வரம் 23

Advertisement

Writer girl

Well-known member
Member
வண்ணமதியின் முகத்தைக் கண்டு அவளுக்கு அனைத்தையும் தெளிவுப்படுத்தி விட்டான் மகிழம்பூவன் என்பதை அறிந்து கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்.

“அத்தையும், மாமாவும் இன்னும் எழுந்திரிக்கலையா? அழகியையும் காணோம்?”என்று தன் கண்களால் அவர்கள் மூவரையும் துழாவினான் மகிழம்பூவன்.

ஆறுமுகம்,“ஆமாம் மாப்பிள்ளை. காபி போட்டு வச்சிட்டு அவங்களை எழுப்புவோம்”என்றதும்,

“சரிங்க ஐயா”என்று கூறி விட,

“நான் போய் எல்லாருக்கும் காப்பியைப் போட்டுட்டு எடுத்துட்டு வர்றேன்”என்று அனைவரிடமும் அறிவுறுத்தி விட்டு எழுந்து கொண்ட முல்லைக்கொடியிடம்,

உடனே,“நானும் உங்களுக்கு உதவி செய்றேன்த்தை”என்று கூறி அவருடன் இணைந்து சமையலறைக்குச் சென்று விட்டாள் வண்ணமதி.

“என்னாச்சுப்பா? எல்லாம் சரி ஆயிடுச்சு தானே?”என்று மகனிடம் விசாரித்தார் பால்ராஜ்.

“ஆமாங்க ஐயா. எல்லாம் சரி ஆயிடுச்சு! நான் அக்காவுக்குச் சொல்லிப் புரிய வச்சிட்டேன்!”என அவருக்குப் பதிலளித்தான் மகிழம்பூவன்.

“ஆனால் மாப்பிள்ளையும், தங்கச்சியும் ரொம்ப மனசு உடைஞ்சுப் போயிட்டாங்க! அழகியோட முகம் சரியாக இல்லை!”என்று தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்ட தந்தையிடம்,

“நான் அவங்களையும் பேசி சரி பண்ணிட்றேனுங்க ஐயா”என்று வாக்களிக்க,

“சரிப்பா. இதை உன்னோட பொறுப்பில் விட்றேன்”என்று கூறித் அவன் மீது தனக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார் பால்ராஜ்.

“நான் போய்ச் செந்திலைப் பார்த்துக்கிறேன்”என்று கூறித் தன் மகனை உறங்க வைத்திருக்கும் அறைக்குப் போய் விட்டான் பூபாலன்.

சிறிது நேரம் கழித்து சமையலறையில் இருந்து வெளிப்பட்டுத் தனது தந்தை மற்றும் மாமனாக்குக் காப்பித் தம்ளர்களைக் கொடுத்து விட்டுத் தன் கணவனைத் தேடிச் சென்று அவனுக்கும் ஒரு தம்ளரைக் கொடுத்து விட்டுத் தானும் காப்பியைப் பருகினாள் வண்ணமதி.

அதேபோல் தன்னுடைய கரத்தில் ஒரு காப்பித் தம்ளரை வைத்துக் கொண்டுத் தன் கணவர் மற்றும் சம்பந்தியிடம் அளவளாவத் தொடங்கி விட்டார் முல்லைக்கொடி.

அதே நேரத்தில், தனது அத்தையும், மாமாவும் தங்களது அறையிலிருந்து வந்ததை அவதானித்து விட்டு அவர்களிடம் சென்று,”நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியாகப் பேசனும்”என்று தீர்க்கமாக உரைத்து இருந்தான் மகிழம்பூவன்.

அதில் அவர்களுக்குக் கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது எனலாம்!

ஏனென்றால் அவன் இப்போது தான், தன் தமக்கையுடன் பேசி விட்டு வந்திருக்கிறான்!

அப்படியிருக்கும் போது, அவளுடைய வார்த்தைகள் இவனது மனதைக் கலைத்து விட்டிருந்தால் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று தங்களிடம் கோரிக்கை விடுத்து விடுவானோ என்றக் கலக்கத்துடன் அவனைப் பார்த்தனர் ரமணன் மற்றும் கஸ்தூரி.

அதைப் புரிந்து கொண்டு,”நீங்கப் பயப்பட்ற மாதிரி நான் எதுவும் சொல்லிட மாட்டேன்! அதனால் கவலைப்படாமல் என் கூட வாங்க”என்று கூறி அவர்களுக்கு நம்பிக்கை அளித்தான் மகிழம்பூவன்.

“சரி மாப்பிள்ளை”என்று அவனைப் பின்தொடர முயல,

“இந்தக் காப்பியைக் குடிச்சிட்டே பேசத் தானே? இந்தாங்க”எனத் தன்னிடமிருந்த இரண்டு காப்பித் தம்ளர்களை அவர்களிடம் கொடுத்தார் முல்லைக்கொடி.

அவரைத் தொடர்ந்து வந்து சேர்ந்து தன் கையிலிருந்த தம்ளரைத் தம்பியிடம் கொடுத்தாள் வண்ணமதி.

“நாங்க வெளியே காத்தாட உட்கார்ந்து பேசிட்டு வர்றோம்”என்றுரைத்து விட்டான் மகிழம்பூவன்.

அவர்கள் மூவரும் அங்கேயிருந்து வெளியேறி வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு ஒரு மடக்குக் காப்பியைக் குடித்து விட்டுத் தாங்கள் ஒருவரது முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டார்கள் ரமணனும், கஸ்தூரியும்.

அதைக் கண்டுத், தன்னுடைய தொண்டையைச் செருமித் தானே முதலில்பேச்சைத் தொடங்கும் விதமாக,”நான் இங்கே இல்லாதப்போ அக்கா உங்க மூனு பேரையும் ஏதோ சுருக்குன்னுப் பேசிட்டாங்கன்னுக் கேள்விப்பட்டேன் அத்தை, மாமா”என்று கூறி அவர்களது முகத்தை ஆராயவும்,

அதில் அவ்விருவரின் முகங்களும் சுணங்கிப் போயிற்று!

அதைக் கண்டதும் தனது முகம் கனிய,”நானும், அக்காவும் நீங்க வளத்துப், படிக்க வச்சவங்க தானே? அக்காவுக்கு நீங்க ரெண்டு பேரும் தானே ஆசையாக, உரிமையாக, ஊர் மெச்ச எல்லாத்தையும் செஞ்சிக் கல்யாணம் பண்ணி வச்சீங்க! அப்பறம் அவங்க கிட்டே உரிமையாக எதிர்த்துப் பேசுவதில் உங்களுக்கு என்னச் சங்கடம்? எங்களுக்கு எங்க மக மேலேயும், மாப்பிள்ளை மேலேயும் நம்பிக்கை இருக்குன்னு ஏன் சொல்லாமல் விட்டீங்க? நான் ஒன்னும் அழகியைக் கட்டாயத்தின் பேரில் கல்யாணம் பண்ணப் போறது இல்லையே? உங்கப் பொண்ணும் எங்கிட்ட அப்படி எதுவும் கண்டிஷன் போடலையே? அப்பறம் உங்களுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?”என்று அவர்களிடம் மென்மையாக ஆனாலும் உறுதியாக வினவினான் மகிழம்பூவன்.

அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் தங்களை நெகிழ வைப்பதை உணர்ந்து கண்கள் கலங்கிப் போய் விட்டார்கள் இருவரும்.

“ப்ச்! இப்போ எதுக்கு ரெண்டு பேரும் கண் கலங்குறீங்க? முதல்ல காப்பியைக் குடிச்சு முடிப்போம்”என்றதும்,

உடனே தங்களது பானத்தைப் பருகி முடித்து விட்டனர் மூவரும்.

“மதி அக்காவுக்கு என் மேல் பாசம் அதிகம் அத்தை, மாமா. எங்கம்மா இறந்ததுக்கு அப்பறம் அவங்க தான் என்னையும், அப்பாவையும் நல்லா பார்த்துக்கிட்டாங்கன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும் தானே? அழகிக்கு என்னைக் கட்டிக்க விருப்பமில்லை, வேற ஏதோ நோக்கத்துக்காகத் தான் அவ என்னைக் கல்யாணம் செய்துக்க நினைக்கிறாள்! அவளோட விருப்பம் இல்லாமல் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டால் அதுக்கப்புறம் நான் அதனால் ரொம்ப பாதிக்கப்படுவேன்றப் பயத்தால் தான், அவங்க இப்படியெல்லாம் உங்க மூனு பேர் கிட்டேயும் நடந்துக்கிறாங்க! அவங்களுக்கு உங்களைத் தெரிஞ்சே இப்படி அவமானப்படுத்தனும்னு எல்லாம் குறிக்கோள் இல்லை! அவங்களுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்”என்று தன் இருகரங்களைக் கூப்பி அவர்களை வணங்கினான் மகிழம்பூவன்.

அதில் பதறிப் போய்,”நீ என்ன மாப்பிள்ளை பண்ற? முதல்ல கையை இறக்கு!”என்று அவனது கரங்களைக் கீழிறக்கச் செய்தார் ரமணன்.

“நாங்க உன்னையும், மகிழையும் தப்பாகவே நினைக்க மாட்டோம் மாப்பிள்ளை! ஏன்னா, நீங்க சொன்னா மாதிரி நீயும், மதியும் நாங்கப் பார்த்து வளர்ந்த பிள்ளைங்க! எங்களுக்கு மதி மேல் எந்தக் கோபமும் இல்லை! எங்க மகளை நினைச்சுத் தான் வருத்தமாக இருக்கு!”என்றுரைத்தார் கஸ்தூரி.

“ஏன்த்தை?”எனக் கேட்டான் மகிழம்பூவன்.

“என்ன தான் மனசுக் கேட்காமல் மதிப் பொண்ணுச் சுருக்குன்னுப் பேசி இருந்தாலும் அவ பேசினது எல்லாம் சரி தானேப்பா? எங்களுக்கு உன்னை நினைச்சும் கவலையாக இருக்கு!”என்றிருந்தார் ரமணன்.

“நான் தான் உங்ககிட்ட இவ்வளவு உறுதியாகச் சொல்றேனே? எங்களைப் பத்தி நீங்க கலக்கம் ஆகாதீங்க! நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்”என அவர்கள் இருவருக்கும் அறிவுறுத்த,

“சரி மாப்பிள்ளை! நீ இவ்வளவு தூரம் சொல்லும் போது நாங்க உன்னை நம்புறோம்!”என்று அவனிடம் உறுதி அளித்தார்கள் இருவரும்.

“ம்ஹ்ம். இனிமேல் நீங்க எதுக்கும் கலங்க கூடாது! உள்ளே போகலாம். வாங்க”என்றவுடன்,

தாங்கள் குடித்த காலித் தம்ளர்களை எடுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தனர் மூவரும்.

அப்போது தனது அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்தாள் சஹஸ்ரா.

அவளைப் பார்த்ததும் புன்னகைத்து விட்டு,”நீ காபி குடிச்சியா அழகி?”என்று விசாரித்தான் மகிழம்பூவன்.

“இன்னும் இல்லைங்க”என்றுரைக்க,

“நீ வெளியே வந்ததும் உனக்குச் சூடாகப் போட்டுத் தரலாம்னு இருந்தேன்ம்மா. உட்காரு. நான் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்”எனக் கூறி விட்டு அவளுக்குப் பானத்தை தயாரிக்கச் சென்றார் முல்லைக்கொடி.

அதுவரையில் இறுக்கமாக இருந்த தனது முகத்தைச் சாந்தமாக மாற்றிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தாள் சஹஸ்ரா.

“நான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்”என அவளிடம் வந்தாள் வண்ணமதி.

உடனே அவளை ஏறிட்டு,“ம்ஹ்ம். சொல்லுங்க மதி”என இயல்பான குரலில் வினவ,

“நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்னைப் பேசினதுக்காக உங்கிட்டேயும், மாமா, அத்தைக் கிட்டேயும் மன்னிப்புக் கேட்கனும்னு நினைக்கிறேன்”என்று சங்கடத்துடன் கூறவும்,

“அதெல்லாம் வேண்டாம் மதி. நாங்க உங்களை எதுவும் நினைச்சுக்கலை!”எனப் புன்னகையுடன் கூறியவளோ,

தன் பெற்றோரைப் பார்த்து,”அப்படித் தானேப்பா, அம்மா?”எனப் கேட்டிருந்தாள் சஹஸ்ரா.

உடனே தாங்களும் புன்னகையை உதிர்த்து,”ஆமாம் மதி. நீ பேசின எதையும் நாங்க மனசில் வச்சிக்கலை”என்றவர்களை வியப்புடன் பார்த்தவளோ,

தனது தம்பியைச் சந்தேகமாக நோக்கவும்,

அவளது எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தனது கண்களை மூடித் திறந்தான் மகிழம்பூவன்.

உடனே அவனை நன்றியுடன் பார்த்து விட்டுத் தனது கணவன் மற்றும் மகன் இருந்த அறைக்குள் புகுந்து கொண்டாள் வண்ணமதி.

தங்கள் உறவுகளுக்கு இடையில் இருந்த பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து விட்ட மகிழ்ச்சியில் அடுத்த நாள் அந்த ஊரைச் சுற்றிப் பார்க்க முடிவெடுத்தனர் மகிழம்பூவன், சஹஸ்ரா மற்றும் வண்ணமதி, பூபாலன்.

“எனக்கு உங்களோட பால் பண்ணையைப் பார்க்கனும்னு ஆசையாக இருக்கு”என்று ஆர்வத்துடன் மொழிந்த தன் மாமன் மகளிடம்,

“அதுக்கென்ன? நாளைக்கு நாம ஊரைச் சுத்திப் பார்த்துட்டு அங்கேயும் போயிட்டு வரலாம்”என அதற்குச் சம்மதித்து விட்டிருந்தான் அவனது அத்தை மகன்.

அதற்கு மற்ற இருவரும் மாற்றுக் கருத்துச் சொல்லவில்லை.

எனவே தங்களது விருப்பத்தைப் பெரியவர்களிடம் தெரிவித்தனர்.

அதற்கு,”நீங்க நாளைக்கு இங்கே இருக்கிற எல்லா இடத்துக்கும் போயிட்டு வாங்க. நாங்க நிச்சயத் தேதியைக் குறிச்சிட்டு வந்துட்றோம்”என்று அவர்களுக்கு அறிவித்தார் பால்ராஜ்.

அதேபோல் தங்களது இரவு உணவை உண்டு முடித்துச் சீக்கிரமாகவே உறங்கி விட்டார்கள் அனைவரும்.

மறுநாள் விடியலில் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் குளித்து தயாராகி விட்டதும், சிறியவர்களை ஊரைச் சுற்றிப் பார்க்குமாறும், குட்டிப் பையன் செந்திலைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி அனுப்பி வைத்து விட்டுத் தாங்கள் மூவரும் ஜோசியரைப் பார்க்கச் சென்றனர் முல்லைக்கொடி, ஆறுமுகம் மற்றும் பால்ராஜ்.

தனது இருசக்கர வாகனத்தில் தன் மனைவி மற்றும் மகனை உட்கார கொண்டான் பூபாலன் என்றால், தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சஹஸ்ராவை ஏற்றிக் கொண்டான் மகிழம்பூவன்.

அவர்கள் இருவரும் தங்களது வாகனத்தைக் கிளப்பியதும், தனது கணவனின் தோளில் ஒரு கரத்தை வைத்து அழுத்திக் கொண்டுத் தனது மற்றொரு கரத்தில் மகனைக் கவனமாகப் பிடித்துக் கொண்டுப் பயணிக்க ஆரம்பித்தாள் வண்ணமதி.

அவளைப் போலவே, தனது கரங்களை அவனது தோளில் வைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அந்தப் பயணத்தை ரசிக்கத் தொடங்கி விட்டிருந்தாள் சஹஸ்ரா.

அதில் தனது உடலும், மனதும் உற்சாகமாகி விட்டதை உணர்ந்து தன் வண்டியை லாவகமாகச் செலுத்தினான் மகிழம்பூவன்.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top