Skip to content
Post Views: 1,258
கீதம் 💜 28
மணமேடை அலங்காரங்கள் முடிந்து, இறுதி கட்ட வேலைகள் பரபரப்பாய் நடந்து கொண்டிருந்தன. நேற்று காலையில் தான் விசேஷம் உறுதிப்படுத்தப்பட்டு அட்வான்ஸ் கொடுத்து, மகால் புக் செய்யப்பட்டது. ராமநாதபுரத்தின் செல்வாக்கும், புகழும் ஒருங்கே பெற்ற குடும்பத்தில் நிகழும் மங்கள நிகழ்வு ஆடம்பரமாய், பணத்தை தண்ணீராய் வாரி இறைத்து இதோ இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாக போகிறது.
Advertisement
சகுந்தலா வந்தவர்களை வரவேற்ற கொண்டிருக்க, ராஜேஷ் பட்டு வேட்டி சட்டையில், அமர்க்களமாய் ரெடியாகி, அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தான். அவன் தாயாரும் மேடையில் வைக்கப்பட்டுருந்த அனைத்தையும், சாவித்ரியின் துணையோடு சரிபார்த்து எடுத்து வைத்து கொண்டிருந்தார்.
இறுதி கட்ட மேக்கப் அனைத்தும் முடிந்து காரில் வந்து கொண்டிருந்தாள் தர்ஷி. அவளுக்கு தான் இன்று கோலாகலமாய் வளைகாப்பு நடக்க போகிறது. ஆரவ் ஊருக்கு செல்ல இன்னும் இரு நாளே இருந்தப்படியால் அவசர அவசரமாய், நாள் பார்த்து, நல்ல வேலையாக சுபதினம் அடுத்த நாளே கிடைத்தமையால், உடனே முடிவு செய்யப்பட்டு, துரித கதியில் அனைத்தும் அரங்கேறி விட்டது.
Advertisement
Advertisement
” டேய் ஆரவ்! ..,”
“!!!!”
Advertisement
“நந்து!, அவனை கீழே இறங்கி வர சொல்லு. நானே போய் வண்டி ஓட்டுறேன்..,” இந்த பக்கமும் சத்தம் வராமல் இருக்க, இருவரையும் பார்த்து சிரித்தவள்
” அடேய் பக்கி !, அவன் தோளில் சுள்ளென ஒரு அடி போட விழித்து பார்த்தவனிடம் ” வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டே வந்தா அவ என்னடா பண்ணுவா., பாவம்., கொஞ்சம் முன்னாடி பார்த்து வண்டியை ஓட்டு..” அவள் சிரிப்பில் என்ன கண்டானோ பின்னர் திரும்பி பார்க்காது வண்டி ஓட்ட தொடங்கினான்.
கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்தை பார்த்து ரசித்தபடி விழியோடு தன்னை மறந்து கவிபாடி கொண்டிருந்தவன், அவளின் கேலியில் தான் சுயம் பெற்றான்.
தர்ஷியோட இணைந்து நந்துவிற்கும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. புதுபெண் திருமணம் முடிந்து முதல் முறை விசேஷத்திற்கு வருவதால் அவளுக்கும் போட சொல்லி சாவித்ரி அனுப்பி வைத்திருந்தார். எதற்கு வேண்டாம் என மறுத்தவளை தர்ஷி தான் வலுக்கட்டாயமாக போட வைத்தாள்.
மெல்லிய அலங்காரத்தில் கரும்பச்சை நிறத்தில், குங்கும பூ பார்டர் வைத்த பட்டாடை உடுத்தி, தேவதையாய் வந்தவளை கண்ணெடுக்காது பார்க்க ஆரம்பித்தவனை திரும்ப சொல்லி, கண்ணில் ஜாடை காட்டினாலும் வம்பாய் ரசித்தவனை, இருவரின் ரகசிய பேச்சுக்களை பார்த்து மனதில் சிரித்தாலும், கேலி செய்து தர்ஷியும் ரசித்தாள்
” இந்த பூனையும் பால் குடிக்குமான்னு நினச்சேன்., இது சிங்கிளா பீர் அடிக்க ஆரம்பிச்சிருச்சு. ” கிண்டல் அடிக்க.
வெட்கத்தில் தர்ஷியின் விழியை கூட காண முடியாமல் நந்து கண்ணாடி வழியே வெளியே பார்க்க தொடங்க.
” டேய்.., இன்னும் ஒரு வாரம் லீவு போட்டு வந்திருக்கலாம்ல, அவசர அவசரமா ஓடுற.?”
” ப்பச்.., லீவு இல்லம்மா.., நெஸ்ட் எக்ஸாம் ஸ்டார்ட் ஆக போகுது. ஸ்டடி பீரியட், கிளாஸ் இல்லனு தான் இப்போ வந்தேன்…,”
” நல்லாஆஆ …., ஸ்டடி பண்ற மச்சி…” அவனை நக்கலடிக்க
” ஹா… ஹா …டோன்ட் ஒர்ரி மேடம், இதுலயும் கோல்ட் மெடல் வாங்கிருவேன்…” சிரிப்புடன் சொல்வதை கேட்டவள்,
மனம் மகிழ்ச்சியில் பொங்க நந்துவின் கைப்பற்றி “தேங்க்ஸ்டா, உன்னால தான் இவன் இப்படி சிரிச்சி பேசி இவ்ளோ சந்தோசமா இருக்கான்.”
” ஏன் இவ்ளோ நாள் சிரிக்காமலா இருந்தேன்…?” என்றான் ஆரவ்.
“பொய்யா சிரிச்சிட்டு, நடிச்சிட்டு இருந்த, போடா..,” முறைப்புடன் தர்ஷி சொல்ல.
சிரிப்பினை மட்டுமே பதிலாய் தந்து மீண்டும் அவள் விழி நோக்கினான்.
முகம் கொள்ளா சிரிப்புடன் தர்ஷி மேடையில் அமர்ந்திருக்க, வளை பூட்டும் நிகழ்வு கொண்டாட்டமாய் ஆரம்பமாகியது.
” மச்சான், நீங்க ஊருல இருந்து வந்து கல்யாணம் முடிச்சிட்டு வளைகாப்பையும் ஒண்ணா செஞ்சு முடிச்சாச்சு. அடுத்து மொட்டையடிச்சு காது குத்தையும், என் தங்கச்சி வளைகாப்பையும் சேர்த்து பண்ணிருவோமா..,” கிண்டலாய் ராஜேஷ் கேட்க
” மே பீ.., பண்ணலாம்..” என சிரித்தவண்ணம் சொன்னவனை முறைத்து பார்த்து தன் வெட்கத்தை மறைக்க போராடினாள். திரும்பும் பக்கம் எல்லாம் கேலி பேச்சுக்கள் தொடர செக்க சிவந்த வதனம், கிளம்பும் நேரத்தில் சிவந்த கண்களுடன் தான் விடை பெற்றது.
இனிதே நடைபெற்ற வைபோகத்தை, நல்லபடியாய் நடத்தி முடித்து விடை பெறும் போது தர்ஷியின் கண்களும் கலங்கி விட்டன. கிளம்ப போகும் நேரம் அழ ஆரம்பித்து விட்ட தர்ஷியை தேற்றி, ஆறுதல் செய்து அவளை விட்டு வரும் போதே சாவித்திரியும் கலங்க ஆரம்பித்த விட்டார். நாளை இருவரும் சென்று விட்டால் தனித்து என்ன செய்வது, தங்களின் துயரம் தெரிந்தால் அவள் மகிழ்ச்சியாக ஊருக்கு போக மாட்டாள் என்பதை புரிந்து தாய் மனம் அமைதியாக அழுகையில் கரைந்தது.
காலையில் கிளம்பும் போது அனைவரிடமும் விடை பெற, ரம்யா அழுகையில் கரைய ஆரம்பித்தாள். ” நந்துமா..,” அவளை கட்டி கொண்டு கதறியவளை ரவி தான் அணைத்து ஆறுதல் படுத்த வேண்டியிருந்தது. சாவித்ரி, சுகந்தி இருவரும் பேசினால் எங்கே தங்கள் கவலை தெரிந்து விடுமோ என மனதை கல்லாக்கி கொண்டு, கலங்கிய கண்களுடன் விடை கொடுத்தனர்.
நந்துவின் கையை இறுக பற்றி கொண்டு கண்ணீர் கண்களை மறைக்க நின்றிருந்த வைபவ் அருகே வந்தவன் ” நான் என் அப்பாட்ட எதையும் மறைக்க மாட்டேன். நீயும் என்கிட்ட மறைக்க கூடாது..,” என்றதும் ஆரவ்வை இறுக அணைத்து நின்றவனை தோள் தட்டி, சமாதானம் செய்து கிளம்பி சென்றனர்.
விமான நிலையம் வந்து உள்ளே செல்லும் நேரம் வரையும், திரும்பி திரும்பி பார்த்த வண்ணம் வந்தவளை தன் கைவளைவில் கொண்டு சென்றவன், விமானம் பறக்க தொடக்கி சிறிது நேரம் வரை எதுவும் பேசாமல் அவள் மனதை புரிந்து அமைதியாக இருந்தான். தன் குடும்பத்தை விட்டு வர மனம் தவித்தாலும் சிறிது காலம் தானே, பின் அங்கு தானே இருக்க போகிறோம் என எண்ணி அவளும் மனதை தேற்றி கொண்டாள்.
அரை மணி நேரம் கடந்தும் அவள் அமைதியாக இருக்க, அதை பொறுக்க முடியாமல்
” ஓய், என்ன பீலிங்கா…? ” அவள் தோளை இடித்து முறைத்தபடி கேட்க
” ம்ச்ச்.. ஆமா, ஒரு அழகான, அன்பான, டாக்டர் மாப்பிள்ளையை கட்டிக்கிட்டு பாரின் வேற போறேன். பீலிங் இருக்காதா..,” அவளும் கவலையாய் சொல்ல
” என்ன சொன்ன? ” டக்கென்று திரும்பி பார்த்தவனை பார்த்து கண் சிமிட்டியவள்
“எதுக்கு பீல் பண்ணனும். இவ்ளோ நாள் மாமியார் வீட்டுல இருந்தேன். இப்போ என் புருஷன் கூட போக போறேன்..,”. தோளை குலுக்கியப்படி சொன்னவளை பார்த்தவன் சிரிப்புடன் அணைத்து கொண்டான்.
இதோ தங்கள் கூட்டிற்கு திரும்பிய பறவைகள் உல்லாசமாய் பறக்க தொடங்கின. இரு நாட்கள் கடந்த நிலையில் அவளுடன் சமையலறை மேடையில் அமர்ந்து, அவள் சுட்டு கொடுக்கும் தோசைகளை ஊட்டி விட்டு கொண்டே தானும் சாப்பிட்டு கொண்டிருந்தவன்
“நந்திதா! நாளைக்கு மார்னிங் நம்ம ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்.”
அவள் கேள்வியாய் புருவம் சுருக்கி பார்க்க
” என்னை உடனே பார்க்கணும்னு சொல்லி கதறி அழுதுட்டு இருக்கிற பொண்ணுங்களை பார்க்க தான் போறோம் .., விட்டுட்டு வந்து ரொம்ப நாளாச்சு .., பாவம்., ” உச்சு கொட்டியப்படி சொன்னவனை திரும்பி பார்த்தவள்,
வேறு ஒன்றையும் கேட்காமல் “ம்ம்ஹ்ம்ம்.. “என்றாள் தலையசைத்து. அவளின் பதிலில் முறைத்தவன்
” ஏய்., இதுக்கு நீ கோபப்பட்டு கத்தனும். ஒன்னும் சொல்லாம இருக்க..,” தோசையை அவளுக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டவன் முறைப்பாய் கேட்க.
“சரிங்க, போய் பார்ப்போம். அவங்கள கட்டி பிடிச்சி, கன்னத்துல நீங்க முத்தம் கொடுத்தா அழுகவே மாட்டாங்க..,” குறும்புடன் அவள் சொல்ல
அவளின் பதிலில் சாப்பிட்டு கொண்டிருந்தவன் புரையேறி இரும, அவன் தலையை தட்டி, தண்ணீர் எடுத்து குடிக்க வைத்தவளை பார்த்து,
“அடிப்பாவி, கட்டுன புருஷன இன்னொரு பொண்ணை கட்டி பிடிச்சி முத்தம் கொடுக்க சொல்ற. உன்னை எல்லாம்..,” அவள் தலையில் கொட்டும் வைக்க
கலகலவென சிரித்து, அடக்க முயன்று முடியாமல் வாயை கைகள் கொண்டு மூடி, ” நீங்க அதுக்கு எல்லாம் சரி பட்டு வர மாட்டிங்க.., மை லார்ட். ஏன் இவ்ளோ பில்ட் அப்…,” இடுப்பில் ஒரு கையை வைத்து கொண்டு, கரண்டியால் அவன் கையில் செல்லமாய் அடி போட்டாள்.
” நிஜமாவே அங்க அழுதுட்டு இருக்காங்கடி. நான் நாளைக்கு ஓடனும்.
” போங்க. போங்க. போகும் போது அந்த பொண்ணுகளுக்கு மறக்காம சாக்லேட் வாங்கிட்டு போங்க. அதை பார்த்தா சிரிக்க ஆரம்பிச்சிருவாங்க. ” மேலும் கலாய்த்தவளை பார்த்து சிரித்தவன்.
” பரவாயில்லை. மேடம் டக்குனு புரிஞ்சுக்கிட்டிங்க. அவ்ளோ புரியுமா என்னை ? என்றான் சீண்டலாய்
” புரியாம தான் உங்க கூட வந்தேனா. எனக்கு போதும், நீங்க சாப்பிடுங்க என்றவள் அடுப்பின் அருகே செல்ல அவளை கைப்பற்றி இழுத்தவன் “ ஒழுங்கா இன்னொரு தோசை மட்டும் சாப்பிடு. அப்புறம் நைட் திருப்பி பசிக்குதுனு சொல்லுவ..,” வற்புறுத்தி ஊட்டிவிட்டு, அனைத்தையும் ஒழுங்கு படுத்தி அறைக்குள் வந்தவனை பார்த்து.
” சரி., சரி. விளையாண்டது போதும். நாளைக்கு எங்க போறோம், ஒழுங்கா சொல்லுங்க ..,”
” ஒரு ஆர்பனேஜ் ஹோம் இங்க ஹாஸ்பிடல் பில்டிங்கல இருக்கு. கொரானா பீரியட்ல இறந்தவங்களோட குழந்தைங்க அங்க இருக்காங்க. நிறைய பேர்கிட்ட நிதி வாங்கி தான் அதை நடத்துறாங்க. நானும் ஸ்பான்சர் பண்றேன். டைம் கிடைக்கும் போது எல்லாம் அங்க போய் அவங்களோட இருப்பேன்.” அவன் அனைத்தையும் விவரமாய் விளக்கி சொல்ல.
“ஓகே. கண்டிப்பா நாளைக்கு போவோம். ஆமா, நீங்க நாளையிலருந்து டூட்டி போகணும்ல..”
” ம்ம்ஹ்ம்.., ஏன்டா தனியா இருக்கணும்னு பீல் பண்றியா..,?”
“ஆமான்னா, என்னையும் உங்க கூட வேலைக்கு கூட்டி போய் பக்கத்துல வச்சிக்குவீங்களா?..” அவள் கூறியதை கேட்டதும்
” ஹா… ஹா.. நீயே சொல்லிட்ட…. வச்சுக்குவோம்… ” என்றான் அமர்த்தலாய் சிரித்து கொண்டே.
**
காரில் இருந்து இறங்கும் போதே அந்த பிரம்மாண்ட மருத்துவமனையை பார்த்து வியந்தாள். கிட்டத்தட்ட ஐநூறு படுக்கைகளை கொண்டிருக்கும் என பார்க்கும் போதே தெரிந்தது.
விழி விரித்து பார்த்து இருந்தவள் அவன் இறங்கியதும், ” அரு, நீங்க இங்க தான் ஒர்க் பண்றிங்களா., நல்ல எஸ்பியரின்ஸ் கிடைக்கும். சூப்பர் ” நகரின் மையப்பகுதியில் அமைந்து இருந்தாலும் உள் செல்ல செல்ல அமைதியாய் காட்சி அளித்தது. அவனோடு நடந்தபடியே அனைத்தையும் பார்த்து கேள்வி கேட்டபடி, பேசிக் கொண்டே வந்தாள்.
இரண்டாம் தளத்தின் ஒரு அறையின் முன் அமர்ந்து இருந்து, அனுமதி கிடைத்ததும் உள் அழைத்து சென்றான்.
“மீட் மை வைப்” என ஆரவ் ஆரம்பித்தவுடன் “நாண்டிடா ஸ்ரீ. யுவர் ஒன் அண்ட் ஒன்லி டர்ம பட்டினி. அம் ஐ ரைட். “அவர்களிடம் பேசி சிரித்த படி கை குலுக்கினாள் மார்க்கரேட். சிக்கென்ற ஆடையில் ப்ரவுன் நிற கூந்தல் அழகியாய் இருந்தவளை பார்த்ததும் மனதிற்குள் பிடித்தம் வந்தது.
“யா. கரெக்ட். மை ஒன் அண்ட் ஒன்லி தர்ம பத்தினி ” என அழுத்தி சொல்லியவன் அவள் புறம் குனிந்து,
“ரெண்டு வருஷம் என்னை பட்டினி போட்டதால அப்படியும் சொல்லலாம்ல..,” என கண்ணடிக்க, சிரித்த படி அவளிடம் பேச ஆரம்பித்தவள், அவள் அறியா வண்ணம் இவன் காலை மிதித்து முறைத்தாள்.
” ஹாய் மேம்!..” என கைகுலுக்கி அவரிடம் சில நொடிகள் பேசி கொண்டிருக்க, ஆரவ் அவரிடம் கண் காட்டினான்.
” யா.. இட்ஸ் ரெடி..” என்றாவரே ஒரு காகித உறையை அவளிடம் கொடுத்தார்.
என்னவாக இருக்கும் என வாங்கியவள் அதை பிரித்து பார்க்க, அவள் இன்னும் பதினைந்து நாளில் அங்கே வேலைக்கு வந்து சேருமாறு கூறிய அப்பாய்ன்மெண்ட் லெட்டர்.
” நான் இங்கே எதுவும் ரெஸும் குடுக்களையே.” என முணுமுணுத்து கொண்டே ஆரவ்வை பார்க்க,
” மேடம் அதெல்லாம் நாங்க ஆல்ரெடி கொடுத்து தான் ஜாப் ஆஃர் உனக்கு வந்துருக்கு. சர்பிரைசா இருக்கட்டும்னு தான் நைட் சொல்லல.மத்தத அப்புறம் சொல்றேன். அவங்கட்ட ஓகே மட்டும் சொல்லிட்டு வா..” என்றான் ஆரவ்.
” இவ்ளோ பெரிய ஹாஸ்பிடல்ல நான் ஒர்க் பண்ண போறத நினைச்சா ரொம்ப ஹாப்பியா இருக்கு.” என்றவள் அவர்களின் சம்பாசனையை புரியாமல் பார்த்திருந்த பெண்ணிடம் “தேங்க் யூ மேம். ஐ வில் ஜாயின் தி ஜாப்…,” என்றப்படியே அங்கு வேலையில் சேர்வதற்கான இதர விஷயங்களையும் கேட்டு வெளி வந்தாள்.
திருமணம் முடிந்தால் எங்கே தன் கனவு பொய்த்துவிடுமோ என திருமணத்தையே வெறுத்தவள் மணம் முடிந்ததுமே அவளுக்கான பணியை அவளுக்கே தெரியாமல் வாங்கி கொடுத்ததை எண்ணி புளகாங்கிதம் கொண்டு சந்தோசமாய் அவன் கையை இறுக பற்றினாள். அவளின் மகிழ்ச்சியை அவள் அகன்ற விழிகளே அவனிடம் உற்சாகமாய் உரைத்தது. அவளின் புறம் சாய்ந்தவன், மெதுவே
” என்ன மேடம், ஹாப்பியா…,” என்றான்
” ம்ம்ம்ம்.. ரொம்ப…, ரொம்ப…. ஹாப்பி. தேங்க்ஸ்” என்றாள் அவனை அழுந்த பார்த்து கொண்டு சிரிப்புடன்.
” அரு, என்கிட்ட இதை பத்தி ஒன்னுமே சொல்லல. எப்போ இதை எல்லாம் பண்ணீங்க…,”
” ஐய்யாவோட பிளானிங் அப்படிம்மா. எதுவும் மிஸ் ஆகாது..,இன்னும் இருக்கு.., வா.., ” என்றபடி அவள் கையை பிடித்து வேகமாய் நடந்து சென்றவன் கொண்டு போய் நிறுத்திய இடத்தை பார்த்ததும் இன்னுமே அதிர்ந்தாள். அங்கே பார்த்தவைகளை பார்த்து அவள் கண்ணில் அவளையும் மீறி கண்ணீர் வடிந்தது.
error: Content is protected !!