‘ப்பா..” என குழந்தை அழைக்கவும்.. ‘போங்க..” என சுவற்றுப்புறம் திரும்பி நின்றாள்.
ஆதிரையை தன்புறம் திருப்ப முயல.. விறைப்பாக நின்றாள். ‘ப்ச் ஆதி.. நீ யோசிக்கிற அளவுக்கு ஒன்னுமில்லன்னு சொல்றேன்ல.? எதுக்கு இப்படி வருத்திக்கிற.?” என வருந்தவும்.. ‘ப்பா.. கேக்கு..” என மீண்டும் அழைத்தாள் குழந்தை.
‘குழந்தை மனசுல என்னை மாதவியா பதிச்சிடாதிங்க.. ப்ளீஸ் போங்க.” என்றாள் கெஞ்சலாக.
‘ஏய்.. என்ன பேச்சு இது.?” என மனைவியை அணைத்துக்கொள்ள.. உதறி விலகியவள் கதவைத் திறந்து.. ‘ப்ளீஸ்.. “ என்றாள் மீண்டும்.
‘ப்பா..” என உள்ளே வந்த குழந்தை தன் தளிர்கையை ரூபனை நோக்கி கேக்கோடு உயர்த்த.. குழந்தையை தூக்கி.. ‘ஆ..” என சொல்ல.. தந்தைக்கு ஊட்டி மகிழ்ந்தவள்.. ‘ப்பா.. பெரிய பட்டுக்கு..” என்கவும் ரூபன் இறக்கி விடவே, உற்சாகத்தோடு வெளியே ஓடினாள்.
தனக்கு எடுத்துக்கொண்டு குழந்தை மீண்டும் வருவாள் என யூகித்த ஆதிரை வெளியே போக.. நினைத்தது போலவே தன் கையில் பிடித்தம்வரை கேக்கை எடுத்து ஆதிரையிடம் வந்த குழந்தை ‘பெரிய பட்டுக்கு..” என உயர்த்தினாள்.
மண்டியிட்டு குழந்தையிடமிருந்த கேக்கை வாங்கியவள் குழந்தைக்கு ஊட்டி பின் தானும் உண்டு கன்னத்தில் முத்தமிட.. சந்தோசத்தில் ‘ஆப்பி பத் டே..” என மழலையில் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் கலகல சிரிப்போடு.
குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பில் சந்தோசமடைந்தவள்.. ‘பட்டுவை போட்டோ எடுக்க சொல்லு அப்பாகிட்ட..” என்றாள் ரகசியமாக.
வெளியே வந்த ரூபனிடம்.. ‘ப்பா.. பட்டுவ போட்டோ.. பெரிய பட்டு ஜொல்லி..” என ஆதிரையைப் போலவே ரகசியம் பேச.. மயங்கிப் போனாள் குழந்தையிடம்.
பெருமையாய் ஆதிரையைப் பார்க்க, அதனை அறியாதவள்போல் அருகிருந்த பலூன் ஒன்றை கழற்றி குழந்தையின் கையில் கொடுத்தாள். பிறகு குழந்தை கேக் வெட்டுவது போலவும்.. குடும்பமாகவும் ஃபோட்டோ எடுத்தான். குழந்தையோடு ஆதிரை நிற்கும்படி ஃபோட்டோ எடுக்க விரும்பிய போதும் ஆதிரையிடம் கேட்க மனமில்லை.
‘பட்டுக்கு டெஸ்.. அப்பா வாங்கி..” என குழந்தை ஆதிரையிடம் சொல்ல.. ‘ம்ம்..” என ஆதிரை தன் புருவம் உயர்த்தி கண்களால் பாராட்ட அதனை படமெடுத்தான்.. பிறகு வீட்டை அலங்கரித்திருக்கும் பலூன்களை பார்த்து குதூகலிப்பது.. ஆதிரையும் குழந்தை சந்தோசத்தில் பங்கெடுப்பதென இப்படியாக நான்கைந்து நிகழ்வுகளை சேமித்தான் தன் மொபைலில்.
ஆதிரைக்கு குழந்தையின் செய்கையையும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.. அதேநேரம் அதிரூபனின் முன்னால் காதலையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. மனம் அழுத்தமாய் உணர.. தலையில் கைவைத்து உள்ளே போக முயல..
‘ஏன் ஆதி தலை வலிக்குதா.?” என அக்கறையாய் கேட்டு ‘ஓ.. இன்னும் டீ குடிக்கலையில்ல..? அதான் ஒரு மாதிரி இருக்கும் போல.. எழுந்ததும் உனக்கு டீ இருக்கனும்னு காஞ்சனா சொன்னுச்சி.. நான் மறந்தே போய்ட்டேன்.. இரு டீ வச்சிட்டு வரேன்..” என கிச்சன் போனார் கனகா.
நான் வைக்கிறேன் என சொல்ல விழைந்த போதும்.. நாம வைக்கிற டீ நமக்கே பிடிக்காது.. இதுல இவங்களுக்கு எப்படி பிடிக்கும்.? அவங்களே வைக்கட்டும் என ஆதிரை அமைதியாக.. மருமகளை கவனித்திருந்த கணேசன்.. ‘என்னடாம்மா யோசனை..? உனக்கு சமையல், வீட்டு வேலைலாம் எதுவும் தெரியாதுனு காஞ்சிமா சொன்னுச்சி.. இதெல்லாம் ஒரு விசயமா..?
புருசனையும் மகனையும் பரிகொடுத்துட்டு காஞ்சனா நொடிஞ்சி நின்ன நேரத்துல நான் இருக்கேன்மான்னு துணிவோட வேலைக்கு போன பாரு.. அதுதாண்டா விசயமே..” என்றார் பெருமையாக.
சிறு பெருமை வந்தமர்ந்தது ஆதிரையின் முகத்தில். அதையும் படமெடுத்தான் அதிரூபன். ப்ச்.. இவங்க எதுக்கு இப்படி ஃபோட்டோ எடுத்துட்டு இருக்காங்க.? என சங்கடமாய் உணர்ந்தாள் ஆதிரை. சங்கடமாய்தான் உணர்ந்தாள். ஆனால் பிடித்திருந்தது.
கனகா டீயுடன் வர.. அனைவரும் எடுத்துக்கொண்டனர். ‘பாட்டி..” என குழந்தை முகம் சுருக்க.. ‘இருடா பட்டு வரேன்..” என குழந்தைக்கென தயாராய் வைத்திருந்த பாலை எடுத்து வர தந்தையின் மடியில் படுத்து ரூபனின் மீசை தாடி என வருடியபடி பட்டு பால் குடித்துக்கொண்டிருக்க.. உங்கப்பா அத்தனை அழகாவா இருக்கான்.? நொடித்தவாறு ரூபனைப் பார்க்க.. குழந்தையின் கேசத்தை நீவியபடி ரூபன் டீ குடித்துக்கொண்டிருந்தான்.
சற்று முன் பட்டுவின் அம்மாவை நினைத்து கலங்குகிறான் என கோபப்பட்டவள்தான்.. ஆனால் தற்போது கோபமாய் பார்ப்பதாய் நினைத்து.. இவன் ஏன் டூப் போடுறான்.? ஹீரோவாவே நடிக்கலாமே.. என டீ குடித்துக்கொண்டு நொடிக்கொரு முறை பார்த்திருந்தவள் சட்டென தலைகுனிந்தாள்.. ம்.. பார்க்காத மாதிரியே இருப்பான்.. ஆனா நாம பார்க்கிறதை கண்டுபிடிச்சிடுவான் என நினைத்தவாறு டீயை குடித்தாள்.
பாலன் ராதா சுதாகரன் மூவரும் வந்தனர். ‘வாங்கண்ணா..” என கனகா வரவேற்க.. ‘கேக் வெட்டியாச்சா.?” என்றார் ஏமாற்றமாக.
‘கேக்கைப் பார்த்ததும் பட்டு ஆசைப்பட்டா.. அதான் வெட்டிட்டோம் பாலா..” என்றார் கணேசன்.
கனகா.. ‘ஏன் ரூபா இப்படி.?” என தவித்து.. ‘அண்ணா உக்காருங்க..” என்றார் கனிவாக.
அதிரூபனின் பேச்சை பாலனால் தாளமுடியவில்லை. சிறு வயதிலிருந்து அத்தை மாமா என எப்படி உயிராய் இருந்தவன்.. தற்போது நம்ம பட்டு என எப்படி வெட்டி பேசுகிறான் என்ற வேதனையில் முகம் சுருங்கியது.
‘ப்ரியா போனதை விட நீ பண்றதைதான் ரூபா எங்களால தாங்க முடியல..” என கண்ணீர் வடித்தார் ராதா.
இன்னும் பத்து நாளில் ப்ரியாவின் முதல் வருட நினைவு நாள் வரயிருக்க.. ஆதிரைக்காக தன் துக்கத்தையெல்லாம் தன்னுள்ளேயே அடக்கியிருந்தவனுக்கு.. தற்போது ப்ரியா போனதை விட என்ற வார்த்தை வேதனையை உண்டாக்க.. அதுவும் ஆதிரை அருகிலிருக்கிறாள் என அறிந்தும் சொன்னது கோபத்தையும் உண்ணடாக்க.. ‘என் பட்டுவோட பிறந்தநாளை கொண்டாட வந்திங்களா.? இல்ல அழ வந்திங்களா.?” என்றான் கடுமையாக.
‘ப்பா..” என பயந்தாள் குழந்தை.
‘இல்லடா..” என குழந்தைக்கு வருடிக்கொடுத்தவன்.. ‘பட்டுக்கு இன்னொரு கேக் வெட்டலாமா.?” என்றான் வரவழைத்த இயல்போடு.
குழந்தை வேணாம் என தலையசைத்தாள். இவர்கள் வந்த பிறகு இதுவரையிருந்த உற்சாகமும் சந்தோசமும் குழந்தை முகத்தில் தற்போது இல்லை.
சுதாகரனும் தன்னை புரிந்துகொள்ளாமல் இருப்பது இன்னும் கோபத்தை உண்டாக்க.. ‘நீங்க எனக்குதான் அத்தை மாமா.. என் பட்டுக்கு நீங்க தூரத்து சொந்தம் கூட கிடையாது.” என்றான் கடுப்பாக.
குழந்தையின் பிறந்தநாளிற்கு வந்தவர்களிடம் ஏன் இத்தனை கோபப்படுறான்.? ஒரு வேளை பட்டுவின் அம்மாவை இவர்கள் நிராகரித்தார்களா.? அதனால்தான் இவர்கள் காதல் பிரிந்ததா.? இவனிற்கு அத்தை மாமா என்கிறான்.. ஆனால் பட்டுவிற்கு தூரத்து சொந்தம் கூட இல்லையென்கிறானே.? ப்ரியா போனதைவிட இவன் செய்யிறது ரொம்ப கஷ்டமா இருக்குன்றாங்களே.. ப்ரியா யார்.? என பலமாய் யோசித்திருந்தாள்.
ஆதிரையின் முக வாட்டத்தில் கணேசனிற்கு பதட்டமானது. எத்தனை சொல்லியிருந்த போதும் மருமகளின் முன்னேயே ப்ரியாவின் பேச்சை எடுப்பவர்களை நினைத்து நொந்து போனார். ம்.. அதிரூபன் இவர்களை கூப்பிடவேணாம் என சொன்னது மிகச்சரிதான் என தாமதமாய் யோசித்தார்.
குழந்தை மடியில் படுத்திருக்க.. ஆதிரையும் அருகிலிருக்க எதுவும் பேசமுடியாத சூழலில் அழுத்தமாய் அமர்ந்திருந்தான் அதிரூபன்.
குழந்தையை காரணம் காட்டி பெண்கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்ற காரணத்திற்காகத்தான் இத்தனை நாள் அதிரூபன் சொன்னதுபோல் நடந்துகொண்டோம்.. தற்போதுதான் திருமணமும் நடந்தாயிற்றே.. இனி எதற்கு ஆதிரையிடம் மறைக்கனும்.?
ப்ரியாவின் பிரிந்த வேதனையை குழந்தையிடமாவது போக்கிக்கொள்ளலாம் என்றால் அதற்கும் தடைவிதிக்கிறான் ரூபன். அதோடு நினைத்த நேரம் தன் அப்பா அண்ணனின் வீட்டிற்கு வரவும் முடியவில்லை.. எல்லாம் போக சித்தி கொடுமை குழந்தையிடம் ஆதிரை இணக்கமாக இருப்பதாய் தெரியவில்லை. இந்த வயதிலிருந்து சித்தி கொடுமை என தன் பேத்திக்கு நடந்திடுமோ என்ற ஆதங்கம் ராதாவிற்கு.
தன் அத்தையின் முகத்திலிருந்தே அவரின் எண்ணவோட்டங்களை அறிந்த அதிரூபனால் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் போகவே.. ‘பட்டு மா.. நீயும் பெரிய பட்டுவும் உள்ள போய் விளையாடுங்க.. அப்பா ஃபோன் பேசிட்டு வரேன்..” என குழந்தையை தூக்கி வந்தவன் ஆதிரையருகே இறக்கிவிட்டு மனைவியை பார்த்தான்.
இருவரிடையேயும் சரியான புரிதல் இல்லாதபோதும் தான் சொன்னால் உள்ளே போவேன் என்ற நம்பிக்கையோடு சொல்லும் கணவனை மற்றவர்முன் அவமதிக்க விரும்பாமல் மறு பேச்சின்றி உள்ளே போன அதிரை.. கணேசன் கனகா மாரியப்பன் அனைவரும் தன்னை தவறாக நினைப்பது இவனுக்கு புரிகிறதா.? என வேதனையடைந்தாள்.
‘ப்பா..” என குழந்தை உள்ளே போக மறுக்க.. ‘அப்பா ஃபோன் பேசினதும் வந்திடறேன்.. அதுவரை பெரிய பட்டுக்கு கதை சொல்லு..” என்றான்.
கட்டிலில் அமர்ந்தவாறு.. ‘எனக்கு கதை தெரியாது..” என பாவம்போல் ஆதிரை சொல்லவும்.. ‘என்கு தெய்யும்..” என உற்சாகத்தோடு ஆதிரையிடம் குழந்தை செல்லவும்.. கதவை அடைத்தவன்.. கோபத்திற்கு காரணமான அத்தையை விடுத்து சுதாகரனை முறைத்தான்.
‘குழந்தையோட பழகமுடியாத ஆதங்கத்துல அம்மா எதோ..” என தயங்கினான் சுதாகரன்.
‘சரி பழகுங்க.. கல்யாணமாகமலே குழந்தையை பெத்துட்டு அந்த அவமானம் தாங்க முடியாமதான் ப்ரியா செத்துட்டான்னு எல்லாருக்கும் தெரியட்டும்.” என்றான் உள்ளடக்கிய கோபத்தோடு.
ராதா அதிர்வோடு விழிவிரிக்க.. ‘கூடவே ப்ரியாவோட என்னை இணைவச்சி பேசுவாங்க.. யார் என்ன பேசினா உங்களுக்கென்ன.? உங்களுக்கு குழந்தையோட பழகனும் அவ்வளவுதான..? பழகுங்க.. என் ப்ரியா எதுக்கு பயந்து செத்தாளோ.. அதுவே ஒரு வருசம் கழிச்சி எல்லாராரும் பேசட்டும்..
எங்க தூய்மையான பாசத்தையும் அன்பையும் நட்பையும் எல்லாரும் கொச்சைப்படுத்தட்டும்..” என்றான் அழுத்தமாக. ம்.. குரல் தீவிரமாக இருந்தாலும் ரூபனின் சிவப்பேறிய கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.
‘ரூபா..” என பாலன் தழுதழுக்க.. ‘ஏன் மாமா என்னை புரிஞ்சிக்க மாட்றிங்க..?” என வேதனையடைந்தவன்.. ‘ஆதிரைக்கு பட்டுவோட எந்த கஷ்டமும் கிடையாது.. ஆனா பட்டு என்னோட குழந்தைன்றதைதான் அவளால தாங்க முடியல.. அந்த ஆதங்கத்தை கூட என்கிட்டதான் காட்றாளே தவிர பட்டுவோட இயல்பாதான் இருக்கா.. ஆதி இந்தளவுக்கு இருக்கிறதே பெரிய விசயம்..” என பெருமையோடு சொல்லி..
கல்யாணமாகி இன்னைக்கோட மூனுநாள்தான் ஆகுது.. அதுக்குள்ள ஆதியைப் பத்தி என்ன தெரிஞ்சதுனு அவளை சந்தேகமா பார்க்கிறிங்க.?” என்றான் கோபத்தோடு.
ராதா.. ‘பிறத்தியார் பொண்ணை ஏத்துக்க எந்த பொண்ணும் தயங்குவாதான.? அந்த பயம்தான்..” என்றார் பாவமாக.
‘யார் எப்படியோ.? என் ஆதிரை அப்படி கிடையாது.. என் பொண்டாட்டியை தப்பான கண்ணோட்டத்துல பார்க்கிறது இதுவே கடைசியா இருக்கட்டும்த்தை..” என்றான் எச்சரிக்கையாக.