப்பை அடக்குவது பிரம்ம பிரயத்தனம் ஆனது.

“யூ டூ சிஸ்டர்..?. இந்த வீட்டுல குட்டீஸ்ல இருந்து பாட்டீஸ் வரைக்கும் என்ன கண்டா மட்டும் ஈனா வானாவா தெரியுது போல..” என முகத்தை சோகமாக வைத்தவள்,

“வந்து உன்ன வச்சுக்கறேன் தாய் கிழவி..” என யாரின் காதிலும் விலாதபடிக்கு தன் வாயிக்குள் முணுமுணுத்தபடி, அந்த இடத்தை விட்டு வேகமாக பாத்ரூமுக்குள் சென்று மறைந்தாள்.

சம்யுக்தா.. கொஞ்சம் குறும்பும், குடும்பத்தின் மீது பாசமும் கொண்டவள்.

இனியாள் பார்க்கவே இனிமை என்றாள்.. சம்யுக்தா பழகினால் இனிமையை உணர வைப்பவள்.

கொஞ்சமும் முன்யோசனை இல்லாமல் வார்த்தையை கொட்டிவிட்டு, பின் யோசிப்பவள். அது தான் அவளின் மிகப்பெரிய குறை..

ஆனால் மிகமிக பாசக்காரி.. அவள் மட்டும் இல்லாவிட்டால்.. இனியாளும், வெண்பாவும் இன்று இருக்கும் நிலையில் இருந்திருக்க முடியுமா.. என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.

அக்கா மகளுடன் அடிக்கடி வரும் ஊடலும், அம்மாவின் அதட்டலும் அவளுக்கு நித்தமும் வேண்டும். இல்லாவிட்டால்.. தலையே வெடித்து விடும்.

தன் சுற்றத்தாரை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க எதையும் செய்யும் செல்ல சேட்டைக்காரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!