ஒரு சிண்ட்ரெல்லா கதை 8
பொண்ணு பார்த்துட்டு வந்தோம் என்று ரவி கூறியதில் நிறைய குழம்பிப் போன செளமி, கொஞ்சமும் யோசிக்காமல், “ஓ, யாருக்கு?” என்று கேட்டுவிட்டு, தன் நாவைக் கடித்துக் கொண்டாள் செளமி.
“என்னங்க யாருக்குன்னு கேட்டுட்டீங்க? எனக்குத் தான். “ என்றான் சிரிப்புடன், நல்ல வேளையாக இவள் லூசுத்தனமாகக் கேட்டதைப் பொருட்படுத்தாமல்.
“சாரிங்க ரவி. என்னவோ நியாபகத்தில யாருக்குன்னு கேட்டுட்டேன். பொண்ணு பிடிச்சிருக்குங்களா?” என்று தன் தவறை மறைக்க, பொய்யான மகிழ்ச்சியுடன் வினவினாள் செளமியா.
அவளுக்குத் தன் மனதின் போக்கை எண்ணி வருத்தமே உண்டாயிற்று. “என்ன நான்? அவனைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, இதோ இப்போது வரையிலும் அவனுடன் வாயாடிக் கொண்டிருக்கிறேன். அவனுடன் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது? அவன் பெண் பார்க்கச் சென்ற விஷயம் கேட்டதும் என் மனது நியாயமாக எந்த உணர்வுக்கும் ஆளாகக் கூடாதே! ஊரில் எத்தனை பேர் பெண் பார்க்கச் செல்கின்றனர். அது போலத் தானே இதுவும் என்று கடந்து போக வேண்டும் அல்லவா?” என்று கவலை கொண்டாள்.
“பொண்ணு ஃபோட்டோ பார்க்கறீங்களா?” என்று கேட்டவன், கையோட மெசெஞ்சரில் புகைப்படம் அனுப்பியிருந்தான்.
அதைப் பார்க்கவுமே, செளமியின் மனது இன்னமும் வேதனை அடைந்தது. புகைப்படத்தில் இருந்த பெண் நல்ல அழகான நிறத்தில், லட்சணமாகவே தோன்றினாள். இந்தப் பெண்ணை வேண்டாம் என எவனுமே சொல்லிவிட மாட்டான் என்னும் அளவிற்கு ஒரு அமைதியான அழகு கொப்பளித்தது அந்த முகத்தில்.
“பொண்ணு எப்படிங்க? அழகா இருக்காளா? எங்க வீட்டில எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்குங்க. அவங்க வீட்டுலையும் எல்லாமே ஒ.கே தான்.” என்று கூறிய ரவியின் குரலில் ஒரு நூல் இழை பெருமிதம் மின்னி மறைய, செளமி, “இன்னமும் இவனுடம் பேசுவது நியாயமேயில்லை” என்ற முடிவை எட்டியிருந்தாள்.
“சூப்பர்ங்க. வாழ்த்துக்கள். கீழ அம்மா கூப்பிடறாங்கன்னு நினைக்கறேன். நான் ஃபோன் வைக்கறேன்ங்க” என்று பட்டு தெறித்தாற் போல பதில் கூறியவள், அவன் மறுமொழிக்குக் காத்திராமல் கைபேசியை அணைத்தாள்.
குளிர்ந்த காற்றை நெஞ்சு நிறைய இழுத்து ஆழ்ந்து சுவாசிக்க, இரவு அலர்ந்திருந்த ராமபாணப் பூக்களின் சுகந்தமும் நெஞ்சை நிறைத்தது. அவளுக்கு அந்தப் பூக்களின் நறுமணம் எப்போதுமே தலைவலியைக் கொணரும். அன்றும், அவளுக்கு பின் மண்டை லேசாக வலிக்கத் துவங்கியது.
தன் அறைக்குள் சென்று முடங்கியவளிடம், “செளமி நாளைக்கு பிரதோஷம். நியாபகப் படுத்த சொன்னியே! கோவிலுக்கு சாயந்தரம் நாலு மணிக்கு போலாமா?” என்று கலாவதி கேட்டார்.
“இல்லைம்மா, நான் காலையிலையே போயிட்டு வந்திடறேன். சாயந்தரம் ரொம்ப கூட்டமா இருக்கும்.”
“சாயந்தரம் தாண்டி அபிஷேகம் பண்ணுவாங்க.”
“நீங்க சாயந்தரம் போயிட்டு வாங்க. எனக்கு காலையில போகத் தான் பிடிக்கும்” என்று கூறியவள், அன்னையிடன் சொல்லிக் கொண்டு தன்னறைக்குள் புகுந்தாள்.
கட்டிலில் படுத்ததும் சட்டென உறக்கம் வரவில்லை. ரவியுடனான சம்பாஷனைகளை மனதில் ஓட்டிப் பார்த்தவண்ணம் படுத்திருந்தவள், அவன் அனுப்பியிருந்த அந்தப் பெண்ணின் புகைப்படத்தை மீண்டுமாய் எடுத்து சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ரவிக்கும் இந்தப் பெண்ணிற்கும் ஜோடிப் பொருத்தம் அபாரமாக இருந்தது போலத் தோன்றியது. அவள் அப்புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கையில், அவள் ஆன்லைனில் வந்ததும் காத்திருந்தவன் போல, “என்னாச்சுங்க. அப்படி அப்ரப்டா வச்சுட்டு போயிட்டீங்க. எதாவது தப்பா சொல்லிட்டனாங்க?” என்று அப்பாவித்தனமாக செய்தியனுப்பியிருந்தான்.
செளமி அதற்கு மறுமொழியாக, “அம்மா கீழ கூப்பிட்டாங்க. அதான் போயிட்டேன். வாழ்த்துக்கள் ரவி. பொண்ணு ரொம்ப அழகா இருக்காங்க.” என்று பதில் சொடுக்கினாள்.
“கிட்டத்தட்ட ஒ.கே தாங்க. ஆனா..” என்று கூறி நிறுத்தினான் ரவீந்திரன்.
“ஆனா என்னங்க?”
“ஒண்ணுமில்ல, அத விடுங்க. அது எதுக்கு இப்போ?”
“ஏங்க ரவி? ஏதோ சொல்ல வந்து தடுமாறரீங்க? என்னன்னு சொல்லுங்க.”
“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. ஏன்னமோ சொல்ல நினைச்சேன்.. அது எதுக்கு இப்போ சொல்லிட்டு”
“ஏன் பொண்ணு வீட்டுல எதுவும் பிரச்சனையா?”
“அய்யோ சே சே!அதெல்லாம் இல்லங்க செளமி. இது வேற.”
“உங்க அப்பா அம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்களா”
“இல்லைங்க. என் அப்பா அம்மா என்னைக்கும் என் விருப்பத்துக்கு மாறா எதுவும் சொல்ல மாட்டாங்க.”
“பின்ன என்ன தாங்க பிரச்சனை? ஏன் பொண்ணை பிடிக்கலைன்னு சொல்லியிருக்கீங்க?”
“உங்களால தான்” என்று கூறியவன், அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. என்ன என்னால் என்கிறான்? என்று திடுக்கிட்ட செளமி,
“ என்னாலையா? நான் என்னங்க பண்ணேன்? என்னை காரணம் காட்டறீங்க?” என்று அவசர அவசரமாகக் கேட்டாள். ஆனால் அவன் இன்னது சொல்லப் போகிறான் என்று அவள் மனம் முன்னமே கண்டு கொண்டிருந்தது. அவன் சொல்லப் போகும் விஷயத்தை எண்ணி கொஞ்சம் சிலாகித்தும் போனது.
“ அது, வந்து. செளமி. நான் நேராவே சொல்லிடறேனே. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க ஏன் என்னை வேணாம்னு சொன்னீங்கன்னு தெரியலை. ஆனா, உங்களை பொண்ணு பார்த்துட்டு வந்ததுக்கு அப்பறம் எனக்கு வேற யாரையும் உங்க இடத்தில வச்சுப் பார்க்க முடியலைங்க.”
“அன்னைக்கு உங்களை கோவில்ல சந்திச்சதுக்கு அப்பறம், அடிக்கடி காலையில நான் ரெண்டு மணி நேரம் பைக்க எடுத்துகிட்டு, உங்களைப் பார்க்கவே கோவிலுக்கு வருவேன். நீங்க என்னை கவனிச்சதில்லை. ஆனா, சனிக்கிழமை, பிரதோஷம்னு நீங்க காலையில கோவிலுக்கு வர்ற எந்த நாளையுமே நான் மிஸ் பண்ணதில்லைங்க.”
அவளுக்காக அவளைப் பார்க்கவென இவன் கோவில் வரை வந்திருக்கிறானாமே? இதெல்லாம் உண்மை தானா? இல்லை பொய்யாகக் கூறுகிறானா? என்றெல்லாம் செளமி எண்ணிக் கொண்டிருக்க, அவனோ,
“நாம ஒரே காஸ்ட், ஒரே மதம், ஜாதகம் ஒத்துப் போகுது. எங்க வீட்டுல உங்களை எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. எனக்கும் தான். சோ, என்னை நீங்க கண்சிடர் பண்ணுங்களேன் செளமி?” என்று கேள்வியுடன் நிறுத்தியிருந்தான்.
அவளது நீண்ட மெளனம் அவனுக்கு குற்ற உணர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் என்று செளமி நினைத்தாள். சட்டென அவளால மனதை ஒரு நிலைப்படுத்தி ஒரு முடிவெடுக்க இயலவில்லை.
செளமிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எதுவும் சொல்லாமல் கைப்பேசியை காதில் வைத்தபடிக்கு நின்றிருந்தாள்.
“நீங்க உடனே பதில் சொல்ல வேணாம். நல்லா யோசிச்சு அப்பறமா சொல்லுங்க. நான் வெயிட் பண்ணறேன்” என்றவன், “நல்ல முடிவா சொல்லுவீங்கன்னு நம்பறேன். வைக்கறேன் செளமி” என்று கூறி, இவளுக்கான அவகாசத்தைக் கொடுத்து கைப்பேசியை அணைத்தான்.
குழப்பங்களுடன் அன்று படுத்தவள், அடுத்த தினம் சற்றே தாமதமாக எழுந்தாள். அவசரமாகக் குளித்து முடித்து கோவிலுக்குத் தேவையான பூ, பழம் ஆகிவற்றை பையில் எடுத்துக் கொண்டு விரைந்தாள்.
தரிசனம் முடித்து, காலைக் காற்றில் நிதானமாகப் பிரகாரத்தைச் சுற்றி வந்தவள், அங்கிருந்த தூணின் அருகே அம்ர்ந்து ரவியைப் பற்றித் தான் சிந்தித்தாள். நான் கோவில் வரும் சமயம் வருவேன் என்றானே, இன்றும் வந்திருக்கிறானோ? என்ற ஆராய்ச்சியுடன் சுற்றும் முற்றும் பார்த்தவள், அவனைக் காணாது சற்றே முகவாட்டம் கொண்டாள்.
சினிமாத் தனமாக, அவள் எதிர்பாரா வண்ணம் அவள் முன் தோன்றி, “என்னையா தேடினீங்க?” என்று கேட்டுச் சிரிப்பானோ? என்றெல்லாம் ஓடிய கற்பனையைச் சிரமப்பட்டு அடக்கி, கண்களை மூடி அமர்ந்தாள்.
“இவனை பிடிச்சிருக்கா? எதனால வேண்டாம்னு சொன்னேன்? தப்பு செஞ்சிட்டேனோ? இதையும் விட நல்ல வரனா எனக்கு அமைஞ்சிடுமா? என்ன பண்ணட்டும் ஈஸ்வரா? எனக்கு ஒரு தெளிவான பதிலை சொல்ல மாட்டியா?” என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் கவனம், அன்று போல, இன்றும் ஏதேணும் பதில் வருமோ என்று காதுகளைத் தீட்டிக் கொண்டு அமர்ந்திருக்க, எந்த அசரீரியும் அவளுக்கு பதில் சொல்லவில்லை.
சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு, அதே குழப்பமான மனதுடனேயே வீட்டிற்குச் சென்றாள். அவள் உள்ளே நுழையவுமே வீட்டில் சற்றே பரபரப்பாக இருந்தது.
ஹாலில் அமர்ந்திருந்த தம்பி சங்கரிடம், “என்னாச்சு?” என்று ஜாடையாக வினவினாள். அவன், உள்ளே சமையலறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உன்னைப் பத்தி தான்” என்று மட்டும் பதிலளித்தாம்.
“என்னப் பத்தி என்னடா?” என்றாள் சந்தேகத்துடன்.
“சொல்லத் தானே போறாங்க. என்னை ஆளை விடு.” என்று சொல்லிக் கொண்டு எழுந்து கொண்டான்.
“கூட்டமா கோவில்ல? “என்று கேட்டபடிக்கு இவளிடம் இருந்த திருநீறை நெற்றியில் வைத்துக் கொண்ட கலாவதி, “பிரோக்கர் திரும்ப கூப்பிட்டார். அந்த திண்டிவனம் மாப்பிள்ளை இல்ல, நீ கூடகோவில்ல பார்த்தேன்னு சொன்னியே, அவங்க வீட்டில உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம். அதனால, திரும்ப தரகர் கிட்ட சொல்லி பேசச் சொல்லியிருக்காங்க. நீ என்ன சொல்லற?” என்று மகளிடம் வினவினார்.
செளமி பதில் ஏதும் சொல்லும் முன்னர், அவளை அடுக்களைக்குள் அழைத்துச் சென்றவர், “காரணமில்லாம வேண்டாம்னு சொல்லாத செளமி. அப்பா உடம்பு முன்ன மாதிரி ஸ்திரமா இல்ல,அவர் நல்லா இருக்கறபோவே உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுத்திடணும்னு நினைக்கறார். புரிஞ்சுக்கோ”
“அதில்லைம்மா, படிக்கறேன்னு அவங்ககிட்ட சொல்லியிருக்கோம். இப்போ என்ன நினைப்பாங்க?”
“அதைப்பத்தி என்ன? கல்யாணம் முடிச்சுட்டு படிக்கலாம்னு நினைச்சோம்னு சொல்லிக்கலாம். என்ன கழுத்தை பிடிச்சா கேட்கப் போறாங்க?” என்றார் கலாவதி.
“அம்மா. அதுவந்து”
“செளமி, நான் சொல்லறதை சொல்லிட்டேன். உனக்கப்பறம் சங்கர் இருக்கான். அவனுக்கு ஒரு பிசினஸ், வாழ்க்கை அதெல்லாம் அமைச்சு குடுக்கணும். அப்பா உடம்பு எப்படி இருக்குன்னு உனக்கே நல்லாத் தெரியும். ஏதாவது உருப்படியான காரணம் இருந்தா கூட அந்தப் பையனை வேணாம்னு சொல்லலாம். அப்படி எதுவுமே இல்லாதப்போ ஏன் செளமி வீண் பிடிவாதம் பிடிக்கற?” என்று சொல்லச் சொல்ல கலாவதியின் குரல் தழுதழுத்தது.
“அம்மா அவரைப் பார்த்தப்போ ஒரு ஃபீலே வரலைம்மா. எதுவுமே தோணலை. அதான் வேண்டாம்னு சொன்னேன்”
“செளமி பெரியவங்க பார்த்து வைக்க கல்யாணம் எல்லாமே அப்படித்தான்மா. போகப் போக கொஞ்ச கொஞ்சமா தான் புரியும். அன்பு வளரும். எல்லாமே தெரிஞ்சு, புரிஞ்சுகிட்டு கல்யாணம் பண்ணிக்கற எல்லார் வாழ்க்கை மட்டும் நல்ல விதமாவா அமையுது. இல்லையே, நாம அமைச்சுக்கறதில தான் இருக்கு நம்ம சாமர்த்தியம்” என்று கூறிய கலாவதி, மகளின் முகத்திலேயே கண்கள் பதித்திருந்தார்.
கலாவதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்த செளமிக்கு, “எந்த காரணமும் இல்லாமல், இவனை வேண்டாம் என்று சொல்வது தவறு தானே என்று தோன்றிவிட்டிருந்தது.
“சரிம்மா, உன் இஷ்டம் போல செய்யுங்க. எனக்கு சம்மதம்” என்றாள். “உன்னை, வற்புறுத்தி சம்மதிக்க வைக்கறேன்னு நினைக்காத செளமி. அப்பா நல்லா விசாரிச்சுட்டார். நல்ல இடமா தெரியுது. அவங்களா திரும்பத் தேடி வர்றாங்க. நீ சந்தோஷமா இருப்ப பாரேன்” என்று வாழ்த்து போலக் கூறிய கலாவின் முகத்தில் அப்போது தான் தெளிவே காணப்பட்டது.
கணவரிடம் சென்று மகளின் சம்மதத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். “அவங்களை நல்ல நாள் பார்த்து பூ வைக்க வரச் சொல்லுங்க” என்று கலாவதி சொல்ல, “செளமிகிட்ட நல்லா கேட்டுட்டியா கலா? அவளுக்கு முழு விருப்பம் தானே?” என்று பரிவாக தந்தை வினவுவது கேட்டது.
இத்தனை தூரம் தனக்காக யோசிக்கும் தந்தை, அப்படி என்ன பாழும் கிணற்றிலா தன்னைத் தள்ளிவிட்டு விடுவார்? என்ற எண்ணம் உதயமாக,
“அப்பா, எனக்குச் சம்மதம், நீ மேல பாருங்க.”என்று தந்தையிடம் சொல்லிவிட்டாள் செளமியா.
தன்னறைக்குள் வந்து ரவியிடமிருந்து ஏதேணும் செய்தி வந்திருக்கிறதா என்று செளமி கைப்பேசியை நோட்டம் விட, “கண்சிடர் பண்ணுங்க “ என்று காலையில் அனுப்பியிருந்தான். அதற்கு மறுமொழியாக, ஒரு சிரிப்பு பொம்மையை இவள் அனுப்பி வைத்தாள்.
அதைக் கண்ட துமே அவளுக்கு மெசெஞ்சரில் அழைத்தவன், “என்ன சிரிக்கற பொம்மை அனுப்பியிருக்கீங்க? இதான் பதிலா செளமி?” என்று கேட்டது சற்றே காட்டமாக இருந்தது.
“இல்லைங்க ரவி. கோவிக்காதீங்க.காலையில தான் அம்மா பேசினாங்க. உங்க வீட்டில இருந்து தரகர் மூலமா திரும்ப கேட்கறாங்கன்னு?”
“ஓ, என்ன சொன்னீங்க. இருங்க இருங்க. அந்தப் பையனை இன்னும் கொஞ்சம் அலைய விடலாம். அப்பறமா சொல்லலாம்னு சொல்லியிருப்பீங்களே?” என்றான். அவன் பேசியது சுருக்கென்று மனதைத் தைத்தது தான். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஏன் இப்படி தப்பா நினைக்கறீங்க?”
“பின்ன, வேற எப்படி நினைக்கறதுங்க? நீங்க உங்க அம்மாகிட்ட என்ன பதில் சொன்னீங்க அதைச் சொல்லுங்க” என்றான் ரவீந்திரன்.
இவனென்ன இப்படிப் பேசுகிறான் என்று எண்ணியபடிக்கே, “தரகருக்கு இந்த முறை கமிஷன் மிஸ் ஆகாதுன்னு சொன்னேன்” என்று முடிந்த மட்டில் தான் அவன் பேச்சால் வருத்தம் கொண்டதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனிடம் கூற, செளமி சொன்னது அவனுக்குப் புரிய சில நேரம் பிடித்தது.
புரிந்ததும், “ஓ, வாவ், செளமி, தேங்கியூ சோ மச்.. தேங்கியூ.. சாரி, கொஞ்சம் டென்ஷன்ல ஒரு மாதிரி பேசிட்டேன்ல.. வெரி சாரி” என்றான் சிரிப்பு குறையாமல்.
அவன் உணர்ந்து மன்னிப்பு கேட்ட விதத்தில் அவளுக்கு நிறைவு தோன்றியது. அவளும் தன் மனக்கவலைகள், குழப்பங்கள் முதலிவற்றை தூக்கி எறிந்துவிட்டு நெஞ்சார நகைத்தாள்.
ரவீந்திரனின் மனைவியாக மாற, தன்னை மனதளவில் தயார்படுத்திக் கொண்டாள் செளமியா.