“ஏறு ஏறு…” என்று ஈசனும் சொல்ல, பின்னோடு வந்த மரகதமும், “கார்ல ஏறு லட்சுமி… சீக்கிரம் போயிடலம்ல…” என்று சொல்ல,
‘அட ஈஸ் மாமா எனக்காக கார் எடுத்தாங்களா…’ என்று அவளால் தன் திகைப்பைக் கூட முழுதாய் ருசிக்க முடியவில்லை..
காரில் ஏறி அமர்ந்துவிட, அடுத்த நொடி மரகதத்திற்கு தலையசைப்பை கொடுத்துவிட்டு ஈசனது பொலிரோ பறக்கத் தொடங்கியது. சீட் பெல்ட் போட்டாலும் அவளால் ஒருநிலையில் அமர முடியாமல் போக, இரண்டொரு முறை ஈசன் மீதே பக்கவாட்டில் மோத,
ஒருநிலையில் பொறுக்காமல், “மெல்ல போறீங்களா இல்லையா..” என்று கத்திவிட்டாள்.
அவளை லேசாய் திரும்பிப் பார்த்தவன், அடுத்த நொடி வேகத்தை குறைக்க, பொலிரோ கட்டை வண்டியை விட மெதுவாய் நகர, லட்சுமிக்கு ‘என்னடா இது…’ என்றானது..
ஈசனுக்கோ சிரிப்பை அடக்கவே முடியவில்லை.. அதுவும் நேற்றிலிருந்து லட்சுமியை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பாய் வந்தது.. அவளோடு இயல்பாய் பேசவேண்டும், வம்பிழுக்கவேண்டும், அவளைத் தன்னை செல்லமாய் முறைக்க வைக்க வேண்டும் என்றெல்லாம் தோன்ற, அவனுக்கே தன்னை நினைத்து ஆச்சர்யம் தான். கடமை கண்ணாயிரமாய் இத்தனை நாள் இருந்தவன், காதல் கிறுக்கனாய் மாறிக்கொண்டு இருப்பது அவனுக்கு புரிந்தால் நன்றாய் இருக்கும்.
கார் கட்டைவண்டியை விட ஊர்ந்து செல்ல, “நீங்க இப்படியே ஓட்டினா… நான் இறங்கிடுவேன்…” என்றாள் லட்சுமி.
“லஷ்மி.. நீதான மெல்ல போக சொன்ன…”
“இப்படி போனா நாளைக்கு கூட காலேஜ் போய்ச் சேரமாட்டேன்…”என்றவள் கடுப்படிக்க,
“இப்போ என்ன… இன்னைக்கு போனாலும் அதே காலேஜ் தான் நாளைக்கு போனாலும் அதே காலேஜ்தான்…” என்று ஈசன் புது தத்துவம் பேச, லட்சுமிக்கு மீண்டும் “ஹா…” என்று வாய் பிளக்கும் நிலை..
‘என்னாச்சு ஈஸ் மாமாக்கு…’ என்று அவனை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருக்க, அவளைது அலைப்பேசி சப்தமிட, எடுத்துப் பார்த்தவள் ஸ்நேகா என்று தெரியவும் இன்னுமே கூட தன் ஆச்சர்யத்தில் இருந்து வெளிவராமல்
“ஹலோ…” என்றாள்..
“என்ன ஹலோ… இன்னிக்காவது கிளாஸ் வர எண்ணம் இருக்கா இல்லையா லஷ்மி…” என்று ஸ்நேகா அந்தபக்கம் பொரிய,
“ம்ம்ச் லூசு… லேட்டா எந்திரிச்சேன்.. அதான் ஈஸ் மாமா கார்ல டிராப் பண்ண வர்றாங்க…” என்று சொல்லி முடிக்கவில்லை இதனை கேட்டுகொண்டிருந்த இருவருக்குமே ஆச்சர்யம்..
ஸ்நேகா “என்னடி சொல்ற நிஜமாவா??” என்று அந்தபக்கம் வாய் பிளக்க,
ஈசனோ ‘என்ன ஈஸ் மாமான்னு சொல்றா.. அப்.. அப்போ கோவம் போயிடுச்சா…’ என்று எண்ணியபடி அவளைப் பார்க்க, லட்சுமிக்கோ என்ன சொன்னோம் என்றெல்லாம் நினைவில் இல்லை..
அவள் எப்போதுமே ஈசனை, ‘ஈஸ் மாமா…’ என்று தானே எல்லாரிடமும் சொல்கிறாள்.. என்ன அவனிடம் மட்டும் அப்படி சொல்வதில்லை.. அடுத்து இரண்டு நொடி ஸ்நேகாவிடம் பேசிவிட்டு வைத்தவளை, மீண்டும் அலைபேசி அழைக்க, பேச்சி தான் அழைத்தார்..
“என்னம்மா….”
“சாயங்காலம் சீக்கிரம் வந்திடுவியா லட்சுமி..??”
“தெரியாதும்மா.. எதுக்கு??”
“அது, ரேவதி பொண்ணு கல்யாணம் வருதுல்ல, அதான் அவளுக்கு எதாவது வாங்கலாம்னு பார்த்தேன்.. நீ வந்தா தேனிக்கு போகலாம்னு…” என்று பேச்சி இழுக்க,
“சரி பாத்து போ.. பர்ஸ் எல்லாம் சூதானமா வச்சிக்கோ…..” என்று பேச்சி தினம் சொல்லும் அறிவுரையைச் சொல்ல,
“ம்மா… நான் ஈஸ் மாமாக் கூட கார்ல போறேன்…” என, இம்முறையும் ஈசன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
இதை கேட்டதும் பேச்சிக்கு மனம் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.. அவருக்குத் தெரியாதா மகளைப் பற்றி.. சொல்லப் போனாள் லட்சுமியை பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது தான்.. ஆனாலும் அவள் இப்போது வந்திருந்த போது நிறைய லட்சுமியைப் பற்றி தெரிந்துகொண்டார்.. லட்சுமியும் நிறைய அவரிடம் மனம் விட்டு பேசியிருந்தாள். யாராவது ஒருவரிடமாவது தன் மனதில் இருப்பதை எல்லாம் சொல்ல வேண்டுமே..
ஆனாலும் அவள் அங்கே கிளம்புகையில் “மனசுல எதையும் வச்சிட்டு போகலையே..” என்று மகளை விசாரிக்கவும் மறக்கவில்லை.
“ஹ்ம்ம்… எனக்கும் ஈஸ் மாமாக்கும் இருக்க பிரச்சனைல அவங்க எல்லாரையும் நான் ஒதுக்கினது தப்புத்தானே ம்மா..” என்று சொல்லிச் சென்றவள் கணவனோடும் சேர்ந்து இயல்பான ஒரு வாழ்வை வாழத் தொடங்கிவிட்டால் அனைத்தும் சரியகிவிடும் என்று ஒரு தாயாய் அவர் எதிர்பார்க்க, அதற்கான சாத்தியக் கூறுகள் ஒன்றுமே அவருக்குத் தெரியவில்லை..
ஈசனிடம் சென்று கேட்க முடியாதே.. ஒருவேளை சக்திவேல் இருந்திருந்தால் கேட்டிருப்பாரோ.. ‘நீ என் பொண்ண சந்தோசமா வச்சிருந்தா அவ எதுக்கு இங்க வரப்போறா…??’ என்று..
ஆனால் இப்போது லட்சுமி சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அவர் மனம் ஆறுதல் அடைந்தது.
ஆனால் ஈசனுக்கோ ‘எல்லார்கிட்டயும் ஈஸ் மாமா ஈஸ் மாமான்னு சொல்வா.. ஆனா என்கிட்ட முகம் பார்த்து கூட பேசுறதில்ல…’ என்று பல்லை கடிக்க, காரின் வேகம் தன்னப்போல் கூடியது..
அத்தனை நேரம் ஊர்ந்து போன கார் இப்போது மீண்டும் பறக்கத் துவங்க, பேச்சியிடம் பேசிவிட்டு வைத்தவள், ஈசனை பார்த்து, “இப்போ ஏன் மறுபடியும் இவ்வளோ வேகமா ஓட்டுறீங்க…???” என, அவள் கேட்க கேட்க இன்னும் வேகம் எடுத்தது..
என்னதான் சமாளிக்க முயற்சித்தும் முடியாமல் போக, இறுதியில் லட்சுமி “ஐயோ மாமா… எதுக்கு இப்போ இவ்வளோ வேகமா ஓட்டி என்னை பயப்பட வைக்கிறீங்க…” என்று கத்த, ஈசன் முகத்தில் சட்டென்று ஒரு புன்னகை..
“ஹா… என்ன சொன்ன.???” என்று காதே கேட்காதவன் போல் கேட்க,
“இப்போதான நல்ல பொண்ணா பேசின.. மறுபடியும் என்ன.???” என்று அவளுக்கு சுத்தமாய் புரியாமல் பேச, ‘ஷ்… நிஜமாவே லூசு தான் ஈஸ் மாமாக்கு…’ என்று முடிவு கட்டும் நேரம்,
“என்ன பாக்குற… எல்லார் கிட்டயும் ஈஸ் மாமா ஈஸ் மாமான்னு சொல்ற.. ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்றதில்ல…” என்றான்..
“என்ன சொல்லணும்…” என்றாள் அப்போதும் புரியாமல்.
பொதுவாய் எப்போதுமே அவள் சொல்வது செய்வது தான் ஈசனுக்குப் புரியாது.. இப்போதென்னவென்றால் அதெல்லாம் தலைகீழாய் நடக்க, ஈசனோ இன்னும் இன்னும் சிரித்தான்..
“ம்ம்ச் மாமா இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க…” என்று லட்சுமி எகிற,
“இதோ இதோ இதுக்கு தான்…” என்று அவனும் விரல் நீட்டி சொல்ல, ‘எதுக்கு…’ என்று லட்சுமி புரியாமல் பார்க்க,
“அடடா மக்கு பொண்டாடியா இருக்காளே… கணக்கு பாடம் படிக்கிற.. இதெல்லாம் டக்குன்னு கேட்ச் பண்ண வேணாமா….” என்றவன், “நீ மாமா சொன்னதுக்கு தான் சிரிச்சேன்… ஈஸ் மாமான்னு சொல்லிருந்தா இன்னும் கொஞ்சம் சேர்த்து சிரிச்சிருப்பேன்…” என்றான்.
‘அட…. இதுக்கா…’ என்பது பார்த்தவளின் கண்கள் அழகாய் விரிந்தது..
ஈசனை அப்படி அழைக்க கூடாது என்றெல்லாம் லட்சுமி நினைக்கவில்லை. ஈசனோடு ஒரு மனப் பிணக்கு, ஒரு கோவம், ஒரு ஒதுக்கம் என்று உருவான பின் இப்படியான அழைப்புகள் அதுவே விட்டு போனது அவ்வளவே..
ஆனால் அதைக்கூட ஈசன் கவனித்திருக்கிறான் என்று நினைக்கும் போதே ‘அப்… அப்போ ஈஸ் மாமா என்னை கவனிக்கிறாங்களா…???’ என்ற எண்ணம் வர, சொல்லாமல் கொள்ளாமல் வேகமாய் வந்து செல்லும் சாரல் காற்று போல நொடிப்பொழுதில் லட்சுமி மனம் இதம் கண்டது என்னவோ உண்மை தான்..
ஆனாலும் இத்தனை நாள் இல்லாமல் இப்போ என்ன திடீரென்று என்றும் தோன்ற, முகத்தை திருப்பிக்கொண்டாள். இவ்வளோ நேரம் தன்னையே கண்களை விரித்து பார்த்துகொண்டிருந்தவள், இப்போது சட்டென்று முகத்தை திருப்பவும் ஈசனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது..
‘இப்போதானே நல்லா பேசினா அதுக்குள்ள என்ன’ என்றெண்ணியவன் மனதில் இதெல்லாம் தொடர விடக்கூடாது என்ற பிடிவாதம் எழ, காரை சாலையின் ஓரமாய் நிறுத்திவிட்டான்..
அத்தனை நேரம் முகத்தை வருடிச் சென்ற காற்று இப்போது காணாமல் போயிருக்க, அப்போது தான் லட்சுமி என்ன என்று திரும்பிப் பார்க்க, ஈசனோ கண்களை மூடி சாய்ந்திருந்தான்..
“என்னாச்சு எதுவும் கார் ரிப்பேரா???” என்றாள்..
“ம்ம் ஆமா.. கார் இல்ல.. வாழ்க்கையே ரிப்பேர்…” என்றான் ஈசனும்..
பதில் என்னவோ வந்ததுதான் ஆனால் ஈசனிடம் அசைவில்லை.. எதுவோ யோசனையில் இருப்பவன் போல் நெற்றியை சுருக்கி கண்களை இறுக மூடியிருக்க, கைகளை கட்டி சாய்ந்திருந்தவனின் தோற்றம் லட்சுமிக்கு என்ன உணர்த்தியதோ,
“மாமா என்னாச்சு.. உடம்புக்கு எதுவும் முடியலையா..???” என, அவள் குரலில் இருந்த பதற்றம் கண்டு ஈசன் வேகமாய் அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான்..
அவன் வேகமாய் திரும்பியதில் லட்சுமி தன்னையறியாமல் லேசாய் பின்னே சாய அவனோ அதனினும் வேகமாய் அவள் தோள்களை இறுக பற்றி,
“ஏன் டி இப்படி பண்ற??? ஏன் இப்படி இருக்க….” என்றான் பல்லை கடித்து.
நிஜமாகவே ஈசனுக்கு இப்போது லட்சுமியை ஒருநிலையாய் கணிக்கவே முடியவில்லை.. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு மாதிரி இருக்கிறாள்.. சில நேரம் அவளாகவே நெருங்கி வருவது போல் இருக்கிறது, அப்படியா என்று அவளை பார்க்கும் போது எங்கோ தூரமாய் தள்ளிப் போனது போலிருக்கிறது..
இப்போது கூட கொஞ்ச நேரம் முன்னாடி முகத்தை திருப்பினாள் பின் சட்டென்று அவளே பதற்றமாய் என்னாச்சு என்கிறாள்.. அப்போ அவனும் தான் என்ன செய்வான்.. இதில் எந்த லட்சுமியை தான் அவன் நிஜமென்று நம்புவான்..
தள்ளி நிற்பவளா ?? இல்லை அவள்பால் அவனை தள்ளுபவளையா??
இப்படி பொறுத்துப் போவதும் அவனது சுபவமில்லையே.. சரி சரி என்று அவனும் இத்தனை நாள் பொறுமையாய் போக, இப்போதோ அவனாகவே லட்சுமியோடு இணங்கி கொஞ்சம் நல்ல படியாய் வாழவேண்டும் என்று நினைக்கும்போது அவளது செய்கைகள் எல்லாம் ஒன்றும் புரியாமல் இருக்க, அவனது உணர்வுகள் கட்டுக்கடங்காமல் தான் போனது..