4.11- மீண்டும் ஒரு தேவதை
“உன்னைப் பைத்தியக்காரத்தனமா காதலிக்கிறேன்” என்று சட்டென்று சொல்லிவிட்ட கால்டனின் அணைப்பும் குரலும் பார்வையும் கயலை வேரோடு சாய்த்துவிட்டன.
இதனை வெளிப்படுத்த கயல் தந்த ஒற்றை முத்தம் கால்டனுக்குப் போதிய தைரியத்தை அளித்துவிட்டது. அதுகாறும் மறுக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் உள்ளம் திறக்காதிருந்தவர், அன்று, தைரியமாய் நம்பிக்கையோடு தன்னுள் வளர்ந்துவிட்ட காதலை வார்த்தைப்படுத்தினார்.
இடைவெளியற்ற நிலையில் இருவரின் பார்வைகளைப் போல் இருவரின் உடல்களும் தழுவலில் இருக்க, காற்றெல்லாம் காதல் மணக்க, இரும்பும் காந்தமுமாய் ஒருவரையொருவர் ஈர்த்துக்கொண்டனர். கட்டுக்குள் நிற்காத காதலுடன் கால்டன் கயலை ஆரத் தழுவினார். அவளின் காதுக்குப் பின்னால் முகர்ந்து அவளின் வாசத்தைத் தன் சுவாசமாக்கினார்.
நொடிக்கு நொடி இந்தக் காதலை அனுபவித்தபடி அசைவற்று நின்ற கயலின் விழிகள் நீர் சிந்தின. கால்டன் அவளைக் காதலோடு கட்டியணைத்து வாசம்பிடித்ததும் மறைந்த அம்மாவின் நினைப்பு வந்துவிட்டது அவளுக்கு. பின்வாங்கி அவளின் முகம் பார்த்த கால்டன், கண்ணீர் வழிந்தோடிய கயல்விழிகளைக் கண்டதும் அதிர்ச்சியானார். அவளை முதன்முதலாய்ப் பார்த்த போது அவள் இப்படித்தானே அழுதுகொண்டிருந்தாள்! கால்டன் அவளின் அழகைப் பார்த்துக் காதலிக்கவில்லையே! அவளின் அழுகையைப் பார்த்துத்தானே கண்டதும் காதலில் விழுந்தார்! இப்போது அவள் அழுவது கண்டு காதலுடன் குழம்பிப்போனார்.
“ஏன் அழற? பிடிக்கல்லையா?”
பிடிக்கவில்லை என்றால் தொட்டுவிடவும் முடியுமா அவளை! சில வினாடிகளுக்கு அவரை நிலைத்துப் பார்த்தாள்! அதற்குள் கால்டனுக்கு மறுத்துவிடுவாளோ என்ற பயம் தொற்றிக்கொண்டது. இதயம் படபடத்தது. காதலுக்காக ஏங்கிக் கொண்டிருந்த அவர் கயலிடம் காதல் வளர்த்தது எத்தனை பெரிய மனமாற்றம் என்பதை அவர் மட்டுமே அறிவார். கயல் மறுத்தால் அதை ஏற்கும் மனவலிமை தன்னிடம் இல்லை என்றும் அவர் நன்கறிவார். பிடிக்கவில்லையா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல கயல் தாமதித்த அந்த சில நொடிகளில் அவர் அத்தனை திகிலையும் அனுபவித்துவிட்டார்.ஆனால் கயல் சொன்ன பதில் அவருக்கு நம்பிக்கையை வாரிக் கொடுத்தது.
கால்டனின் கண்களை ஆழமாய்ப் பார்த்துக்கொண்டே தழுதழுத்த குரலில், “அம்மா நியாபகம் வந்துடுச்சு. அதுக்கு மட்டுந்தான் நான் அழுவேன்” என்று சொன்னாள்!
கால்டனுக்குக் கயலின் மறைந்த அம்மாவைப் பற்றியும், அவள் ஆறுதல் தேடும் அந்தப் புடவையைப் பற்றியும், மறைந்தாலும் அவளுக்குள் தன் அம்மாவை அவள் இன்னும் வாழவைத்துக்கொண்டுதான் இருக்கிறாள் என்பதும் எல்க் மூலமாகத் தெரியும்.
அதனால் அவள் சொன்ன பதிலுக்கு என்ன அர்த்தமென்று புரிந்துகொள்ளச் சிரமமாய் இல்லை அவருக்கு. தன் அணைப்பில் அவள் தன் அம்மாவை உணர்ந்திருக்கிறாள் என்பதை விட வேறு என்ன ஒப்புதல் வாக்குமூலம் தேவை அவருக்கு.? ஆனந்தத்தின் உச்சத்துக்கே சென்றார். அவள் கன்னங்களைத் தாங்கி வழிந்த கண்ணீர் துடைத்தார்.
சிவ பூஜைக் கரடியாக மீண்டும் நுழைந்தது அலைபேசி. திடுக்கிட்ட கயல், அலைபேசி அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.
“ரிப்போர்ட் அனுப்பிட்டிங்களா.. சரி நான் பாத்துக்கறேன்.” என்று பேசிக்கொண்டே கால்டனிடமிருந்து விலகி நடந்து கணினியை ஆன் செய்தவளை வியப்பாய்ப் பார்த்தார் கால்டன். இந்த நிலையிலிருந்தும் சட்டென்று பணிக்குத் தாவிவிட்டாளே என்று ஆச்சரியமாய் அவள் போவதைப் பார்த்தார். இவளே கயலென்று புரிந்துகொண்டு புன்னகையோடு அவள் மேஜை அருகே சென்று நின்றுகொண்டார்.
அறிக்கையைத் திறந்து பார்த்த கயல் ஏமாற்றத்தோடு உச்சுக்கொட்டினாள். முகம் வாட்டமானது.
“என்ன.. தப்பா கெஸ் பண்ணிட்டியா?”
இல்லை என்று மண்டையாட்டினாள்.
“கரெக்டா தான் கெஸ் பண்ணிட்டேன்” என்று வருந்திச் சொன்னாள்.
“கரெக்ட் தான்னா எதுக்கு வருத்தமா சொல்ற?”
“என்ன பேசுறீங்க.? அந்த சின்ன பையனுக்கு குணப்படுத்த முடியாத வலிப்பு நோய் இருக்கு. வருத்தப்படாம??!!”
“நீ சரியா கணிச்சது சந்தோஷப்படற விஷயம் தானே!”
“என் கணிப்புகள் சரி ஆயிட்டா என் திறமையை, மருத்துவ அறிவை நினைச்சு மார்தட்டி சந்தோஷப்பட என்னால முடியாது கால்டன். நான் எப்பவுமே என் கணிப்புகள் பொய்யா போய்டனுமின்னு தான் வேண்டிப்பேன். இதுல எந்த வெற்றியும் சந்தோஷமும் இல்ல” என்று ஆத்மார்த்தமான வருத்தத்தோடு சொன்ன கயல் கால்டனின் கண்ணுக்கு மீண்டும் ஒரு தேவதை போல் தெரிந்தாள்.
கூர்ந்து அந்த அறிக்கையை ஆராய்ந்த கயல், “உங்க குடும்பத்துல யாராச்சு இது போல இருந்துருக்காங்களா?” என்று கேட்டாள்.
“என்கிட்ட போய் இந்த கேள்வியைக் கேக்குறியே!”
“சரி வாங்க! உங்க அம்மா கிட்ட கேட்டு பாக்கலாம்”
“கயல்.. நமக்கு எதுக்கு இந்த வேலை!? அவங்க பாத்துக்கட்டுமே! நீ தலையிடனுமா?”
“என்ன கேள்வி இது! நிச்சியமா நான் தலையிடுவேன். சின்ன பையன் கால்டன்.!”
“நீ தேவை இல்லாம இழுத்துப் போட்டுக்குறியோன்னு தோணுது”
“அது உங்க குடும்பம். எப்படி எனக்கு தேவை இல்லாததா ஆகும்?”
“இல்ல…”
“ஒன்னும் பேசாதிங்க. வாங்க என்னோட” என்று கட்டளையிட்டு கணினியை அணைத்துவிட்டுக் கடந்து சென்றவளை மீண்டும் மடக்கி சுவற்றுடன் அணைத்தபடி நிறுத்துக்கொண்டார் கால்டன்.
“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலே வரல்லையே!”
“என்ன?”
“எதுக்கு முத்தம் கொடுத்த?”
“உங்க அம்மாவால!”
“அம்மாவாலயா? புரியல்ல!!!”
விளக்கினாள். காதல் தெளிவுபெற்றது.
4.12- மீண்டுமொரு கலவரம்
-வித்யாகுரு