மறுநாள் காலை எழுந்தவன் நளன் இன்னும் உறங்கிக் கிடக்கவும், நேராக நளன் வீடான அவன் வளர்ப்பு வீட்டிற்குச் சென்றான் வினோத்.
வினோத்தைக் கண்டவுடன் வாசலுக்கு வந்த நந்தினி வினோத்தின் பின் புறம் பார்க்கவும் “அம்மா… நளன் வீட்ல இருக்கான்” என்றான் தயக்கமாக.
தாயின் முகம் வாடியவுடன் “இல்லம்மா அவனுக்கு அதிக வேலை அதான் அப்புறமா வரேன்னு சொன்னான்” என்று சமாளித்தான்.
பின்னே கனடாவிலிருந்து வந்து இரண்டு நாட்கள் தாய் தந்தையுடன் இருந்தவன் நேத்ராவை எப்போது இன்டர்வியூவில் கண்டானோ அன்றிலிருந்து வீட்டிற்க்கே வருவதில்லை.
உள்ளே சென்றவன் நந்தினியின் கையால் சமைத்த காலை உணவை ரசித்து உண்டான். பின்பு கார்த்திகேயன் வினோத்தைக் கண்டு புன்னகைத்தவரை “அங்கிள் நான் உங்க ரெண்டு பேரு கூடவும் கொஞ்சம் பேசணும், நீங்க சாப்பிட்டு முடிச்சிட்டு வாங்க” என்றவன் ஹாலில் அமர்ந்தான்.
காலை உணவை முடித்து வந்த கார்த்திகேயன், “என்ன வினோத் நளன் எப்படி இருக்கான், இந்த பக்கம் வர்றதே இல்லை போன் மட்டும் தான் பேசுறான்” என்றார்.
தலை குனிந்தபடி “அங்கிள் அதை பத்தி தான் உங்க கூட கொஞ்சம் டிஸ்கஸ் பண்ண வந்தேன்” என்றவனை கூர்ந்து பார்த்தவர்,
“என்னப்பா எதுவும் பிரச்சனையா” என்றார்.
அவர்களிடம் அன்று இண்டர்வியூவில் நேத்ராவை நளன் பார்த்ததிலிருந்து விளங்கியவன், அவன் வனிதாவை விரும்புவதையும் அதை வைத்து அவர்கள் போட்டிருக்கும் திட்டத்தையும் விளக்கினான்.
முகம் மலர்ந்த கார்த்திகேயனும் நந்தினியும் ஒருவரையொருவர் அர்த்தப் பார்வை பார்த்து சிரித்துக் கொண்டனர்.
“அங்கிள், அம்மா நீங்க ரெண்டு பேரும் தான் அப்பா கிட்ட என்னோட எங்கேஜ்மென்ட் பத்தி பேசணும்” என்றான் இறுதியாக.
“ம்ம் நல்ல ஐடியா தான், இதுனால நளனும் நேத்ராவும் சேந்தா அதுக்கு மேல வேற என்ன சந்தோசம் இருக்கப் போகுது” என்ற நந்தினியின் முகத்தில் பெருத்த மகிழ்ச்சி.
கார்திகேயனையும் நந்தினியையும் அழைத்துக் கொண்டு சக்கரவர்தியைப் பார்க்கச் சென்றான் வினோத்.
சக்கரவர்த்திக்கு ஏற்கனவே வனிதாவைப் பற்றி தெரியும், அவள் நேர்த்தியான பணியும், அவளது ஆர்வமும் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, இதில் அவள் தான் உங்கள் வருங்கால மருமகள் என்றாள் வேண்டாம் என்றா கூறுவார்.
அவர்கள் மூவரிடமும் அங்கே நேத்ராவின் வீட்டில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விளக்கியவன், “அப்பா நிச்சயத்தை நாம நேத்ரா வீட்ல தான் வைக்க வேண்டி வரும், அப்போ தான் நளனுக்கு டவுட்டு வராது” என்றவன் அலுவலகம் கிளம்பிச் சென்றான்.
வனிதாவின் வீட்டில் வினோத் ஏற்கனவே வனிதாவின் தந்தையுடன் பேசிவிட்டதால் அங்கு பிரச்சனை அதிகமாக இருக்கவில்லை, அங்கு சென்ற நேத்ராவிற்கும் நந்தனுக்கு வேலை இல்லாமல் போக, அங்கிருந்து அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள்.
வீட்டிற்கு வந்ததும் நேத்ரா அவள் அறைக்குள் புகுந்துகொள்ள, நந்தனோ அங்கிருந்த ஈஸ்வரமூர்த்தியிடம் “அப்பா நாளைக்கு…” என்று ஆரம்பித்தவன் அனைத்தையும் கூறி முடித்தான்.
ரேணுகாவிடம் “அம்மா உங்களுக்கு இதுல ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று கேள்வியாக வினவவும்,
கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்த ரேணுகா வேகமாக வெளியே வந்தார் “என்னடா ஆளாளுக்கு ரொம்ப தான் பேசுறீங்க, என்னமோ நான் கெட்டவ மாதிரியும் நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்க மாதிரியும்,
அவள் என்னமோ என்னைய வேண்டாதவ மாதிரி பாக்குறா, நீ என்னமோ நான் தான் அவளோட வாழ்க்கையை கெடுத்த மாதிரி பேசுற, உங்கப்பா என்கூட ஒழுங்கா முகம் கொடுத்து பேசியே ரெண்டு வருஷம் ஆச்சு.
உனக்கு தெரியுமா நீ என்னோட வயித்துல இருக்கும் போது நான் எவ்வளவு நல்ல பொசிஷன்ல இருந்தேன்னு, உங்க அப்பாவை விட நான் தான் நிறைய சம்பளம் வாங்குனேன்,
நீ பொறந்ததுக்கு அப்புறம் உன்னைய பாத்துக்க ஆள் இல்லன்னு தான் நான் வேலைக்கு போறதையே விட்டேன். உன்னைய கிரச்ல விட்டுட்டு நான் வேலைக்கு போறதுக்கு எனக்கு எவ்வளவு நேரம் ஆயிருக்கும் நீயே சொல்லு,
அப்புறம் உன்னோட தங்கச்சி பொறந்தா, அப்படியே என்னோட வாழ்க்கை உங்களை பாத்துக்கிறதுலயே முடிஞ்சு போச்சு, நம்ம பொண்ணும் நம்மள மாதிரி ஆயிடக்கூடாதுன்னு தான் அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் வேணான்னு சொன்னேன்,
நான் நெனச்ச மாதிரியே நேத்ராவும் ப்ரெக்னென்ட் ஆயிட்டா, நான் செஞ்சது தப்பு தான் பெரிய தப்பு, அவங்க வாழ்க்கையில நான் தலையிட்டிருக்கக் கூடாது.
நான் சத்தியமா என் பொண்ணோட நல்லதுக்கு தான் செஞ்சேன், என்னோட மனசுல வேற தப்பான எண்ணம் எதுவும் இல்லை” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதவாறு சுவற்றில் சாய்ந்து அங்கேயே அமர்ந்தார்.
அவள் அறையினுள் இருந்து ரேணுகா பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த நேத்ரா கதவைத் திறந்து கொண்டு தாயிடம் ஓடினாள்.
“அம்மா எனக்குத் தெரியும் மா, உன்னை பத்தி எனக்குத் தெரியாதா, எம்மேலையும் தான் தப்பு இருக்கு, சொல்லப் போனா என் மேல மட்டும் தான் தப்பு, நான் தான் எனக்கு எது வேணும்னு முடிவு பண்ணியிருக்கணும்,
கல்யாண விஷயத்துல அவ்வளவு பிடிவாதமா இருந்த எனக்கு, குழந்தை விஷயத்துல இருக்கத் தெரியலை, உன்னோட குழந்தைங்க மேல நீ பாசமா இருந்த அளவுக்கு நான் என்னோட குழந்தை மேல பாசமா இல்லாம போயிட்டேன் மா” என்றவள் ரேணுகாவை கட்டிப் பிடித்து அழவும்,
அங்கு இருவரது பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்த நந்தன் ரேணுகாவின் அருகில் வந்து “அம்மா நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு தான் அழுது புரண்டாலும் போன உயிர் திரும்ப வரப்போறதில்லை,
அதுனால நாளைக்கு நடக்கப்போற நிச்சயத்துல உங்க பொண்ணு மச்சான் கூட சேரணுன்னு வேண்டிக்கோங்க” என்றவன் அங்கிருந்து அவன் அறைக்கு நகர்ந்தான்.
நந்தன் சென்றவுடன் நேத்ராவிடம் “தங்கம் என்னைய மன்னிச்சிரு டா, நீ நல்லா இருக்கனுன்னு ஆசைப்பட்ட நானே உன்னோட வாழ்க்கையை கெடுத்திட்டேன்” என்று நேத்ராவிடம் மன்னிப்பு வேண்டிய ரேணுகாவைத் தேற்றியவள், ரேணுகாவை உறங்குமாறு கூறிவிட்டு எழுந்து சென்றாள்.
பிள்ளைகள் இருவரும் சென்றவுடன் அங்கேயே அமர்ந்திருந்த ரேணுகாவிடம் சென்ற ஈஸ்வரமூர்த்தி “ரேணுகா வா…” என்று அழைத்தார். இத்தனை நாட்கள் பேசாத கணவர் பேசியதில் அகமகிழ்ந்தவர் ஈஸ்வரமூர்த்தியுடன் எழுந்து நடந்தார்.
கார்த்திகேயன்-நந்தினி மற்றும் சக்கரவர்த்தியிடம் பேசிவிட்டு நேராக அலுவலகம் புறப்பட்டான் வினோத், அங்கே நளனின் அறையை எட்டிப் பார்த்தவன் அது காலியாக இருக்கவும்,
“இன்னும் இவன் ஆபீஸ் வரலையா, குடிகாரன்” என்று புலம்பியவன் அவன் அறைக்குச் சென்றான்.
வனிதா அன்று விடுப்பு எடுத்திருக்க மதிய உணவைத் தனிமையில் உண்டவள், “ஈவ்னிங் அம்மு கிட்ட வேற பெர்மிஸ்ஸன் கேக்கணும், பயமா இருக்கே கண்டிப்பா வினோத் அண்ணாவை கூட்டீட்டு தான் போகணும், கொஞ்சம் அழுத்திக் கேட்டாக் கூட நானே உண்மையை உளரீடுவேன்” என்ற முடிவுக்கு வந்தவள், நளனைப் பார்க்கப் போகும் நேரத்திற்க்காகக் காத்திருந்தாள்.
நளனைப் பார்க்கப் போவதற்கு முன் வினோத்திடம் போன் செய்த நேத்ரா, “அண்ணா நான் அவங்க ரூமுக்கு போறேன், நீங்க தானே நேத்து பேசும்போது வரேன்னு சொன்னீங்க, ப்ளீஸ் நீங்களும் வாங்கண்ணா” என்றாள் கெஞ்சுவது போல்.
நேத்ரா எண்ணைத் திரையில் பார்த்தவுடன் அழைப்பை ஏற்று செவிக்குக் கொடுத்தவன், “சரிம்மா, அவன் வந்துட்டானா? நான் நளனோட ரூமுள்ள போயி சரியா ரெண்டு நிமிஷத்துல நீயும் உள்ள வந்திடு” என்றவன் அவன் அறையை விட்டு நளன் அறைக்கு விரைந்தான்.
நளனின் அறைக்குள் நுழையும் முன் நேத்ராவை பார்த்து கண் ஜாடை காட்டியவன் நளன் அறைக்குள் புகுந்தான்.
அங்கு நளனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தான் நேத்ரா வந்து நளனிடம் பர்மிஷசன் கேட்டதும் அதற்க்கு அவன் கேட்ட கேள்விகளும், அதற்க்கு வினோத் கூறிய பதிலும்.
நேத்ராவை அனுப்பிவிட்டு வினோத்தும் சில நொடிகளில் கிளம்பி நேத்ராவின் வீட்டை அடைந்தான்.
அங்கு நேத்ராவின் வீட்டில்,
“என்ன எல்லாரும் இப்படி உக்காந்திருக்கீங்க? வனிதாவை எங்க? அவளோட அம்மா தங்கச்சி யாரையும் காணோம்? ஒரு நிச்சயம் நடக்கப் போற வீடு மாதிரியா இருக்கு” என்று சோஃபாவில் சாவகாசமாக அமர்ந்திருந்த நேத்ரா, ரேணுகா மற்றும் ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தான் வினோத்.
உள்ளிருந்து வெளிவந்த நந்தன், “நீங்களே கேளுங்க வினோத், நானும் சொல்லி சொல்லி அழுத்துப் போனேன்” என்றான்.
அனைவர் முகத்தையும் பார்த்தவன் ஈஸ்வரமூர்த்தியிடம் “அங்கிள், நளன் ஒன்னும் ரொம்ப கெட்டவன் இல்லை, அவன் மட்டும் அப்படி கெட்டவனா இருந்திருந்தா ஏன் இன்னமும் நேத்ராவுக்கு விவாகரத்து கொடுக்காம இருக்கணும்?
அவனோட மனசுல நேத்ரா மட்டும் தான் இருக்காங்க, அவன் கூடவே இருக்குற எனக்கு கண்டிப்பா தெரியும், இன்னைக்கு உங்களுக்கும் தெரியும்.
அதுக்கு உங்களோட ஒத்துழைப்பு எனக்கு வேணும், நீங்க எல்லோரும், நல்லது நடக்கும்னு நம்புனா தானே நடக்கும்” என்றான் பொறுமையாக.
வினோத் அவ்வாறு பேசியவுடன், “அய்யோ தம்பி மாப்பிள்ளையை பத்தி எங்களுக்கு தெரியாதா, என்ன எங்க பொண்ணும் அவளோட அம்மாவும் செஞ்சு வச்சிருக்கிற காரியம் அப்படி, அது தான் கொஞ்சம் நெருடலா இருக்கு,
நீங்க சொல்றதும் சரிதான், கண்டிப்பா மாப்பிள்ளை நேத்ராவை ஏத்துக்குவாரு, நாங்க நம்புறோம்” என்றவர் ரேணுகா நீ வேலைய கவனி, நேத்ரா நீ வனிதாவுக்கு பேசு, என்று கட்டளை பிறப்பித்தபடியே எழுந்தார்.
பின்பு வினோத், கார்த்திகேயன்-நந்தினி மற்றும் சக்கரவர்த்திக்கு அழைத்துப் பேசி அவர்கள் வந்து கொண்டிருப்பதை உறுதி செய்தான்.
வினோத்தோ “நந்தன் கூட்டம் கம்மியா இருக்க மாதிரி இருக்கு, வீட்டுக்கு வெளிய நெறைய கார், அப்புறம் வீட்டுக்கு முன்னாடி நெறைய செருப்பு இதெல்லாம் இருந்தா தான் நளன் வரும்போது ரொம்ப எபக்ட்டிவா இருக்கும். அதுனால நான் அருணுக்கு கால் பண்ணி நம்ம ஆபீஸ் ஸ்டாப் எல்லாரையும் வரச்சொல்றேன்” என்றவன் அவ்வாறே செய்தான்.
வனிதாவும் நேத்ராவும் நேத்ராவின் அறையில் அலங்காரம் செய்து கொண்டிருக்க, அங்கே ரேணுகாவும் வனிதாவின் தாய் கன்னிகா, நிவேதா மற்றும் சில பெண்களும் இருந்தனர்.
உள்ளே வந்த வினோத்தின் பார்வை மெரூன் விண்ணப் புடவையில் மிளிர்ந்த வனிதாவைக் கூறு போட, சுற்றம் உணர்ந்து தன்னை வேறு எங்கோ இட்டுச் சென்ற மனதை நடப்புக்கு கொண்டு வந்தான் வினோத்.
வினோத்தும் நந்தனும் அறைக்குள் வந்தவுடன் மற்ற பெண்கள் வெளியே சென்றுவிட, “ஹேய் சுவீட் ஹார்ட், உன்னை பாத்தா நளனுக்கு சந்தேகம் வராதா? கொஞ்சம் கம்மியா மேக் அப் போடக் கூடாதா? பாத்தாலே நீ தான் பொண்ணு மாதிரி தெரியுற” என்றான்.
“நான் ஒண்ணும் அதிகமெல்லாம் மேக் அப் போடல” என்று முகத்தை திரும்பியவள் “நீங்க வேணா பாருங்க நளன் அண்ணாக்கு நான் எல்லாம் கண்ணுக்கே தெரிய மாட்டேன்” என்றாள் வனிதா.
அடுத்த சில மணி நேரங்களில் வீடே களைகட்ட ஈஸ்வரமூர்த்தி கார்திகேயனிடம் பேசிக் கொண்டிருந்தார், “ரொம்ப சந்தோசம் சம்மந்தி, பிரச்சனை நடந்தப்போ நானும் நந்தனும் உங்கள வந்து பாத்தப்போ நீங்க கொஞ்ச நாள் இப்படியே விட சொன்னீங்க, அதுக்கான அர்த்தம் அப்போ எனக்கு புரியலை,
ஆனா இப்போ அவங்க ரெண்டு பேரும் மட்டும் இல்லை, ரேணுகாவும் அவளோட தப்பை உணர்ந்துட்டா, எதுக்குமே ஒரு இடைவெளி தேவைப்படுதில்லை” என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.
கார்த்திகேயனும் “ஆமா சம்மந்தி என்னோட பையன் நளனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்” என்றவருக்கு ஒரே பெருமை.
அனைவரும் அவர்கள் வேளைகளில் மூழ்கியபடி இருக்க, நளன் ஆத்திரமாக வீட்டினுள் வருவதை, பார்த்தாலும் யாரும் நளனைக் கண்டுகொள்ள வில்லை.
வனிதா சொன்னது போல் நளனின் கண்களில் நேத்ரா மட்டுமே விழுந்தாள் சுற்றி இருப்பவர்களைத் தவிர்த்து.
நளன் நேத்ராவின் அறையில் சென்று கதவடைத்தவுடன் வினோத், வனிதா, நந்தன் மூவரும் அறை வாசலில் காத்திருந்தனர். அறை வாயிலில் படபடப்புடன் காத்திருந்தவர்கள் சில நிமிடங்கள் கழித்து கதவைத் தட்டினர்.
“இது தான் டா நடந்துச்சு, உன்னைய சிஸ்டர் கிட்ட பேசவைக்க நாங்க எவ்வளவு பாடுபட வேண்டியதிருக்குன்னு பாரு, எங்களை எல்லாம் மறந்திடாத டா” என்று அவனையும் வனிதாவையும் கைகாட்டினான் வினோத்.
“யூ ராஸ்கல்…” என்று வினோத்திற்கு மேலும் சில அடிகளைக் கொடுத்தவன், பின்பு அனைவருடனும் கலந்து வினோத்-வனிதா நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தான்.
நேத்ராவின் கைபிணைத்து வந்த நளனைக் கண்டு அவர்களைப் பெற்றவர்கள் பூரித்தனர். ஈஸ்வரமூர்த்தி தன் இருகை கூப்பி கண்களில் நிறைந்த கண்ணீருடன் நளனுக்கு நன்றி தெரிவிக்க, ரேணுகாவோ வாய்மொழியாகவே மன்னிப்பையும் நன்றியையும் உரைத்தார்.
வினோத்-வனிதாவின் திருமணம் அடுத்து வரும் முகூர்த்தத்தில் நிச்சயிக்கப் பட, அருகில் பூரிப்புடன் நின்றிருந்த வனிதாவின் இடுப்பில் கைவைத்துக் கிள்ளினான் வினோத்.
-Kamali Maduraiveean
Link👉வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே
Link👉மகரந்தம் தாங்கும் மலரவள்(முழுநாவல்)
Link 👉Amazon Kindle
Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக👇👇👇
https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ