மனிதர்களுக்கே உணவு மற்றும் தண்ணீருக்குப் பஞ்சமான இன்றைய காலகட்டத்தில் சிறு பறவைகளுக்கு அதன் தாக்கத்தைத் தீர்க்க உணவு மற்றும் தண்ணீர் என தினமும் வைப்பவள் நேத்ரா.
பறவைகளின் கீச்… கீச்… என்ற ஒலியில் அவன் நினைவுகளில் இருந்து மீண்டவன் அவன் கைகளில் ஏந்தியிருந்த நளனும் நேத்ராவும் இருந்த புகைப்படத்தை மீண்டும் சுவற்றில் மாட்டிவிட்டு, அவர்கள் வாழ்ந்த அப்பார்ட்மெண்ட்டின் பால்கனியை அடைந்தான்.
ஆம் நேத்ராவுடன் நடந்த இன்டெர்வியூவுக்குப் பின் நளன் அவர்கள் இருவரும் வசித்த அப்பார்ட்மெண்டுக்கு வந்திருந்தான்.
நேத்ரா அங்கிருந்த நாட்களில் பறவைகளுக்கு பால்கனியில் உணவு மற்றும் தண்ணீர் வைப்பது வழக்கம், இப்போது சென்று பார்த்தவனுக்கு இன்றும் அங்கே உணவு மற்றும் தண்ணீர் இருப்பதைக் கண்டு ஆச்சரியம்.
“யார் வைக்கிறாங்க….” என்றவன் பின் அதை விடுத்து, அந்த பறவைகள் அங்கே அழகாக தண்ணீர் அருந்துவதை ரசிக்க ஆரம்பித்தான்.
நளனுடனான சந்திப்புக்குப் பின் அறையை விட்டு வேகமாக வெளியே வந்த நேத்ரா படபடக்கும் இதயத்துடனும், முழுதாக இரண்டு வருடங்கள் கழித்து தன்னவனைக் கண்ட பூரிப்பிலும் வனிதாவுக்கு அழைத்தாள்.
அழைப்பை ஏற்ற வனிதா “என்ன நேத்ரா, இண்டர்வியூ முடிஞ்சிருச்சா? எப்படி பண்ணுன?” என்றாள்.
“வனிதா நீ எங்க இருக்க, நான் உன்னை இப்போவே பாக்கணும்” என்றவளிடம்
“சரி நான் கேன்டீன்ல இருக்கேன், உனக்கு கான்டீன் எங்க இருக்குன்னு தெரியுமில்ல, அன்னைக்கு திண்ணியே ஐஸ்கிரீம் ஞாபகம் இருக்கா, ஆ… அதானே மறக்குமா அங்க தான் இருக்கேன் வா” என்ற வனிதா அழைப்பைத் துண்டித்தாள்.
வனிதா கூறிய காண்டீனுக்கு வேகமாக விரைந்தவள், வனிதா அமர்ந்திருந்த இடத்தை கண்களால் துளாவி அவளை அடைந்தாள்.
மூச்சுவாங்க வந்தவளை மேலும் கீழும் பார்த்த வனிதா, “என்ன டி என்ன ஆச்சு? அவங்க கேட்ட கேள்விக்கு பதில் தெரியலையா? அதான் அங்க இருந்து தலை தெறிக்க ஓடி வர்றியா?” என்று சீரியசாக பேசிய வனிதாவை முறைத்தவள்,
வனிதாவின் முன்னிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து மட மடவெனக் குடித்தாள்.
நேத்ரா குடிப்பதை பார்த்துக் கொண்டிருந்த வனிதா “என்ன டி இது… இவ்வளவு பெரிய கம்பனில, இன்டர்வியூவுக்கு வந்தவங்களுக்கு குடிக்க தண்ணி கூட குடுக்கலையா? சோ சேட்” என்று கன்னத்தில் கைவைத்து கண்களை சிமிட்டிய வனிதாவைத் தீயாக முறைத்தவள்,
“ஐயோ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா…” என்றவள் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, வனிதாவுக்கு முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
“ஹே இன்டெர்வியூல யார் இருக்காங்கன்னு உனக்கு தெரியுமா?” என்ற நேத்ராவிடம்,
“ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்….” என்று பாடிய வனிதாவிடம்,
“ஏய், ஏன் டி என்னைய சாவடிக்கிற, நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என்றாள் நேத்ரா அருகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து எறியும் நோக்குடன்.
“சரி சரி கோபப்படாத, என்று வாட்டர் பாட்டிலை வாங்கி வைத்தவள், நான் என்ன டி தப்பா சொன்னேன் ஆண், பெண் இப்படி யாராவது இருப்பாங்கன்னு சொன்னேன்” என்ற வனிதாவை முறைத்தவளைக் கண்டு,
“ஓகே ஓகே பீ சீரியஸ், இப்போ என்ன ஆச்சு? அங்க சக்கரவர்த்தி சார் இருப்பாரு அப்புறம் கூட ஏதாவது அதி மேதாவி இருந்திருக்கும்” என்றாள் அவள் முன்னிருந்த லேப்டாப்பைப் பார்த்துக் கொண்டே.
“அது தான் இல்லை, யார் இருந்தாங்க தெரியுமா? என்றவள் முகம் பிரகாசிக்க… என்னோட அம்மு… டி” என்றாள்.
“யாரு அண்ணாவா… ஓ” என்ற வனிதா சாதாரணமாக மீண்டும் லெப்டோப்பில் புதையவும்,
“ஹே என்ன வனிதா நான் சொல்லிகிட்டே இருக்கேன், நீ கண்டுக்கவே மாட்டேங்கிற?” என்றாள் சலிப்புடன்.
“இல்ல…மொதல்ல தூங்கிட்டிட்டே சொன்ன, அப்புறம் பைக்கில வரும்போது சொன்ன, இப்போ உக்காந்துகிட்டு சொல்ற, சரி சொல்லு பிரெண்டுக்காக இதைக்கூட செய்ய மாட்டேனா? ” என்றாள்.
தீயாய் முறைத்த நேத்ராவைக் கண்டு,
“இல்ல நேத்ரா… உன்னோட கனவுல வந்து உன்னை பின்னாடி இருந்து கட்டி பிடிச்சாருன்னு சொன்ன, அப்புறம் ஒரு நாள் ரோட்ல பாத்தேன்னு சொல்ற, இப்போ இன்டேர்வியூ பேனல்ல பாத்தேன்னு சொல்ற, என்னைய எதை டி நம்ப சொல்ற, நீ எப்பவும் உன்னோட புருஷன் நெனப்பாவே இருந்தா அப்படித்தான் தெரியும் ” என்ற வனிதாவிடம்,
“ஹே சாத்தியமா வனிதா, அங்க என்னோட அம்முவும், வினோத் அண்ணாவும் இருக்காங்க” என்றாள்.
நேத்ரா பேசிக் கொண்டிருக்கும் போதே வனிதாவை சக்கரவர்த்தி அழைப்பதாகக் மெயில் வரவும் அதை பார்த்த வனிதா,
“ஹேய் நேத்ரா ஒரு அர்ஜெண்ட் டி, நீ இங்கயே இரு என்னை சக்கரவர்த்தி சார் கூப்பிடுறாங்க, நான் போயிட்டு வந்திடுறேன்” என்றவள் நேத்ராவின் பதிலை எதிர்பார்க்காமல் அவள் மொபைலை மட்டும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டாள்.
https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ