வரம் 9

Advertisement

Writer girl

Well-known member
Member
தங்களது அறையின் ஓரத்தில் இருந்த நாற்காலியில் பால்ராஜை அமரச் செய்து விட்டுத் தாங்கள் இருவரும் கட்டிலில் அமர்ந்திருந்தார்கள் ரமணன் மற்றும் கஸ்தூரி.

“உங்க கிட்ட பேசனும்னு சொல்லி வந்துட்டேன். ஆனால் விஷயத்தை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு எனக்குத் தயக்கமாக இருக்கு”என்று அவர்களிடம் சங்கடத்துடன் உரைத்தார் பால்ராஜ்.

“எதுவாக இருந்தாலும் சொல்லுங்க மாமா”என்று அவரை ஊக்கப்படுத்தினார் ரமணன்.

“அது வந்து… நம்ம மகிழுக்கும், சஹாவுக்கும்…”எனத் தயங்கியவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டு,

“அவங்க ரெண்டு பேரோட கல்யாணத்தைப் பத்தி தானே பேசனும்னு நினைச்சு இப்படித் தட்டுத் தடுமாறிக்கிட்டு இருக்கீங்கண்ணா?”என்று அவரிடம் புன்னகையுடன் வினவினார் கஸ்தூரி.

உடனே தனது முகம் மலர,”ஆமாம்மா. அதைப் பத்திப் பேசத் தான் உங்களைக் கூப்பிட்டேன்”என்றுரைத்தார் பால்ராஜ்.

“இதைப் பேச ஏன் தயங்குறீங்க மாமா? நாங்களுமே நீங்க இங்கே வரும் போது இதைப் பத்திப் பேசனும்னு தான் காத்திருந்தோம்”என்று அவருக்கு அறிவித்தார் ரமணன்.

“அப்படியா மாப்பிள்ளை”என்றவரிடம்,

“ஆமாம் மாமா. மகிழுக்கும், சஹாவுக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கனும்ன்றது என் தங்கச்சியோட ஆசையாச்சே! அதை நிறைவேத்துறது எங்களோட கடமையும் தானே?”என்ற மாப்பிள்ளையின் கரங்களைப் பற்றி,

“நானும் என் பொண்டாட்டியோட ஆசையை நிறைவேத்தனும்னு தான் இங்கே வர்றப்போ கல்யாணத்தைப் பத்திப் பேசனும்னு முடிவெடுத்து இருந்தேன். அதை அப்படி ஆரம்பிக்கிறதுன்னுத் தெரியாமல் தவிச்சிட்டு இருந்தேன். ஆனால் நீங்க என்னோட பயத்தைப் போக்கிட்டீங்க! ரொம்ப நன்றி மாப்பிள்ளை! உனக்கும் நன்றி தங்கச்சி!”என்று அந்தக் கணவர், மனைவியிடம் நெகிழ்ச்சியுடன் மொழிந்தார் பால்ராஜ்.

“இருக்கட்டும்ண்ணா. இப்போ மகிழு இந்தக் கல்யாணத்தைப் பத்தி என்ன சொல்றான்?”என்று அவரது மகனின் மனநிலையைப் பற்றி விசாரித்தார் கஸ்தூரி.

“அவனுக்குச் சஹாவைக் கட்டிக்க விருப்பம் தான்ம்மா. ஆனால் அவங்க கல்யாணம் அவளோட சம்மதத்தோட நடக்கனும். அவளை யாரும் கட்டாயப்படுத்தக் கூடாதுன்னுக் கறாராகச் சொல்லிட்டான்”எனப் பதிலளிக்க,

அதைக் கேட்டதும் சஹஸ்ராவின் பெற்றோருக்குத் தங்களது மருமகனை எண்ணிப் பெருமிதமாக இருந்தது.

ஆனால் அதே நேரத்தில் அவனை நினைத்துக் கவலையாகவும் இருந்தது.

ஏனெனில், தங்களது மகள் சஹஸ்ரா தனது அத்தை மகனைத் திருமணம் செய்து கொள்ள விரும்ப மாட்டாளே? அப்படியிருக்கும் போது அவள் எப்படி இந்தக் கல்யாணத்திற்கு மனப்பூர்வமாக சம்மதம் தெரிவிப்பாள்? அதே சமயம் அவளது மறுப்பை ஏற்று அவளுக்காக காலமெல்லாம் காத்திருக்கவும் தயாராக இருப்பான் மகிழம்பூவன்.

அதனால் தான் அவனை எண்ணிக் கவலை கொண்டார்கள் ரமணன் மற்றும் கஸ்தூரி. அதைப் பால்ராஜிடமும் பகிர்ந்து கொள்ளவும் செய்தனர்.

அவரோ,“எனக்கும் அதே கவலை தான் மாப்பிள்ளை”என்று சோர்வுடன் கூறவும்,

“ம்ஹ்ம். முதல்ல அவகிட்டே இந்தக் கல்யாண விஷயத்தைச் சொல்லிப் பார்ப்போம். அப்படி ஒருவேளை அவளுக்குப் பிடிக்கலைன்னா அடுத்து என்ன சொல்லி அவளைச் சம்மதிக்க வைக்கலாம்னு யோசிப்போம்”என யோசனை சொன்னார் கஸ்தூரி.

“சரிம்மா. சஹாகிட்டே எப்போ பேசலாம்?”என்று கேட்டார் ரமணன்.

“அவ இன்னைக்குத் தான் மகிழுக் கிட்டேயும், மதிக் கிட்டேயும் நல்லா பேச ஆரம்பிச்சு இருக்கா. நாளை மறுநாள் பேசலாம்ங்க. அவ நல்ல மனநிலையில் இருக்கும் போது விஷயத்தைப் பதமாக சொல்லுவோம்”என்று மற்ற இருவரிடமும் தெரிவித்தார் கஸ்தூரி.

இதே வேளையில், தனது அறையில் கணவனுடன் வீடியோ காலில் மூழ்கி இருந்த வண்ணமதியோ,

“ஃபோட்டோஸை எல்லாம் பார்த்தியளா? நல்லா இருக்கா?”என்று ஆர்வத்துடன் கேட்க,

“எல்லாத்தையும் பார்த்துட்டேன் மதிம்மா. எல்லாமே நல்லா இருக்கு! நீயும் அழகாக இருக்கிற!”என்று அவளைப் பாராட்டினான் பூபாலன்.

“எனக்கு நீங்களும், செந்திலும் இங்கே வந்திருந்தால் இன்னும் நல்லா இருந்துருக்கும்னு தோணுச்சுங்க! அந்தளவுக்கு நான் சந்தோஷமாக இருக்கேன்!”என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் அவனது மனைவி.

“ம்ஹ்ம். நாங்க அடுத்த தரம் உன் கூட வந்துட்டா போச்சு! இதுக்கு எதுக்கு வருத்தப்பட்ற? நீ அங்கே இருக்கிற வரைக்கும் நல்லா சந்தோஷமாக இரு”என்று அவளைச் சமாதானப்படுத்தவும்,

தானும் சமாதானம் அடைந்து,“இன்னைக்கு ஒரு அதிசயம் நடந்துச்சுங்க”என்று கண்கள் மின்னத் தெரிவிக்க,

“அப்படியா? என்ன அதிசயம் நடந்துச்சு மதி?”என்று மனைவியிடம் வினவினான் பூபாலன்.

“அந்தச் சங்குப்பூவழகி இருக்காள்ல?”என்றவளை இடைமறித்து,

“யாரு உன் மாமன் பொண்ணு சஹஸ்ராவா?”எனக் கேட்டவனைக் கடுமையாக முறைத்து விட்டு,

“க்கும்! அவதேன்!”என்று சிலுப்பிக் கொண்டாள் வண்ணமதி.

அதில் குறுஞ்சிரிப்பை உதிர்த்து விட்டுத், திரையில் தெரிந்த அவளது விம்பத்தின் மூக்கில் முத்தம் பதித்து விலகினான் பூபாலன்.

அந்த இதழ் ஒற்றலில் தனது கோபத்தை கைவிட்டுவிட்டு வெட்கத்தை தத்தெடுத்துக் கொண்டுத் தன் கன்னங்கள் சிவக்க அவனைக் காதல் பார்வை பார்த்தாள்.

“மதிம்மா! இப்படியெல்லாம் பார்த்து என்னை உசுப்பேத்தாதே! விஷயத்தைச் சொல்லு”என்று தாபத்துடன் மொழிந்த கணவனிடம்,

“யாரு? நானா உங்களை உசுப்பேத்துறேன்? செய்றதை எல்லாம் செஞ்சிட்டு என்னைச் சொல்லுங்க!”என்று தனது உதட்டைச் சுழித்துக் கொண்டாள் வண்ணமதி.

அதில் மீண்டுமொரு முறை இதழொற்றலைச் செய்து விட்டு,

“மதி!”என்று ஏக்கத்துடன் கூறியவனை மென்மேலும் சீண்டுவது தவறு என்றெண்ணி,

“நான் உங்களை ரொம்ப ஏங்க வைக்கிறேன்ல? என்னை மன்னிச்சிருங்க”என்று அவனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாள் வண்ணமதி.

“ஓய்! அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீ விஷயத்துக்கு வா”என்றான் பூபாலன்.

“அவளுக்கு என்னையும், மகிழையும் பார்த்தாலே வேப்பங்காயைத் தின்னா மாதிரி முகத்தைச் சுழிப்பாள்ல?”எனக் கேட்க,

“ஆமாம்”என்கவும்,

“ஆனால் அவ இப்போதெல்லாம் எங்களைப் பார்க்கிறப்போ அவ கண்ணுல எந்தக் கோபமும் வெளிப்படலை! பீச்சில் கூட எங்க கூடச் சேர்ந்து விளையாண்டாள்! அது தான் எனக்கு ரொம்ப அதிசயமாக இருந்துச்சு!”என்று அவனிடம் கூறினாள் மனைவி.

“அப்படியா? அதெப்படி இவ்வளவு சீக்கிரம் அந்தப் பொண்ணு மனசு மாறுச்சு?”எனத் தானும் வியப்படைந்து அவளிடம் விசாரித்தான் பூபாலன்.

“அது தான் எனக்கும் புரியலைங்க. அவகிட்டே எங்கத்தை எதையோ சொல்லி வச்சிருக்காங்க. அதனால் தான் அவ எங்க கிட்ட நல்லா நடந்துக்கிறா”எனப் பதிலளிக்க,

“அப்படின்னா கையோட அவளுக்கும், மகிழுக்கும் கல்யாணத்தைப் பேசி முடிச்சிட வேண்டியது தானே?”என்றவனிடம்,

“அதை நானும் பெரியவங்க காதில் போட்டு வச்சுட்டேன்ங்க. இந்நேரம் அதைப் பத்தி மூனு பேரும் பேசி முடிச்சு ஒரு முடிவை எடுத்து இருப்பாக!”என்றுரைத்தாள் வண்ணமதி.

“சூப்பர்! நல்ல சேதியோட ஊருக்குக் கிளம்பி வாங்க”என்று அவளிடம் அறிவுறுத்தி விட்டு உறங்கும் தங்கள் மகனை அவளுக்குக் காட்டி விட்டு அழைப்பை வைத்தான் பூபாலன்.

”என்னடா மருமக எப்படி இருக்கா?”என்று மகனிடம் விசாரித்தார் முல்லைக்கொடி.

“நல்லா இருக்காம்மா”என்றவனோ அவள் அனுப்பி வைத்தப் புகைப்படங்களை அவருக்கும், தந்தைக்கும் காட்ட,

அவற்றை ஆசையாகப் பார்த்து விட்டுப்,“பார்றா! இந்தக் கடற்கரையைப் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கு!”என்று கூறினார் ஆறுமுகம்.

“இவ ஐயன் கிட்டே சொல்லிச் சங்குப்பூவழகியை மகிழுக்குப் பேசி முடிக்க வேண்டியது தானே?”என்றார் முல்லைக்கொடி.

“அதெல்லாம் அவுக காதுல எப்பவோ போட்டுட்டாளாம். கூடிய சிக்கிரமே நல்ல விஷயத்தைச் சொல்லுவாங்களாம்”என்றுரைத்தான் மகன்.

“அப்படின்னா சரி! எல்லாம் நல்லபடியாக முடியட்டும்”என்று தங்கள் பங்கிற்குச் சொன்னார்கள் அவனது பெற்றோர்.

ஆனால் இவர்கள் திருமணப் பந்தத்தில் சேர்த்து வைக்க விரும்பிய இருவரும் தற்போது மிகவும் தீவிரமான யோசனையில் மூழ்கிப் போயிருந்தனர்.

முதலாவதாக, தனது கட்டிலில் படுத்த வாக்கிலேயே அன்று முழுவதும் தனது அத்தை மகள் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மகிழம்பூவன்.

அவனது அழகியின் ஒவ்வொரு தொடுகையும் தன்னைச் சிலிர்க்க வைத்ததை உணர்ந்தவனோ, அவளை உடனேயே மணந்து கொள்ள வேண்டுமென்று அவனது மனம் பேராசையில் உழன்றது.

அதேபோல், தங்கள் பயணம் முழுவதிலும் அவள் தனக்கு அருகில் அமர்ந்து கதை பேசியபடியே வந்த போது அவளது மை விழிகள் இரண்டும் தன்னை மையல் கொள்ளச் செய்ததை அறிந்து அதனால் எழுந்த தனது உணர்வுகளைக் கட்டுக்குள் வைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுப் போனதை இப்பொழுதும் அசை போட்டு அதிலிருந்து மீள முடியாமல் அவஸ்தைக்கு உள்ளாகிப் போனான்.

ஆனால் அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பாளா? என்ற கேள்வியுடனும், ஏக்கத்துடனும் உறக்கத்தை மேற்கொண்டான் மகிழம்பூவன்.

ஆனால் இவர்கள் அனைவரும் இப்படி ஒவ்வொரு வகையிலான குழப்பத்திலும், சந்தேகத்திலும் உழன்று கொண்டிருக்கத், தனது குடும்பத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த ‘சஹஸ்ரா’ என்ற சங்குப்பூவழகியோ தன்னுடைய தொழிலை அடுத்த நிலைக்கு விரிவுபடுத்தும் நோக்கத்துடனும், தங்களது தொழிற்சாலையின் இன்னொரு கிளையைத் திறக்கப் போகும் இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டிருந்தாள்!

ஆம்! அவளுக்குத் தன்னுடைய பிறந்த ஊரில் ஒரு கிளையைத் திறக்க வேண்டும் என்ற ஆசை உருவாகி இருந்தது.

ஏனெனில், அங்கே கிளையைத் திறந்தால் மகிழம்பூவனுடைய உதவி கிடைக்கும். அதை வைத்தே அதை நன்றாக நடத்தி விடலாம். அதற்குப் பிறகு மற்றொரு கிளையைத் திறப்பது கடினமாக இருக்காது என்று திட்டம் தீட்டி விட்டிருந்தாள் சஹஸ்ரா.

அதேபோல் அவனது தொழிலிலும் இருக்கும் சூத்திரங்களைக் கற்றறிந்து கொள்ளவும் முடிவெடுத்து விட்டு அதைப் பற்றி மகிழம்பூவனிடம் பேசுவதற்குத் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக காத்திருக்கவும் முடிவு செய்து விட்டு நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள்.

இப்படியாக, அனைவரும் தத்தமது எண்ண ஓட்டங்களில் உழன்று கொண்டே ஒருவழியாக உறங்கி மறுநாள் விடியலில் கண் விழித்து விட்டிருந்தனர்.

அதில் முதலில் குளித்துத் தயாராகி,”இன்னைக்கு எனக்கு நிறைய பெண்டிங் வொர்க்ஸ் இருக்கு. அதனால் நான் கண்டிப்பாக ஆஃபஸூக்குப் போயே ஆகனும். அது தான், நேத்து வரைக்கும் நான் உங்களோட தானே இருந்தேன்? இப்போ போய் என்னோட வேலையைப் பார்க்கிறேன்”என்று தன் குடும்பத்தாரிடம் உரைத்து விட்டுக் காலை உணவைத் துரிதமாக உண்டு விட்டு அலுவலகத்திற்குச் சென்று விட்டாள் சஹஸ்ரா.

அவள் சென்றதும்,”அவ அப்படித்தான்! ஒரு நாள் ஆஃபீஸூக்குப் போகலைன்னாலும் அடுத்த நாள் சீக்கிரமே எழுந்து கிளம்பிப் போயிடுவாள்”என்று மகளை எண்ணிச் சலிப்பாக கூறி விட்டு,

“நாம எல்லாரும் காபி குடிச்சிட்டே பேசலாம். நேத்து சரியாகவே பேச முடியலை”என்று அனைவருக்கும் காபி கொண்டு வரச் சொல்லி விட்டுத் தன் கணவனின் தங்கை குடும்பத்திடம் பேசலானார் கஸ்தூரி.

- தொடரும்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top