வரம் 26

Advertisement

Writer girl

Well-known member
Member
அதில் தனது முகம் மலரப் புன்னகையுடன் அவளது பார்வையை எதிர்கொண்டான் மகிழம்பூவன்.

அதை வைத்தே அவளுக்கு விஷயம் புரிந்து விட்டிருந்தது.

“இந்தச் சாப்பாட்டை நீங்க தானே சமைச்சு இருக்கீங்க?”என்று கேட்டு அதற்கானப் பதிலை அவனது வாய்மொழியாக கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள் சஹஸ்ரா.

“ஆமாம். நான் தான் சமைச்சேன்”என்றுரைத்தான் மகிழம்பூவன்.

“நான் ஒரு வாய்ச் சாப்பிட்டதுமே எனக்குத் தெரிஞ்சிடுச்சு. ஆனாலும் உங்ககிட்ட கேட்டுக் கன்ஃபார்ம் பண்ணிக்க நினைச்சேன். தேங்க்ஸ்”என்றவளிடம்,

“பரவாயில்லை. சாப்பிடு”எனக் கூறி விட,

அதே சமயம், இவர்களது சம்பாஷணைகளைப் பார்த்தும், கேட்டும் ஆச்சரியத்தில் உணவுண்பதை மறந்து போயினர் மற்ற அனைவரும்.

“இவன் உனக்குச் சமைச்சுக் கொடுத்து ரொம்ப மாசமாச்சே! அப்படி இருந்தும் உனக்கு இவனோட கைப்பக்குவம் ஞாபகம் இருக்கா?”என வியப்பு மேலிட கேட்டாள் வண்ணமதி.

உடனே,”ஆமாம். இவரோட கைப்பக்குவம் ரொம்பவே டேஸ்ட் ஆக இருக்கும்! அதை என்னால் எப்பவும் மறக்கவே முடியாது! அதனால் தான் இவர் சமைச்சா நல்லா இருக்கும்ன்ற என்னோட ஆசையை உங்ககிட்ட சொன்னேன்”என்று அவளுக்கு விளக்கம் அளித்தாள் சஹஸ்ரா.

உடனே அவளும்,“ம்ஹ்ம். சரி”என்றுரைத்து விட்டு உணவில் கவனத்தைப் பதிக்க,

அவளது பதில் தந்தப் பூரிப்பில் தானும் உண்பதை தொடர்ந்தான் மகிழம்பூவன்.

அனைவரும் உணவுண்டு முடித்து விட்டுத் தத்தமது வேலைகளைப் பார்க்கச் சென்று விடத், தானும் தன்னுடைய புலனத்தை பரிசோதித்து விட்டு, அதில் மோனிகாவின் குறுந்தகவல் மற்றும் தான் அவளிடம் கேட்டிருந்த குறிப்புகளும் வந்து விட்டிருக்க அதைப் பார்வையிட்டு அதில் எந்தக் குறைபாடுகளும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு அடுத்த வேலையைப் பார்க்குமாறு அவளுக்குப் பதில் அனுப்பி வைத்து விட்டு,

“கம்பெனியில் இந்த தடவை லாபம் அதிகமாக வந்திருக்கு!”என்று அந்தத் தொகையையும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டாள் சஹஸ்ரா.

அவர்களோ,“அப்படியா? இதைக் கேட்டதும் எங்களுக்கு உன்னை நினைச்சு ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கு!”என்று கூறி அவளுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

அதை நன்றி கூறிப் பெற்றுக் கொண்டு,”அதனால் உங்க எல்லாருக்கும் ஸ்வீட்ஸ் வாங்கித் தரலாம்னு நினைச்சு இருக்கேன்”என்றவுடன்,

“பார்றா! இது வேறயா? நீ ஜமாய்ம்மா”என்றான் பூபாலன்.

அதில் குறுஞ்சிரிப்பை உதிர்த்து விட்டு,”பூவன்! என்னை இங்கே இருக்கிற பெஸ்ட் ஸ்வீட் கடைக்குக் கூட்டிட்டுப் போறீங்களா?”எனத் தன் அத்தை மகனிடம் கேட்டுக் கொண்டாள் சஹஸ்ரா.

உடனே,”சரி அழகி. வா போகலாம்”என்றுரைத்து அவளைத் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு இனிப்புக் கடைக்கு அழைத்துச் சென்றான் மகிழம்பூவன்.

அங்கேயிருந்த பால்கோவா, லட்டு மற்றும் இதர இனிப்புகளைத் தனது பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு வண்டியின் பின்னால் ஏறிக் கொண்டவளிடம்,

“இதுக்கெல்லாம் நானே காசு தந்து இருப்பேனே அழகி! நீ எதுக்குக் கொடுத்த?”என்று ஆதங்கத்துடன் கேட்க,

“மத்த நாளாக இருந்திருந்தால் நான் உங்ககிட்டேயும் பங்குப் பணம் வாங்கி இருப்பேன் தான் பூவன். ஆனால் இது என்னோட கம்பெனிக்கு வந்திருக்கிற லாபத்துக்கு நான் கொடுக்கிற இனிப்பு! அதனால் தான் நான் மட்டும் காசு போட்டு வாங்கினேன்”என்று அவனுக்கு விளக்கம் அளித்தாள் சஹஸ்ரா.

உடனே பின்னால் திரும்பி அவளைச் சில கணங்கள் பார்த்து விட்டு,”அப்போ நம்மளோட வேலை தனித், தனி! அதை நம்மப் பர்சனலுக்குள்ளேயும் கொண்டு வரக் கூடாது! அப்படித் தானே சொல்ல வர்ற?”என்று அவளிடம் தீர்க்கமாக கேட்டிருந்தான் மகிழம்பூவன்.

அதில் அவளுக்குச் சப்த நாடியும் ஒடுங்கிப் போயிற்று எனலாம்!

ஏனென்றால், பெண்ணவள் அவனைத் தன்னுடைய தொழிலின் வளர்ச்சிக்காகத் தானே அவனைத் திருமணம் செய்து கொள்ளவே போகிறாள்? அப்படி இருக்கும் போது தன்னுடைய இந்தச் செயலுக்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கிறது என்று அவன் வாயிலாக கேட்டறிந்ததும் ஸ்தம்பித்துப் போய் விட்டாள் சஹஸ்ரா.

தனது அடித்தளமே ஆட்டம் கண்டு விட்டதை உணர்ந்து,”அப்படியெல்லாம் தப்பாக நினைச்சிடாதீங்க பூவன். நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலைலை? அதுவரைக்கும் மட்டும் தான், நாம நம்மத் தொழிலைத் தனித், தனியாக நடத்துவோம்! நம்மக் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறம் எல்லாமே ஒன்னு தான்!”என்று அவனிடம் சமாளிப்பாக கூறி விட்டு அவனது முகத்தைப் பாவமாக ஏறிட,

“ஏதோ சொல்ற! சரி. வீட்டுக்குப் போவோம்”என்றுரைத்து விட்டு வண்டியை இயக்கினான் மகிழம்பூவன்.

சிறிது நேரத்தில் வீட்டை அடைந்து விட்டதும், அதிலிருந்து இறங்கிக் கொண்டு உள்ளே சென்று, தான் வாங்கி வந்திருந்த இனிப்புகளை அனைவருக்கும் விநியோகம் செய்தாள் சஹஸ்ரா.

அதை வாங்கி உண்டு விட்டு அவளுக்கு மீண்டுமொரு முறை வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

வீட்டினுள்ளே நுழைந்ததும் அந்தக் காட்சியைப் பார்த்து விட்டு,”உன்னைப் பைக்கில் உட்கார வச்சுக், கடைக்குக் கூட்டிட்டுப் போய், இதை வாங்கிட்டு வர்றதுக்கு உதவி செஞ்ச எனக்குக் கொடுத்தியா?”என்று தன் மாமா மகளிடம் குற்றம் சாட்டும் குரலில் வினவினான் மகிழம்பூவன்.

உடனே அவனிடம் சென்று இனிப்புப் பெட்டியில் இருந்த பால்கோவாவை எடுத்து நீட்டினாள் சஹஸ்ரா.

அதைக் கன்னக் குழிச் சிரிப்புடன் பெற்றுக் கொண்டு வாயில் அதக்கிக் கொண்டவனோ,”நான் உன்னை எப்பவும் தப்பாக நினைக்க மாட்டேன்! அதனால் ரிலாக்ஸ் ஆக இரு!”என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுப்பாகச் சொன்னவனை இதழ்கள் மலரப் புன்னகையுடன் நோக்கி,

“தாங்க்ஸ்!”என்றுரைத்து விட்டிருந்தாள் அவனது மாமன் மகள்.

“ம்ஹ்ம்”என்றிருந்தான் மகிழம்பூவன்.

அதேசமயத்தில்,”நாங்க நாளைக்கு வீட்டுக்குக் கிளம்பறோம் சம்பந்தி”என்று பால்ராஜ்ஜிடம் தெரிவித்தார் ஆறுமுகம்.

ஏனெனில், சஹஸ்ரா மற்றும் அவளது பெற்றோரின் வருகையை அறிந்து அவர்களைப் பார்க்க வந்து விட்டு, அவளுக்கும், மகிழம்பூவனுக்கும் நடக்கப் போகும் நிச்சயத்திற்காக நாள் குறிக்க வந்து இங்கேயே தங்கி விட்டதால் தங்களது வீட்டு வேலைகள் பாதிக்கும் என்ற எண்ணத்தில் இங்கிருந்து கிளம்ப முடிவெடுத்து விட்டிருந்தனர் வண்ணமதியும், அவளது கணவன் மற்றும் மாமனார், மாமியாரும்.

“சரிங்க சம்பந்தி”என்று அதற்குச் சம்மதித்து விட்டார் பால்ராஜ்.

அதற்குப் பிறகு அவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த அறைகளுக்குச் சென்று உறங்க ஆயத்தம் ஆனார்கள்.

அதே நேரத்தில், தான் கேட்டதற்கு இணங்கி தனக்காகப் பார்த்துப், பார்த்துச் சுவையாக உணவைச் சமைத்துக் கொடுத்த மகிழம்பூவனை நினைத்துக் கனிவு பிறந்தது சஹஸ்ராவிற்குள்!

அவன் தனக்காகச் சிரத்தை எடுத்துச் செய்வது அனைத்தையும் எண்ணிப் பார்த்து மகிழ்ந்து கொண்டே உறக்கத்தை தழுவினாள்.

அடுத்த நாள் காலையில் எழுந்து கிளம்பி அனைவரிடமும் சொல்லிக் கொண்டுத் தங்களது வீட்டிற்குச் சென்று விட்டனர் வண்ணமதியும், அவளது புகுந்த வீட்டாரும்.

இங்கே பால்ராஜ் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ராவும், அவளது பெற்றோரும் மட்டும் தான் இருந்தார்கள்.

அப்போது,”நாங்களும் ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கோம் மாமா”என்று தனது தங்கையின் கணவரிடம் உரைத்தார் ரமணன்.

அதைக் கேட்டதும் அவரும், மகிழம்பூவனும் வருத்தம் அடைந்தார்கள் தான்.

ஆனாலும் அவர்களும் இங்கேயே இருக்க முடியாதல்லவா?

எனவே தந்தையும், மகனும் அவர்கள் ஊருக்குக் கிளம்புவதற்குச் சம்மதம் அளித்தார்கள்.

“அப்போ நாளைக்கு டிக்கெட் புக் பண்ணிக் கிளம்புறோம்”என்ற தகவலை அவர்களிடம் தெரிவிக்க,

“சரிங்க மாப்பிள்ளை”என்றிருந்தார் பால்ராஜ்.

உடனே மகிழம்பூவனின் முகத்தை தான் ஆராய்ந்தாள் சஹஸ்ரா.

அதில் தன் மீதான அவனது நேசமும், தங்களது பிரிவை எண்ணி வருந்துவதும் அப்பட்டமாகவே வெளிப்பட்டு இருந்தது.

உடனே,“கவலைப்படாதீங்க பூவன். நம்ம நிச்சயத்துக்கு டிரெஸ் எடுக்க நீங்க எல்லாரும் சீக்கிரமே அங்கே வந்துடுங்க!”என்று கூறி அவனது வருத்தத்தைக் கலைத்தாள் சஹஸ்ரா.

அதில் மெலிதாகப் புன்னகைத்து விட்டு,”சரி அழகி”என்றுரைத்து விட்டான் மகிழம்பூவன்.

அதற்குப் பிறகுத், தன் மனைவி கஸ்தூரி, மகள் சஹஸ்ரா மற்றும் தனக்கானப் பயணச் சீட்டுக்களைப் பதிவு செய்து ஆதற்கான ஆதாரப் புகைப்படங்களைத் தரவிறக்கம் செய்து விட்டார் ரமணன்.

ஏற்கனவே வண்ணமதியும், அவளது குடும்பமும் சென்று விட்டதில் இருந்தே தங்களது வீடு வெறிச்சோடிக் கிடப்பதைக் கண்டு வருத்தம் அடைந்திருந்தார் பால்ராஜ்.

இப்போது தனது மனைவியின் அண்ணன் குடும்பத்தாரும் ஊருக்குக் கிளம்பப் போவதை எண்ணி மேலும் துயரம் அடைந்து விட,

அவரது முகத்தை வைத்தே எண்ணங்களைப் படித்து விட்டிருந்ததால்,

அன்றிரவு தந்தையைத் தனியாக அழைத்துப் போய்,”அதான், எங்களோட நிச்சயம் அப்பறம் கல்யாணம்ன்னு எல்லா நிகழ்ச்சிகளுக்கும் துணி எடுக்கிறதுப், பொருள் வாங்குவதுன்னு எல்லாரும் இங்கே வந்து, போகத் தானே போறாங்க ஐயா? நாமளும் அவங்க எல்லாரையும் பார்க்க அடிக்கடி போயிட்டு வருவோம் தானே? அப்பறம் ஏன் இப்படி வருத்தப்பட்றீங்க? இனிமேல் என்னோட கல்யாண வேலைத் தலைக்கு மேலே இருக்கும்! மாப்பிள்ளை நானே எல்லாத்தையும் செய்ய முடியுமா? நீங்க தானே பெரிய மனுஷனாக முன்னாடி நின்னு எல்லாத்தையும் பார்க்கனும்? நீங்களே இப்படி சுணங்கிப் போனால் என்ன நியாயம் சொல்லுங்க?”என்றவனைப் பார்த்து முகம் விகசிக்கப் புன்னகைத்து,

“ஆமால்ல மகிழு? உனக்கு நான் தானே எல்லாத்தையும் எடுத்துச் செய்யனும்ப்பா? அதனால் நீ சொன்ன மாதிரி நான் இனிமேல் இப்படி வருந்திக்கிட்டுக் கிடக்காமல் தெம்பாக இருந்து வேலையைப் பார்க்கிறேன்”என்று மகனுக்கு வாக்கு அளித்தார் பால்ராஜ்.

“சரிங்க ஐயா”என்று கூறி அவரை உறங்க அனுப்பி வைத்து விட்டுத் தானும் நித்திரையில் லயித்தான் மகிழம்பூவன்.

அடுத்த நாள் காலையிலேயே எழுந்து தயாராகத் தொடங்கி விட்டிருந்தார்கள் ரமணன், கஸ்தூரி மற்றும் சஹஸ்ரா.

அவர்களைத் தொந்தரவு செய்யாமல் காலை உணவைச் செய்து முடித்து விட்டனர் தந்தையும், மகனும்.

“இன்னைக்கு நீங்களும் சமையலில் இறங்கியாச்சா அண்ணா?”என்று பால்ராஜிடம் கேட்டார் கஸ்தூரி.

அவரோ,“ஆமாம்மா. நம்ம வீட்டில் எப்பவுமே மகிழோட சமையல் தான்! நான் எப்போதாவது தான் சமைப்பேன்! மதி வந்தால் அவ ஒரு நேரம் சமையல் செய்வாள்”என்று பெருமிதத்துடன் அவருக்குப் பதிலளித்து விட்டு,

“சாயந்தரமாகத் தானே கிளம்பப் போறீங்க? யாராவது ஓட்டுநரைப் பிடிக்கவா? மாப்பிள்ளை மட்டுமே எப்படி அவ்வளவு நேரம் ஓட்டுவாரு?”என்று அவர்களிடம் ஆதூரமாக வினவினார் பால்ராஜ்.

“அவர் மட்டும் ஓட்டினால் நாங்க இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது அண்ணா. சஹாவும் கொஞ்ச தூரம் ஓட்டுவாள்! எங்க கூடப் பாதுகாப்புக்கு ஆட்கள் வரலைன்னு நினைச்சிடாதீங்க! அவங்க எப்பவுமே ஊரில் இருக்கிற யாரையும் தொல்லை பண்ணாமல் மறைஞ்சி இருந்து எங்களைக் கண்காணிச்சிட்டு இருப்பாங்க! இந்த ஊரோட எல்லையைத் தாண்டியதும் எங்க கூட வந்து சேர்ந்துக்குவாங்க. அதுக்கப்புறம் ஏர்போர்ட் போற வரைக்கும் அதில் யாராவது ஒருத்தர் வண்டியை ஓட்டிட்டு வருவாங்க”என்று அவருக்கும், மகிழம்பூவனிற்கும் தங்களது பாதுகாப்புப் படலத்தைப் பற்றியும் தெளிவாக விவரித்தார் ரமணன்.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top