வரம் 22

Advertisement

Writer girl

Well-known member
Member
தனது கையில் இருந்து கொண்டு உடலை நெளித்துக் கொண்டிருந்த மகனைக் கொண்டு போய்த் தனது அன்னையிடம் கொடுத்து,”இவனை உறங்க வைங்கம்மா. நானும், மதியும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசிட்டு வர்றோம்”எனக் கூறினார் பூபாலன்.

அது என்னவென்று கேட்காமல்,“சரிடா”என்று ஒப்புக் கொண்டுத் தனது பேரனை உறங்க வைப்பதற்காக அவனுடன் அவர்களது அறைக்குள் போய் விட்டார் முல்லைக்கொடி.

அதே சமயத்தில்,”எனக்கு வேலை இருக்கு. நான் ஒரு மணி நேரமாவது வேலை பார்த்துட்டு வர்றேன்”என்று அனைவரிடமும் பொதுவாக உரைத்து விட்டுத் தனது மடிக்கணினி மற்றும் கண் கண்ணாடி அடங்கிய பையை எடுத்துக் கொண்டு அறைக்குள் புகுந்து கொண்டாள் சஹஸ்ரா.

“நாங்களும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்துக்கிறோம்”என்று தங்களிடம் அறிவித்த ரமணனையும், கஸ்தூரியையும்,

“சாயந்தரம் காப்பிப் போடுற சமயம் உங்களை எழுப்பி விட்றேன்”எனத் தெரிவித்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அனுப்பி வைத்து விட்டு,

தனது மனைவியிடம் வந்து,”நீ உன் தம்பிக்கு நல்லது தான் நினைப்பன்னு அவனுக்குத் தெரியும்ன்னே வச்சுக்குவோம்! ஆனால் இது அவனோட கல்யாண விஷயம் மதி! அவன் சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் காதலிச்சிட்டு இருந்த பொண்ணே தெய்வாதீனமாக அவனைக் கட்டிக்கத் தயாராக இருக்கும் போது அந்த வாய்ப்பை விடுவான்னு நீ நினைக்கிறியா?”என்று மனைவியிடம் தீர்க்கமாக கேட்டான் பூபாலன்.

உடனே,“இவன் மட்டும் தான் அழகியை விரும்புறான்ங்க! ஆனால் அவ இவனை விருப்பப்பட்டுக் கல்யாணம் செய்துக்கப் போவதில்லை! அதை நினைச்சு எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்ன்னு யோசிச்சுப் பாருங்க! ஏன் யாருமே என் மனசைப் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க?”என்று ஆதங்கத்துடன் கேட்டவளிடம்,

“என்னப் புரிஞ்சிக்கனும்க்கா? உனக்கு என்னாச்சு? நீ ஏன் இவ்வளவு கலக்கமாகப் பேசிட்டு இருக்கிற?”என்று தன்னிடம் கேட்டத் தம்பியைக் கண்டதும் தர்ம சங்கடமாக உணர்ந்தாள் வண்ணமதி.

இவர்களது தீவிரமான முக பாவனையைக் கண்டு இவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் நடக்கிறது போல் என்று நினைத்து விட்டுத் தான், இவர்களிடம் வந்து என்னப் பிரச்சினை என்பதைக் கேட்டிருந்தான் மகிழம்பூவன்.

அவனுக்குப் பதில் சொல்ல வந்த தன்னுடைய கணவனை முந்திக் கொண்டு,”நான் உங்கிட்ட கொஞ்சம் தனியாகப் பேசனும்டா”எனக் கூறவும்,

“ஓஹ் என்னைப் பத்தின விஷயத்தை தான் நீங்க தீவிரமாகப் பேசிட்டு இருந்தீங்களா?”என்றுரைத்து விட்டு,

“சரி. வாங்க. வெளியே போய்ப் பேசலாம்”என்றவனோ,

அங்கேயிருந்த அனைவரிடமும்,”நாங்க மூனு பேரும் பண்ணைக்குப் போய்ப் பால் வாங்கிட்டு வர்றோம்”என்று தெரிவித்தான் மகிழம்பூவன்.

உடனே,”அது தான் நம்ம ஆளுங்களே பாலைக் கொண்டு வந்து நமக்குக் கொடுத்துட்டுப் போயிடுவாங்களே? நீங்க எதுக்கு அலையனும்? அதுவும் மதியையும் ஏன் கூட்டிட்டுப் போறீங்க?”என மகனிடம் வினவினார் பால்ராஜ்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்கப் பேசும் போது நான் இங்கே இருக்கக் கூடாதுன்னு என்னைக் காய் வாங்க அனுப்பி விட்டீங்கள்ல ஐயா? அதே விஷயத்தைப் பத்திப் பேசத் தான் நாங்களும் இப்போ பேசப் போறோம். அதான்”என்றவுடன்,

“ஓஹோ! அப்படியா விஷயம்? சரி. பாலை வாங்கிட்டுச் சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேருங்க”என்று அவர்களிடம் அறிவுறுத்தி அனுப்பி வைத்து விட,

“இவங்க மூனு பேரும் நம்மகிட்டே எதையோ மறைக்கிறாங்கன்னுத் தோணுது சம்பந்தி”என அவரிடம் யோசனையுடன் கூறினார் ஆறுமுகம்.

“எனக்கும் அப்படித் தான் தோணுது சம்பந்தி! இந்த மதிப் புள்ளை முகத்தில் அடிச்சா மாதிரி அழகியைப் பத்திப் பேசினதில் இருந்து மாப்பிள்ளை, தங்கச்சியோட முகமே வாடிப் போச்சு! அதே மாதிரி அழகியோட முகமும் சரியில்லை! மூனு பேரும் ரொம்ப மனசுக் கஷ்டப்பட்டுப் போயிருக்காங்க!”என்று தனது மனக் கவலையை அவருக்கு எடுத்துரைத்தார் பால்ராஜ்.

“ம்ஹ்ம். எனக்கும் புரியுது சம்பந்தி. மதிப் புள்ளைக்குத் தம்பிப் பாசம் கண்ணை மறைக்குது. அது தான் இப்படி வெடுக்குன்னுப் பேசி விட்ருச்சு! நாம உங்க தங்கச்சியும், மாப்பிள்ளையும் தூங்கி எழுந்து வந்ததுக்கு அப்பறம் அவங்க கிட்ட நாம பேசிப் புரிய வைப்போம்! மதிப் புள்ளைக்கிட்ட அதோட புருஷனும், தம்பியும் பேசிப் புரிய வைப்பாங்க! நீங்க வெசனப்படாதீங்க!”என்று அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார் ஆறுமுகம்.

அதே நேரத்தில் தங்களது இரு சக்கர வாகனத்தைப் பால் பண்ணையின் வாயிலில் நிறுத்தினார்கள் பூபாலன் மற்றும் மகிழம்பூவன்.

தன் கணவனின் வண்டியில் இருந்து இறங்கிக் கொண்டாள் வண்ணமதி.

உடனே இரண்டு வண்டியையும் அவற்றிற்கு உரிய இடங்களில் நிறுத்தி விட்டு மூவரும் உள்ளே சென்றனர்.

அவர்களைப் பார்த்ததுமே அங்கேயிருந்த பணியாளர்கள் ‘வணக்கம்’ வைக்கத் தாங்களும் அவர்களுக்குப் பதில் வணக்கம் கூறி விட்டு அலுவலக அறைக்குள் நுழைந்து நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள்.

“சொல்லுக்கா? எங்கிட்ட என்னப் பேசனும்?”எனத் தமக்கையிடம் கேட்டான் மகிழம்பூவன்.

உடனே சற்று நேரத்திற்கு முன்பாகத் தனக்கும், தன் கணவனுக்கும் இடையே நடந்த உரையாடலை அவனிடம் விவரித்து விட்டிருந்தாள் வண்ணமதி.

அதைப் பொறுமையாக கேட்டுக் கொண்டு,”நீ எனக்கு நல்லது தான் நினைப்பன்னு எனக்கும் நல்லாவே தெரியும்ன்றதை நான் சஹாவோட ஊரில் இருந்த அன்னைக்கே உங்கிட்ட தெளிவாக சொல்லி இருந்தேன் தானே க்கா?”என அவளிடம் வினவ,

அதற்கு,“ம்ஹ்ம்” என்று பதிலளித்தாள்.

“அதில் எனக்கு இப்பவும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை!”என்றதுமே,

தனது கணவனைக் கர்வத்துடன் நோக்கினாள் வண்ணமதி.

அதைக் கண்டுச் சலித்துக் கொண்டான் பூபாலன்.

அவர்களது செய்கைகளை அவதானித்து விட்டு,“அக்கா!”என்று அழைத்து தன் சகோதரியின் கவனத்தை தன் புறம் திருப்பினான் மகிழம்பூவன்.

“சொல்லு மகிழு”என அவனிடம் திரும்பிக் கேட்டாள் வண்ணமதி.

“இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட நான் உன் மேல் வச்சிருக்கிற நம்பிக்கை மாதிரியே நீ என் மேல் நம்பிக்கை வச்சிருக்கிற தானே?”என்றவனின் அழுத்தமான குரலில் தூக்கி வாரிப் போட்டாலும் கூட,

“ஆமாம். எனக்கு உன் மேல் முழு நம்பிக்கை இருக்கு!”என்று அவனுக்கு உறுதி அளித்ததும்,

“அப்போ என்னால் அழகியை என்னைப் பிடிக்க வைக்கச் செய்ய முடியும்ன்னும் உனக்கு நம்பிக்கை இருந்து இருக்கனுமே? அது உனக்கு ஏன் இல்லக்கா?”என்று அவளிடம் கிடுக்கிப்பிடியாக கேட்டிருந்தான் மகிழம்பூவன்.

அதில் மிகவும் திணறிப் போய் விட்டாள் வண்ணமதி.

தனது மனைவியின் நிலையைக் கண்டுப் பரிதாபம் அடைந்து,”நானும் இதை தான் இவளுக்குச் சொல்லிப் புரிய வைக்க முயற்சி செஞ்சேன்!”என்று புலம்பினான் பூபாலன்.

“நீங்க ரொம்ப தாமதம் மாமா! நான் இதை ஊரிலேயே இவங்க கிட்ட நிறைய தடவை சொல்லிப் புரிய வச்சிட்டு இருந்தேன்! ஆனால் அப்போதெல்லாம் சரின்னுத் தலை ஆட்டிட்டு இப்போ மறுபடியும் அதே விஷயத்தைப் பேச ஆரம்பிச்சுட்டாங்க! அதுவும் எங்க அத்தை, மாமா முன்னாடியே அவங்க பொண்ணைப் பத்தி அப்படி பேசி வச்சிருக்காங்க! அதனால் தான் நாம வீட்டுக்கு வந்தப்போ அவங்க என்னைச் சங்கடமாகப் பார்த்தாங்க போல!”என்று தமக்கையின் செயல் தனக்குப் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாகவே சொல்லி விட்டான் மகிழம்பூவன்.

அதைக் கேட்டுத் தன் முகம் கருத்துப் போய்க் கண்கள் கலங்கிப் போய் அவனை ஏறிட்டுப் பார்த்து,”நீ சொல்வதைப் பார்த்தால் நான் தான் உங்க எல்லாருக்கும் தேவையில்லாமல் சண்டையை மூட்டி விட்றேனா?”என்று தொண்டைக் கமறக் கேட்டாள் வண்ணமதி.

உடனே அவளது கையை ஆதூரமாகப் பற்றிக் கொண்டு,”அப்படியெல்லாம் இல்லம்மா”என்ற கணவனைத் தடுத்து,

“அவன் பேசட்டும்ங்க. அவன் இவ்வளவு நாளாக என்னைப் பத்தி என்ன நினைச்சிட்டு இருந்தான்றது எனக்குத் தெரியனும்”என்று தீர்க்கமாக கூறி விட்டுத் தம்பியைப் பார்க்க,

“அக்கா!”என்று அவளது அருகே தனது நாற்காலியைப் போட்டு உட்கார்ந்தவனோ, அவளது கரத்தை தனது கரத்தில் பொத்தி வைத்துக் கொண்டு,”நான் உன்னைப் பத்தி தப்பாக எதுவுமே நினைக்க மாட்டேன்க்கா! ஏன்னா, நம்ம அம்மா இறந்ததுக்கு அப்பறம் நீ தான் எனக்கு அம்மாவாக இருந்து என்னை நல்லா பார்த்துக்கிட்டே! உனக்கு என் மேல் எல்லா விஷயத்திலும் நம்பிக்கை இருக்கும் போது இந்தக் கல்யாண விஷயத்தில் மட்டும் உனக்கு ஏன் என்னை நம்பத் தோன மாட்டேங்குது? நீ இன்னைக்கு எனக்காகப் பேசினதை நினைச்சு எனக்கு ரொம்ப பெருமையாக இருந்துச்சு! ஆனால் அழகியைப் பெத்தவங்களை நினைச்சுப் பாரு! அத்தையும், மாமாவும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவங்கப் பொண்ணை நான் விரும்புன ஒரே காரணத்துக்காக நம்ம வீட்டுக்கு மருமகளாக அனுப்பி வைக்க முடிவு பண்ணி இருக்காங்க! அப்படி இருக்கும் போது நம்ம வீட்டுக்கு அவங்க வந்து தங்கி இருக்கும் போது நீ அவங்கப் பொண்ணை இப்படி சுருக்குன்னுப் பேசினதை நினைச்சு எவ்ளோ கஷ்டப்படுவாங்கன்றதை யோசிச்சுப் பார்த்தியா?”என்றவனின் கூற்றைக் கேட்டுக் குற்ற உணர்வால் தலையைக் குனிந்து கொண்டாள் வண்ணமதி.

“நீ பேசின விஷயம் சரியாக இருந்தாலும் பேசின விதம் ரொம்பவே தப்புக்கா! என்னடா நாம இவனுக்காகத் தானே பேசினோம். ஆனால் இவனே நம்மளை இப்படி சொல்றானேன்னு நினைச்சாலும் பரவாயில்லை. ஆனால் நீ அவங்களை இப்படி பேசினதை நம்ம அம்மா உயிரோட இருந்து அவங்க கேட்டிருந்தால் அவங்க எவ்வளவு ஃபீல் பண்ணி இருப்பாங்கன்றதை யோசிச்சுப் பாரு அக்கா!”என்றிருந்தான் மகிழம்பூவன்.

அவன் தங்களது அன்னையைப் பற்றிய பேச்சை எடுத்ததும் உடைந்து அழுது விட்டாள் அவனது தமக்கை.

“மதிம்மா”என்று அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டுச் சமாதானம் செய்ய ஆரம்பித்தான் பூபாலன்.

“அழாதேக்கா! நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்! நீ என்னை முழுசாக நம்பலாம்! என்ன தான், அந்த அழகி என்னைக் கன்ட்ரோல் பண்றா மாதிரி உனக்கு இப்போ தோன்றினாலும் எங்க கல்யாணத்துக்கு அப்பறம் நான் அவளைக் கொஞ்சம், கொஞ்சமாக மாத்திடுவேன்! என்னை நம்பு! நீ இனிமேல் இதைப் பத்திக் கவலைப்படாமல் கல்யாண வேலையைப் பாரு!”என்று அவளிடம் கேட்டுக் கொண்டான் மகிழம்பூவன்.

அவனது சொற்களில் இருந்த உறுதி அவளுக்கும் தெம்பையும், தெளிவையும் கொடுத்தது போலும்!

ஆகவே,”சரிடா! நான் இனிமேல் எதை நினைச்சும் கவலைப்பட மாட்டேன்! நான் உன்னை நம்புறேன்!”எனத் தானும் அவனுக்கு வாக்களித்து விட்டாள் வண்ணமதி.

“ம்ம். இப்போதாவது சிரி”என்று மனைவியிடம் அறிவுறுத்தினான் பூபாலன்.

உடனே அவளும் தனது இதழ்களில் புன்னகையைப் படர விட்டாள்.

அதற்குப் பிறகு அங்கேயிருந்த பெரிய பாத்திரத்தில் பாலை ஊற்றி எடுத்துக் கொண்டுத் தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் மூவரும்.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top