ஒரு சிண்ட்ரெல்லா கதை 7
ரவியின் பதட்டமான அக்கறை கலந்த பேச்சைக் கேட்ட செளமிக்கு அவனிடம் அதற்கு மேலே எரிந்து விழுகத் தோன்றவில்லை. அதிலும், அவன் குரலில் தென்பட்ட உண்மையான பதட்டம் கண்டு அவளுக்கு வியப்பே உண்டாயிற்று.
“அட, நாம பிராப்ளம்னு மெசேஜ் பண்ணதுனால பதட்டத்துல கால் பண்ணிட்டான் போலயே! சே, அதுகுள்ள எப்படி திட்டிட்டோம்” என்று தன் மீதே பழியைத் தூக்கித் தானாகப் போட்டுக் கொண்டாள் செளமி. அவளைச் சொல்லியும் குற்றமில்லை. மறுமுனையில் ரவீந்திரனின் பேச்சும், குரலின் குழைவும் அப்படிப் பட்டதாகவே இருந்தது.
அதிலும் எடுத்த மாத்திரத்தில் செளமி எரிச்சலுடன் பேசியது கேட்டவனின் குரல், இன்னமும் தழைந்து போயிற்று. “செளமி, சாரிங்க. கோவப்படாதீங்க. வெரி வெரி சாரிங்க. நீங்க பிராப்ளம்னு சொன்னது மட்டும் தாங்க மனசில பதிஞ்சிச்சு. அதான் என்னவோ ஏதோண்ணு பயந்து போய் கால் பண்ணிட்டேங்க. வெரி சாரி” என்று மன்னிப்பு கேட்டவனின் மேல் அந்த நொடி துளி கோபம் கூட இருக்கவில்லை அவளுக்கு.
மாறாக, அவனை இவள் சமாதானம் செய்யத் துவங்கியிருந்தாள். “நான் தாங்க உங்ககிட்ட சாரி சொல்லணும். நீங்க நல்ல எண்ணத்தில தான் கால் பண்ணியிருக்கீங்க. நான் தான் புரிஞ்சுக்காம அவசரப்பட்டு கத்திட்டேன்.” என்று மனதாற மன்னிப்பு கோரினாள் செளமியா.
“அச்சோ என்னங்க சாரியெல்லாம் சொல்லிகிட்டு. என்கிட்ட தானே கோவிச்சுகிட்டீங்க. நான் எதும் தப்பா நினைச்சுக்கலைங்க. ப்ளீஸ் சாரியெல்லாம் கேட்டு என்னை ரொம்ப அந்நியமா ஃபீல் பண்ண வைக்கறீங்க.” என்று அவன் உரிமை பொங்கக் கூறக் கேட்டவளுக்கு மனதில் இனம் புரியாத சிலிர்ப்பு மேலோங்கியது.
செளமி அமைதியாக பேசாமல் இருக்கக் கண்டவன், “நீங்க இவளோ அன் ஈசியா ஃபீல் பண்ணறீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் அந்த ஃபோட்டோக்கு கமெண்ட்டே போட்டிருக்க மாட்டேங்க. வெரி சாரி. நீங்க சொன்ன உடனே நான் அந்த கமெண்ட்டை டெலீட் பண்ணிட்டேங்க.” என்றவன், செளமியின் மனதில் சற்றே உயர்ந்த இடத்தை பெற்று தன்னை வியாபித்துக் கொண்டிருந்தான்.
“ நீங்க ஒரு ஃப்ரெண்டா தான் கமெண்ட் பண்ணீங்க. அதுக்காக நா தப்பா நினைக்கலைங்க ரவி. நாம காலேஜ் ஃப்ரெண்ட்ஸாவோ, ஸ்கூல் மேட்ஸாவோ இருந்து நீங்க கமெண்ட் பண்ணா அது பிரச்சனையில்லைங்க.”
“புரியுதுங்க செளமி. என்ன இருந்தாலும், நான் உங்களை அலையன்ஸ் பார்த்துட்டு போயிருக்கேன். அதுலையும் நீங்க என்னைப் பிடிக்கலைன்னு வேண்டாம்னு வேற சொல்லிட்டீங்க. அப்படி இருக்கறப்போ நான் கமெண்ட் பண்ணது தப்பா தாங்க தெரியுது.”
“பிடிக்கலைன்னு இல்லைங்க.. மேலே படிக்கற ஆர்வத்தில” என்று செளமி தடுமாறத் துவங்க,
“சும்மா பொய் சொல்லாதீங்க செளமி. என்னைப் பிடிக்கலைன்னு நேரடியா சொல்ல தயங்கிட்டு நீங்க ஏதேதோ காரணம் சொல்லியிருக்கீங்க ப்ரோக்கர்கிட்ட.” என்று நிறைய வருத்தும் தோய்ந்து ஒலித்தது அவன் குரல். அவனது மெல்லிய வார்த்தைகளும், அதில் தோய்ந்திருந்த வருத்தமும், செளமியை வெகுவாக அசைத்துப் பார்த்திருந்தன.
ஒரு பெண்ணின் மனதை உடைக்க, ஆர்ப்பாட்டமான உடையும், அசத்தல் பேச்சும் அவசியமென்று இல்லை. மெல்லிய இறகு போன்ற வார்த்தை வருடல்களும் கூட இரும்புக் கதவுகளைக் கடக்க வல்லது. அதை நன்கு உணர்ந்திருந்த ரவி தன் வார்த்தை வசியத்தால் அவளை வளைக்கத் துவங்கியிருந்தான்.
“ஏதோ ஒரு மனநிலையில நான் கமெண்ட் பண்ணிட்டேன். பண்ணியிருக்கக் கூடாது.” என்று சொல்லிச் சொல்லி செளமியை இன்னமும் தர்ம சங்கடப் படுத்தினான் ரவீந்திரன். அவன் எதிர்பார்த்தது போலவே செளமி அச்சரம் பிசகாமல் நடந்தும் கொண்டாள்.
“நீங்க என்னை வேண்டாம்னு சொல்லிட்டீங்க” என்ற அவனது இலைமறைவான குற்றச்சாட்டை மனதில் எடைபோடத் துவங்கினாள். எதனால் இவனை வேண்டாம் என்றோம் என்றே அவளுக்கு மறந்து போய்விட்டிருந்தது. தன் மனதிற்கு உவப்பாக அந்த நேரம் இருக்கவில்லை என்ற ஒரே நோக்கத்திற்காக, எந்த உருப்படியான காரணங்களும் இன்றி இவனை நிராகரித்தது சரிதான என்ற கேள்வியுடனேயே அவள் கைப்பேசியை அணைத்தாள்.
“அவனை வேண்டாங்கறது ஒரு நியாயமான விஷயம் சொல்லு.” என்று அவளருகே நின்று அன்னை கலாவதி கேட்பது போன்ற பிரமை உண்டானது. நிஜத்தில் யோசித்தால் அவனை தன் மனதிற்கு அந்த நேரம் பிடித்தமில்லை என்ற ஒரு விஷயத்தைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.
“அவங்க பொண்ணு பார்த்துட்டு போய் ரெண்டு மூனு நாள்ல பீரியட்ஸ் ஆகிடுச்சு. சோ, டேட் ஆகறதுக்கு ரெண்டு மூனு நாள் முன்னாடி இருக்கற அந்த இயல்பான எரிச்சலால தான் அவனை வேண்டாம்னு சொல்லிட்டேனா? ஆனா அன்னைக்கு கோவில்ல, அம்மன் அருள் வாக்கு மாதிரி அந்த சின்ன குழந்தை பேசினதை நான் எடுத்துகிட்டது தப்பா?” என்று கேள்வி கேட்டுக் கொண்டாள் செளமி.
இப்போதைக்கு ரவீந்திரன் பற்றி எண்ணிப் பார்க்கையில்,அவன் மீது குறை சொல்லும் அளவிற்கு எதுவுமே தோன்றவில்லை. அழகன், அன்பாகப் பேசுகிறான், நல்ல முறையில் தொழில் நடத்துகிறான், சொந்த வீடு, இவனை வேண்டாம் என ஏன் கூறினேன் என்ற எண்ணம் உண்டாகாமல் இல்லை. குழப்பமான யோசனைகளுடன் அடுத்து வந்த நாட்களைக் கழித்தாள் செளமி.
அடுத்த சில தினங்களும் ரவீந்திரனிடமிருந்து எந்த ஒரு குறுஞ்செய்தியும் வந்திருக்கவில்லை. அவ்வப்போது கைபேசியை எடுத்து, அவன் ஆன்லைனில் இருக்கிறானா என்று நோட்டம் விடுவாள். அவன் ஆன்லைனில் இருக்கிறான் என்று பச்சை வட்டம் காட்டும். ஆனாலும் ஒரு செய்தியும் அவனிடமிருந்து வராது போக, இவளே ஒரு நாள் அவனுக்கு “ஹாய்” என்று செய்தி அனுப்பினாள்.
அவள் செய்தி சென்றடைந்து அதை அவனும் பார்த்துவிட்டான் என்று தெரிந்தது. “மெசேஜ் சீன்(message seen) ன்னு காட்டுது. ஆனா ரிப்ளை பண்ணமாட்டேங்கறான். ஒருவேளை நாம பேசினதில ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டானோ?இனி நம்மகிட்ட பேசமாட்டானோ?” என்று நிறைய நேரம் யோசித்தாள்.
அவன் இனி பேசாமல் போய்விடுவானோ என்ற கவலை ஏக்கமாக மாறியிருந்ததை அவள் உணரவில்லை. “அவன் பேசினால் என்ன? தன்னுடன் இயைந்து பேசவில்லை என்றால் என்ன?”என்று அவளிருந்த மனநிலை முற்றிலுமாக விடைபெற்றுச் சென்றிருந்தது.
அவளது செய்தி சென்றடைந்தும் அவன் மறுமொழி சொல்லாமல் இருப்பது ரொம்பவும் வேதனையைத் தருவித்தது. நொடிக்கொரு தரம், கைப்பேசியை எடுத்து அவன் செய்தி ஏதும் வந்திருக்கிறதா என்று சோதிக்கும் அளவு ஆகிப்போனது.
அடுத்த இரு தினங்கள் வரையிலும் கூட அவனிடமிருந்து எந்த மறுமொழியும் வராது போக, “சரி,இனி சும்மா டிஸ்டர்ப் பண்ண வேணாம். அவனே அவாய்ட் பண்ணறப்போ, நான் திரும்பத் திரும்பப் பேசறது வழியறது மாதிரி இருக்கும். என்னைப் பத்தி என்ன நினைப்பான். அவனா ரிப்ளை பண்ணா பேசலாம். இல்லைன்னா விடு” என்று சொல்லி சமாதானம் அடைந்து கொண்டாள் செளமி.
மனதை ஓரளவு சமாதானம் செய்து விட்டோம் என்ற நம்பிக்கையில் தான் அவள் நடமாடினாள். அன்று இரவு உணவு உண்ணும் வேளையில், “கலா, நம்ம தரகர் அந்த சிவன்குடி ஜாதகம் பத்தி சொன்னாரு. செளமி ஜாதகத்துக்கு நல்ல பொருத்தம் இருக்காம். அடுத்த வெள்ளிக் கிழமை பொண்ணு பார்க்க வரலாமான்னு கேட்கறாங்க. வர சொல்லிடலாம் தான?” என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு, செளமியிடமும் வினவினார்.
“அதுக்குள்ள இன்னொன்னா?” என்று மனதில் நினைத்ததைக் கேட்டே விட்டிருந்தாள் செளமி.
“என்ன அதுக்குள்ள இன்னொன்னா? அவங்க வந்துட்டு போயி ஒரு மாசம் ஆகப் போகுது. நீ தான் வேணாம்னு அனுப்பிட்டியே. எங்க கடமையை நாங்க பார்க்க வேண்டாமா?” என்று சுருக்கென்று பதில் கூறிய கலாவதி, செளமியை முறைத்துவிட்டு,
“எப்பப்பாரு தடங்கலாவே எதாவது சொல்லிட்டு இருக்க வேண்டியது. வாயில ஒரு நல்ல வார்த்தை வருதா?” என்று திட்டியவர், “நீங்க வெள்ளிக்கிழமை வரசொல்லிடுங்க.” என்று கணவரின் கேள்விக்குப் பதிலளித்தார்.
மற்றொரு பெண் பார்க்கும் படலம் என்ற எண்ணம் செளமிக்கு அசவுகரியத்தைக் கொடுத்தது. இருந்திருந்து இப்போது சில நாட்களாக ரவியின் பால் சென்றுவிட்டிருந்த மனதைச் சமாளிக்கும் வழி தெரியாமல் தவிப்பு ஏற்பட்டது அவளுக்கு.
இரவு உணவு முடித்துவிட்டு, சிறிது நேரம் காலாற மாடியில் நடைபயில்வது செளமியின் வழக்கம். வெளிக்காற்றை சுவாசித்துக் கொண்டே கைபேசியில் பாடல் கேட்டபடிக்கு நடந்து கொண்டிருந்தாள். யாரிடமாவது பேசினால் மனதின் பாரம் குறையும் என்ற எண்ணம் ஏற்பட, சிந்துவிற்கு அழைத்துப் பேசினாள்.
ரவி பற்றி தான் அடிக்கடிச் சிந்திப்பதையும், அவன் பேசாதிருக்கும் இந்த நாட்களில் ஒரு நொடி கூட அவனைப் பற்றி எண்ணாமல் இருக்க இயலவில்லை என்பதையும் முழுவதுமாக சிந்துவிடம் கூறாமல், “என்னமோ மாதிரி இருக்குடீ. இப்போ தான் ஒரு பெண் பார்க்கும் படலம் முடிஞ்சது. இன்னும் ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ள இன்னொரு ஊரு,இன்னொரு மாப்பிள்ளை”என்று சடைந்து கொண்டாள்.
சிந்துவிற்கு இரண்டு தமைக்கைகள் உண்டு. அதனால் இந்த பெண்பார்க்கும் படலங்கள் அவள் வீட்டில் அடிக்கடி நடந்தேறும் ஒன்று. அந்த அனுபவத்தில் சிந்து செளமிக்கு ஆறுதல் கூறினாள். “அப்படி தான் டீ இருக்கும். என் சின்னக்கா அடிக்கடி சண்டிய போடுவா இதுக்காக. ஒரு பையனைக் கொண்டு வந்து நிப்பாட்டி, அவன் முன்னால அலங்காரம் பண்ணிகிட்டு சிரிச்சு காபி குடுத்து, அவனை வருங்கால புருஷான இருக்கலாமோன்னு நினைக்கவச்சு, அப்பறம் எதாவது காரணம் சொல்லி, அந்த மாப்பிள்ளை தட்டிப் போயிடுச்சுன்னு சுலபமா சொல்லுவீங்க.”
“ அடுத்த வாரமே வேற புது மாப்பிள்ளையை பொண்ணு பார்க்க கூட்டிட்டு வருவீங்க. முதல்ல வந்தவனை முழுசா அழிச்சுட்டு, இவனை புருஷனா கற்பனை பண்ணிக்கணும். கொஞ்சமாச்சும் மனசளவில எங்களைத் தயார் ஆக விடுங்கன்னு” புலம்புவா. நீ சொல்லறதும் அந்த மாதிரி தான் செளமி. சரியாகிடும். விடு. “என்று ஆறுதலாய் பேசினாள்.
அவனைக் கோவிலில் பார்த்த நிகழ்வை செளமி பகிர்ந்து கொள்ள, இம்முறை சிந்து வெகு ஆர்வமானாள். “நிஜமாவே ஃப்ரெண்ட்ஸ் கூடவந்தானா? இல்லை அதை சாக்கா வச்சு உன்னைப் பார்க்க வந்தானா?” என்று சினிமாத்தனமாக வினவினாள்.
“ஏ, லூசு மாதிரி பேசாத. நான் அந்த நேரத்தில அங்க வருவேன்னு அவனுக்கு எப்படி தெரியும். எதார்த்தமா தான் வந்திருப்பான்.” என்று செளமி சொல்லிய போதும், “எனக்காக வந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.” என்று எண்ணிக் கொண்டாள்.
சிறிது நேரம் சிந்துவிடம் அரட்டை அடித்துவிட்டு, கைப்பேசியை அணைத்தவள், அவள் கைப்பேசி “டிங்”என்ற சத்தத்துடன் குறுஞ்செய்தி வந்திருப்பதாக அறிவித்தது.
ஆவலாக செளமி கைப்பேசியை எடுக்க, ரவீந்திரனிடமிருந்து “ஹாய்” என்று செய்தி வந்திருந்தது.
இவள் பதில் சொல்லலாமா? அல்லது கொஞ்சம் காக்க வைக்கவா?என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, “சாரிங்க. காலையில ஒரு முக்கியமான வேலை. உங்க மெசெஜ்க்கு ரிப்ளை பண்ண முடியலை. சொல்லுங்க என்ன விஷயம்?” என்று செய்தி அடுத்து அனுப்பியிருந்தான்.
அவன் அனுப்பிய செய்தியில் சற்றே ஒரு விலகல் தன்மையும், ஒரு ஒதுக்கமும் தென்பட்டது. குறுஞ்செய்தில் இந்த விதமான எண்ணங்களைக் கடத்த முடியுமா என்றால், அது சாத்தியமே. மகிழ்வான மனநிலையில் இருக்கும் போது, நிறைய ஸ்மைலி பொம்மைகளையும், சற்றே சோகமான மனநிலைக்கு ஒற்றை வார்த்தைகயில் கேட்ட வேள்விக்கு மட்டுமான பதிலையும் நாம் பகிர்ந்திருப்போம்.
அந்த ரீதியில் அளந்து பார்க்கும் போது, “என்ன விஷயம் சொல்லுங்க?” என்று அவன் அனுப்பியது, “ஏதாவது விஷயம் இருக்கிறதா என்னிடம் பேச? இல்லையென்றால் என்னைத் தொந்தரவு செய்யாமல் எட்டியே நில்” என்று ஒதுக்கத்துடன் சொன்னது போலத் தோன்றிவிட செளமி எந்த மறுமொழியும் அனுப்பவில்லை.
நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தாள் செளமியா. இப்போது வரையிலும் இருவருக்குமான சம்பாஷனைகள் எல்லாமே ஃபேஸ்புக் மெசெஞ்சரில் மட்டுமே. இவளது கைப்பேசி எண் அவனிடம் இருக்கவில்லை.
இவள் ஆன்லைனில் இருப்பதையும், எந்த மறுமொழியும் அனுப்பாததையும் கண்டு, “மெசெஞ்சரில் அழைக்கட்டுமா?” என்று அடுத்த செய்தி வந்திருந்தது.
செளமியும் “என்ன காரணம் சொல்லப் போகிறான்?” என்று தெரிந்து கொள்ளும் ஆவலில், “ம்ம்” என்று சொல்லிவிட, அடுத்த நிமிடம், அவளது மெசஞ்சரில் அவனது அழைப்பு வந்தது.
“ஹலோங்க. வெரி சாரி. மத்தியானம் நீங்க மெசேஜ் பண்ணியிருக்கீங்க. பார்த்தேன். ஆனா, ரொம்ப முக்கியமான ஒரு வேலையா, காஞ்சிவரம் வரைக்கும் போயிருந்தேன். அதான் ரிப்ளை பண்ண முடியலை.”
“பரவாயில்லைங்க. சும்மா தான் ஹாய் அனுப்பினேன்.அன்னைக்கு பேசினதுக்கு அப்பறம் நீங்க எதுமே சொல்லலையா அதனால கோபமோ என்னவோன்னு நினைச்சேன்.” என்றாள் செளமி. அவள் பேசுவது அவளுக்கே அபத்தமாகத் தோன்றியது. இவனுக்காக அலைகிறேன் என்று நினைத்துக் கொள்வானோ? எதற்கு அவனுக்கு ஹாய் சொல்லவேண்டும்? என்ன இருக்கிறது அவனுடம் பேச?” என்று இப்போது தோன்றியது. இனித் தானாக அவனுக்கு செய்தி அனுப்பக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
“என்ன முக்கியமான வேலைன்னு கேட்க மாட்டீங்களா செளமி?” என்று அவன் மீண்டுமாய் கேட்க, இவளோ தான் எடுத்திருந்த முடிவை அமலாக்கம் செய்யும் பொருட்டு,
“உங்களுக்கு 100 முக்கியமான வேலைகள் இருக்கும்.இதெல்லாம் எனக்கு சொல்லணுமா என்ன? நான் தான் உங்க வேலை நேரத்தில டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல” என்று பட்டும் படாமல் பதிலளித்தாள்.
அவள் குரலிலிருந்த சோர்வும் ஒதுக்கமும், ரவீந்திரனுக்குப் புரிந்தது. “உங்களுக்கு சொல்லணும்னு அவசியம் இல்லை தான். ஆனா, எனக்கு சொல்லத் தோணுது. அதனால பகிர்ந்துக்கறேன். இன்னைக்கு காஞ்சிவரம் பக்கத்துல ஒரு பொண்ணு பார்க்கப் போயிருந்தோங்க?” என்றான் சின்ன வெட்கத்துடன்.