வரம் 28

Advertisement

Writer girl

Well-known member
Member
மகிழம்பூவனும், அவனது தந்தையும், வண்ணமதி மற்றும் அவளது புகுந்த வீட்டார் அனைவரும் இந்த ஊருக்கு வந்து ரமணனின் வீட்டில் தங்கி இன்றுடன் மூன்று நாட்கள் ஆகப் போகிறது.

முதல் நாள் வந்த அலுப்பினால் எங்கும் செல்ல முடியாமல் களைந்து போய் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

அதற்கடுத்த நாள் தான், வண்ணமதியின் கணவன் மற்றும் புகுந்த வீட்டாரால் இந்த வீட்டைச் சுற்றிப் பார்க்கவே முடிந்தது எனலாம்!

இங்குச் சில மாதங்களேனும் வந்து சென்று கொண்டிருக்கும் மகிழம்பூவன், பால்ராஜ் மற்றும் வண்ணமதிக்கு ஆச்சரியமும் கிடையாது.

ஆனால் தங்களது ஆர்வம் அடங்காமல், மூலை, முடுக்குகளுக்குச் சென்று அனைத்தையும் கண்டு வியந்தனர் வண்ணமதியின் கணவன் மற்றும் அவளது மாமனார், மாமியார்.

அவர்களைக் கனிவுடன் நோக்கி,”இன்னும் நிறைய நாள் இங்கே தங்கி இந்த வீட்டையும், ஊரையும் சுத்திப் பார்த்துருங்க”என்று அவர்களிடம் உரைத்தார் கஸ்தூரி.

உடனே,”இருக்கட்டும்மா. இந்த வீடு ரொம்பப் பிரம்மாண்டமாக இருக்கு. அதே சமயம் உங்களோட நிர்வாகத் திறமையால் இங்கே எல்லாமே நேர்த்தியாக நடக்குது! அதையெல்லாம் பார்த்து தான் எங்களுக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கு!”என்று அவரிடம் தன் மனதிலிருந்ததை மறைக்காமல் தெரிவித்தார் முல்லைக்கொடி.

அதை மலர்ந்த புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு,”நான் அங்கே இருந்த வரைக்கும், நீங்களும், வண்ணமதியும் உங்க வீட்டை நிர்வாகம் பண்றதைப் போலத் தான், நானும் இங்கே நிர்வாகம் பண்றேன்ம்மா”என்று தன்னையும், தன் மருமகளையும் பெருமையாகப் பேசியவரை நன்றி உணர்வுடன் பார்த்தவரோ,

“நாங்க இங்கே அவ்வளவாக வந்ததில்லைன்னாலும் இப்போ வரைக்கும் எங்களுக்கு இங்கே எந்த வித்தியாசமும் தெரியாத அளவுக்கு எங்களை நடத்துறீங்க! அதுக்கும் நன்றிம்மா”என்றுரைக்க,

“அச்சோ! பரவாயில்லைங்க”என்ற கஸ்தூரிக்கு அவரது புகழ்ச்சியால் வெட்கம் உண்டாகியது.

“ஹா ஹா! அம்மா! நீங்க க்யூட்டாக வெட்கப்பட்றீங்க!”என்று தாயைத் தானும் பாராட்டினாள் சஹஸ்ரா.

“சரி. சரி. நாம எப்போ துணி எடுக்கப் போகலாம்ன்றதைப் பேசலாமா?”என்று அனைவரையும் பார்த்துக் கேட்டார் ரமணன்.

உடனே,”ம்ஹ்ம். பேசலாம் மாமா”என்று உற்சாகமாக கூறினாள் வண்ணமதி.

அதைக் கண்டுத் தானும் உற்சாகமாக,”ஹேய்!”என்று தனது பிஞ்சுக் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தான் செந்தில்.

அவனை அப்படியே அள்ளித் தன் மடியில் இருத்திக் கொண்டாள் சஹஸ்ரா.

அதை அனைவரும் புன்னகையுடன் ஏறிட,”அத்தை மடி மெத்தையடின்னு சொல்றதை நிரூபிக்கிற மாதிரி உங்கிட்ட வந்ததும் அவன் ரொம்ப சமர்த்தாக ஆகிட்றான்ம்மா”என்று அவளுக்குப் புகழாரம் சூட்டினார் ஆறுமுகம்.

அதில்,”ஆமாம் மாமா”என்றவளோ,

“இனிமேல் இவன் ஏதாவது முரண்டு பண்ணினால் எங்கிட்ட கொடுத்துடுங்க! நான் இவனைச் சமாதானப்படுத்திட்றேன்”என்று பூபாலன் மற்றும் வண்ணமதியிடம் தெரிவித்தாள் சஹஸ்ரா.

அதற்கு,“சரி”என்றிருந்தனர் தம்பதி இருவரும்.

தன்னவளின் இந்தப் பரிமாணத்தைக் கண்டு இன்னும் அதிகமாக அவளின் பால் காதலுற்றுப் போய் விட்டான் மகிழம்பூவன்.

அதை தனது விழிகளின் வழியாகவும் அப்பட்டமாக வெளிப்படுத்தி இருந்தான்.

அதன் வீச்சுப் பெண்ணவளையும் தாக்கியது போலும்!

உடனே தனது கருவிழிகளைச் சுழற்றித் தனது மாமன் மகனைப் பார்த்தாள் சஹஸ்ரா.

அங்கே தனது டிரேட் மார்க் கன்னக்குழிச் சிரிப்புடன் இவளையே ரசித்துக் கொண்டிருந்த மகிழம்பூவனைக் கண்டதுமே அவளுக்கு நாணம் மேலிட்டது.

அதுமட்டுமின்றி, அவனது கண்கள் இவளிடம் காதல் மொழியும் பேசத் தொடங்கி விடவும், அதன் வீரியம் தாளாமல் தனது கண்களை அவனிடத்தில் இருந்து மீட்டுக் கொண்டு செந்திலிடம் கவனத்தைச் செலுத்தினாள் சஹஸ்ரா.

அதையும் புன்னகையுடன் ஏறிட்டுத் தானும் இயல்பிற்குத் திரும்பி விட்டான் மகிழம்பூவன்.

அதே சமயம்,”நாளைக்குக் கடைக்குப் போகலாமா மாமா?”என்று பால்ராஜ்ஜிடம் வினவினார் ரமணன்.

உடனே அங்கிருந்த அனைவரின் கவனமும் இவர்களிடத்தில் திரும்பியது.

“போகலாம் மாப்பிள்ளை. எங்களுக்கு இங்கே இருக்கிற எதுவும் தெரியாது! அதனால் இங்கே நல்ல கடையாகப் பார்த்து நீங்க தான் எங்களை அங்கே கூட்டிட்டுப் போகனும்!”என அவரிடம் கூறினார் பால்ராஜ்.

“அதுக்கென்ன மாமா? இங்கே என்னோட சிநேகிதர்களோட நிறைய துணிக்கடைகள் இருக்கு! அதில் சிறந்தக் கடையைத் தேர்ந்தெடுத்துப் போகலாம்”என்றிருந்தார் ரமணன்.

“அப்படியே மத்த ஷாப்பிங்கையும் முடிச்சிடலாம்”எனக் கூறினாள் சஹஸ்ரா.

“மத்த ஷாப்பிங்கா? நீ என்னடி வாங்கப் போற?”என்று அவளிடம் வினவினார் கஸ்தூரி.

“ம்மா! நான் மட்டும் வாங்கப் போறது இல்லை! இவங்க எல்லாருக்குமே கிஃப்ட்ஸ் வாங்கித் தரலாம்னு நினைச்சு இருக்கேன். அதான்”எனப் பதிலளிக்க,

உடனே,”அதெல்லாம் வேண்டாம்மா”என்று அவளிடம் மறுத்துப் பேசினான் பூபாலன்.

“என்ன இப்படி சொல்றீங்க? நீங்க எனக்கு அண்ணா முறை தானே? இந்த தங்கச்சி வாங்கித் தர்றதை வேண்டாம்னு சொல்லுவீங்களா என்ன?”என்று சொல்லித் தன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டாள் சஹஸ்ரா.

அதில் பாகாய் உருகிப் போனவனோ,”நான் உனக்கு அண்ணன் முறை தான். நீ எனக்குத் தங்கச்சி முறை தான்! அதனால் நீ உனக்குப் பிடிச்சதை தாராளமாக எனக்கு வாங்கித் தரலாம்!”என்று அவளது விருப்பத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டான்.

அதைக் கண்ட வண்ணமதிக்கு மிகவும் வியப்பாகிப் போனது!

ஏனெனில், அவளுக்கும், பூபாலனுக்கும் திருமணம் நடந்ததில் இருந்து இப்படியெல்லாம் அவனிடம் பேசி இருக்கவில்லை சஹஸ்ரா!

தங்கள் சொந்த ஊருக்குப் போகும் சமயங்களில் அவனைப் பார்த்தால் ஒரு புன்னகை மற்றும் தலையசைப்புடன் நிறுத்திக் கொள்வாள்.

ஆனால் இப்போது என்னவென்றால் இவளது சுபாவம் அப்படியே மாறிப் போயிருப்பதைக் கண்டு வண்ணமதி மற்றும் அவளது மற்றக் குடும்ப உறுப்பினர்களும் கூட ஆச்சரியப்பட்டனர்.

அவர்களை இயல்பாக்கும் விதமாகத் தனது தொண்டையைச் செருமினான் மகிழம்பூவன்.

“நீ உன்னோட நிச்சயத்துக்கு ரெடிமேட் டிரெஸ்ஸா போடப் போற?”என்று சஹஸ்ராவிடம் கேட்டாள் வண்ணமதி.

“ஆமாம். ஏன்?”

“இல்லை. நீ உனக்கு டிரெஷ் டிசைன் பண்றதுக்குன்னே தனியாக டிரெஸ் டிசைனரை வேலைக்குச் சேர்த்து இருப்பீங்களே? அப்பறம் எதுக்குக் கடைக்குப் போய் டிரெஸ் எடுக்க நினைக்கிறன்னு தான் கேட்டேன்”என்று அவளுக்கு விளக்கம் அளிக்க,

“ஓஹோ! ஆமாம். நான் அப்படியான டிசைனரை எனக்கு ஹையர் பண்ணி இருக்கேன் தான் மதி. ஆனால் எனக்கு எங்களோட நிச்சயம் நம்ம ஊரில் தானே நடக்கப் போகுது அதுக்கு நம்மப் பாரம்பரியமான, இப்போ வந்திருக்கிற மாடல் டிரெஸ்ஸைத் தான் போடலாம்னு ஆசைப்பட்றேன். அப்போ தானே, அங்கே இருக்கிற எல்லாருக்கும் என்னை அடையாளம் தெரியும்? அதனால் தான் இந்த ஐடியா!”என்றதுமே,

அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரின் முகங்களும் சுருங்கிப் போயிற்று.

சஹஸ்ராவை முறைத்து விட்டு,‘இவ இன்னுமா திருந்தாமல் தான் இருக்காளா? நான் கூட இவ ஊரில் நடந்துக்கிட்டதைப் பார்த்துட்டு மாறிட்டாளோன்னுத் தப்பாக நினைச்சிட்டேன். என் தம்பியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படியும் நீ அங்கே தானே வந்தாகனும்? அப்போ உன்னைக் கவனிச்சிக்கிறேன்’அவளை தன் மனதிற்குள் கருவிக் கொண்டாள் வண்ணமதி.

ஆனால் மற்றவர்களோ இவளது சுபாவம் இன்னும் இப்படியே தான் இருக்கும் போலும் என்றெண்ணித் தங்களைச் சமாதானம் செய்து கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

அன்றிரவே தனது நெருங்கிய நண்பருக்குச் செல்பேசி அழைப்பு விடுத்து அவரது புகழ் பெற்றத் துணிக் கடையைப் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்து விட்டு,

“ஓகே கௌரவ்! நாங்க குடும்பத்தோட நாளைக்கு அங்கே வந்து துணி எடுக்கலாம்னு இருக்கோம்”என்றிருந்தார் ரமணன்.

மறுமுனையில் இருந்தவரோ,“அப்படியா? சூப்பர்! என்ன விசேஷம்ப்பா?”என்று அவரிடம் விசாரணை நடத்தினார்.

“அதை நான் நேரில் வந்து உங்கிட்ட சொல்றேனே கௌரவ்”என்றதும்,

“ஓகே. நாளைக்கு நீங்க கடைக்குக் கிளம்பி வர்றதுக்கு முன்னாடி எனக்கு ஒரு கால் பண்ணுங்க. நானும் அங்கே வந்துட்றேன்”என அவருக்கு அறிவுறுத்தி விட்டு அழைப்பை வைத்தார் ரமணனின் நண்பர்.

உடனே அந்த விஷயத்தை தன் குடும்பத்திடம் பகிர்ந்து கொள்ள,

“சரி. நாம எல்லாரும் நாளைக்குக் கிளம்பி அந்தக் கடைக்குப் போவோம்”என்று கூறி விட்டுத் தத்தமது அறைக்குள் நுழைந்து விட்டார்கள்.

அதே நேரத்தில், சஹஸ்ராவைத் தனியாக அழைத்து அவள் சிறிது நேரத்திற்கு முன்பு பேசிய விதத்தையும், விஷயத்தையும் கண்டித்து, அப்படி திரும்பப் பேசக் கூடாது என்று அவளுக்கு அறிவுரை வழங்கினான் மகிழம்பூவன்.

ஆனால் அவளோ,”நான் ஒன்னும் இல்லாத விஷயத்தைப் பேசலையே பூவன்? நான் சொன்னது உண்மை தானே? அந்த ஊரில் இருக்கிறவங்க என்னோட டிசைனர் டிரெஸ்ஸை எல்லாம் டிவியில் கூடப் பார்த்திருக்கக் வாய்ப்பே இல்லை!”என அவனிடம் மொழிய,

அதில் அவனது கண்கள் இரண்டும் கோவைச் சிவப்பாக மாறி விட அதைக் கண்டு எச்சில் விழுங்கியவளிடம்,

“நான் சொன்னது உனக்குப் புரியலையா? நீ இனிமேல் இப்படி யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது! ஏன்னா, என் மனைவி இப்படி பேசுறது எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது! அவ எல்லாருக்கும் மதிப்பு, மரியாதை கொடுக்கனும்னு தான் என்னோட விருப்பம்! அதை தெரிஞ்சு நடந்துக்கோ! புரியுதா?”என்று அவளைக் கடுமையாக எச்சரிக்கை செய்தான் மகிழம்பூவன்.

அவனது இந்த அவதாரத்தைச் சத்தியாமாக எதிர்பார்க்கவில்லை சஹஸ்ரா.

தனது உடலின் இறுக்கத்தை தளர்த்தாமல் இன்னும் அதே நிலையில் இருந்து கொண்டுத் தன்னையே கண்கள் சிவப்பேறிப் பார்த்துக் கொண்டிருந்தவனை ஏறிட்டவளுக்கு முதுகுத்தண்டுச் சில்லிட்டது.

ஆனாலும்,”இதெல்லாம் என்னோட சுபாவம்! அதை எப்படி நீங்க என்னை மாத்திக்கச் சொல்லலாம்?”என்று அவனிடம் எதிர் கேள்விக் கேட்டிருந்தாள் சஹஸ்ரா.

உடனே,”அப்படியா? அப்போ நம்மக் கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கனும்னு எனக்கு நிறைய கண்டிஷன்ஸ் போட்டு இருந்தியே? அதையெல்லாம் உடைச்சிடவா?”என்று அழுத்தமாக வினவினான் மகிழம்பூவன்.

அதைக் கேட்டதும் அவளுக்கும் சுர்ரென்று கோபம் தலைக்கேறி விட்டது!

ஆகவே,”அப்போ நம்மக் கல்யாணம் நடக்காது!”எனப் பட்டென்று கூறி விடவும்,

அதில் தனது இதழ்களை ஏளனமாக வளைத்து,”சரி. நடக்க வேண்டாம். எனக்கும் ஒன்னும் பிரச்சினை இல்லை?”எனத் தடாலடியாக உரைத்தான் மகிழம்பூவன்.

அவனது அந்த மறுமொழியைக் கேட்டவுடனேயே தனது உடலை உச்சபட்ச அளவிலான மின்சாரம் தாக்கியதைப் போன்று அதிர்ச்சிக்கு உள்ளாகிப் போய் விட்டிருந்தாள் சஹஸ்ரா.

“நானே போய் இந்தக் கல்யாணத்தை நிறுத்திட்றேன்!”என்று கூறி விட்டுத் தன்னைச் தாண்டிச் செல்ல முனைந்தவனைத் தன் கரம் பற்றித் தடுத்து நிறுத்தி,

“வேண்டாம் பூவன்! எனக்கு இந்தக் கல்யாணம் ரொம்ப முக்கியம்! அதனால் நீங்க சொன்னதுக்கு நான் ஒத்துக்கிறேன்! நான் இனிமேல் யார் கிட்டேயும் அப்படி பேச மாட்டேன்”என்று அவனிடம் உறுதி அளித்து விட,

“ம்ஹ்ம். இப்போ போய்த் தூங்கு! நாளைக்குக் காலையில் துணி எடுக்கக் கடைக்குப் போகனும்”என்றுரைத்து விட்டுச் சென்றவன் தனக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தின் பாதிப்பு இன்னும் அடங்காமலேயே தன் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள் சஹஸ்ரா.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top