நேற்றே பத்திரம் எல்லாம் பதிவிட்ட நிலையில் மீதி வேலைகள் முடிந்து, இன்று எல்லாம் சரி பார்த்து பட்டா பெயர் மாறுதலுக்காகவும் விண்ணம் செய்து, என மீதி வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தது.
வினோவும், அகிலும் காலையிலிருந்து அதில் சற்று பிஸியாக இருந்தனர்.
இன்று மகியை டிச்சார்ஸ் செய்யும் நாள், எனவே மருத்துவர்களின் முழு பரிசோதனைகளுக்கு பிறகு, எப்படி உணவு கொடுக்க வேண்டும், கால் அசைக்க கூடாது, அளவாக பேச வேண்டும்’ என்ற கட்டுபாடுகளுடன் மாலை போல் வீடு வந்து சேர்ந்தான் மகி.
மேலே செல்லமுடியாத காரணத்தால், இப்போது துர்காவும் பிள்ளைகளும் இருக்கும் அறையையே தயார் செய்திருந்தனர். நன்கு பெரிய ஹால், டைனிங் ஹால், பூஜை அறை மற்றும் ஐந்து அறைகள் கீழே கொண்ட கொஞ்சம் பெரிய வீடு தான்.
மேலேவும் ஒரு பெரிய ஹால், அதனை தொடர்ந்து மூன்று அறைகள், பின் பெரிய பால்கனி போன்று ப்ரீ ஸ்பேஸ், எப்போதும் மகிக்கு சத்தம் கூடாது எனவே மேலே தான் மகியின் வாசம், இங்கும் சரி, மேட்டூரிலும் சரி.
இப்போது இங்கு, பெரியம்மாவிற்கு தனி அறை. அதை தவிர ராஜேஷ் ஒன்றில் இருக்கிறான், இன்னொன்றில் அகிலும், மற்றதில் வைதேகியும் இருப்பதால் துர்காவின் அறையையே மகிக்கு சரி செய்யப்பட்டது. வீடே பரபரப்பானது, அவன் வருகையை எதிர்பார்த்து.
காலையிலேயே, சுகவனேஸ்வரர் கோவிலில் அபிஷேகத்திற்கு கொடுத்திருந்தார் வைதேகி, எனவே, மகி, துர்கா, ராஜேஷை தவிர மற்ற அனைவரும் சென்றனர். குழந்தைகள் எல்லாம் லீவ் வேறு. எனவே கலகலப்புக்கு பஞ்சமில்லை.
மகி வரவும், துர்காவின் வீட்டினர் பார்க்க வந்தனர். பின் வினோ வீட்டினர், அக்கம் பக்கத்தினர், மேட்டூரி வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் இங்கு வேலை செய்பவர்கள் என வீடே சற்று ஆடியது. ஆனால் வீட்டு ஆட்கள் முகத்தில் ஒரு நிறைவு தான் இருந்தது.
நித்யாவும், துர்காவும் தான் சற்று ஓய்ந்து போயினர். என்ன தான் வேலையாட்கள், இருந்தாலும் இன்று சற்று கூட்டம் என்பதால் சமாளிக்க கொஞ்சம் திணறினர்.
வீட்டு மனிதர்களுக்கு கூட இன்று ஹோட்டலில் உணவு சொல்லியாகி விட்டது. மகி ராஜேஷை அழைத்து ‘பணியாளர்களுக்கு, நீயே, கூட்டி சென்று உணவு வாங்கி கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும்’ என சொன்னான் மகி.
எல்லாம் முடியவே மணி 11. துர்கா மகியை பார்ப்பது, உணவை வாயில் வைப்பது என இருந்தாள். இன்னும் மகி, மாத்திரைகள் சாப்பிடவில்லை. மிகவும் சோர்ந்து தெரிகிறாரோ என எண்ணம் அவளிற்கு.
ஆனால், மகி திடமாகவே இருந்தான். ஒரு புத்துணர்வு வந்தது அவனுள். அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்திருந்தான், அதானே அவனின் வேலை. பார்க்க வந்தவரின் கேள்விகளுக்கு எல்லாம் துர்கா, அகில் தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.
இப்போதும் அனைவரும் சென்ற பிறகும் ஏதோ ஒரு யோசனை, ஆழ்ந்த மௌனத்தில் இருந்தான். அவனிற்கு இப்போது இன்னும் பொறுப்புகள் அதிகமாகியதாக தான் தோன்றியது. அனைத்து ஊழியர்களையும் ஒரு சேர பார்க்கவும் இப்படி ஒரு எண்ணம்
ராஜேஷ், வெளியிலிருந்து வந்தவன். அவனின் அமைதி பார்த்து “ண்ணா, படுக்காலாம் டயடா தெரியறீங்க” என சொல்லி மகியை ரூமினுள் அழைத்து சென்றான்.
ஒரு கால் தரையில் அழுந்தாமல் மகி நடக்க வேண்டும், எனவே, யாரேனும் உடன் வேண்டும் அவனிற்கு.
ராஜேஷ், மகிக்கு மாத்திரைகள் கொடுத்த பிறகே வெளியே வந்தான். துர்காவிடம் வந்து “மாத்திரை சாப்பிட்டாச்சு அண்ணி, நீங்க பால் மட்டும் கொண்டு போனால் சரி” என கூறியவன் உறங்க சென்றான்.
துர்காவும் நித்யாவும் உண்டு முடித்து. எல்லாம் எடுத்து வைத்து ஒரு அரை மணி நேரம் கழித்து தான் உறங்க சென்றனர். நித்யா, துர்காவை “நீ போ, பெரிய பாவா தூங்கிட போறாங்க, பால கொண்டு போய் கொடு” என்றாள். துர்கா செல்லவில்லை, வேலையை முடித்தே சென்றாள்.
இந்த மூன்று நாட்களில், நித்யா தான் பார்த்துக் கொண்டாள். நேரத்திற்கு, மருத்துவமனைக்கு உணவு கொடுத்து விட்டு. குழந்தைகளை வேறு சமாளித்து என நித்யா தான் பாவமாக தெரிந்தாள் துர்காவிற்கு.
அகிலின் குடும்பம், இன்றே கிளம்புவதாக தான் இருந்தனர், ஆனால் வேலை நிறைய இருந்ததால், மகி தான் காலையில் செல்லுமாறு பணித்தான்.
துர்கா உள்ளே வர, மகி நல்ல உறக்கத்தில் இருந்தான். சர்வேஷ் பெரியம்மவுடனும், மற்ற பெரிய பசங்க மூவரும் வைதேகியுடனும் உறங்கினர்.
ப்ளஸ்கில் தான் பால் எடுத்து வந்திருந்தாள். அதனால் சத்தமில்லாமல் டேபிளில் வைத்தவள். வாஷ்ரூம் சென்று ஒரு குளியலை போட்டு, நைட்டி மாற்றி கட்டிலின் அந்த புறம் வந்து மெதுவாக அமர்ந்த வண்ணம் மகியை தான் பார்த்திருந்தாள்.
எத்தனை நாளாயிற்று இவன் அருகில் உறங்கி, என தான் தோன்றியது அவளிற்கு. அவளிடம் கொஞ்சம் ஒதுக்கம் இருந்தாலும் நிறைவு இருந்தது.
ஆனால், மகி இறுக்கமாகவே உறங்கிக் கொண்டிருந்தான். முகம் தளர்வை காட்டவில்லை, கண்ணோரங்களில் சிரிய சுருக்கங்கள் இதை பார்த்த துர்கா தனது விரல் கொண்டு, மகியின் நெற்றியில் நீவ, அந்த இறுக்கம் குறைந்து, சற்று தளர்வானான். எழவெல்லாம் இல்லை நல்ல உறக்கம்.
அவனை எழுப்ப மனம் வரவில்லை, ‘தூங்கட்டும், பால் தானே ‘ என நினைத்து விட்டுவிட்டாள். ஏசியை லேசாக குறைத்து வைத்துவிட்டு, தான் போர்த்திக் கொண்டு உறங்கினாள்.
நிம்மதியான உறக்கம் இருவருக்கும், காலையில் எப்போதும் போல் 5 மணிக்கு மகியின் அலாரமும், துர்காவினதும் ஒன்றாக அடித்தது. மகி ஒரே சத்தத்தில் விழித்து விட்டான்.
இருவரின் போனும் டேபிளில் இருந்ததால், கை எட்டவில்லை அவனிற்கு, துர்கா இப்போது தான் விழிப்பு வரவும் சடாரென எழுந்தாள், ‘அவன் தூங்குகிறானே, எழுந்துவிட்டால்’ என நினைத்து இவள் விழிக்க. மகி அவளையே பார்த்திருந்தான்.
“சாரி“ என சொல்லியவள் அவசரமாக சென்று, அலாரத்தை நிறுத்தினாள். “நீங்க தூங்குங்க” என்றாள். “அவ்வளவு தான் விழிப்பு வந்தாச்சு, ராஜேஷை எழுப்புரியா” என்றான், சோம்பலாக.
“ஏன் “ என கேட்டேவிட்டாள் துர்கா, மகி “இல்ல, என்னை” என தொடங்கும் போது, “நான் கூட்டி போறேன் வாங்க“ என்றாள். “இல்ல சரியா வராது” என மகி சொல்ல, “வாங்க பாவா” என அசால்ட்டாக சொன்னவள், அவனை எழுப்பினாள்.
மருத்துவமனையில் எல்லாம், ராஜேஷ் உடனிருந்ததால், அவனே பார்த்துக் கொண்டான். இப்போது துர்கா தன்னை பிடித்துக் கொள்ளவாளா என தயக்கம். ஆனால், அவள் எதையும் அலட்டிக் கொள்ளாமல் சொல்லவும் அவனும், ஒன்றும் சொல்லாமல் எழுந்து அவள் தோள்களை பிடித்துக் கொண்டு வாஷ்ரூம் சென்றான். அவன் கூப்பிடும் வரை, டிவி போட்டு அமர்ந்தாள்.
“பன்னீரை தூவும் மழை
ஜில் என்ற காற்றின் அலை….” என ஜேசுதாஸ் அந்த காலை நேரத்தை அவளுக்கு இனிமையாக்கிக் கொண்டிருந்தார். இவளும் நீண்ட நாள் கழித்து ஒரு துள்ளலான மனநிலையுடன் டீவியில் ஆழ்ந்தாள்.
இப்போது, அவன் அழைக்கவும் சென்று கூட்டி வந்தாள்.
பிரஷ் செய்திருந்தான். “ஏன் என்னை கூப்பிடல, ஸ்டூல் எடுத்து போட்டு இருப்பேன்ல” என்க. “பரவாயில்ல” என்றான் ஒட்டாமலே. ஒரு சேரில் அமர வைத்தாள். அடுத்த பாட்டு சென்று கொண்டிருந்தது.
“வா வா அன்பே அன்பே…..
இவள் அந்த பாட்டு முடிவதற்காக நின்று கொண்டிருந்தாள், ‘எந்த ராஜா பாட்டு, என்றாலும் நான் கேட்க போவதில்லை’ என்ற ஒருபாவம் அவன் முகத்தில்.
மகி அவளையே உற்று பார்க்க, “இதோ இப்போ முடிஞ்சிடும் “ என சொல்லிக் கொண்டே நின்றுக் கொண்டிருந்தாள். மகி கடுப்பாகி “போடி, காலையில வெட்டியா” என்ற பிறகே நகர்ந்தாள்.
“பத்து நிமிஷம் இருங்க நான் குளிச்சிட்டு போய் காபி எடுத்து வரேன் “ என்றாள். மகி “ஒன்னும் அவசரமில்லை” என சொல்லி டிவி ரிமொர்ட் எடுத்தான். அவனுக்கு நியூஸ் பார்க்கணும் போல.
துர்கா சீக்கிரமாக குளித்து வெளியே வர, புடவை கட்ட வேண்டும். மகி அங்கு இருப்பதால், கொஞ்சம் தடுமாற்றம் ஏதேதோ நினைவில் வந்து போனது, ‘நல்ல வேலை திரும்பி அமர்ந்திருக்கிறான்’ என நினைத்துக் கொண்டே புடவையை கட்டினாள், மகியை பார்க்கவேயில்லை.
வெளியே சென்றாள், அங்கு யாரும் எழவில்லை. எனவே மகிக்கும், தனக்கும் காபி எடுத்துக் கொண்டு மீண்டும் வந்தாள்.
மகி “இன்னைக்கு நீ ஷோ ரூம் போயிட்டு வந்திடு“ என ஆரம்பித்து ஏதேதோ சொன்னான். எதையும் மீற முடியாத வகையில் சொன்னான். சரி சரி என தலையாட்டிக் கொண்டே இருந்தாள் துர்கா.
“லேப்டாப்ப, எடுத்து கொடுத்துட்டு போ” என்றான் எல்லாம் சொல்லி முடித்து. துர்கா “கொஞ்ச நேரம் பாடுங்களேன், வலிக்கல” என்றாள். முறைத்தான் அவளை.
துர்காவிற்கு இப்போது முகமே வாடி போனது. ‘நான் சொல்லி எதை கேட்பார்’ என நினைத்துக் கொண்டே அவன் கேட்டதை செய்தாள். அதையெல்லாம் கணக்கில் எடுக்காதவனாக தன் வேலையை தொடர்ந்தான்.
அவள் மற்ற எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்ப மகி “இன்னைக்கு ஷோரூம்க்கு, ஒரு தியட்டர் பெயர் சொல்லி “அங்கிருந்து வருவாங்க, நீ தான் பேசணும், டெஸ்ட் டிரைவ் அரேஞ் பண்ணிக் கொடு” என இன்னும் ஏதோ சன்ன குரலில் சொன்னான்.
‘இவர் சொல்றத மட்டும் நான் கேட்கணும், ஆனா நான் எத சொன்னாலும் கேட்கறதில்லை, உட்கார்ந்த இடத்திலிருந்து எல்லாரையும் படுத்தி வைக்க வேண்டியது’. என உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது அவளிற்கு.
மகி இப்போது “என்ன ஓகேவா” என்க பே பேன்னு இவள் விழிக்க, திரும்பவும் “என்ன டி “ என குரல் சலிப்பாக வந்தது. அவனிற்கு தான் செய்யவேண்டிய வேலையை தன் மனைவியை வைத்து செய்கிறோமே என்ற எண்ணம். அதன் சாயல் அதில் தெரிந்தது.
உடனே துர்கா “சரி பாவா, நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் , நீங்க கவலைபடாதீங்க” என்றாள். ஆனால் திரும்பவும் “நீங்க கொஞ்ச நேரம் படுக்கலாம்ல” என்றாள்.
மகி லேசாக சிரித்த வண்ணம் “இல்ல ஸ்ரீ, சாமி சார்க்கு சில மெயில் அனுப்பனும். நாளைக்கு சங்க மீட்டிங், என் சார்ப்ப நீ தான் போகணும், கொஞ்சம் உனக்கும் விவரம் சொல்லணும், நீ போய் வேலைய முடிச்சிட்டு வா” என்றான், சிறு குரலில்.
துர்காவும் அவனை பாவமாக பார்த்து வெளியே சென்றாள்.
மகியும் தீவிரமாக தன் வேலையை செய்து முடிக்கவும், பசங்க எல்லாம் வந்தது இவனிடம். ‘பெரியப்பா, அப்பா’ என ஒரே சத்தத்துடன் தான் வந்தது. அவர்களுக்கு ஸ்கூல் கட்டடிக்க யாராவது தேவை’ மகிக்கு இது புதிது.
அவன் நின்று, பார்த்திருந்தால் இதெல்லாம் தெரியும் அவன் தான் எல்லா நேரமும் தன் வேலையை மட்டும் பார்த்திருப்பானே. மகி சிரித்துக் கொண்டே பார்த்திருந்தான்.
மகியிடம் வந்து “இன்னைக்கு மட்டும் லீவ் போட்டுக்கறோம்“ என கோரஸ் எல்லாம். அனைவரும் பார்த்திருந்தனர்.
“ திரும்பவும் மகியே “அப்படி இல்லைனா, எல்லோரும் சமர்த்தா கிளம்பினால், கமல் இந்த வாரம் மேட்டூர் வருவான். 2 டேஸ் லீவ், ஏது வேண்டும்” என்றான்.
எல்லாம் சோகமே உருவாக என்றாலும் “சரி கிளம்பறோம்“ என்றனர். மகி சரியான தந்தையா, கணவனா தெரியாது. ஆனால் தேர்ந்த வியாபாரி. அதான் இப்படி.
துர்கா தலையில் அடித்துக் கொண்டு, சிரித்தவாறே உள்ளே சென்றுவிட்டாள். ராஜேஷ் தான் மகியை பார்த்து “உன்னையெல்லாம் இன்னும் வைச்சு செய்யணும்“ என்றான் சிரித்தவாறே. அகிலுக்கும், நித்யாவிற்கும் தான் ‘அப்பாடா’ என்றானது.
அவர்கள் குடும்பம் மேட்டூர் கிளம்பினர். கொஞ்சம் லேட் ஆகும் தான், ஆனாலும், பள்ளியில் சொல்லி, விட்டு விடலாம் என கிளம்பினர்.
கமலும் பள்ளி கிளம்பினான். மகிக்கு இப்போது வீடே அமைதியானது போல் இருந்தது. நான்கு பசங்க, ஒன்னு, இரண்டு வயது வித்தியாசத்தில் எப்போதும் ‘டோம் டோம்’ என சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
’யார், படியிலிருந்து குதிக்கிரானா, பால்கனியிலிருந்து குதிக்கிரானா தெரியாது, அவர்களின் குரல் கேட்டால் தான் எந்த இடத்திலிருந்து விழ்ந்தனர் என்றே தெரியும். பெரியவர்கள் அனைவரையும் அவர்கள் பின்னால் தான் சுற்ற வைத்தனர்.
துர்கா அவனிற்கு டிபன் எடுத்து வர, அந்த அமைதியுடனேயே உண்டான். துர்கா “என்ன யோசனை” என அவனை கலைத்தாள்.
“இல்ல பசங்க இல்லாமல் கொஞ்சம் போர்றா இருக்கு இல்ல.” என்றான்.
துர்கா “இருக்கும், இருக்கும் அவங்கள, ஒரு நாள் பார்த்துக்கோங்க பார்க்கலாம். என்னமோ போர்ராம், அன்னிக்கு மேட்டூர்ல அப்படிதான் நானும் நித்யாவும் கிட்சென்ல்ல இருக்கோம், எல்லாம் விளையாடிக்கிட்டு இருந்தாங்க, ராஜேஷ் தம்பி மேல தான் ஏதோ, போன் பேசிகிட்டு இருந்தார்.
சர்வேஷின் பொம்ம கார்ல, நித்யாக்கா பையன் சின்னவன் உட்கார்ந்துட்டான், இவன் எழுந்திருன்னு சொல்லி பார்த்திருக்கான் கேட்கல, உடனே மாடி படியிலேயே காரோட தள்ளி விட்டுட்டான்.
அவன் காரோடு உருண்டு விழுந்திருக்கான். விழுந்ததை பார்த்த மற்ற பெருசு ரெண்டும், அவன் அழுதா சத்தம் வரும்னு, அவனுக்கு சாக்லெட் கொடுத்து ரூம் ல விட்டு, விளையாட போய்ட்டானுங்க.
அவன் சாக்லெட் முடிஞ்சதும் தான், அவன் அழுகையே எங்களுக்கு கேட்டது உள்ள போய் பார்த்த, தாடையில் சதை கிழிந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. அப்புறம் தான் டாக்டர் கிட்ட கூட்டி போனோம். ப்பா, சரியான வாலுங்க” என இவள் ஒரு வருடம் முன்பு நடந்ததை செல்லமாக சொல்லி சலித்துக் கொண்டாள்.
மகி துர்காவையே பார்த்திருந்தான். ‘உருண்டு, உருண்டு பேசும் கண்கள், அதற்கேற்ப அசைந்தாடும் உதடும், இந்த பக்கம், அந்த பக்கம் திரும்பும் போது மின்னும் மூக்குத்தி, மகன்களை பற்றி பேசும் போது அவள் முகத்தில் நிரம்பி வழியும் பெருமையும்’ என இவையெல்லாம் அவனை கொஞ்சம் தடுமாற சொன்னதோ..
மகி இப்போது “அப்போ, உன்ன மாதிரி கதை சொல்ற பொண்ணு ஒன்னு பெத்து தரியா எனக்கு“ என்றான் வார்த்தைகள் அவ்வளவு சீராக வந்ததது அவனிடமிருந்தது.
என்ன கேட்கிறான், ஏது, என இவள் யோசிக்க தான் முடிந்தது. பதிலே வரவில்லை. மகி, கட்டிலில் சாய்ந்து அமர்ந்த வண்ணம் உண்டு கொண்டிருந்தான், இவள் அவன் அருகில் அமர்ந்து இட்டிலிகளை பிட்டு வைத்துக் கொண்டிருந்தாள்.
தன்னுடைய தட்டிலிருந்து ஒரு வாய் உணவை அவளிடம் ஊட்டினான். அமைதியாக வாங்கிக் கொண்டாள். மகி விளையாட்டாய் “என்ன பதிலே காணம், நான் கேட்க கூடாதா” என்றான்.
துர்காவிற்கு இதயம் படபடத்தது, குரல் வெளிவரும் போல் தோன்றவில்லை, ஆனாலும், இப்போது துர்கா “நான் இன்னொரு கதை சொல்றேன் கேளுங்க பாவா” என்றவள் அவனின் பதிலை எதிர்பாராமல்
“அன்னைக்கு சர்வேஷ் பிறக்கும் போது, எனக்கு ஆப்பரேஷன் தான் நார்மல் இல்ல, அதுக்கு கையெழுத்து வாங்க உங்களை தேடினாங்க பாவா, நீங்க அப்போ அங்க இல்ல” என்றாள் வெறுமையாய்.
ப்பா……. மகிக்கு இப்போது யாரோ தன்னை குறிபார்த்து தாக்கும் உணர்வு. தாங்க முடியவில்லை அவனால். ஆம், உண்மை அவள் சொல்லுவது முழுவதும் உண்மை.
எந்த விதத்திலும் நான் அவளுக்கு துணை நின்றதில்லை தான். ‘கமலேஷ் பிறந்த போது தனது தந்தை கொண்டாடினார் அவனை. ஆனால், நான் நான்கு நாட்கள் சென்று தான் பார்த்தேன் சர்வேஷை’ என தனது மனசாட்சி சொல்லியது. இப்போதும் நீ உன் தேவை மட்டுமே பார்க்கிறாய் என்றது.
ஆனால் இதெல்லாம் மகியிடம் அந்த நிமிட யோசனை மட்டுமே பின் எப்போதும் போல் அவனின் தெளிவு வந்து அவன் முகத்தில் அமர்ந்து கொண்டது.
அவள் கை பிடித்து தனக்கு ஊட்ட செய்தவன், உண்டு விழுங்கி பொறுமையாய் “உண்மை தான் நான் எதற்கும் உன் உடன் இல்லை தான், ஆனால் எந்த அளவு உனக்கு நான் நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும் இதையெல்லாம் நீ தனியே செய்ய” என்றான் அவளையே பார்த்த வண்ணம் ஆழ்ந்த குரலில்.
அவள் கண்ங்களில் கண்ணீர் இதுவும் உண்மைதானே என அவள் யோசனை செய்ய. அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை அவன் “ம், போ, போய் சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பு, ஷோ ரூம் போகணும் நீ” என்றான்.