… 11. கட்டுரையும் ! கட்டுக்கதையும் ! …
ஒரு பெண்ணும் பையனும் பேசிக்கொண்டிருந்தால் அது காதல் பார்வையாக மட்டுமே இச்சமுதாயம் நோக்கிக்கொண்டிருந்தது. அதே காதல் என்ற கண்ணோட்டத்தில் யாழினி சிந்தியாவைப் பற்றி சிந்தித்திருப்பதாக அவளைச் சுற்றி இருந்த யாழினியின் வகுப்பைறை தோழிகள் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் சிந்தியாவைப் பற்றிய சிந்தனையை வேறொரு கண்ணோட்டத்தில் யாழினி நோக்கிக்கொண்டிருந்தாள்.
சிந்தியாவிடமே கேட்டுக்கொள்வது என்ற முடிவுடன் வழக்கமாக பள்ளிக்குச் செல்ல ஆயத்தமானால் யாழினி. பள்ளிச் சென்று சிந்தியாவை சந்திருத்திருந்தாள் யாழினி. சிந்தியாவோ தயங்கி தயங்கி யாழினியின் கண்நோக்கி பதிலை தருவதற்கு ஆயத்தமாகிறாள் என்பதை யாழினி உணராமல் இல்லை.
யாழினியின் விழிநோக்கி தயங்கியவள், திடீரென்று உணர்வு பெற்றவளாய் தன் பதிலைத் தர ஆயத்தமானாள். “யாழினி… உன்னோட கட்டுரைக்காக தான்” என்று சிந்தியா தன் பதிலைச் சொல்லி முடிப்பதற்குள் பள்ளி இறைவழிபாட்டிற்கான மணி ஒலித்துக்கொண்டிருந்தது.
“பண்டிகையும் மானுடமும்” என்ற தலைப்பில் பள்ளியில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் யாழினி முதல் இடம் பெற்றிருப்பதாகவும், அதே வேளையில் அவளது வெற்றி பெற்ற கட்டுரையானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கட்டுரையாக நறுமுகை நாளிதழில் வெளியானதையும் அறிவித்தார் தலைமை ஆசிரியர்.
கரவொலியில் பள்ளி மைதானம் இசைக்கேட்டுக்கொண்டிருந்தது. கட்டுரைக்கான முதல் பரிசையும், நாளிதழில் வெளியான சிறப்புக் கட்டுரைக்காக பள்ளி ஆசிரியர்கள் சார்பாக தமிழில் சிறந்த 10 நூல்களையும் யாழினி பரிசாகப் பெற்றுக்கொண்டிருந்தாள். வழிபாடும், காலை வகுப்புகளும் கடந்தாகிவிட்டது.
பள்ளியின் இடைவேளை மணிக்காக காத்திருந்த யாழினி கண்களில் இசை மகிழ்வு ஒலிப்பது போல் வேப்பம் மரத்தின் அடியில் காத்திருந்தாள் சிந்தியாவின் வருகைக்காக. ஆம், “நாளிதழில் வெளியான சிறப்புக் கட்டுரைக்கு காரணம் உனது தோழிதான்” என்று யாழினியின் வரலாற்று ஆசிரியை சவிதா கூறிய போது யாழினியின் கண்கள் நட்பின் நீர்த்துளிகளை வரவழைத்துக்கொண்டிருந்தது.
தயங்கிய விழிகளுடன் யாழினியின் அருகில் வந்திருந்தாள் சிந்தியா. சிந்தியாவை பார்த்த அந்த நொடியில் யாழினியின் கரங்கள் சிந்தியாவை அணைத்திருந்தது. எதுவும் புரியாமல் சிந்தித்த சிந்தியாவிற்கு யாழினியின் அணைப்பு, பதிலாக மாறிக்கொண்டிருந்தது.
“என்னோட கனவுக்காக நீ முயற்சி எடுத்திருக்க: அதை எல்லோரும் தப்பான அர்த்ததில் என்னிடம் சொன்னாங்க.. எனக்கு தெரியும் நீ எப்படின்னு” என்று யாழினி தன் பதிலைச் சொல்லி முடித்திருந்தாள். “என்னோட எழுத்துக்களுக்கு உருவம் கொடுத்த உயிர்த்தோழி” என்று நட்புக்கு புனைவுகள் சேர்த்துக்கொண்டிருந்தாள் யாழினி.
இருவரின் கரங்களும் ஒருவரின் மேல் ஒருவராக வைத்திருந்த நேரத்தில் நாளிதழையும் சிந்தியாவின் கரத்தினுள் புதைத்துக்கொண்டிருந்தாள் யாழினி. “இதற்காகத் தான் நூலகத்தின் வெளியில் ஒரு பையனுடன்…” என்று யாழினி முடிப்பதற்குள் ஆமாம் என்று தன் தலையசைவுடன் யாழினியின் நாவினுள் “தேன்மிட்டாயை” புதைத்துக்கொண்டிருந்தாள் சிந்தியா.
தேன் போல் சுவையாய் இருக்க வேண்டிய நட்பானது பாகு அல்லாத என் காய் போல் கனியாமல் போகப்போகிறது என்று இந்த வேப்பம் மரத்திற்கு தெரிந்ததோ என்னவோ! அந்த வேம்பு மரமும் சிந்தியாவின் தலையசைவுக்கு எற்றார் போல் தன் கிளைகளையும் அசைத்துக்கொண்டிருந்தது.
யாழினி சிந்தியாவிடம் கேட்கவிருந்த அனைத்து கேள்விகளுக்கும் அந்த ஒரு கட்டுரை பதிலாக அமைந்துவிடும் என்று சிந்தியா சிந்தித்துப் பார்த்ததில்லை என்பதே உண்மை. யாழினி தன்மேல் வைத்திருக்கும் அலாதி நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று சிந்தியா எண்ணிக்கொண்டிருந்தாள்.
அதற்கு தகுந்தாற் போல் பதினொன்றாம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வில் தன்னுடைய மதிப்பெண்ணை உயர்த்தி காட்ட வேண்டும் என்று சிந்தியா முடிவெடுத்திருந்தாள். யாழினியின் நட்பானது சிந்தியாவை அவளது மற்றொரு சிந்தனைகளை மாற்றி படிப்பில் கவனம் செலுத்தவைத்துக் கொண்டிருந்தது.
பள்ளியில் இறுதித்தேர்வுகள் முடிந்து பன்னிரெண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்தனர் இரு தோழிகளும். வரலாறு பாடத்தை விரும்பும் யாழினியின் நட்பின் வரலாறானது இப்பள்ளியிலேயே புதைந்துவிடும் என்று எப்பொழுதுமே யாழினி நினைத்திருக்கவில்லை.
(நட்பின் வரலாறும் அடுத்த அத்தியாயத்தில் மட்டுமே இருக்கும்)
– இசைக்கும்