பாகம் 2
முகமூடி, தலையில் குல்லா, பச்சை கவுண் அணிந்து உள் நழைந்தவரின் கண்களைக் கண்டு கணவர்தான் என்றறிந்ததும் நம்பிக்கை, துணிவு, தெம்பு அனைத்தும் திரும்பி வந்ததுபோல் இருந்தது எனக்கு.
ஆனால் அவரிடமோ மகிழ்ச்சியோ ஆர்வமோ ஏதும் தென்படவில்லை. நிதானமாக எனை நோக்கி வந்தார். நான் பலமுறை பார்த்து வியந்து இரசித்த அதே நிதானம்.
” ஹாய் வித்யா.. எப்படி இருக்க?”
“என்னாச்சு ?”
“ஒன்னுமில்ல மா. உனக்கு சளி புடிச்சிடுச்சு. கொஞ்சம் ஸிக் ஆகிட்ட. அதான் இங்க ஷிப்ட் பண்ணிட்டேன். இப்ப பரவாயில்ல.”
“சளி யா.. எனக்கு அப்படி ஒன்னும் நினைப்பில்லையே. எப்ப? ”
“உங்க school நிறைய பரிசுகள் வாங்கினது ஞாபகம் இருக்கா?”
” ம்..”
” அதுக்கு அப்பறம் தான் உனக்கு இப்படி ஆச்சு”
” ஓ!!! அச்சு எங்க?”
“கீழ இருக்கான். உன் அப்பா அம்மா பாதுக்கறாங்க. அவனும் உங்க அம்மா கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டான். பாக்க உன் ஜாடையில இருக்காங்க இல்லையா அதான். ஒன்னும் பிரச்சினை இல்ல.”
“ஏன் குரல் வரல்ல?”
“டிரக்கியோஸ்டமி பன்னிருக்காங்க மா. வென்டிலேட்டர் சப்போர்ட் ல இருக்க”
“வீட்டுக்கு போகணும்”
“போலாம்.. 80% சளி ஆப்பரேட் பண்ணி எடுத்தாச்சு. இன்னும் கொஞ்சம் தான். சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம்.”
“ஏன் கால் அசைக்க முடியல்ல?”
“ரொம்ப யோசிக்காத. சீக்கிரம் எல்லாம் சரி ஆயிடும் சரியா.”
“…..”
“அப்பறம் school லாம் முடிஞ்சு vacation ஆரம்பிச்சிடுச்சு. நீ எப்படி இருக்க னு கேட்டு ஏகப்பட்ட கால்ஸ்.”
“….”
“நானும் அச்சுவும் இங்க உங்க அப்பா அம்மா வீட்டுலையே தங்கிட்டோம். காரை இங்கையே கொண்டுவந்துட்டேன். வசதியா இருக்கு”
“…”
சம்பாஷனையிடையே புகுந்தார் மற்றொரு செவிலி.
“என்ன அண்ணா.. பேசறாங்களா.. இப்ப சந்தோஷமா.. ”
“ரொம்ப சந்தோஷம். இன்னிக்கி எடுத்த x-ray எங்க?”
“இந்தாங்க” என்று அந்தச் செவிலி ஒரு காபி நிற பெரிய கவரை நீட்ட, அதை வாங்கி உள்ளிருந்து கறுப்பு நிற X ray அட்டையை இழுத்து அதன்மேல் கண்களை ஓட்டினார்.
“வென்டிலேட்டர் எவ்வளவு கொடுக்கறீங்க?”
“40-60. 40% இவங்க மூச்சு விடறாங்க. 60% வெண்டி சப்போர்ட் பண்ணுது.”
“சரி சரி”
“கவலைப் படாதிங்க அண்ணா. வித்யாவை நடக்க வச்சி அனுப்பறோம்.”
“அதுக்கு தானே காத்துட்டு இருக்கேன்”
அவர்கள் பேச்சிலிருந்து அவர் என்னிடம் பொய் சொல்கிறாரென்பது மட்டும் தெளிவாய்த் தெரிந்தது.
“சரி வித்யா. நான் போய் மாமியை அணுப்பறேன். எதையும் யோசிக்காம இரு. சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம் சரியா.” என்றவர் பற்றியிருந்த உள்ளங்கையில் முத்தமிட்டு செவிலி நீட்டிய ஒரு காகிதத்தில் கையொப்பமிட்டு விடைபெற்றார்.
அம்மாவிடம் நிச்சயம் உண்மை கிடைக்குமென்று அம்மாவக்குக் காத்திருந்தேன்.
வந்தாள். அவரைப்போலவே உடைகள் அணிந்து வந்து அவர் கூறிச்சென்ற அதையே மீண்டும் சொன்னாள் அம்மா.
“மயக்கமருந்து அளவைக் குறைச்சிருக்காங்க மா. அதனால கொஞ்சம் குழப்பமா இருக்குமாம். அதிகமா யோசிக்காத. சீக்கிரம் சரி ஆயிடும். நாங்க நாளைக்கி வர்றோம்” என்று சொல்லி விடைபெற்றாள்.
அடுத்து அப்பா. அவரிடமும் அதே பதில்களே கிடைத்தன.
ஒரே ஆறுதல் அர்ஜுன் நலமாக அம்மாவிடம் உள்ளான் என்பது.
அன்றிரவு அறைக்குள் யாரோ ஒருவர் ஒரு பெரிய கருவியை வண்டியில் தள்ளிக்கொண்டு வந்து ஏதோ செய்து விட்டுப் போனார்.
செவிலியிடம் விசாரித்த போது அது தினமும் நள்ளிரவு எடுக்கப்படும் x-ray எனத் தெரிந்தது. உறங்கவைக்கப்பட்டேன்.
காலை நான்கைந்து பேர் வந்து உடல் துடைத்தனர். விரலைக்கூட சுயமாக அசைக்க முடியவில்லை எனத் தெரிந்தது. படுக்கை புண் வராதிருப்பது பெரிய விஷயம் தான் என்று பேசிக்கொண்டனர்.
செவிலி முன்தினம் போல் கட்டு மாற்றி, மருந்துகள் அளித்து, பைகள் காலி செய்து, பால் இணைத்து இரத்தம் எடுத்துச் சென்றார். மருத்துவக் குழு வந்து புரியா மொழி பேசிச் சென்றது.
இயன் மருத்துவர் வந்து என் மார்பில் தொடர்ச்சியாக அடித்தார். (Chest physio).
பிறகு தலைமை செவிலி, தொண்டைக் குழாய் வழியில் ஒரு டியூப் விட்டு, கருவி உதவியுடன் உறிஞ்சினார். (Suction)
என்னவெல்லாமோ செய்தது. இருமல் வந்தது. மிகவும் பயந்து போனேன்.
அப்போது வந்த பெண் ஒருவர் என்னைக்காட்டி
“எப்படி இருக்காங்க? ECMO ல இருந்தப்ப பாத்தது. போயிடுவாங்கன்னு நினைச்சேன். பரவாயில்ல” என்றார்.
இடி இறங்கியது போல் அதிர்ந்தேன் அது கேட்டு.
-வித்யாகுரு