Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ithaiya Geethamae

Ithaiya Geethamae 13

கீதம் 💜 13

சாவித்திரியின் உடன் பிறந்த அண்ணன் கமிஷனர் விஜயகுமார் காரிலிருந்து இறங்கி வேகமாய் அவனை நோக்கி வர ” அங்கிள் ” என்றபடியே ஆரவ் அவரின் அருகே செல்ல ” என்னடா ஆச்சு, கையில் கத்தி குத்துற அளவுக்கு போயிருக்கு, காயம் பெருசா.. ” என கட்டு போட்ருந்ததை பார்த்து பதறியபடி கேட்டார்.



Advertisement

” டோன்ட் ஒர்ரி அங்கிள். சின்ன வெட்டு தான். பயப்படாதீங்க…,”

” டேய்.., கையில இவ்வளோ பெருசா கட்டு போட்டு வச்சிட்டு ஒன்னும் இல்லங்கிற., உங்க அம்மா பார்த்தா பதறி துடிச்சிருவா, எல்லாத்துலயும் விளையாட்டுத்தனம் தான் உனக்கு , அவனை கடிந்து கொண்டவர் , யாரு பண்ணது ? நீ என்ன பண்ண? நடந்ததை சொல்லு ?” என்றவரிடம்

Advertisement

Advertisement

” நான் ஒண்ணுமே பண்ணல அங்கிள். இன்பாக்ட் பேச கூட இல்லை. யாருன்னே தெரியல எனக்கு, அவரா தான் வந்து குத்திட்டாரு..” பதில் சொல்லி கொண்டு இருந்தவன் அருகில், அவனையே பார்த்து நின்றிருந்தவளையும் மேலும் கீழும் ஆராய்ந்து பார்த்து

” உனக்கு ஒன்னும் இல்லைலமா.., அடி எதுவும் பட்டதா ? “

Advertisement

” எனக்கு ஒன்னும் இல்லை சார், தள்ளி விட்டுட்டு ஓடிட்டேன்., என்றவள் சுருக்கமாய் நடந்ததை சொல்லி முடித்தாள்.

” ஓஓ., நம்ம தேடுபவன் தான் கையில் வந்து தானாய் சிக்கி இருக்கான். நல்லவேளை விஷயம் எதுவும் இங்க யாருக்கும் தெரியாது. இவனை இழுத்து போய் விசாரிக்க வேண்டிய வழியில விசாரிச்சா உண்மை எல்லாத்தையும் கக்கிட போறான்’ என தாடையை தடவியபடி யோசித்தவர் அவனை நோக்கி நடந்தார்.

நடந்து கொண்டு இருக்கையிலேயே இன்ஸ்பெக்டர் ஓடி வந்து சல்யூட் அடித்தபடி எதிரில் பம்மி நின்றார்.

” என்ன மேன் ? என்ன சொல்றான் இவன் விசாரிச்சியா? என மீசையை முறுக்கி கொண்டே, கம்பிர குரலில் அதட்டி கேட்க.

” இல்லை சார். இப்போதான் வந்தோம். இன்னும் விசாரிக்க ஆரம்பிக்கல. பேச ஆரம்பிச்சோம் . அதுக்குள்ள நீங்க வந்துடீங்க.

” ஏன்… ஸ்டேஷன் கூட்டி போய் பிரியாணி கொடுத்து , மாலை மரியாதை செஞ்சு தான் பேச ஆரம்பிப்பியா? “

” இதோ….சார்….இப்ப்போ…. ” திக்கி திணற, ” தள்ளு மேன். கமிஷன் வாங்கிட்டு அவன் கூட சேர்ந்து நீயும் தானே திருட்டு வேலை பாக்குற. எதையாவது செஞ்சி அவனை காப்பாத்த நினைச்ச அவ்வளவு தான்., கொன்னுருவேன், தள்ளி நில்லுயா ” என்றவரின் கர்ஜனையில் ஓரமாய் ஒதுங்கி போய் நின்றார்.

மூர்த்தியின் அருகில் வந்து, அவனை ஆழ்ந்து பார்த்து கொண்டே ஓங்கி, அவனின் கன்னத்திலே அறைந்தார். அதிலேயே அரண்டு நின்று இருந்தவனை நோக்கி “சொல்லுடா.. ஏன் அவரை கத்தியால் குத்துன ? ” கைகள் இரண்டையும் இறுக்கி கட்டிய நிலையில் நின்றவனின் முகத்திற்கு அருகே சென்று அழுத்தமாய் பேச ஆரம்பித்தார். அவர்கள் பேசுவது அருகில் உள்ளவர்களுக்கு மட்டுமே கேட்கும் அத்தனை மெதுவாய் பேசினார்.

” சார், அவரு தான் என் வழியில குறுக்க வந்தாரு, சும்மா இருக்காமா என் வயத்து பொழைப்புல மண்ணள்ளி போட பார்த்தாரு..,”

” அப்படியா., அவரு யாருன்னு உனக்கு தெரியுமா? எப்போ வந்து உன்கிட்ட பிரச்சனை பண்ணாரு ? எல்லாத்தையும் தெளிவா சொல்லு ? ” அதட்டல் போட.

” அவரு.., அவரு.., ” யாரென கூற முடியாமல் இழுத்து பேசி தயங்க

” அவரு பேரு என்ன சொல்லுடா ?.., மீண்டும் ஒரு குத்து விட

” தெ…தெ.. தெரியாது சார்., ” திக்கி திணற.

” அவரோட பேரே தெரியல., இதுல உன் கிட்ட அவரு வந்து பிரச்சனையை பண்ணாரா ? மீண்டும் அடிக்க கை ஓங்கும் முன்

” சார்.. சார் ..,நான் ஒன்னும் பண்ணல. கஷ்டப்படுற குடும்பத்துல உள்ளவங்களுக்கு வேலை தான் வாங்கி குடுத்தேன். வேற எதுவும் பண்ணல.”

” சரி..நீ சொன்னது உண்மைதான்னே வச்சிப்போம். அதுக்கும் இவங்கள கத்தியால் குத்த வந்ததுக்கு என்ன சம்பந்தம்? “

” சார், என் வேலைக்கு உலை வைக்க பார்த்தாங்க., இல்லாதது எல்லாம் சொல்லி, ஆளுங்களை வர விடாம பண்ணாங்க., “

” யார்கிட்ட இவங்க போய் சொன்னாங்க”

“சோமன் பொண்ணுங்கள வேலைக்கு அனுப்புறதா சொல்லி இருந்தான். அவன்கிட்ட போய் பேசி தடுத்துட்டாங்க.”

” காலேஜ் முடிச்ச பொண்ணுங்களா? எங்கே அவரை கூப்பிடு பேசிடுவோம்..,”

“இல்லை .., அது.. அது.. ” தயங்கி வார்த்தையை மென்று விழுங்கியபடி ” சின்ன பொண்ணுங்க தான்”

“இதுக்கே உன்னை தூக்கி உள்ளே வைக்கலாம்.. தப்பை நீ பண்ணிட்டு அவங்கள வேற குத்தம் சொல்ற. அதுவும் கத்தியால குத்தி கொலை பண்ண பார்த்தேன்னு, கேஸ் புக் பண்ணி உள்ளே வச்சி, சங்குல மிதிச்சேன்னு வை மிச்சத்தையும் கக்கிருவா..” பல்லை அழுத்தி கடித்து கொண்டு வார்த்தையை அழுத்தமாய் உச்சரிக்க

” சார், சார், தெரியாம பண்ணிட்டேன்., என்னை விட்ருங்க சார்., ” என கெஞ்ச ஆரம்பித்தான்.,

” இத்தனை பேர் கூடி நிற்கிற இடத்துல வந்து தெரியாம தான் கத்தியால் குத்துனியா., நடய்யா ஸ்டேஷனுக்கு.., ” என்றவர் காதருகில் சென்று ” டேய்., உன்னை பத்தி எல்லாம் விசாரிச்சாச்சு. ஒழுங்கா வண்டியில போய் ஏறு. இல்லை எதாவது தகிடுதத்தம் பண்ணி தப்பிக்க பார்த்த, இருக்கிற கோபத்துக்கு சுட்டு பொசுக்கிட்டு போய்கிட்டே இருப்பேன்” மிரட்டலை விடுக்க ஒன்றும் பேசாமல் ஜிப் அருகே சென்றான்.

” கான்ஸ்டபிள் , இவனை ஜீப்புல ஏத்தி கூட்டிட்டு கிளம்புங்க.,” என்றவர் ஊர்மக்கள் மத்தியில் சிறு பெண்களை வேலைக்கு அழைத்து சென்ற குற்றத்திற்கு கைது செய்தது போல மேம்பூச்சு காட்டினார்.

கொதிக்கும் மனதை கட்டுப்படுத்தியபடி இன்ஸ்பெக்டரை அருகே அழைத்து, ” உங்கட்ட பெர்மிஷன் வாங்கி தானே கேம்ப் படுத்துறங்க. பந்தோபஸ்துக்கு ரெண்டு கான்ஸ்டபிள் இங்கே இருக்கணும்னு உங்களுக்கு தெரியாதா? கிரௌட் கண்ட்ரோல் பண்ண கூட ஆளை அனுப்பாமா, மிஸ்ச்சர் சாப்பிட்டு காலை ஆட்டிகிட்டு இருக்கீங்களா., ஒழுங்கா கேம்ப் நடத்தி முடிக்கிறவரை இங்கே நின்னு பார்த்துக்கோங்க. அவனை நான் பார்த்துகிறேன், புரிஞ்சுதா..,” ஆர்டர் போட்டு விட்டு நந்துவின் அருகே சென்றார்.

” நீ இங்கே முடிச்சுட்டு வெயிட் பண்ணு. ஆரவ் வந்தப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து கான்ஸ்டபிள் கூட வீட்டுக்கு போகலாம். உங்க மேடம்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். வீட்டுக்கு போயி சொல்லிக்கலாம். “

எதுவும் பேசாமல் தலையை மட்டுமே ஆட்டியவளை கண்டு மெல்லிய முறுவல் பூத்தார். அவரிடம் வாய் ஓயாமல் பேசுபவள் ஒன்றும் பேசாமல் நின்றதிலேயே அவளை புரிந்து கொண்டவர் ” என்னடா பயந்துட்டியா.. ? என் குட்டி பொண்ணு அமைதியா இருக்கு. போலீஸ் உன்கூட நிற்பாங்க. எதுவும் ஆகாது ” அவளின் தோளை தட்டியபடி ஆறுதல் கூறினார்.

 சட்டென நிமிர்ந்தவள் ” நீங்க இருக்க நான் ஏன் பயப்பட போறேன்? எத்தனை பேரை பார்த்துருப்பேன்? இவன் என்ன பண்ணிருப்பான்னு தான் யோசிச்சுட்டு நின்னேன். ஒழுங்கா அவனை விசாரிச்சுட்டு எனக்கு கால் பண்ணி சீக்கிரம் சொல்லுங்க சார்” என்றவளை என்ன சொல்வதென பார்த்து கொண்டு நின்று இருந்தான் ஆரவ்.

“அதானே, என் ரவுடி பொண்ணு அமைதியா நின்ன உடனே கொஞ்சம் கன்பியுஸ் ஆகிட்டேன். பார்த்துக்கோடா” என்றுரைத்துவிட்டு ஆரவை கூட்டி கொண்டு தன் காரில் கிளம்பினார்.

சிறிது நேரம் அமைதியில் கழிய, யோசனையோடு வாட்டத்தையும் காண்பித்த அவரின் முகத்தை நோக்கி விட்டு, ” என்ன அங்கிள் நம்ம தேடுன ஏஜென்ட் தானே இவன்.எனிதிங் சிரியஸ் .., ” என்ற ஆரவிடம்.

” ம்ம்ம்., ஆமாம்பா.., அவனே தான், நீ சொல்லும் போதே விசாரிக்க ஆரம்பிச்சுட்டேன். இவனை தான் தேடிட்டு இருந்தேன். தானா வந்து வசமா மாட்டிகிட்டான். ஆனால் உங்களை குத்த வருவான்னு நானே எதிர்பார்க்கள. சாரி.., கொஞ்சம் குறைச்சு எடை போட்டுட்டேன் “

” நாங்களே எதிர்பார்கல அங்கிள்., நிமிசத்துல என்னனெமோ நடந்துருச்சு. எதுவும் இன்பார்மேசன் கிடைச்சதா ? “

முன் சீட்டில் ஓட்டி கொண்டு இருந்தவரை கண் காட்டி, ” விசாரிச்சுட்டு சொல்றேன்பா ., ” என்பதாய் முடித்து கொண்டார்.

இங்கோ நந்துவிற்கு வேதனையில் மனம் துடித்தது. என்னதான் தைரியமாக பேசி இருந்தாலும் மனதின் ஆழத்தில் வலி இருந்தது. காலையில் வந்திறங்கும் போது, மலர்ந்த முகத்துடன் ரசனையாய் பேசியவன் கையில் குருதி வடிந்ததை கண்டு உள்ளம் வெம்பி அழுதது. சுதாரித்து விலகவில்லை என்றால் என்ன ஆகிருக்கும், நினைக்கவே மனம் பதறியது. சாவித்திரியிடம் எப்படி கூறுவது என அதற்கு மேல் பயந்தாள். அவனுக்கு சாதாரண காய்ச்சல் வந்தால் கூட அத்தனை புலம்புவார் இவளிடம். இன்று அவனுக்கு கத்தி குத்து என்பதை அறிந்தால் எப்படி துடிப்பாரோ? என்று கதறிய மனதை கட்டுப்படுத்தியபடி நின்று இருந்தாள். அவளின் உணர்வுகள் புரிந்ததால், செவிலியர் யாரும் அவளை பணி செய்ய விடவில்லை. அமைதியாக இருக்குமாறு கூறி மரத்தடி நிழலில் அமர வைத்து விட்டனர்.

பரிசோதனை முடித்து மருந்து மாத்திரை வாங்கியபின் இவளிடம் வந்து ” ஏம்த்தா, கலுங்குறவ, மவரசனுக்கு ஒன்னும் ஆகாது” என்றும், “உங்க நல்ல மனசுக்கு ரெண்டு பேருக்கும் எதுவும் வந்துராது. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு மனசை தேத்திக்கத்தா” என்றும் ஒருவர் மாற்றி ஒருவர் ஆறுதல் கூறியபடி விடைபெற, காதில் விழுந்த எதுவும் இவள் கருத்தில் பதியவில்லை. எங்க சார் செய்ய சொன்னாங்க என்றபடி ஊரில் வந்து அடிக்கடி உதவிகளை செய்து, அவர்களோடு கேலி பேசி விளையாடும் அவளை தங்கள் விட்டு பெண்ணாக தான் நினைத்தனர். இன்றோ அமைதியாக ம்ம்., என்றபடி தலையைமட்டுமே அசைத்து விடை கொடுத்து நின்றவளை காணவே அனைவருக்கும் வருத்தமாக இருந்தது.

மக்கள் கூட்டம் இன்னும் இருந்தது. ரெண்டு மணிவரை நடைபெறும் கேம்ப் இந்த பிரச்சனையால் சிறிது தடைபெற்றதால், மேலும் நேரம் இழுத்து நான்கு மணி வரை நீடித்தது. அனைவரும் சாப்பிட்டு முடித்தும் இவளை சாப்பிட சொல்ல, வேண்டாம் என்று மறுத்து விட்டாள். சென்றவனை முழுதாய் கண்ட பின்னே தான் உணவு கூட உள்ளே இறங்கும் போல் தோன்றியது.

அவனுக்காக காத்து கொண்டு இருந்தவள் நேரம் கடந்ததால் மற்றவர்களை கிளம்பி செல்லுமாறு கூறி விடை கொடுத்தாள். இவளோடு ஒரு டிரைவர் மட்டுமே உடன் இருக்க, போலீஸ் தள்ளி நின்று கொண்டு இருந்தார்கள். ஆரவ் வந்தவுடன் தான் நிம்மதியா இருந்தது. அவனும் இன்னும் சாப்பிடவிடவில்லை என்பதை அறிந்து கொண்டு இருவருக்கும் உணவை கொண்டு வந்தவள் சாப்பிட்டு முடித்து கிளம்பினர்.

அவனின் அடிப்பட்ட இடதுகரத்தை கண்டவள் மெதுவே அவனிடம் ” ரொம்ப வலிக்குதா சார் ” என்க, ” இல்லை மேடம், ஜில்லுனு அருவில குளிச்ச மாதிரி சுகமா இருக்கு” சிரித்தபடி உரைத்தவனின் முகம் பார்த்தவள் ” உங்கட்ட போய் பீல் பண்ணி கேட்டேன் பாருங்க, என்னை சொல்லணும்”

“நீங்க பீல் பண்ணிங்களா, நம்ப முடியவில்லை., இல்லை. என கிண்டல் அடிக்க

” அவனை தள்ளி விட்டு ஓடி போனோமே, சேர்த்து ரெண்டு அடி போட்டு இருந்தா உங்களுக்கு இப்படி ஆகிருக்காதுனு இவ்ளோ நேரம் நினைச்சேன், பாருங்க என்னை சொல்லணும்.”

” ஓ., அப்போ கூட அவனை அடிக்க முடியலன்னு தான் கவலையா, என்னை பத்தி இல்லை.” என்றவனிடம்

” சரி, விளையாண்டது போதும், ஒழுங்கா சொல்லுங்க, வலி இருக்கா, என அழுத்தி கேட்க.

” பெயின் இருக்க தானே செய்யும். விடும்மா., ரெண்டு நாள்ல சரியாகிடும்.”

” ஒன் வீக் வரை பெயின் இருக்கும். காயம் இன்னும் கொஞ்சம் டீப்பா பட்டு இருந்தா, ஸ்டிச் போட வேண்டியிருக்கும். நல்ல வேலை தப்பிச்சீங்க., ” ஆழ்ந்த பெருமூச்சு விட்டு அவனுக்காய் பேசியவளை இன்னுமே பிடித்தது.

“விடுங்க, இதுக்கெல்லாம் பீல் பண்ண கூடாது.., சரியாகிரும்.,”

” மேடம் தான் என்ன பண்ணுவாங்களோன்னு பயமா இருக்கு. ரொம்ப டென்ஷன் ஆக போறாங்க.”

” நான் போன்ல பேசி நடந்ததை அப்பாட்ட சொல்லிட்டேன். அவரு மேனேஜ் பண்ணிருவார். “

” ம்ம்., ” என்றதற்கு மேல் மௌனமே காரில் ஆட்சி செய்தது. இலகுவாய் தங்களை சமாளித்து கொண்டர்வர்கள், மக்கள் சூழும் நேரம் வரை நன்றாக தான் இருந்தனர். பின் தான் பிரச்சனை ஆரம்பித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!