வரம் 19

Advertisement

Writer girl

Well-known member
Member
அவனது அழைப்பைக் கண்டதும் புருவத்தைச் சுருக்கிப் பார்த்து விட்டு, அதை ஏற்றுக் காதில் வைத்து,

“ஹலோ”என்று மொழிந்திருந்தாள் சஹஸ்ரா.

“ ஹலோ! நான் மகிழ் பேசுறேன்”என்றவனிடம்,

“தெரியும் பூவன்”எனக் கூறிப் புன்னகைத்தாள்.

உடனே அதில் தானும் குறுநகையை உதிர்த்து விட்டு,”நான் உனக்கு மட்டும் பூவன் தான்”என்றவனோ,

“நீங்க மூனு பேரும் இங்கே வரும் போது உன் ஜாதகத்தை மறக்காமல் எடுத்துட்டு வந்துடுங்க”என்றுரைத்தான் மகிழம்பூவன்.

“ஓஹ் சரிங்க. நாங்க கூடிய சீக்கிரமே அங்கே வந்துடுவோம். இதை மத்தவங்க கிட்டேயும் சொல்லிடுங்க”என அவனிடம் தெரிவித்தாள் சஹஸ்ரா.

அதைக் கேட்டதும்,”இவ்வளவு வேகம் கூடாது அழகி!”என்றிருந்தான்.

அதற்கு அவளோ,”என்னைப் பொறுத்த வரைக்கும் இது ரொம்பவே தாமதம் பூவன். பை”என்றுரைத்து அந்த அழைப்பைத் துண்டித்து விட்டிருக்க,

அந்த நிமிடத்தில் இருந்து அவளது வேகத்திற்குத் தானும் ஈடு கொடுக்க முடிவெடுத்து விட்டான் மகிழம்பூவன்.

அதேபோல் தனது அலுவலகத்தில் இருந்து வீட்டை அடைந்ததும், தன் அத்தை மகன் கூறிய விஷயத்தை தனது பெற்றோரிடம் அறிவித்தாள் சஹஸ்ரா.

“ஆமால்ல. நான் இப்போவே போய் அதை எடுத்து வைக்கிறேன்”என்று தங்களது மகளின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்து தங்களது அறையில் வைத்து விட்டு வந்தார் கஸ்தூரி.

“நாம அடுத்த வாரமே ஊருக்குப் போகப் போறோம் தானப்பா?”எனத் தந்தையிடம் வினவினாள் சஹஸ்ரா.

உடனே,”ம்ஹ்ம். எஸ்ம்மா”என்றார் ரமணன்.

“அதில் உங்க ரெண்டு பேருக்கும் எந்த அசௌகரியமும் இல்லையே?”எனக் கேட்க,

“எங்களுக்கு என்ன அசௌகரியம் இருந்துறப் போகுது சஹா? அது நம்மளோட பூர்வீகம்! அங்கே போனால் எங்களுக்கு மனசுக்கு நல்லா இருக்கும்”என்றுரைத்தார் கஸ்தூரி.

“ஓஹ்!”என்பதை தவிர்த்து அவர்களிடம் வேறெதுவும் கூறாமல் சென்று விட்டாள் சஹஸ்ரா.

அவள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு,”நம்மளை எப்படி ஆழம் பார்க்கிறாள் பாருங்களேன்!”என்று கூறிச் சிரித்தார் கஸ்தூரி.

“ஆமாம்மா. நாம அவளோட விருப்பத்துக்கு ஏத்த மாதிரி எல்லாம் நடந்தால் தானே, அவளுக்கு வேண்டியதை எல்லாம் செய்துக்க முடியும்! அதான்! அப்பப்போ நம்மளைப் பரிசோதிச்சுப் பார்த்துக்கிறாள்!”என்று அவருடன் சேர்ந்து தானும் சிரித்துக் கொண்டார் கணவர்.

அதே சமயம் தன்னுடைய அறைக்குள் வந்ததும் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்கான ஆயத்தங்களை அப்போதிருந்தே மேற்கொள்ளத் தொடங்கி விட்டிருந்தாள் சஹஸ்ரா.

முதலில் அங்கே அணிந்து கொள்வதற்கான உடைகளைத் தேர்ந்தெடுத்து அதை டிராவல் பேக்கில் அடைத்து விட்டு,

தனது செயற்கை அலங்காரப் பூச்சுக்கள் மற்றும் இதர பொருட்களை எல்லாம் ஒரு பையில் வைத்த பின்னர்,

இறுதியில் தனது மடிக்கணினி, அதைப் பயன்படுத்தும் நேரத்தில் மட்டுமே அணிந்து கொள்ளும் கண் கண்ணாடியையும் வைத்து எடுத்துச் செல்லும் பையை மட்டும் அதில் எதையும் நிரப்பாமல் மற்ற உடைமைகள் நிறைந்த பைகளுடன் சேர்த்து வைத்துக் கொண்டாள் சஹஸ்ரா.

ஏனெனில், மடிக்கணினியையும், அதைப் பார்க்கும் போது அணியும் கண்ணாடியையும் ஊருக்குச் செல்லும் நாள் வரையில் அவள் உபயோகப்படுத்த வேண்டுமே! அதனால் தான் அவற்றை மட்டும் பையில் அடைத்து வைக்கவில்லை.

அதற்குப் பிறகு வேகவேகமாக செயல்பட ஆரம்பித்து, தான் அடுத்த வாரம் ஊருக்குச் செல்லவிருப்பதால் அந்த நாட்களில் எல்லாம் தனது அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் நடக்கப் போகும் வேலைகளைப் பற்றிய குறிப்பைத் தயாரித்து விட்டுத் தன் காரியதரிசிக்கு அழைப்பு விடுத்தாள் சஹஸ்ரா.

உடனே அழைப்பு ஏற்கப்பட்டு,”ஹலோ மேம்”என்ற குரலைக் கேட்டதும்,

“மிஸ். மோனிகா. நான் அடுத்த வாரம் என் பர்சனல் விஷயமாக ஊருக்குப் போறேன். அதனால் அந்த வாரம் முழுவதும் யார், யாருக்கு, என்னென்ன வேலைன்னு நோட் செஞ்சி வச்சிருக்கேன். நான் அதை உங்களுக்கு வாட்சப் பண்றேன். அந்த வாரம் முழுசும் நீங்க எல்லாரும் அதன் படி தான் வேலை செய்யனும்! புரியுதா?”என்றிருக்க,

அவளோ,“புரியுது மேம். ஃபேக்டரீஸோட வேலையும் அதன்படி தான் நடக்கனுமா மேம்?”எனத் தன் சந்தேகத்தைக் கேட்கவும்,

“ஆமாம். ஆஃபீஸூக்குத் தனியாகவும், ஃபேக்டரீஸூக்குத் தனியாகவும் தான் எல்லாத்தையும் நோட் செஞ்சி வச்சிருக்கேன். ஏதாவது டவுட்ஸ் இருந்தால் என்னை உடனே காண்டாக்ட் பண்ணுங்க”என்று அவளுக்குக் கட்டளை பிறப்பித்தாள் சஹஸ்ரா.

“ஓகே மேம்!”என்று அவள் தெரிவித்ததும் அழைப்பை வைத்து விடவும்,

“இவங்க தூங்குவாங்களா? மாட்டாங்களா? நாமளே இப்போ தான் சமைச்சி முடிச்சிட்டுச் சாப்பிட உட்கார்ந்தோம். அதுக்குள்ள வாட்சப்பில் ஏதோ அனுப்பி இருக்கேன் பாருன்னு சொல்லியாச்சு!”எனத் தன்னுடன் தங்கி இருக்கும் தோழிகளை உணவருந்துமாறு சொல்லி விட்டுத் தனது செல்பேசியில் புலனத்தைப் பார்வையிட்டாள் மோனிகா.

அதில் சஹஸ்ரா கூறியிருந்த குறிப்புகள் அடங்கிய கோப்புகள் வந்திருந்ததைக் கண்டதும் அவளுக்குப் பதிலளித்து விட்டு அவற்றை வாசிக்கத் தொடங்க,

“நீ அதைப் படிச்சிட்டே சாப்பிட்டு முடிச்சிரு மோனி! நான் தான் இன்னைக்குப் பாத்திரம் கழுவனும். அதனால் அதை முடிச்சிட்டுச் சீக்கிரம் தூங்கலாம்னு நினைக்கிறேன்”என்று அவளுக்கு அறிவுறுத்தினாள் அவளது அறைத் தோழி.

“சரி கவி”என்றவளோ, அவளின் அறிவுறுத்தலின் படியே உணவருந்திக் கொண்டே அந்தக் கோப்புகளை வாசித்து முடித்து விட்டுத் தனது மேலதிகாரியான சஹஸ்ராவிற்கு அழைப்பு விடுக்கவும்,

அந்த அழைப்பை உடனே ஏற்று அவளுக்கு மறுமுனையில்,”ஹலோ மிஸ். மோனிகா”எனப் பதிலளிக்க,

“ஹலோ மேம். நான் அந்தக் குறிப்புகளை எல்லாம் படிச்சிப் பார்த்துட்டேன். நான் இதை நம்ம எல்லா தொழிலாளர்கள் இருக்கிற வாட்சப் குரூப்பில் இப்போவே போஸ்ட் பண்ணிடவா?”என்று அவளிடம் அனுமதி கேட்டிருந்தாள் காரியதரிசி.

“வேண்டாம் மிஸ். மோனிகா. நாளைக்குக் காலையில் அனுப்புங்க. அப்போவே அதில் இருக்கிறதை நீங்க அவங்க எல்லாருக்கும் ஒரு தடவை தெளிவாக விளக்கிச் சொல்லிடுங்க. நானுமே அடிக்கடி அவங்க யாருக்காவது கால் செஞ்சி அதைப் பத்திக் கேட்பேன்னும் சொல்லி வைங்க”என்று உத்தரவு பிறப்பித்து விட்டு, அழைப்பைத் துண்டித்த பின்னர் தான், நிம்மதியாக கண் அயர்ந்தாள் சஹஸ்ரா.

அடுத்து வந்த நாட்களும் அவளுக்குத் தோதாக வேகவேகமாகச் சென்று விட்டதால், தங்களது சொந்த ஊருக்குச் செல்லத் தயாராகி விட்டிருந்தார்கள் அவளும், அவளது பெற்றோரும்.

தாங்களும் தங்களுக்குத் தேவையான உடைமைகளைப் பையில் அடைத்து விட்டனர் ரமணன் மற்றும் கஸ்தூரி.

தங்கள் பூர்வீகத்திற்கு அருகில் இருக்கும் பெரிய நகரத்திற்கு விமானத்தில் பயணித்துச் சென்று அங்கேயிருந்து வாடகை காரைப் பிடித்து ஊருக்குள் செல்ல முடிவெடுத்து இருந்தார்கள் மூவரும்.

ஏனென்றால், இரயிலில் பயணித்துச் செல்லலாம் என்றத் தந்தையின் ஆலோசனையைக் கேட்டதும்,”அது மட்டும் வேண்டவே வேண்டாம்ப்பா! ஏன்னா, மாமாவும், அவங்க பிள்ளைங்களையும் வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷன் போன அப்போவோ என்னால் அங்கே கொஞ்ச நேரம் கூட இருக்க முடியலை! அதே மாதிரி, டிரெயினுக்கு உள்ளேயும் அவ்வளவாக நல்லா இல்லை! அதனால் இந்த விஷயத்தில் மட்டும் என் பேச்சைக் கேளுங்க ப்ளீஸ்!”என்று அவரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள் சஹஸ்ரா.

அதனால் தான் விமானம் மற்றும் கார் வழிப் பயணத்திற்குச் சம்மதித்து விட்டிருந்தார்கள் அவளது பெற்றோர்.

அதை தனது தங்கையின் குடும்பத்திடமும் தெரிவித்தார் ரமணன்.

பால்ராஜ்ஜூம், மகிழம்பூவனும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி எடுத்துக் கொள்ளும் அளவிற்கு அது பெரிய விஷயமும் இல்லை. அவளது வசதிக்கேற்ப வரட்டும் என்றெண்ணினர்.

ஆனால் அந்த தகவலை அறிந்ததும்,”அந்தச் சங்குப்பூவழகி அப்படித் தான் பண்ணுவாள்னு நான் நினைச்சேன்!”என்று தன் கணவனிடம் புலம்பித் தீர்த்தாள் வண்ணமதி.

“ப்ச்! மதி! உனக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்காது! அவளுக்கு உன்னைப் பிடிக்காது! அதனால் தான், அந்தப் பொண்ணு எது செஞ்சாலும் நீ அதைக் குறை சொல்லிட்டு இருக்கிற! அவங்க, அவங்களுக்கு எது வசதியோ அதில் தானே வரனும்னுப் பிரியப்படுவாங்க? நீ அதையே தப்புச் சொல்றம்மா! இது உன் குணத்துக்கு நல்லது இல்லம்மா. பார்த்துக்கோ!”என்று மனைவிக்கு அறிவுரை வழங்கினான் பூபாலன்.

அதிக முகம் சுருங்கிப் போனாலும் கூட அவன் கூறுவது சரி தான் என்பதை ஒப்புக் கொண்டு,”ம்ஹ்ம். நீங்க, அப்பா எல்லாம் சொல்றது எனக்குப் புரியுதுங்க! ஆனால் அவ இந்த ஊரில் பிறந்துட்டு ஏதோ ஃபாரினில் பிறந்த மாதிரி ஓவர் சீன் போட்றா! அதை தான் என்னால் பொறுத்துக்க முடியலை! கடுப்பாக வருது! நான் என்னப் பண்ணுவேன் சொல்லுங்க?”என்று தன்னிடம் பாவமாக கேட்டவளின் கையைப் பிடித்து தன்னருகில் அமர வைத்துக் கொண்டு,

“நீ ஒன்னும் பண்ண வேண்டாம். நாளைக்கு விடியிற வரைக்கும் என்னை மட்டும் கன்ட்ரோல் பண்ணாதே!”என்றவனோ, தொட்டிலில் உறங்கும் தங்களது மகனைப் பார்த்து விட்டுத் தன் மனைவியுடன் மெத்தையில் சரிந்தான் பூபாலன்.

அதற்குப் பிறகு அவளைப் பிரிந்திருந்த நாட்கள் முழுவதையும் ஈடு செய்யும் அளவிற்கு அவளை ஸ்பரிசித்து, முத்தமிட்டு, அவளுடன் இரண்டறக் கலந்து அவளுக்குத் தன் காதலைக் கடத்த தொடங்கி விடவும்,

அதில் தானும் உலகம் மறந்து அவனுக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டுத், தனது நேசம் முழுவதையும் அவனுக்குக் கடத்தி விடும் வேலையைச் செவ்வனே செய்ய ஆரம்பித்தாள் வண்ணமதி.

அதற்குப் பிறகான நாட்களில் எல்லாம் தனது தாய் மாமாவின் குடும்பத்தின் வருகையின் காரணமாகத் தங்கள் வீட்டில் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து விட்டு, அவர்களின் வருகை நாளன்று அவர்களுக்குப் பிடித்தமான உணவுப் பொருட்களைச் செய்து வைக்கவும் திட்டம் போட்டிருந்தான் மகிழம்பூவன்.

அதற்காகவே சமையல் ஆட்களை நியமித்து அவர்கள் தங்களது ஊருக்கு வருவதற்கு முந்தைய நாள் அந்த ஊரின் பிரத்தியேகமான உணவுப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டி வகைகளைச் செய்ய வைத்திருந்தவனைக் கண்டுப் பொருமித் தள்ளினாள் அந்த தினம் தன் பிறந்தகத்திற்கு வந்திருந்த அவனது தமக்கை வண்ணமதி.

ஏனென்றால், இவற்றையெல்லாம் தங்களது மாமாவும், அத்தையும் வேண்மென்றால் விரும்பி உண்பார்கள். ஆனால் இந்த உணவு வகைகளை ஒரு மரியாதைக்குக் கூடச் சுவைத்துப் பார்க்க மாட்டாள் அந்தச் சங்குப்பூவழகி என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்!

அவளுக்காகப் போய் இத்தனையும் மெனக்கெட்டுத் தன் தம்பியால் செய்யப்படுவதைக் கண்டு மிகவும் கோபம் கொண்டாள் வண்ணமதி.

ஆனாலும் அவள் அதற்கு எந்தக் கருத்தும் சொல்லவில்லை.

‘நடப்பது நடக்கட்டும்!’என்ற மனப்போக்கு வந்திருந்தது அவளுக்குள்.

அடுத்த நாள் மதிய வேளையில் பல மாதங்களுக்குப் பிறகுத் தங்களது பூர்வீக மண்ணில் காலடி எடுத்து வைத்திருந்தார்கள் ரமணன், கஸ்தூரி மற்றும் சஹஸ்ரா.


- தொடரும்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top