“ஒருவேளை அண்ணா… ரஞ்சி கடையில் இருப்பங்களோ?!” என்று நினைத்த பாரு, “ரஞ்சிக்கிட்ட அவங்க என்னைப் பத்தி எதுவும் பேசக் கூடாது! எதுக்கும் ஒரு முறை அவருக்கு ஞாபகப் படுத்திடுவோம்!” என்று எண்ணி ரிஷிக்கு ஓர் குறுஞ்செய்தி அனுப்பினாள்.
போனை அணைத்த பின் அதையே வெறித்திருந்தவன், மறுபடியும் அவளின் பெயரில் குறுஞ்செய்தி வந்திருப்பதாய்த் திரையில் மின்னியதும், கோபத்தின் உச்சத்திற்குச் சென்றான்.
‘சே…!’ என்று கைப்பேசியைத் அவன் தூக்கி எரிய நினைத்தபோது, கீழே அமர்ந்திருந்த தன் மனையாளின் முகம் தெரிய, அவன் கண்மூடி சற்றே நிதானத்திற்கு வந்தான்.
‘எப்பவும் யார்மேலயும் கோபப் படுறதுக்கு முன்னாடி அவங்க உண்மையாகவே அந்த கோபத்துக்கு உரியவங்க தானான்னு தெரிஞ்சிகிட்டு அவங்களை தண்டிங்க ரஞ்சு.. ஒரு வேலை அவங்க மேல தப்பில்லைன்னா ஒவ்வொரு முறையும் நீங்கதான் குற்றவாளியா நிற்க வேண்டி வரும்?!’ என்று நிலா சொன்ன வார்த்தைகள் அவன் செவிகளில் ரீங்காரமிட்டது. அதன்பின் தன் கண்களை சில நொடிகள் மூடித் திறந்து, நிதானத்திற்கு வந்து, அவள் என்ன செய்தி அனுப்பியிருக்கிறாள் என்று பார்த்தான்.
அக்குறுஞ்செய்தியில், ‘அண்ணா… மறந்தும் கூட நான் அவர் உயிரைக் காப்பாற்றதான், அவரை விட்டுப் பிரிஞ்சேன்னு ரஞ்சிகிட்ட சொல்லிடாதீங்க… அவர் என்னை வெறுத்தது வெறுத்ததாகவே இருக்கட்டும்! அவர் கடைத் திறப்பு விழா நல்லபடியா நடந்து முடிஞ்சதா?! எப்பவும் கடவுள்கிட்ட அவருக்காக என்னோட வேண்டுதல் தொடர்ந்துகிட்டே இருக்கும்!’ என்று எழுதியிருந்தது.
‘அப்போ… அவ என்னைப் பிரிஞ்சது எனக்காத்தானா?! என் உயிரைக் காப்பாற்றத் தானா?! அப்படி என்ன நடந்திருக்கும்?!’ என்று நினைத்தவன் நெஞ்சில் சொல்லொணா துயர் எழுந்தது. இக்கணம், அவளை விட்டுப் பிரிந்துவிட்டோமே என்று அல்ல… அவளைத் தவறாக நினைத்துவிட்டோமே என்று!
நேராக ரிஷியை நோக்கிச் சென்றவன், அவனைத் தனியே அழைத்து வந்து, அந்தக் குறுஞ்செய்தியைக் காட்டி, “என்னடா இது?!” என்று வேதனையுடன் கேட்க, ரிஷி தயங்கி நின்றான்.
“இப்ப நீ சொல்லப் போறியா இல்லையா?”! என்று ரஞ்சன் சற்றே குரல் உயர்த்த, அதற்குமேல் மறைக்க முடியாமல் ரிஷி நடந்த அனைத்தையும் கூறினான்.
அவன் சொன்னதைக் கேட்டுக் கலங்கி நின்ற ரஞ்சன், “சே இத்தனை நாளா, அவளை எவ்ளோ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருந்திருக்கேன்!” என்றான் உண்மையான வருத்தத்துடன்.
“ரஞ்சு… நடந்தது நடந்து போச்சுடா… இனி பழைய நினைவுகளைக் கிளறாதே, முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்!” என்று ரிஷி சொல்ல,
“நிச்சயமா மாட்டேன் டா… ஏன்னா இப்ப என்னோட ஊன், உயிர் எல்லாத்துலயும் கலந்து நிறைஞ்சிருக்கிறது என்னோட நிலா! நிலா மட்டும்தான்!” என்றான் அழுத்தமாக.
பின் சில நொடிகள் அமைதி காத்தவன், “ஆனா ஒண்ணு மட்டும் பாரு.. இல்ல பார்வதிகிட்ட சொல்லிடு, இத்தனை நாளா நான் அவளைத் தப்பா நினைச்சிக்கிட்டு இருந்ததுக்காக நான் மன்னிப்பு கேட்டேன்னு மட்டும் அவகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு..!” என்றான் குரலில் வேதனையைத் தேக்கி.
அன்று இரவு, நிருவின் அறையில், “ரஞ்சுவை நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு யாஷு…!” என்றான் நிரு.
“ஆமாங்க…! எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு! ரஞ்சு மாமாவோட கடினமான முயற்சியும், நிலா அக்காவோட சப்போர்ட்டும்தான் அவர இந்த நிலைமைக்கு உயர்த்தியிருக்கு!” என்றாள் யாஷினியும் பூரிப்புடன்.
“ம்!” என்று தலையசைத்தவன், “எனக்கும், நிலாவுக்கும் கூட ஒரு பெரிய கனவிருக்கு! ஆனா அதை அவ்வளவு சீக்கிரம் நிறைவேத்துறது சாத்தியமில்லை!” என்று அவன் சொல்ல,
“எனக்குத் தெரியுமே அது என்ன கனவுன்னு!” என்று அவன் கண்ட கனவை அவள் சரியாக கணித்துச் சொல்ல,
முதல் நாள் என்பதால், கடையிலிருந்து நேரம் கழித்தே வீடு திரும்பிய ரஞ்சன், நிலா அறையில் இல்லாததைக் கண்டு, பால்கனிக்குச் சென்றான்.
பால்கனியின் கம்பிகளில் சாய்ந்தபடி, வெண்நீல மேகங்கள் இடையே கண்ணாமூச்சி ஆடும் வெண்ணிலவை ரசித்துக் கொண்டிருந்தாள் அவன் பெண்ணிலவு. மெல்ல அவளை நெருங்கி, பின்னிருந்து அணைத்தவன்,
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா…
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா..
நீயிலாத நாளெலாம்
நான் தேய்ந்த வெண்ணிலா..
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா…?!
பூவிலாத மண்ணிலே
ஜாடைக் பெண்ணிலா…?! {வான் நிலா}
வாழ்க்கை வழியிலா…?!
ஒரு மங்கையின் ஒளியிலா?!
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா..?
சொந்தம் இருளிலா?
ஒரு பூவையின் அருளிலா..?
சொந்தம் இருளிலா…?
ஒரு பூவையின் அருளிலா…?
எண்ணிலா ஆசைகள்
என் நிலா கொண்டதே
அதைச் சொல்வாய் வெண்ணிலா… {வான் நிலா}
என்று அவள் தோளில் தன் முகம்பதித்து, கன்னத்தோடு கன்னம் உரச, அவளுடன் சேர்ந்து வான் நிலவையும், அவ்வப் போது தன் தேன்நிலவையும் ரசித்தபடியே பாடி முடிக்க, அவன் குரலின் இனிமையிலும், அப்பாடலின் அழகினிலும் தன்னை மறந்து நின்றாள் பூரண நிலவு.
அவள் மோனத்தை கலைக்க எண்ணி, “என் நிலாப்பெண் அவளுக்கு நிகரான வெண்ணிலவை ரசிச்சிக்கிட்டு இருக்காளோ?!” என்று அவன் அவள் செவிகளைத் தன் உதடுகள் கொண்டு வருட,
“ம் கூசுது ரஞ்சு…!” என்று சிணுங்கினாள் காதலி.
அவள் சிணுங்கலைச் சற்றும் மதியாது, மெல்ல அவள் செவிகளிலிருந்து, கன்னத்திற்குத் தாவியவன், “நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கேன் பேபி..!” என்றான் நிறைவான குரலில்.
அதைக் கேட்டவள், தன் வலது கரம் நீட்டி அவன் முகத்தை இன்னும் தன் கன்னத்தோடு சேர்த்தணைத்து, “நானும்!” என்றாள் கண்மூடி.
சில நொடிகள் இருவருமே வேறு மொழியின்றி, மனதில் பரவிய அவ்வினிமையை முழுமையாய் அனுபவித்தனர்.
பின் அதே நிலையில் இருந்தபடியே, “உன்னோட கனவு என்ன பேபி..?!” என்றான் ரஞ்சன் திடீரென்று.
அவன் சொன்ன விதத்தில் அவள் சிரித்துவிட, அச்சிரிப்பை ரசித்தபடியே, “இவ்ளோ ஆசையை வைச்சிகிட்டு ஏன்டி.. என்கிட்டே மறைக்கிற?!” என்று அவன் கேட்க,
“அது அதெல்லாம் எப்போதோ கண்ட கனவு… ஆனா வளர்ந்த பிறகு என் குடும்ப நிலை கருதி, அதையெல்லாம் எப்பவோ ஒதுக்கி வைச்சிட்டேன்!” என்றவளின் குரலில் தன் கனவைத் தொலைத்த ஏக்கம் அப்பட்டமாய்த் தெரிந்தது.
ஏக்கம் கொண்டவள் கைகளில், அவன் ஒரு கவரைக் கொடுத்து, “பிரிச்சுப் படிச்சுப் பாரு…!” என,
அது என்னவென்று ஆவலோடு பிரித்துப் படித்தவளுக்கு, அது, தொலைதூரக் கல்வி மூலம் அவள் பி. எட், பயிலுவதற்கான விண்ணப்பப் படிவம் என்று தெரிந்தது.
“ரஞ்சு…!” என்று அவனை நெருங்கி அணைத்துக் கொண்டவள் கண்கள் நீரால் நிறைய,
“நோ பேபி…!” என்று அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டவன்,
“கரஸ்ல பி. எட் முடிச்ச பிறகு, ரெகுலர்ல எம். பில் பண்ணு பேபி…! அதுக்குள்ள நம்ம பேபியும் வளந்திடுவான்!” என்றான்.
“ம்!” என்றவள், மையல் கொண்ட நிலவாய் மன்னவனின் மார்பில் துவள, அம்மன்னவனோ கடல் கொண்ட மழையாய் அவளைத் தன்னில் ஏந்திக் கொண்டான்.