Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ithaiya Geethamae

Ithaiya Geethamae 12

கீதம் 💜 12

நொடிப் பொழுதிலும் விலகாது அவளோடு இருந்திட வேண்டும் என மனம் துடித்தது. அவளை தன் மனைவியாக கருதும் மக்களிடம் என்ன சொல்லவென்று திணறிய நொடியை எண்ணி, இப்போதும் முகத்தில் முன்புறுவல் தோன்றியது. கேம்ப் நடந்த இடத்தில் நடந்தவைகளை எண்ணி, கையில் கட்டோடு, மொட்டை மாடியில் நிலவோடும், மௌன போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தான்.



Advertisement

இன்றைய கேம்ப் ஆரம்பித்த காலை வேளையில் சூரியன் தன் உதயத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே வேன் இரண்டும், ஆம்புலன்ஸ் ஒன்றும் கிரீச்சிட்டு வந்த நின்றது. வெள்ளை உடை தேவதைகள், வரிசையாக புன்சிரிப்புடன் இறங்கி வந்து தங்கள் வேலையை தொடங்கினர்.

Advertisement

” பிருந்தா சிஸ்டர், நீங்க அந்த பக்கம் டேபிள் அரேஞ்ச் பண்ணி ரெடியாகுங்க”, “நீங்க அங்க போங்க ராணி சிஸ்டர்..,” என விரட்டி விரட்டி அனைவரையும் வேலை வாங்கி கொண்டு இருந்தாள் நந்திதா. இன்னும் சிறிது நேரத்தில் டாக்டர்கள் அனைவரும் வந்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாதே, மக்கள் கூட்டம் வேறு வந்து விடும், காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல், அடுத்து ஓடி கொண்டே இருக்க வேண்டுமே என பதட்டத்துடன் வேலைகள் ஜரூராய் நடைபெற ஆரவ்வின் கார் உள் நுழைந்தது.

Advertisement

வழியெங்கும் பருகிய இயற்கை அன்னையின் அழகில் மயங்கி, ரசித்து கொண்டு வந்தவன், அங்கே மெரூன் நிற சுடிதாரில், தலை குளித்த கூந்தல் காற்றில் அசைந்தாட, சிறு ஜிமிக்கி அதற்கு தாளம் போட வேக நடையில் நடந்து கொண்டிருந்த நந்துவை கண்டதும், அவளின் அழகிய தோற்றத்தில் கண்கள் விரிய, ” என்னை ரொம்ப படுத்துறடி” உதடுகள் உச்சரிக்க, காரின் கண்ணாடியை இறக்கி அவளை ரசிக்க ஆரம்பித்தான். நட்போடு பேசி கொண்டும் , அதட்டி வேலை வாங்கும் போதும், சிரித்தபடி பேசும் போதும், விரிந்த அவளிதழ்களில் தன் உள்ளம் தொலைந்து போனதை கடந்து சென்ற தினங்களில் இன்னும் புரிந்து கொண்டான்.

Advertisement

வேலையில் அவளின் அர்ப்பணிப்பு, புத்திசாலித்தனம், மனிதாபிமானம் எதுவோ ஒன்று அவன் மனதை அசைத்து பார்த்து, காதல் நங்கூரம் பாய்ச்சி, எந்த நொடியிலும் கிளம்பி விடுவேன் என தயாராய் இருந்தது. இன்றைய கேம்ப் முடித்தபின் தன் மனதை அவளிடம் உரைத்து விடலாம் என முடிவு செய்து இருந்தான். அவளுக்கு விருப்பம் இல்லாவிடில் விலகி விட தான் முடிவு செய்து இருந்தான். ஆனால் அவள் மட்டுமே தன் மனைவி, இல்லையெனில் தனித்து வாழ்வது என்ற முடிவில் உறுதியாய் இருந்தான் அந்த ஏகபத்தினி விரதன்.

காரில் இருந்து அவன் இறங்காததை கண்டவள் வேகமாய் அருகில் வந்து,

” குட் மார்னிங் சார், ஏன் இறங்கி வராம இருக்கீங்க .,, ” சிரித்தபடி வினவ

” பியூட்டிபுல்.., காலையில இன்னும் அழகா இருக்கா, அதான் ரசிச்சு பார்த்துட்டு இருந்தேன்” என வயல்வெளியை கண்காட்ட

” நீங்க புதுசா பார்க்குறீங்க.., அதான் ரசிக்கிறிங்க., நாங்க பார்த்த இடம்தான்., பழகிருச்சு., வாங்க சார் ” என்றபடியே கதவை திறந்த அவளின் விரிந்த இதழ் அருகே தெரிந்த குட்டி மச்சமும் அவளோடு இணைந்தே சிரித்தது. மனத்திலோ ” சைட் அடிக்கிற வயசுல சைட்டை பார்க்குற உங்களை என்ன பண்றதுன்னு தெரியல, நீங்க ரொம்பஆஆ நல்லவரு..” என்கிற கவுண்டர் ஓடிக்கொண்டு இருக்க இருவரும் இணைந்தே உள்ளே சென்றனர்.

சிறிது நேரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நான்கு மருத்துவர்கள், செவிலியர் குழுவோடு இணைந்து முழு மூச்சில் பரிசோதனை செய்து, ஒவ்வொராக அனுப்பிக் கொண்டு இருந்தனர். மதியம் ஒரு மணிக்கும் கூட்டம் அடங்கவே இல்லை. நந்துவும் சுற்றி சுழன்று வேலை செய்து கொண்டு இருந்தாள். போன் வந்தவுடன் ஓரமாய் நகர்ந்து பேசிக் கொண்டு இருந்தாள்.

” சொல்லுங்கண்ணா. ம்ம்ம்., “

“!!!”

” லஞ்ச் இங்கேயே கொண்டு வந்துருங்க. என்னால இப்போ ஆள் எல்லாம் அனுப்ப முடியாது. டிரைவர் கூட கேம்ப் வேலைதான் பார்க்கிறாங்க.”

!!!!”

“ஒகேண்ணா., ப்ளீஸ், இன்னைக்கு மட்டும் சிரமம் பார்க்காமல் உங்க ஆளையே அனுப்புங்க , தேங்க்ஸ்..,” என ஹோட்டலில் புட் ஆர்டர் பற்றி பேசிக் கொண்டிருந்தவள் வைத்துவிட்டு திரும்ப, kurukuruvena அவளையே பார்த்து கொண்டு, அவள் முன்னே ஒருவன் பத்தடி தொலைவில் நின்றிருந்தான், இவழும் பார்த்துவிட்டு, அவனை யாரென தெரியாத நிலையில் ” என்ன அண்ணா ? டாக்டர் பாக்கணுமா” வரிசையை கை காட்டியபடி “அங்க போய் நில்லுங்க. நான் டோக்கன் கொடுக்க சொல்றேன்” என கூறிக்கொண்டே இருக்க நிறுத்து என்பதாய் கை காட்டினான்.

இவள் புருவம் சுருக்கி ஏனென பார்க்க,

” ஏண்டி.., வந்தோமா, மாத்திரை கொடுத்தோமா, ஊசி போட்டோமா, பொத்துனாப்புல போனோமான்னு இருக்கனும். ஏண்டி என் வழியில குறுக்க வர்ற..,” என கோபத்தில் பல்லை கடித்து கொண்டு , கை முஷ்டியை முறுக்கி கொண்டே கேட்க.

” யாருங்க நீங்க. என்கிட்ட ஏன் கோபப்படுறீங்க. நான் என்ன பண்ணேன்..,” வந்த கோபத்தை அடக்கி கொண்டு பொறுமையாக கேட்டவளிடம்.

கண்கள் சிவப்பேறி இன்னும் கோபத்துடன் “பொட்ட கழுதை,, என் ஊர் பொண்ணுங்களை நான் வேலைக்கு கூட்டிட்டு போவேன். உனக்கென்னடி வந்துச்சி..,” என்றான்.

“இங்க பாருங்க, மொதல்ல மரியாதையா பேசுங்க. வாடி போடின்னு சொன்னீங்கன்னா பல்லை தட்டி கையிலே கொடுத்துடுவேன்” இவளும் கோபத்தில் முகம் இறுக பேச.

” தட்டுவ தட்டுவ, கத்தியபடியே அவளை நெருங்கி வந்து ” உன்னை இனி விட்டு வச்சா தானே, என்ன பண்றேன் பாரு..,” என்று கூறியபடியே கத்தியை கையில் எடுத்து அவளை இன்னும் நெருங்கி வந்தான்.

கத்தியை வைத்து மிரட்டுகிறானே என ஒரு நொடி ஜெர்க்கானவள் சுற்றிலும் மக்கள் இருக்க என்ன செய்துவிட போகிறான் என்ற தைரியத்தில் அப்போதும் துணிந்து ” என்ன பண்ணுவ, பாப்போம் டா” என நெஞ்சை நிமிர்த்தி தான் நின்றாள்.

அருகில் நெருங்கி வந்தவன், உனக்கெல்லாம் தைரியம் ஜாஸ்திடி, என்னையே டா போட்டு பேசுரய்யா., மவளே செத்தடி இன்னைக்கு..,” என்றபடியே கத்தியை உயர்த்தி பிடித்து, குத்த வரும் நொடி, அவனின் பின்னே பார்வையை திருப்பி, ” சீக்கிரம் வாங்க கமிஷனர் சார். இவனைத்தான் புடிங்க..,” என கத்தினாள்.

போலீஸ் பிடிக்க வந்துவிட்டனரா என மிரண்டு போய் பின்னால் திரும்பி பார்த்தவனை நொடி பொழுதில் இடித்து தள்ளி விட்டு, ஆரவ்வை நோக்கி வேகமாய் ஓடினாள். தள்ளிவிட்டதில் மண்ணில் விழுந்தவனோ, மிகுந்த ஆக்ரோஷத்தோடு எழுந்து, ” பொட்ட கழுதை, ஏமாத்திட்டு ஓடுறியா ” என சட்டையை தட்டி விட்டபடி எழுந்தவன் சுதாரிக்கும் முன், அவனை ஊர் மக்கள் சுற்றி வளைத்துவிட்டனர்.

ஆரவ்வை நோக்கி இவள் ஒடத் தொடங்கும் முன்பே, கூட்டத்தில் இருந்த ஒருவர் பார்த்து, பதறி, ஆண்களை திரட்டிக் கொண்டு படையோடு அவனை சுற்றி வளைத்து விட்டனர். மூச்சு வாங்க அவன் முன் ஓடிச் சென்று நின்றவள்.

” சார்….சார்….அங்க.. “.என மேல் மூச்சு வாங்க, வார்த்தை வெளி வராமல் தொண்டை குழியில் சிக்கி கொண்டது. கையினை நீட்டி கூட்டத்தை சுட்டிக்காட்ட,

” என்னம்மா, என்னாச்சு…” என பதறியபடி அவனும் கூட்டத்தை நோக்கி ஓடி வந்தான். வந்து பார்த்தால் யாருக்கும் எதுவுமில்லை. ஓர் ஆணை சுற்றி அனைவரும் நின்று இருந்ததைக் கண்டு புருவம் சுருங்கி யோசித்தான். என்னவென்று கேட்க தொடங்கும் முன்பே அந்த ஆள் வயிற்றில் கத்தியை இறக்க ஓங்கி விட்டான்.

” ஏய்…என்ன பண்றே…யாரு நீ…” என கையினை இறுக்கி பிடித்து, கத்தியை பிடுங்க முற்படுவதற்குள் ஆரவ் கையில் பட்டு கீறியதில் குத்தி, இரத்தம் வழிய தொடங்கி விட்டது. அனைத்தும் ஒரு நிமிட அவகாசத்தில் நடந்து முடிந்து விட்டது. சுற்றியுள்ளோர் சுதாரித்து, அவனை பிடித்து அடிக்க தொடங்க.

” டேய்…நீ ஏஜென்ட் மூர்த்தி தானடா. டாக்டரை எதுக்கு கத்தியால் குத்த வந்தே. சொல்லுடா..,” என அவனை தெரிந்த ஒருவர் கூச்சலிட.

கூட்டம் அடிப்பதை நிறுத்தி கவனிக்க ஆரம்பித்தது. அவன் கைகளை இறுக்கி , நால்வர் அமுக்கி பிடித்திருக்க , அதற்குள் ஓடிவந்த செவிலியர், நந்து குழுவினர் அவனின் இரத்தம் வழியும் கையினை கண்டு மிரண்டு நின்றனர். ” சார்..உங்களுக்கு..அய்யோ இரத்தம்…” என அனைவரும் பதற, நந்து அவன் கைகளை பிடித்து கொண்டு, நர்ஸிடம் பஸ்ட் எயிட் பாக்ஸ் கொண்டு வரச் சொல்லி அனுப்பினாள்.

” எனக்கு ஒண்ணுமே இல்லமா. லைட்டா தான் கீறி இருக்கு. பயப்படாதீங்க , காட்டன் மட்டும் கொடுங்க..,” என வாங்கி துடைக்க, துடைக்க குருதி வலிந்து கொண்டே இருந்தது. நல்ல வேலையாக ஆழமாக காயம் படவில்லை. பின் பருந்து வைத்து கட்டு போட ஆரம்பித்தான். அது வரையுமே பற்றிய அவன் கைகளை நந்திதா விடவே இல்லை. கண்ணிலோ பயம், அழுகை, தடுமாற்றம் என மாறி மாறி உணர்வுகள் சுழன்று கொண்டே இருந்ததை அவனும் கவனித்தான். அவனுக்கு அவள் அருகில் நிற்கையில் வலி கூட தெரியவில்லை. போலீஸ்க்கு தகவல் சொல்லி, அவன் அங்கிளுக்கும் பேசி முடித்து, சற்று அமைதி ஆகிய பின்பே மூர்த்தியை நிமிர்ந்து பார்த்தான்.

” நீங்க யாருன்னே எங்களுக்கு தெரியாது. எதுக்கு கத்தியால குத்த வந்திங்க? கேட்டவனை கண்டு அவனோ கோபத்தில் இரத்த சிவப்பேறிய விழிகளுடன் முறைத்து பார்த்தான்.

” ம்ம்..சொல்லுங்க..” என அதட்டி கேட்க.

” என்னடா சொல்லணும்..நாயே ” அதுக்கும் தெனாவெட்டாய் பதில் சொல்ல.

” டேய். மரியாதையா பேசுடா. அவரு டாக்டர்..,” ஊரார் அதட்ட.

“டாக்டர்ன்னா , ஊசியை போட்டு கம்முனு போச்சொல்லு. என் வழியில எதுக்கு வர்றான்”

நடப்பது என்னவென்று ஒன்றும் புரியாமல் அனைவரும் முழிக்க போலீஸ் வந்து விட்டது. என்னவோ ஏதோ என பதறி பெண்களும் சுற்றி கூடி விட்டனர்.

அந்த பகுதி இன்ஸ்பெக்டர், ” என்னடா பண்ண, டாக்டரையே கத்தியில் குத்தி இருக்கே, திமிரா..,” என்றபடி தாடையை நிமிர்த்தி பார்க்க அவருக்கு வழக்கமாய் மாமூல் தரும் மூர்த்தியே அது.

உடனே அவரின் தோரணையே மாறிவிட்டது. ” இந்தா எல்லாரும் சுத்தி எதுக்கு நிக்குறீங்க?, இங்க என்ன படமா காட்டுறாங்க? கிளம்பு.. கிளம்பு… “என மக்களை பார்த்து அதட்டல் விட்டபடியே ஆரவ் அருகே நெருங்கி சென்றார்.

” டாக்டர் சார் முன்பகையா? எதுக்கு உங்களை குத்த வந்தாரு, டீடெய்ல்லா கம்பளைண்ட் எழுதி தர ஸ்டேஷன் வந்துருங்க, நாங்க கூட்டிகிட்டு கெளம்புறோம்..,” எதையும் விசாரிக்காமல் ஒரு கேள்வி கூட கேட்காமல், ஏன் இவர் இப்படி இருக்காரு என்கிற யோசனையோடு அவரை நிமிர்ந்து பார்த்தான். அவரது முகத்தை பார்த்தாலே மூர்த்தியை பற்றிய விஷயம் எதுவோ மறைப்பதை அப்பட்டமாய் அவனால் உணர முடிந்தது. அவனை காப்பாற்றி கூட்டி செல்ல இவர் ஏன் துடிக்கிறார்? குத்தியவனையும் தெரியாது, அவன் ஏன் தங்களை குத்த வந்தான் என்றும் புரியாது முழித்தவன் இன்ஸ்பெக்டரிடம்

” சார். ப்ளீஸ் டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க..,என் அங்கிள் வந்துட்டு இருக்காங்க.” என ஆரவ் கூற.

” ஏன் சார், அவரு வர்ற வரை நான் காத்துட்டு இருக்கணுமா, வேற வேலை இல்லையா எங்களுக்கு..,” என இவனிடம் எகிற.

” ஏனுங்க இன்ஸ்பெக்டர் ஐயா, என்ன ஏதுன்னு கூட விசாரிக்காமா, கிளப்பி விடுறதிலேயே குறியா இருக்கீங்க…,” ஒருவர் கேட்க, கூட்டமும் சலசலக்க ஆரம்பித்தது.

” என்னங்கடா. உங்களோடு பெரிய ரோதனையா போச்சு. அவன் குடிச்சுட்டு வந்து மப்புல குத்தி இருக்கான். இது பெரிய கேசா. இதுக்கு வெத்தலை பாக்கு வச்சி வேறு விசாரிக்கணுமா ? நடந்ததை கேட்காமலே அவராக ஒன்று சொல்ல, ஆரவ்விற்கு புரிந்து விட்டது. எதுவோ தெரிந்து தான் மழுப்பி பார்க்கிறார். விஷயம் என்னவோ ? என ஆராய்ந்து அவரை பார்க்கையிலே அவன் கூறிய மாமா வந்துவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!