காஞ்சனாவும் ஆதிரையும் வீட்டிற்கு வர.. இளங்கோவும் ராஜாத்தியும் இவர்களுக்காக காத்திருந்தனர். ‘வா.. வா காஞ்சனா..” என ராஜாத்தி உற்சாகத்தோடு வரவேற்று தண்ணீர் கொடுத்து.. ‘என்ன நடந்தது.?” என்றார் ஆவலாக.
காஞ்சனா நடந்ததை விளக்கவும்.. ஆனந்த கண்ணீர் வடித்தார் ராஜாத்தி. இளங்கோ.. ‘நிச்சயம் எதாவது செய்வார்ன்னு நினைச்சேன்.. ஆனா இவ்வளோ பெரிய சொத்தும் நகையும் எதிர்பார்க்கவே இல்ல அண்ணி..” என சந்தோசித்தான் இளங்கோ.
ராஜாத்தி.. ‘ஆதிம்மாக்கு ஏன் முகம் வாடியிருக்கு.?” என்றார் கனிவாக.
‘கணேசண்ணா பையன் ரூபனும் வந்திருந்தான்..” என ரூபன் ஆதிரையை விரும்புவது குறித்து பேசியதை சொல்லி.. ‘அவங்க பேச்சுல ஆதிரைக்கு கோபம் வந்துடுச்சி.. இவங்க தயவால கிடைக்கிற சொத்தே வேணாம்னு ஒரே அழுகை..
இனி நாங்க கல்யாண பேச்சு பேசமாட்டோம்னு மாரிப்பன் அப்பா சொன்னதால அமைதியானா.. சொத்தெல்லாம் பிரிச்சதுக்கப்புறம் அந்த அரவிந்தன் வந்தான்..” என அவன் பேசியதையும் அதற்கு அதிரூபன் செயலையும் விளக்கி.. ‘நம்மளை இரண்டாந்தாரமா கேட்டவங்களே உதவி செய்துட்டாங்கன்னு புலம்பி.. நம்ம அப்பாவும் அண்ணனும் இருந்திருந்தா இப்படி கண்டவங்களும் பேசுவாங்களான்னு பஸ்சுல அழுதுட்டே வந்தா..” என்றார் தானும் வருத்தத்தோடு.
இளங்கோ.. ‘உங்கப்பா உங்களுக்கு சொத்து கொடுக்கிறார்.. அங்க நாங்க வந்தா நல்லாயிருக்காதுன்னுதான் நான் வரலண்ணி.. இப்படியாகும்னு தெரிஞ்சிருந்தா நானும் வந்திருப்பேன்.. அந்த அரவிந்தனுக்கு இன்னும் நாலு கொடுத்திருக்கலாம்..” என மருகி..
‘ஆதிம்மா.. உன் தாத்தா அவங்க தாத்தாக்கு செய்த நன்றி கடனுக்காகதான்னு அந்த பையனே சொல்லிட்டான்.. இனி எதுவும் தொந்தரவு செய்ய மாட்டான்னு நினைக்கிறேன்.. அப்படியேன்னாலும் நாங்க எதுக்கிருக்கோம்.? என் ஆதிம்மாக்கு பிடிக்காததை செய்திடுவோமா.? இல்ல யாரையும் செய்யத்தான் விட்ருவனா.?” என பாசமாக ஆதிரையின் கேசம் வருடினார்.
இளங்கோவின் பாசத்தில் கரைந்தவள் மீண்டும் கண்ணீர் சிந்தினாள்.. ‘ப்ச்.. ஆதிம்மா.. எதுக்கு இத்தனை அழுகை.?” என கடிய..
‘அப்பா இருந்திருந்தா இப்படி ஆளாளுக்கு என்னை இரண்டாந்தாராமா கேட்பாங்களான்னு ரொம்ப வேதனையாயிருக்கு சித்தப்பா..” என்றாள் கண்ணீரோடே.
‘அப்பா இல்லனா என்ன.? நான் உன் அப்பா இல்லையா.? உன்னை அப்படி விட்ருவனா.? கணேசன் மட்டும்தான கேட்டார்.? என்னவோ ஆளாளுக்குன்ற.? அந்த அதிரூபனுக்கு குழந்தையிருக்கிறது தெரிஞ்சிருந்தா உன்கிட்ட கல்யாணத்துக்கு பேசியிருக்கவே மாட்டேன்.. உண்மை தெரிஞ்சதும் அண்ணி பொண்ணு கொடுக்க மாட்டன்னு சொல்லிட்டாங்கள்ல.?” என்றார் சிறு கோபத்தோடு.
தான்தான் காஞ்சனாவின் மகள் என தெரியாத நிலையில் அதிரூபன் தன்னிடம் காதல் சொன்னதை நினைத்து மனதினில் குமைந்தபடி அமைதியாகவே இருந்தாள்.
காஞ்சனாவிற்கு அழைப்பு வரவே.. கணேசண்ணா ஃபோன் பண்றாங்க.. என யோசித்தவாறே அழைப்பை ஏற்று அமைதியாகவே இருந்தார். ‘காஞ்சனா.. வீட்டுக்கு பத்திரமா போய்ட்டிங்களா.?” என்றார் அக்கறையாக.
‘ம் வந்துட்டேண்ணா..” என்றதும்.. ‘சரிம்மா..” என்றார்.
‘சரிண்ணா வச்சிடறேன்..” என இணைப்பை துண்டித்தார் காஞ்சனா.
தனது திருமணத்திற்கு பிறகு அன்னைக்கு வருமானத்திற்கு என்ன செய்வார்கள் என தவித்த மனம்தான்.. ஆனால் இன்று நினைத்து பார்த்திராத சொத்தும் அதன் மூலம் வருமானமும் வரும் எனும்போதும் ஏனோ முழுதாய் சந்தோசம் கொள்ள முடியவில்லை ஆதிரையால்.
ம்.. இன்றும் மாதவிக்கு தெரியாமல்தான் ராமசாமி அன்னைக்கு சொத்து சேர்த்திருக்கிறார்.. அதையும் சுயநினைவோடிருக்கும் போது கொடுக்கும் தைரியமும் இல்லாமல் வக்கில் மூலம் கொடுத்திருக்கிறார்.. தந்தை இருந்திருந்தால் நிச்சயம் இப்படி சொத்தை வாங்கியிருக்கவே மாட்டார் என நினைக்க அழுகைதான் வந்தது ஆதிரைக்கு.
இதில் அதிரூபன் விருப்பம் சொன்னது சொன்னது நினைவில் வர.. நம்மிடமே இத்தனை காதலாய் சொன்னனே.. அவனின் முதல் மனைவியிடம் எவ்வளவு காதலை காண்பித்திருப்பான்..
ஆக.. நாம் அவனிற்கு மற்றுமொரு பெண்.. அதாவது நம்ம அம்மாவோட அப்பா பொண்டாட்டி மாதவியைப் போல என நினைக்க மனம் ஆறவேயில்லை.
இதோடு அதிரூபனை தன்னோடு இணைத்து பேசிய அரவிந்தன் மீது அத்தனை கோபம் வந்ததுதான்.. ஆனாலும் அதிரூபன் தனக்காக அவனிடம் சண்டை போட்டதும் பிடிக்கவில்லை.. என்னை என்னவோ சொல்லிட்டுபோறான்.? இவனுக்கென்ன வந்தது.? இப்படி அவனை அடிச்சா மட்டும் நான் மயங்கிடுவனா.? என நினைத்தாள் கோபமாக.
‘ஆதிம்மா.. இந்தா..” என டீயை நீட்டினார் காஞ்சனா.
‘ஆமாம்மா.. தலைவேதனையா இருக்கு.. டீ குடிச்சா நல்லாயிருக்கும்..” என வாங்கியவள் பருகிக்கொண்டே.. பேக்கரிக்கு வேற லீவ் சொல்லிட்டோம் என நினைத்தவள்.. சரி பரவால்ல போனவேலை முடிஞ்சது, வரவான்னு கேட்டு பார்ப்போம் என மாணிக்கத்திற்கு அழைத்தாள்.
தன் அம்மாவின் அப்பா சொத்து பிரச்சனைக்காக அழைத்திருக்கிறார் என சொல்லியே விடுமுறை கேட்டதால்.. மாணிக்கம்.. ம் வறுமையை குறையாய் நினைக்காமல் உழைத்து சாப்பிடும் நிமிர்வு கொண்ட பெண்.. இப்பெண்ணின் தாத்தா இனியாவது எதேனும் நல்லது செய்தால் மகிழ்ச்சி என நினைத்து சந்தோசமாகவே விடுமுறையளித்தார்.
ஆனால் தற்போது ஆதிரை வேலைக்கு வர கேட்டதும்.. ‘என்னம்மா எதாவது பிரச்சனையா.? உன் தாத்தா எதாவது கொடுத்தாரா.? இல்ல சும்மா கையெழுத்து போட போனிங்களா.?” என்றார் அக்கறையாக.
‘இல்லைங்க சார்.. வேலை முடிஞ்சி வந்துட்டோம்.. மணி இப்போ இரண்டுதான் ஆகுது.. பேக்கரிக்கு வரவான்னு கேட்க ஃபோன் செய்தேன் சார்..” என்றாள்.
ஆதிரையின் குரலில் சொத்து கிடைக்கவில்லை என்ற சோகமும் இல்லை.. கிடைத்ததிற்கான சந்தோசமும் இல்லாமல் போகவே.. ஆதிரையின் குணம் தெரிந்து ஏதேனும் இளப்பமாய் பேசிவிட்டார்களா.? இந்த பெண்ணும் ரோசமாக வந்துவிட்டாளா என யோசித்திருக்க.. ‘சார் வரட்டுங்களா.?” என்றாள் மீண்டும்.
சரி எதுவும் ஃபோனில் வேணாம்.. நாளை நேரில் வந்ததும் தெரிந்து கொள்ளலாம் என.. ‘இன்னைக்கு நான் பார்த்துக்கிறேன்.. நீ ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வந்தா போதும்..” என இணைப்பை துண்டித்திருந்தார்.
‘ஏய் பேக்கரிக்கு எதுக்கு ஃபோன் செய்த.?அதான் லீவ் சொல்லியாச்சில்ல.? இப்ப கிளம்பப் போறியா.? வர சொல்லிட்டாரா.? இன்னும் மதிய சாப்பாடே சாப்பிடல..” என பரிதவித்தர் காஞ்சனா.
‘அங்க என் வேலையை சார் செய்துட்டிருப்பார்.. அதான் வரவான்னு ஃபோன் செய்தேன்.. வேணாம்னுட்டார்மா..” என்றாள் சோர்வாக.
காஞ்சனா.. ‘என்னாச்சு ஆதி.? எதுக்கு இப்படி சோகமாயிருக்க.? உங்கப்பா இல்லன்னா என்ன.? நான் உயிரோடதான இருக்கேன்.? உன் மனசுக்கு பிடிகாத வாழ்க்கையை நான் அமைச்சிக் கொடுப்பேனா.?” என்றார் ஆற்றாமையாக.
‘என் அப்பா உயிரோட இருந்திருந்தா இப்படி சொத்தை வாங்கியிருப்பாரா.? சொத்தை வாங்க போகவும்தான அவன் எனக்காக சண்டை போடறமாதிரி ஆனது.?” என்றாள் ஆற்றாமையாக.
‘ஓ.. அதுதான் பிரச்சனையா.? இப்பவும் ஒன்னுமில்ல.. வா போய் எழுதி கொடுத்துட்டு வந்திடலாம்..” என வெளியே வந்து செருப்பை போட்டார்.
‘என்ன காஞ்சனா இது.? உள்ள வா.. அவதான் புரியாம பேசுறான்னா நீயும் மல்லுக்கு நிக்கிற.?” என கையைப் பிடித்து வம்படியாய் வீட்டினுள் இழுத்தார் ராஜாத்தி.
‘விடுங்கண்ணி..” என வெடித்தவருக்கு கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க.. ‘என்ன சொல்லிட்டா பார்த்திங்களாண்ணி.? இவங்கப்பன் இருந்திருந்தா சொத்தை வாங்கியிருக்க மாட்டாராம்.. அப்போ நான் மானங்கெட்டவ.. சொத்துக்கு சோடைபோய் ஆறுமுகம் பெத்த புள்ளைக்கு இந்த ராமசாமி புள்ள அசிங்கத்தை தேடி தந்துட்டேன்.. அப்படித்தான.?” என்றார் கோபமாக.
‘அச்சோ அம்மா.. சத்தியமா நான் அப்படி நினைக்கல..” என பதறி வெளியே வந்தாள் ஆதிரை.
‘கிளம்பு போலாம்.” என்றார் முடிவாக.
‘அம்மா.. நான் உன்னை அப்படி நினைப்பனா.? சொத்து வாங்க போகவும்தான் அந்த அரவிந்தன் என்னை தப்பா பார்த்தான்.. உங்க கணேசண்ணா மகன் நமக்காக சண்டை போட்டாங்க.. அதை நினைச்சிதான்மா சொன்னேன்..” என்றாள் தவிப்பாக.
ஆதிரை பேசியது இளங்கோவிற்கும் கொஞ்சம் அதிகப்படியாய் தோன்ற.. அண்ணியே பிரச்சனைக்கு முடிவு கொண்டு வரட்டும் என அமைதியாய் இருந்தார்.
‘ஆமாம்.. நீ சொல்றது சரிதான்.. எல்லாம் சொத்து வாங்க போகவும்தான.? கிளம்பு போலாம்..” என்றார் மீண்டும்.
‘ம்மா.. ப்ளீஸ் சாரிம்மா.. உள்ள வா..” என்றாள் கலக்கமாக.
‘சொத்து எனக்குதான கொடுத்தாங்க.? நீ வரலன்னா என்ன.? நான் போய் எழுதி கொடுத்துட்டு வரேன்..” என நான்கே எட்டில் வேலியை தாண்டியிருந்தார் காஞ்சனா.
வேகமாய் ஓடி அன்னையின் கைப்பிடித்து.. ‘நம்மளை தாழ்வா நினைச்சி பொண்ணு கேட்டவங்களே நமக்கு உதவி செய்யிறமாதிரி ஆகிடுச்சேன்ற வருத்தத்தில தெரியாம சொல்லிட்டேன்.. சாரிம்மா. உள்ள வாம்மா.. ப்ளீஸ்..” என்றாள் கண்ணீரோடு மன்றாடலாய்.
மனம் சற்று தளர்ந்தாலும் அமைதியாகவே நின்றிருந்தார் காஞ்சனா. ‘சித்தப்பா.. அம்மாவ கூப்பிடுங்க..” என்றாள் கெஞ்சலாக.
‘அண்ணி.. உள்ள வாங்க..” என தற்போதுதான் இளங்கோ வாயை திறந்தார்.
அன்னை வேதனையை தாளமுடியாமல்.. ‘ம்மா.. தெரியாம பேசிட்டேன்.. உன் பொண்ணை மன்னிக்க மாட்டியா.? நான் பாவம்ல.? வாம்மா..” என்ற கெஞ்சலோடு ஆதிரை கைப்பிடித்து அழைத்து வர.. அனைத்து அன்னைகளின் இயல்போடு காஞ்சனாவும் மனமிறங்கி மகளோடு வந்தார்.
காஞ்சனாவும் இளங்கோவும் அமைதியாய் இருக்க.. கால் மணிநேரமாய் ராஜாத்தி அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார்.. அச்சோ… இந்த அத்த காதுல ரத்தம் வரும் வரை விடாது போலயே என நினைத்து.. ‘ம்மா.. பசிக்குது..” என்றாள் ஆதிரை.
மகளை முறைத்தவாறே உள்ளே சென்று சாப்பாடு எடுத்து வரவும்.. ‘ஆ.. ஊட்டி..” என்றாள் கண்ணீர் சிந்திய சிரிப்போடு.
‘ஊட்டியும் இல்ல.. கொடைக்கானலும் இல்ல.. நீயே சாப்பிடு..” என முறுக்கியவர்.. ‘இளங்கோ.. இப்ப கிடைச்ச பணம் சொத்து பத்தி யோசிக்காம, நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி நல்ல பையனா பாரு.. முதல்ல இவளுக்கு கல்யாணத்தை முடிக்கனும்..” என்றார்.
ஷப்ப்பா… அம்மாக்கு என்மேல உள்ள கோபம் போய்டுச்சி என நிம்மதியடைந்தவள்.. ‘ம்.. பாருங்க.. பாருங்க.. ஆனா இங்க நம்மூர்லயே பாருங்க.. வெளியூர் மாப்பிள்ளைன்னா கண்டிப்பா எதாவது சொல்லி விரட்டிவிட்ருவேன்..” என்றாள் சலுகையாக.
அன்றே வீட்டோடு மாப்பிள்ளை இருந்தால் எனக்கு சரிவராது.. பிடிக்காது.. என காஞ்சனா சொன்னதால் இன்று கவனமாக அதை தவிர்த்து உள்ளுரில் பார்க்க சொன்னாள்.
உள்ளுரில் எந்த மாப்பிள்ளை இருக்காங்க.? அக்கம் பக்கம் ஊர்ல பார்ப்போம்.. பின்னாடி சொல்லி புரிய வச்சிப்போம் என நினைத்தும்.. கல்யாணத்துக்கு சம்மதிச்சதுமில்லாம ஒருவழியா இந்த வீட்டோட மாப்பிள்ளை எண்ணத்தை விட்டுட்டா என்றும் நிம்மதிகொண்டார் காஞ்சனா.
— —– —— ——–
‘என்னங்க.. இவ்வளோ சந்தோசப்படுற அளவுக்கு அங்க என்னதான் நடந்தது.? என ஆர்வத்தோடு கனகா கேட்க.. ‘எல்லாம் வந்து சொல்றேன்.. நீ எதாவது ஸ்வீட் செய்..” என என்றிருந்தார் கணேசன்.
அனைவரும் வீடு வர.. அவர்களுக்கு தண்ணீர் கொடுத்த கனகா.. ‘அடுப்பு திண்டுல நிக்க வைக்கனும்ன்றா.. உருண்டையை அவளே எண்ணைல போடனும்ன்றா.. நான் என்னெல்லாம் செய்யிறேனோ அதெல்லாமும் செய்யனும்னு இவ அட்டகாசம் தாங்க முடியல.. எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு அவளோட விளையாடவும் டையர்ட் ஆகி கொஞ்சம் முன்னதான் தூங்கினா..
இனிதான் ஜாமுன் செய்யனும்.. விசயம் என்னன்னு சொல்லுங்க.. ஜாமுனே போதுமா.? இல்ல வேற எதுவும் செய்யலாமான்னு முடிவு செய்யிறேன்.” என்றார் ஆவலாக.
‘இரண்டு சந்தோசமான விசயம் கனகா.. இரண்டுமே நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதது..” என ஆர்ப்பரித்தார் கணேசன்.