வரம் 15

Advertisement

Writer girl

Well-known member
Member
“என்னம்மோ போடா” என்றுரைத்த தமக்கையின் மனநிலையை அவளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களைப் பற்றிப் பேசித் திசை திருப்பி விட்ட பின்னர் தன்னுடைய அறைக்கு வந்தான் மகிழம்பூவன்.

தான் சொன்னதைப் போலவே, அடுத்த நாள் விடியற்காலையில் பால்ராஜ் மற்றும் அவரது பிள்ளைகளும் ஊருக்குக் கிளம்புவதற்கான ரயில் பயணத்திற்கான பயணச்சீட்டை ஆன்லைனில் பதிந்து அதற்கானத் திரைப்பிடிப்புப் (screenshot) புகைப்படத்தை சம்பந்தப்பட்ட மூவருக்கும் அனுப்பி வைத்தார் ரமணன்.

அதைக் கண்டதுமே தங்களது உடைமைகளைப் பையில் வைத்து விட்டு அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து கிளம்ப இருப்பதால் விரைவாகவே உறக்கத்தை மேற்கொண்டனர் பால்ராஜ், மகிழம்பூவன் மற்றும் வண்ணமதி.

அந்த விஷயத்தை தனது மகளிடம் தெரிவித்தார் கஸ்தூரி.

“சரிம்மா. நானும் காலையில் எழுந்து அவங்களை வழியனுப்புறதுக்காக உங்க கூட வருவேன். என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க!”என அவரிடம் அறிவுறுத்தி விட்டுத் தானும் தூங்கினாள் சஹஸ்ரா.

அடுத்த நாள் காலையில் எழுந்து குளித்து தயாராகி விட்டுத் தத்தமது உடைமைகளுடன் வரவேற்பறையில் ஆஜராகினர் ரமணனின் தங்கையின் குடும்பத்தார்.

அதேபோல் தாங்களும் கிளம்பி வந்திருந்தார்கள் ரமணன், கஸ்தூரி மற்றும் சஹஸ்ரா.

“நான் சொன்ன மாதிரியே உங்களை வழியனுப்ப வந்துட்டேன் பார்த்தீங்களா?”என்று கூறிப் புன்னகைக்க,

“நீ எப்பவும் சமர்த்துப் பொண்ணு தான்ம்மா”எனத் தனது வருங்கால மருமகளைப் பாராட்டினார் பால்ராஜ்.

“ம்ஹ்ம். எஸ் மாமா”என்று பெருமை பொங்க கூறினாள் சஹஸ்ரா.

அதைப் பார்த்த மகிழம்பூவனுக்கும் தன்னவளின் மலர்ந்த முகத்தைக் கண்டுப் புத்துணர்ச்சி உண்டானது.

அவனது இதழ்களும் புன்னகையில் விரிந்தது.

ஆனால் சஹஸ்ரா மற்றும் பால்ராஜ்ஜின் உரையாடல்களைக் காதில் புகை வராத குறையாகப் பார்த்தாள் வண்ணமதி.

தான் இதற்கு ஏதாவது கருத்து தெரிவித்தால் தனது தந்தை தனக்குத் தான் அறிவுரை வழங்குவார் என்றப் புரிதல் ஏற்பட்டு இருந்ததால் அமைதியாக இருந்து கொண்டாள்.

“சரி வாங்க. இப்போ கொஞ்சம் டிராஃபிக் இருக்காது. வண்டியை மெதுவாக ஓட்டிட்டுப் பொறுமையாக ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகலாம்”என்று அனைவருக்கும் அறிவுறுத்தினார் கஸ்தூரி.

உடனே தாங்கள் அனைவரும் இரண்டு கார்களில் ஏறிக் கொண்டுப் புகைவண்டி நிலையத்திற்குப் பயணமானார்கள்.

சிறு தூரப் பயணத்திற்குப் பிறகு புகைவண்டி நிலையத்தை அடைந்தனர் அனைவரும்.

காரில் இருந்த உடைமைகள் அடங்கிய பைகளை எடுத்துக் கொண்டு வரும் வேலையைத் தங்களது பணியாளர்களிடம் கொடுத்து விட்டு அங்கே நின்றிருந்தப் புகைவண்டியில் ஏறித் தனது தங்கையின் குடும்பத்தார் பயணம் செய்யப் போகும் இருக்கைகளின் எண்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களை உட்கார வைத்தார் ரமணன்.

அதுவரையில் கஸ்தூரியும், சஹஸ்ராவும் தங்களது பாதுகாலர்கள் சூழப் பயணிகளுக்குப் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.

“நான் சஹாவுக்குக் கால் செஞ்சி இங்கே வரச் சொல்றேன்”என்று கூறித் தனது செல்பேசியில் மகளுக்கு அழைப்பு விடுத்து இருக்கைகளின் எண்ணை அவளிடம் கூறி அவளது அன்னையையும் அழைத்துக் கொண்டு வருமாறு தெரிவித்து விட்டு வைத்தார் ரமணன்.

உடனே தனது தாயுடன் அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்து விட்டிருந்தாள் சஹஸ்ரா.

“பரவாயில்லையே! இங்கே எல்லாம் வசதியாகத் தான் இருக்கு”என்றவளோ, தனது கல்லூரிக் காலத்தில் இருந்து இப்போது வரையிலும் ரயிலில் பயணம் செய்ததே இல்லை! தான் எந்த இடத்திற்குச் செல்ல நினைத்தாலும் தனது தந்தையின் மகிழுந்தில் தான் செல்வாள்.

அதனால் தான் இந்தப் புகைவண்டியை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சஹஸ்ரா.

அதைக் கடுப்புடன் ஏறிட்டு,'இவளோட அல்டாப்புத் தாங்க முடியலையே! எப்போ தான் டிரெயினை எடுப்பாங்களோ!’என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டாள் வண்ணமதி.

“உங்களுக்கு எங்கிட்ட ஏதாவது சொல்லனுமா?”என்று நேரடியாகவே மகிழம்பூவனிடம் கேட்டிருந்தாள் சஹஸ்ரா.

அதைக் கண்டு மற்றவர்களுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தனது வருங்கால மணாளனின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் சஹஸ்ரா.

அவனோ,”ம்ஹ்ம். உன் உடம்பைக் கவனிச்சுக்கோ. உங்கப்பா, அம்மாவை நல்லா பார்த்துக்கோ. நாம இதுக்கப்புறம் நம்மப் பூர்வீக ஊரில் சந்திக்கலாம்”என்றவனைப் புருவம் உயர்த்தி மெச்சி விட்டு,

“ஷூயர் பூவன். டேக் கேர்”என்றுரைத்தாள் சஹஸ்ரா.

“ஆமாம்மா. நீ அங்கே வந்து எல்லாத்தையும் சுத்திப் பார்க்கனும். சரியா?”என்று அவளிடம் வினவினார் பால்ராஜ்.

“கண்டிப்பாக வருவேன் மாமா”என்று அவருக்கு உறுதி அளித்த போது,

அந்தப் புகைவண்டி அங்கிருந்து கிளம்பப் போவதான செய்தி அறிவிக்கப்பட்டு விடவும்,

“நீங்க மூனு பேரும் உடம்பைப் பார்த்துக்கோங்க. மதி! உன் வீட்டாளுங்களை நாங்க விசாரிச்சதாக சொல்லு. அடுத்த தடவை நாங்க எல்லாருமே அங்கே வருவோம்னு அவங்க கிட்ட சொல்லிடும்மா”என அவர்களுக்கு அறிவுறுத்தினார் கஸ்தூரி.

“பார்த்துப் பத்திரமாகப் போயிட்டு வாங்க” என்று அவர்களிடம் உரைத்து விட்டுத் தன் மனைவி மற்றும் மகளுடன் அதிலிருந்து இறங்கினார் ரமணன்.

அவர்களை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கையசைத்து விடை கொடுத்தார்கள் பால்ராஜ், மகிழம்பூவன் மற்றும் வண்ணமதி.

அவர்களை நல்லபடியாக ரயிலில் ஏற்றி விட்டத் திருப்தியுடன் தங்கள் பாதுகாவலர்களைக் காரில் தங்களைப் பின்தொடர்ந்து வருமாறு அறிவுறுத்தி விட்டுத் தாங்கள் மூவரும் மற்றொரு காரில் பயணித்து வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

“இப்போ உங்க ரெண்டு பேருக்கும் நிம்மதியாக இருக்குமே?”என்ற மகளைக் குழம்பிப் போய்ப் பார்த்தனர் அவளது பெற்றோர்.

உடனே அவளே தொடர்ந்து,”எனக்குக் கல்யாணம் செய்து வைக்கனும்னு ஆசைப்பட்டீங்கள்ல? அது இப்போ நிறைவேறிடுச்சுல்ல! அதை வச்சுத் தான் கேட்டேன்”என்று அவர்களிடம் விளக்கம் அளித்தாள் சஹஸ்ரா.

“ஓஹ்!”எனத் தாங்கள் ஒருவரையொருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டு,

“ஆமாம் சஹா! எங்களுக்கும் உனக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்கனும்னு ஆசை இருக்காதா என்ன? அதுவே நம்ம மல்லிகாவேட பையனாக இருந்தால் என்னன்னு தான் மகிழைக் கல்யாணம் செய்துக்க உனக்கு விருப்பமான்னுக் கேட்டோம். நீயும் விருப்பம்ன்னுச் சொன்னதும் தான் எங்களுக்கு உன் கல்யாணத்தைப் பத்தின கவலை எங்களை விட்டுப் போச்சு!”என்று மகளுக்குத் தெரிவித்தார் கஸ்தூரி.

“அப்படியாம்மா? அப்போ சரி”என்றுரைத்து விட்டுத், தன் அலுவலகத்திற்குச் செல்வதற்கான ஃபார்மல் உடையை உடுத்திக் கொண்டுக் கிளம்புவதற்குத் தனது அறைக்குச் சென்று விட்டாள் சஹஸ்ரா.

“இவ இப்படி எதையாவது சொல்லி நம்ம ரெண்டு பேருக்கும் ஷாக் கொடுக்கிறதையே வேலையாக வச்சிருக்கா! இவ பேச்சைக் கேட்டு எனக்கே ரத்தக் கொதிப்பு வருது! அந்த மதிப் பொண்ணு மட்டும் எப்படி தன்னோட வாயை வச்சிட்டுச் சும்மா இருப்பாள்? இந்தக் கல்யாணம் முடிஞ்சதும் இதைப் பத்தி இவளுக்குப் புத்திச் சொல்லனும்!”என்று தன் கணவரிடம் சலித்துக் கொள்ள,

உடனே,”நீயும், மதியும் நம்ம சஹா சும்மா ஜாலிக்குப் பேசுறதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கிறீங்க! அதனால் தான் உங்க ரெண்டு பேருக்கும் அவ மேலே கோபம் வருது! அவ பேச்சை எல்லாம் ரொம்ப சீரியஸாக எடுத்துக்கக் கூடாது!”என்று அவருக்கு அறிவுரை கூறினார் ரமணன்.

“சரிங்க. நாமளும் இன்னும் காஃபிக் கூடக் குடிக்கலை. நான் எடுத்துட்டு வரச் சொல்றேன்”என்று தங்களுக்கான காப்பியைக் கொண்டு வருமாறு வேலையாளிடம் அறிவித்தார் கஸ்தூரி.

சிறிது நேரம் கழித்து மூவருக்குமான காப்பியைக் கொண்டு வந்து வைத்ததும்,

அங்கே வந்த மகளிடம்,”இந்தக் காஃபியை எடுத்துக் குடி சஹா. கொஞ்ச நேரத்தில் பிரேக்ஃபாஸ்ட் ரெடி ஆகிடும். அதைச் சாப்பிட்டு ஆஃபீஸூக்குப் போ”என்று வலியுறுத்த,

“சரிம்மா”எனத் தன் காப்பியைக் குடித்தாள் சஹஸ்ரா.

அதற்குப் பிறகான சில நிமிடங்களிலேயே அவர்களுக்காகச் சூடாக காலை உணவுத் தயாராகி விட்டிருக்க அதை உண்டு முடித்தார்கள் மூவரும்.

“ஓகே. நான் ஆஃபீஸூக்குக் கிளம்புறேன். பை அப்பா, பை அம்மா” என்று பெற்றோரிடம் கூறிக் கொண்டுத் தனது அலுவலகத்திற்குச் சென்று விட்டாள் சஹஸ்ரா.

இதே சமயம் தாங்கள் பயணித்துக் கொண்டிருந்த ரயிலைச் சில மணி நேரங்களுக்கு ஒரு ஸ்டேஷனில் நிறுத்தி வைத்திருந்ததால் அங்கே இருந்த உணவகத்தில் தங்களது காலை உணவைச் சாப்பிட்டார்கள் பால்ராஜ்ஜூம், அவரது பிள்ளைகளும்.

“இங்கே சாப்பாடு அவ்வளவாக நல்லா இல்லை தானே?”என்று தன் முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டுத் தம்பியிடம் வினவினாள் வண்ணமதி.

“அதோட சுவையாக இல்லை தான்க்கா. ஆனால் பசிக்குத் தாராளமாக சாப்பிடலாம்”என்றுரைத்தான் மகிழம்பூவன்.

“ஆமாம் மதிம்மா. இந்தச் சாப்பாடுக் கூடக் கிடைக்காமல் நிறைய பேர் பசியில் வாடுறாங்க”என்று மகளுக்கு அறிவுரை வழங்க ஆரம்பித்து விட்டார் பால்ராஜ்.

உடனே,”போதும்ப்பா! சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு! நான் வயிறு நிறைய சாப்பிட்டேன்!”என அவரிடம் சமாதானமாகப் பேசி அவரது வாயை அடைத்து விட்டாள் வண்ணமதி.

ஏனென்றால் அவளுக்கு அதற்கு மேல் இன்றைக்கு யாரிடமும் அறிவுரை கேட்கும் சக்தி இல்லை!

அதனாலேயே தந்தையின் பேச்சை இடைமறித்து சமாதான உடன்படிக்கைக்கு வந்து விட்டிருந்தவளோ, மீண்டும் ரயிலில் ஏறித் தங்களது இருக்கைகளில் அமர்ந்து விட்டதும்,

தனது செல்பேசியில் கணவனுக்கு அழைத்து தங்களது வருகையைத் தெரிவித்தாள் வண்ணமதி.

“அப்போ நீங்க ரயிலை இறங்கிற நேரம் எனக்குத் தாக்கல் சொல்லு. நான் வந்து உங்க மூனு பேரையும் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்”என்றான் பூபாலன்.

“கார் எடுத்துட்டு வந்து அழைச்சிட்டுப் போவீங்களா?”என்று அவனிடம் விசாரிக்க,

“ம்ஹ்ம். ஆமாம். வாடகை கார் கேட்டு வச்சிருக்கேன். நான் வரும் போது செந்திலையும் கூடக் கூட்டிட்டு வர்றேன்”என்றுரைத்து விட்டு அழைப்பை வைத்து விட,

அந்த தகவலைத் தன் தந்தை மற்றும் தம்பியிடம் பகிர்ந்து கொண்டாள் வண்ணமதி.

அதைக் கேட்டதுமே,”நானும் ஊருக்குப் போய் முதல் வேலையாக உன் புகுந்த வீட்டுக்கு வந்து பேரனைப் பார்க்கனும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு அவசியமே இல்லாத மாதிரி மாப்பிள்ளையே தூக்கிட்டு வர்றேன்னுச் சொல்லிட்டார்”என்று மகிழ்ச்சியாக கூறினார் பால்ராஜ்.

“நாம வீட்டுக்கு நடந்தே போயிருக்கலாம்! மாமாவுக்கு வீணாக எதுக்குச் சிரமம்?”எனப் பரிவுடன் வினவினான் மகிழம்பூவன்.

“இதில் அவருக்கு என்னச் சிரமம் இருக்கப் போகுதுடா? நீங்க செந்திலைப் பார்க்க ஆசையாக இருக்குன்னு ஊருக்குக் கிளம்பும் போதே அவர்கிட்ட சொன்னீங்க தானே? அதனால் தான் அவரே வந்து கூட்டிட்டுப் போறேன்னுச் சொல்லி இருக்கார்”என்று அவனுக்கு விளக்கம் கொடுத்தாள் வண்ணமதி.

“சரி அக்கா”என்றுரைத்து விட்டு ரயில் பயணத்தை ரசிக்கத் தொடங்கி விட்டான்.

அதே நேரத்தில் தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்த சஹஸ்ராவை ஊருக்குக் கிளம்புவதற்கு முன் தன்னிடம் மகிழம்பூவன் பேசியதும், அவனது நேசம் நிறைந்த பார்வையும் இம்சிக்க ஆரம்பித்து விட்டிருந்தது.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top