பாகம் 1
அடுத்த நொடியை இரகசியமாகவே வைத்திருக்கிறது வாழ்க்கை.
• அருமையான பெற்றோர்,
• 20 வயதிலேயே அரசுப்பணி,
• தக்க வயதில் திருமணம்,
• கருத்தொருமித்த கணவர்,
• சிறிதாய் ஒரு சொந்த வீடு,
• சுகமாய்ப் பிரசவித்த ஆண் குழந்தை,
• இருப்பிடத்தின் பக்கத்திலேயே பணிஇடமாற்றம்,
• சிக்கணமாய் ஒரு மகிழுந்து,
• கணவரின் மேற்படிப்பு தங்கப்பதக்கம்..
• இப்படி நேர்மறையில் மட்டுமே பயணித்துக் கொண்டிருந்தது என் வாழ்க்கை.
இல்லத்தின் அரசியாய்க் கணவரைப் பணிக்குக் கிளப்பி, குழந்தைக்கு வேண்டியவைகளை எடுத்து வைத்துவிட்டு, ஆசிரியப் பணியாற்ற பள்ளிக்குப் புறப்பட வேண்டுமென்பதற்காக விடியலிலேயே விழிப்பது வழக்கம். விழித்தேன்.
வழக்கத்திற்கு மாறாய் விழித்த இடம் சற்று வித்தியாசமாக இருந்தது.
கண்ணோட்டமிட்டுக் கண்டிப்பாய் இது என் வீடில்லையென அறிந்தேன். பெரிய அறை. கட்டிலில் தனியாய் நான். ஒரு அறைக்குள் ஒன்பது குழல் விளக்குகள். பக்கத்தில் மின்னரைப்பான் போல் பெரிதாய் இரையும் ஒரு இயந்திரம். குழப்பம், திகில்.
பக்கத்தில் தாய்ப்பால் பருகும் செல்ல மகன் இல்லை.
பலமுறை படங்களில் பார்த்து கிண்டலடித்த “நா எங்க இருக்கேன் ? எனக்கு என்னாச்சு ?” வசனம் மனதில் எழுந்தது.
கேட்டுத் தெரிந்து கொள்ள பக்கத்தில் ஒருவரும் இல்லை. கையும் காலும் கட்டப்பட்டிருப்பதாய் உணர்ந்தேன். அசைக்க முடியவில்லை. தாகத்தில் நா வரண்டது. ஒரே குளிர். பீதியில் அங்குமிங்கும் பார்த்தபடி படுத்திருந்தேன்.
திடீரென அந்த அறைக் கதவு திறக்கப்பட்டு முகமூடியுடன் உள்நுழைந்தார் ஒரு பெண். வந்தவர் அறை கதவின் அருகிலேயே இருந்த ஒரு மேசையில் ஏதோ ஒரு கோப்பை அவிழ்த்துப் படிக்கலானார்.
விபரம் கேட்டறிய அவரை அழைத்தேன். அவர் காதில் விழவில்லை. பலமாய் அழைத்தேன். பிறகே தெரிந்தது என் வாய் மட்டுமே அசைகிறது சப்தம் எழவில்லை என்பது.
ஏனென்று புரியவில்லை. வந்தவரைக் கவனித்து செவிலி என்று கணித்தேன். அவர் எதேச்சையாகப் பார்வையை என்மீது திருப்பினார். நான் தலையசைத்து அவரை அழைத்தேன். ஆர்வத்தோடு என்னிடம் நோக்கி விரைந்தார். ஆச்சிரியக்குறியும் மகிழ்ச்சிக்குறியும் அவர் முகத்தில். சந்தேகக்குறியும் கவலைக்குறியும் என் முகத்தில்.
“எப்படி இருக்கீங்க வித்யா” என்று அவர் வினவ “என்னாச்சு ? இது எந்த எடம் ? ஏன் என்ன கட்டி வச்சுருக்கிங்க ? அவரும் குழந்தையும் எங்க ? ஏன் என்னால பேச முடியல்ல ?” என்று வாயசைப்பிலேயே வினாக்களை அடுக்கினேன்.
அழகாய் ஒரு புன்னகை உதிர்த்தார் அந்த செவிலி.
“இது சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனை. உங்களுக்கு உடம்பு சரியில்ல. நீங்க இங்க வந்து இன்னிக்கி 37ஆவது நாள்” என்று அவரிடமிருந்து வெளிப்பட்ட பதில் நம்பமுடியாததாய் இருந்தது.
37 நாட்கள் மருத்துவமனையில் இருக்குமளவு எனக்கு உடல்நலக் குறைவு ஒன்றுமில்லையே! நல்ல ஆரோக்கியமான அம்மா தானே நான் என்ற எண்ணம் எழ, “அவருக்கு நான் இங்க இருப்பது தெரியுமா?” என்றேன்.
“தெரியுமே. அவர் தானே இங்க உங்களைக் கொண்டுவந்து சேர்த்தார்.” என்றார். வாயசைப்பிலேயே சம்பாஷனை தொடர்ந்தது.
“எனக்கு என்ன உடம்புக்கு?”
“இப்ப ஓரளவு சரி ஆயிருக்கு”
“குழந்தை அர்ஜுன் எப்படி இருக்கான் ?”
“நல்லாருக்கான். தினமும் இங்க வருவான். ரொம்ப சுட்டி. ”
“அப்பா அம்மா?”
“அப்பா அம்மா அர்ஜுன் தினமும் ஒரு தடவை வருவாங்க. உங்க கணவர் தினமும் மூனு தடவை வருவார்.”
“எனக்கு அவங்களை எல்லாம் பாக்கனும்.”
“இப்ப தான் கிளப்பி போறாங்க. இருங்க.. வர சொல்றேன்” என்றவர் அறையை விட்டு வெளிப்போந்தார்.
சிந்தித்துப் பார்த்தேன். சமீபத்தில் ஏதும் உடல் உபாதை ஏற்பட்டதாய் நினைப்பில்லை. அப்படியே ஏற்பட்டிருந்தாலும் எங்கள் ஊரில் அவர் செவிலியராய்ப் பணிபுரியும் மருத்துவமனையிலேயே என்னைச் சேர்த்திருக்கலாம்.ஏன் சென்னையில் சேர்ப்பிக்க வேண்டும்? எங்கையுமே வலிக்கவில்லையே.. பக்கத்தில் இரையும் கருவி வெண்டிலேட்டரோ?. ஏன் குரல் எழவில்லை. இப்படி எண்ணங்கள் ஓட, என் கணவருக்காக ஓராயிரம் கேள்விகளுடன் காத்திருந்தேன்.
சிறிது நேரத்தில் கதவு திறந்தது. வந்தது அவரல்ல. முகமூடி அணிந்த மருத்துவர் குழு. அவர்களுக்குள்ளாகவே மருத்துவ மொழியில் பேசிக்கொண்டு வெளியேறினார்கள்.
மீண்டும் செவிலி இன்னொரு உதவியாளுடன் வந்து என் வயிற்றுப்பகுதியில் இருந்து இரத்தம் தோய்ந்த பல பஞ்சுகளை ஆகற்றி வேறு கட்டுத்துணி மாற்றினார்.
அந்த உதவியாளர் பால் போன்ற ஒன்றைக் கரைத்து நெகிழிப் பையில் நிரப்பி என் இரத்த நாள டியூபில் இணைத்தார்.
சிறிய வெள்ளை உரலில் பல மாத்திரைகளைப் போட்டு உலக்கையால் இடித்துப் பொடியாக்கிக் கரைத்து மூக்கில் இருந்த டியூப் வழியாக செலுத்தினர்.
என் வலதுபக்க வயிற்றுப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த பை போன்ற ஒன்றைப் பிரித்து அதிலிருந்து பச்சை நிற திரவத்தை வெளியேற்றினர்.
பரிசோதனைக்காக என்று கூறி இரத்தம் எடுக்கப்பட்டது.
அரைமணிக்குள் நிகழ்ந்த இந்த நிகழ்வுகள், பயம், ஐயம், குழப்பம், ஆச்சரியம், எதிர்பார்ப்பு என பல்வேறு உணர்ச்சிகளை ஒருசேர அள்ளித்தர, கண்ணீர் துளிர்த்த கண்கள் கணவரைத் தேடின. ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்பதை மட்டும் புரிந்துகொண்டேன்.
என் கடைசி ஞாபகங்களை நோண்டியபோது பள்ளிகளுக்கு இடையிலான பிராந்திய நிலை போட்டிகளில் எமது பள்ளி பல பரிசுகளை வென்ற அறிவிப்புகளைக் கேட்டுவிட்டு மகிழ்வுடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியது நினைவிலிருந்தது.
நான் ஒரு சுறுசுறுப்பான ஆரோக்கியமான பணிபுரியும் பாலூட்டும் தாய். 37 நாட்களாக நானும் தாய்ப்பாலும் இல்லாமல் என் ஒன்றரை வயது செல்ல மகன் எப்படிச் சமாளிக்கிறான்? யார் அவனைச் சமாளிக்கிறார்கள் ?
என் அனைத்து ஐயங்களுக்கும் என் அய்யனிடமிருந்தே விடை கிடைக்குமென்றெண்ணி எதிர்பார்க்கலானேன்.
வந்தார்..
-வித்யாகுரு