மகி இப்போது ஆனந்தமாக வரவேற்றான் தன் மாமனார் மாமியாரை, எப்போதும் அவர்களின் மரியாதைக்கு குறை வைத்ததில்லை தான் மகி. ஆனாலும் பழைய ஒதுக்கங்கள் அவனிடம் இல்லை.
வரதராஜனுக்கு இருந்த கோவமெல்லாம் நொடியில் தீர்ப்பதாய் இருந்தது இந்த வரவேற்பு, இந்த இரண்டு மாதங்களாக, வீட்டிலிருந்து வெளியே செல்லாததினால் இருந்த அவனின் வனப்பு, கூடவே தாய் மற்றும் மனைவியின் கவனிப்பு எல்லாம் சேர்ந்து இன்னும் ஒரு பிடி உயர்ந்து தெரிந்தான் மகி.
துர்கா அப்போதான் உள்ளே சென்றிருந்தாள், எனவே மகி “ஸ்ரீ “ என அழைக்க, அதனை கேட்டவர்களுக்கு தான் நிரம்ப மகிழ்ச்சி. வந்தவள் “வாங்கப்பா, வாங்கம்மா” என வரவேற்று உபசரித்தாள்.
வரதராஜனுக்கும் விஜயலட்சுமிக்கும் என்ன நடக்கிறது இங்கே எனும் நிலை. தன் மருமகனின் மாற்றம் குறித்து இன்னும் நம்ப முடியாமல் ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவர் போல் இருந்தனர்.
‘முன்பு அவன் கேட்டது என்ன, இப்போது இங்கே நடப்பது என்ன’ என கண்கள் ஆச்சரியத்தை மட்டுமே காட்டியது. ஏதோ இருக்கிறார்கள் என்ற நிலை போய், ஒரு ஒட்டுதல் தெரியவும் கண்கள் தன் மருமகனையே பார்த்திருந்தது.
ஏனெனில் இது ஏதோ, ஈர்போ, யாரோ சொல்லியோ நிகழ்ந்து விட முடியாது. மகி என்பவன், அப்படி அல்ல, தன் தந்தை சொல் தவிர மற்றதை ஏற்க மாட்டான்.
எனவே, இது புரிதல், உணர்தல் இருந்தால் மட்டுமே சாத்தியம் என இருவரும் பார்த்து நின்றனர். வைதேகி இதையெல்லாம் ஒரு கர்வத்துடன் தான் பார்த்திருந்தார்.
பார்த்தாயா, என் மகனை ‘எப்படி தாங்குகிறான், உன் பிள்ளையை’ என்ற மிதப்பு அவர் கண்களில் அப்பட்டமாக வழிந்தது. அதை ஒன்றும் செய்ய முடியாது. மாமியார் நினைப்பு.
மேலும் எந்த நிலையிலும் தன் மகனை விட்டு தராமல், தாங்கி, தன் மருமகளுக்கும் பலமாக இருந்தவருக்கு இந்த கர்வம் வருமே.
மகி தான் “என்ன மாமா, என்ன சாப்பிடுறீங்க” என கேட்க கண் கலங்கியது அவற்கு, ‘வேறென்ன வேண்டும் என் மகள் நிம்மதியாக வாழ்வதை பார்த்தாலே போதுமே’ என, அதை மறைக்காது சொல்லவும் செய்தார்.
“போதும் மாப்பிள்ளை, இது போதும் இதே நிறைவுடன் நீங்கள் எப்போதும் இருக்க வேண்டும்“ என்றார். மகிக்கு இப்போதுதான், அவரின் நிலை புரிய, “ஸ்ரீ “ என அழைத்தவன்.
தன் மனையாளுடன் சேர்ந்து “ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா” என்று அவரின் பாதம் பணிந்தான். ஏன், எதற்கு என்ற கேள்வி இல்லை எந்த வித தயக்கம் இல்லாமல் தன் தவறை உணர்வது போல், அவரிடம் பணிந்தான்.
எந்த வார்த்தைகளும் இல்லை அந்த நிறைவை சொல்ல, அந்த நொடி ‘துர்காவின் தந்தை’ என பூரித்து போனார் வரதராஜன். எத்தனை இருந்து என்ன, மகளின் வாழ்வு என வரும் போது எல்லா தந்தையும் கோழையே.
அதன் பின் அவர்களுக்குள் தங்கு தடை இன்றி பேச்சு சென்றது. மதியம் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. வினோவும் ராஜேஷும் வந்தனர்.
ராஜேஷை பார்த்தவுடன் தான், நினைவு வந்தவராக, துர்காவின் தாய், வைதேகியுடம் பேச்சை ஆரம்பித்தார். “சந்தோஷியின் மாமா பொண்ணுக்கு நம்ம ராஜேஷை பார்க்கலாமா” என ஆரமித்து பேச்சு சென்றது.
மதியம் உணவு உண்டு முடித்த வினோ “கிளம்பறேன்” என்க, மகியும் கூடவே “இரு வினோ, நானும் வரேன்” என்றான்.
‘எத்தனை நாள் ஆயிற்று நான் அங்கே சென்று, கிட்ட தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது, எனக்கே எனக்கான உலகம் அது. வேறு எதிலும் மனதை செலுத்தாமல், ஏன், என்னவளை கூட புரிந்து கொள்ளாமல், நான் கொண்ட தவம் அது’ என பரவசம் வந்தது அவனுள்.
இனி எனக்கெந்த தடையுமில்லை ‘இன்னும், இன்னும்’ என புதிது தேடும் வேகம் வந்தது அவனுள். எதற்கும் அலட்டிக் கொள்ளாத பாவம் வந்தது முகத்தில்.
தன்போல் எழுந்து நின்றவனை பார்த்து ‘இப்போதே போக வேணுமா’ என பார்த்து நின்றனர் அனைவரும்.
வைதேகி தான் “கொஞ்சம் நேரம் உறங்கி செல்லேன்ப்பா” என்றார். மகி “அதெல்லாம் ரெண்டு மாசம் நல்லா தூங்கியாச்சு ம்மா” என்றவன் “போலாம் டா” என்றான் வினோவை பார்த்து.
இதற்கு மேல் யார், என்ன சொல்ல முடியும், அனைவரிடமும் விடை பெற்றவன், தன்னவளிடமும் கண்களால் விடைபெற்று சென்றான்.
முதலில் ஷோ ரூம் தான் சென்றான். அந்த வேக நடை தான் வரவில்லை, மற்றபடி மகி, மிகவும் உற்சாகமாக இருந்தான். தனது அலுவலகத்தை செங்கல் செங்கல்லாக ரசித்துக் கொண்டிருந்தான்.
அதே அமர்த்தலான பார்வையுடன் தன் இருக்கையில் அமர்ந்தான். முன்பே அலட்சியமான பார்வை பார்ப்பவனது மனதில் ஒரு பெருமிதம் வந்தது. ஒரு அடி இடறி விழுந்த பின் கிடைக்கும் வெற்றிக்கு ருசி அதிகம் தான் போல.
கண்களை மூடி அமைதியாக தலை சாய்த்தான் ‘காத்து விட்டேன், ம்கூம், காத்து விட்டாள் அவள், ம், அவளே தான், இது இனி மேல் எனதே எனது’ என அவனின் சிந்தனை சென்று கொண்டிருந்தது.
வினோவிற்கு இதெல்லாம் பார்த்து கொஞ்சம் மிரண்டு தான் போனான். மகியை சற்று ஆசுவாசப்படுத்த எண்ணி’ “மகி காபி எடுத்து வர சொல்லவா” என்றான்.
மகி இப்போது தான் வினோவை பார்த்தான், அவன் தன்னை பார்ப்பதை வைத்தே ‘பயந்துட்டான் போல’ என நினைத்தவன் “கண்டிப்பாடா, சொல்லு” என்றான்.
காபி வந்ததும் அதனை கொண்டே பேச்சு சென்றது அவர்களிடம், காபியில் தொடங்கிய பேச்சு, விவேகன் வரை பேசி தீர்த்தனர் நண்பர்கள்.
வீட்டில் எது, பேசுவது என்றாலும் ஒரு வரை முறை இருக்கும், ஆனால் தனிமையில், நண்பகர்கள் என்ற எண்ணம் மட்டுமே. எனவே, நீண்ட நாட்களுக்களுக்கு பிறகு கிட்டிய நேரத்தில், ‘இது தான்’ என்று இல்லை அனைத்தையும் பேசினார்.
எவ்வளவு நேரம் ஆனதோ, ராஜேஷ் தான், வந்து சேர்ந்தான் அங்கு. அப்போது தான் இருவரும் கொஞ்சம் தங்கள் நிலை கலைந்தனர். ராஜேஷ் மகியிடம் “போலாமா ண்ணா” என்க.
மணியை அப்போது தான் பார்த்தனர், மணி 9. பாதி ஷோ ரூம் லாக் செய்திருந்தனர். அங்கு மேனேஜர் மட்டும் தான் இருந்தார். மற்றவர்கள் எல்லாம் சென்றிருந்தனர்.
சிரித்துக் கொண்டே இருவரும் கிளம்பினர். ஒரு நல்ல மனநிலையில், இனி எதுவும் சாத்தியமே என்ற மனநிலையில் இருந்தான் மகி. எனவே ”வினோ, அந்த இஞ்சினாயில் டீலர்ஷிப் என்னாச்சு, விவரம் கேளு முடிச்சிடலாம்” என்றான். புதிய நம்பிக்கையுடன்.
வினோவிற்கு தோன்றியது இது தானே மகி, ஓய்வே இல்லாதவன். ஒன்றை நிலை நிறுத்தி விட்டு, போதும் என நிற்க மாட்டான். ‘அடுத்து’ என சென்று கொண்டே இருப்பான் என சிந்தனை எழுந்தது. அதை அவனுக்கு காட்டாமல் மறைத்து “சரி டா, செய்திடலாம்” என்றான்.
மூவரும் கிளபினர் வீட்டிற்கு. இப்போது ராஜேஷ் காருடன் வந்ததால் அண்ணன் தம்பி இருவரும் கிளம்பினர். வினோவும் தன் வீட்டிற்கு கிளம்பினான்.
காரில் செல்ல செல்ல தான் மகிக்கு தோன்றியது ‘ஏன் ராஜேஷ் வேலைக்கு செல்லவில்லை’ என. அப்போதே கேட்டான் மெடிக்கல் லீவ் என்றான்.
இன்னும் இங்கே இருப்பதை பார்த்து இப்போது கேட்டான் “ஏன் ராஜேஷ், இன்னும் நீ வேலைக்கு போகல, இங்கேயே இருக்க” என்றான் யோசனயாய்.
ராஜேஷ் சிரித்தவாறே “இல்ல ண்ணா, நான் வேலைக்கு பேப்பர் போட்டுடேன்” என ராகம் இழுத்தவன். “இங்க தான் இத்தனை இருக்கே, நான் எதுக்கு வேலைக்கு போகணும், இதை பார்த்தா, பத்தாதா” என்றான்.
மகி ”ம், சரி நீ, என்ன பண்ண போற சொல்லு” என்றான் ஆராயும் எண்ணத்துடன். ராஜேஷுக்கு அதெல்லாம் சொல்ல தெரியவில்லை. சட்டென அமைதியாகி விட்டான்.
மகியிடமிருந்து இந்த வார்த்தை வருமென நினைக்கவில்லை அவன். எனவே “நீ சொல்லு ண்ணா” என்றான் நல்லவனாக.
இப்போது மகி, தனது தாடையை தடவியவாறே “ம், மேட்டூர் போ, அப்பாவோட சர்வீஸ் ஸ்டேஷனில் இருந்து தொடங்கு, 6 மாசம், ஒரு வருஷம் ஆகட்டும், ஏதாவது செய்யலாம் உனக்கு“ என்றான் நல்ல விதமாகவே. அண்ணன்கள், அரண்கள் தானோ.
கால, நேரம் பார்க்காது அகிலை அழைத்து பேசினான் மகி, ராஜேஷின் விவரம் சொன்னான், கூடவே, அவனிற்கு ஒரு வரன் வந்திருப்பதாகவும் சொன்னான்.
பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். துர்கா வாசலையே பார்த்திருந்தாள், ஏதோ அவளிற்கு மகி வெளியே சென்றது இவ்வளவு நேரம் வராதது ’எப்போது வருவானோ’ என்ற எண்ணத்தை தந்தது. அவன் வரவும் தான், உள்ளே சென்றாள்.
இப்போது சம்மர் விடுமுறை ஆதலால், எல்லா பசங்களும் அங்கு தான் இருந்தனர். இப்போதெல்லாம் மகியிடம் ஒட்டுதல் வந்திருந்தது அவர்களுக்கு.
அந்த இரவிலும் வீடு சத்தமாக, ம்கூம், கலகலப்பாக இருந்தது. மகி உள்ளே வரவும். கொஞ்சம் அமைதியானது வீடு. அது பொருக்க முடியவில்லை மகிக்கு, குழந்தைகளுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். சத்தம் பிடிக்காத மகிக்கு இப்போதெல்லாம் அது தான் வேண்டுமாக இருந்தது.
உணவு உண்ண, துர்கா அழைத்த பிறகே சென்றான். குழந்தைகளுடன் அனைவரும் பேசிக் கொண்டே உண்டனர்.
அப்போது திரும்பவும் அகிலிடமிருந்து போன், ஸபீக்கரீல் போட்டு அனைவரும் பேசினார். ராஜேஷ் பற்றி தான் இருந்தது பேச்சு. ‘என்ன, எப்படி எதிர்பார்க்கிற ராஜேஷ், பெண் எப்படி பார்க்கலாம் என போனில் அகிலும், நித்யாவும் கேட்டுக் கொண்டிருக்க,
ராஜேஷ் “உங்களுக்கு எல்லாம் கேட்டா பார்த்தாங்க, அதே மாதிரி தான், எல்லாம் உங்க இஷ்ட்டம் தான் செய்ங்க, பார்த்து செய்ங்க” என கேலியாக கூற
அகில் விடாமல் “அதனால தான் டா, உன்னை கேட்க்கிறோம், உனக்காவது ஏதாவது நல்லது நடக்கட்டும், என தான் கேட்பது “ என கூற நித்யா அனல் பார்வை பார்ப்பது இங்கே எல்லோருக்கும் தெரிந்தது.
மகி இதில் எந்த வார்த்தையும் பேசவில்லை, கொஞ்சம் சிரித்து பழகியதால், சிரித்துக் கொண்டே அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தான். இப்படி கல கலப்பாக உணவு நேரம் முடிந்தது.
அனைவரும் சென்ற பிறகும் மகி ஹாலிலேயே அமர்ந்திருந்தான், துர்கா கிட்செனில் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். வெகு நேரமாகியும் துர்கா வெளியே வரவில்லை.
அவனிற்கு தன் அறைக்கு செல்ல வேண்டும், அதாவது, மேலே மாடிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
பார்த்தான், அவன் மனையாள் வெளியே வருவதாக இல்லை. தானே மாடியேறினான் ஒவ்வரு படியாக ஏறி சென்றுவிட்டான். துர்கா, பால் எடுத்து வந்து தனது அறையில் பார்த்தாள், ‘எப்போதும் அங்கு தானே இருப்பான்.’ என.
தன்னவன் அங்கு இல்லை. சட்டென ஒரு வெறுமை யோசியாமல் வந்தது அவளுள்.