4.10- சொல்லட்டுமா?
முத்தமிட்டுச் சத்தமில்லாமல் கயல் இடத்தைக் காலி செய்துவிட, கால்டனோ தலைகுப்புற கவிழ்ந்துவிட்டார். உடம்பெல்லாம் என்னவோ செய்வது போல் உணர்ந்தார். தலை சுற்றியது. மூச்சு வாங்கியது. அமர்ந்து தண்ணீர் அருந்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
மேலே பறந்துகொண்டிருந்தவர் ஒரு வழியாக 10 நிமிடங்களில் சுயநினைவுக்கு வந்தார். கனவில்லை, பிரமையில்லை, நிஜமாகவே கயல் தான்! முத்தம் தான் கொடுத்தாள்! காதல் பார்வை தான் பார்த்தாள்! என்று தெளிவாக்கிக் கொண்டார்.
பிறகென்ன.. ஓட்டம் தான்..
கயலைத் தேடினார். ஓ.பி.டி பக்கம் போனார். அவள் இல்லை. வார்ட் பக்கமும் இல்லை. அம்மாவின் அறையில் இருப்பாளோ என்று பார்த்தார். அங்கும் இல்லை. பல இடங்களில் தேடினார். ஒரு வழியாக கயல் அறுவை சிகிச்சையில் இருப்பதையும், மதியம் 1.30க்குத் தான் வருவாள் என்பதையும் அலியிடமிருந்து தெரிந்துகொண்டார். ஏமாற்றமாகிப் போனது.
இந்த திடீர் மனமாற்றத்தின் காரணம் என்னவாயிருக்கும் என்று யோசித்து மண்டை வெடித்துவிடும் போல் ஆனது. எதற்கு இப்படி முன்னறிவிப்பின்றி முத்தமிட்டாள் என்று புரியவே இல்லை. அலுவலகம் போயும் ஒரு வேலையும் ஓடவில்லை. எனவே மீண்டும் சரியாக 1.30க்கு மருத்துவமனை வந்தார். கயலின் அறை காலியாய் இருந்தது. காத்திருந்தார். பிறகு வாடிய முகத்துடன் செலீனாவின் அறைக்குச் சென்றார். அங்கே நிக்கின் குரல் சற்று உயர்வாய்க் கேட்டுக்கொண்டிருந்தது கண்டு விரைந்து உள்ளே நுழைந்தார்.
அண்ணன் நிக் அப்படி கத்திப் பேசிக்கொண்டிருந்தது கயலிடம் தான் என்று தெரிந்ததும் கோபம் கொண்டார்.
“என்ன நடக்குது? எதுக்கு டாக்டர் கிட்ட சத்தமா பேசிட்டிருக்க?”
“வா.. இவ டாக்டர் தானான்னு எனக்கு டவுட்டா இருக்கு.”
“நிக்.. வார்த்தைகள்-ல கவனம் வை”
“பின்ன என்ன.? என் பையனுக்கு டெஸ்ட் பண்ணனும்னு சொல்லுறா! யார் இவ? இதைச் சொல்ல?”
கயலைப் பார்த்தார் கால்டன். கயல் உண்மை தான் என்பது போல் ஆமோதித்தாள்.
“நீங்க நேத்து ஒரு நாள் கொடுத்த இடம் எங்க வந்து நின்னுருக்கு பாருங்க மாம்!”
“நிக். கொஞ்சம் பொறு. கயல் காரணமில்லாம சொல்ல மாட்டா. என்ன கயல். ஏன் அப்படி சொல்ற?” என்று செலீனா கேட்டதும் கயல் விளக்கினாள்.
“சிரிச்சுக்கிட்டே இருக்கறது சரி இல்ல. காலையில உங்க பேரன் இங்க வந்திருந்தப்போ தாத்தாவைப் பாக்க நான்தான் அவனைக் கூட்டிகிட்டுப் போனேன். அப்போ அவன் கிட்ட பேசினேன். அவன் தாத்தா இப்படி அடிபட்டதை நினைச்சு அழுகையா வரதாகவும் ஆனா அவன் உணர்வுகளுக்கு நேர்மாறா சிரிக்கறதாகவும் அப்படி சிரிக்கறது பிடிக்கலைன்னும் சொன்னான். அவன் பதட்டமா இருந்தான். ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தான். சாதாரணமா நடக்கும் போதே கால் தட்டி விழுந்துக்கிட்டே இருந்தான். இதெல்லாம் ஒரு வகை வலிப்பு நோயோட அறிகுறிகள் மாதிரி தெரியுது எனக்கு. அதுக்கு தான் ஒரு டிஜிட்டல் ஈ.ஈ.ஜி எடுக்கனுமின்னு சொல்றேன். ஒன்னும் இல்லைன்னா சந்தோஷம். ஆனா பிரச்சினை இருந்தா அவனுக்கு மருத்துவ உதவி தேவை.”
“ஓக்கே கயல். என்ன சோதனை வேணுமோ செஞ்சிக்கோ”
“என்னம்மா இவ பேச்சைக் கேட்டுக்கிட்டு…”
“நிக்… போதும்! நீ கூட்டிக்கிட்டு போ கயல்”
செலீனா சொன்னதன் பேரில் நிக்கின் மகனைக் கயல் அழைத்துக்கொண்டு போனாள். நிக் கோபத்துடன் வெளியேறினார்.
“நீங்களா இப்படி பேசுறீங்க?!!!”
“எனக்கும் அதே ஆச்சிரியம் தான். இந்த இந்தியா பொண்ணுகிட்ட ஏதோ ஒன்னு இருக்கு. ஆட்டி வைக்கிறா!”
“ஆமா!”
“அவ ஏதோ சந்தேகப்படுறா. பாக்கலாம். டெஸ்ட் ரிபோர்ட் வந்தா தெரிஞ்சிடப் போகுது.”
“ம்..”
“சரி நீ ஏன் இங்கையே சுத்திக்கிட்டிருக்க?”
“அ.. அது.. அது வந்து.. அம்மா அப்பா 2 பேரும் முடியாம இருக்கிங்க. பார்க்க வந்திருக்கேன். இது என்ன கேள்வி?” என்று அலுத்துக்கொண்டு நைஸாக வெளியேறிவிட்டார் கால்டன்.
மீண்டும் கயலைத் தேடினார். அந்த டெஸ்ட் அறைக்குப் போனார். அவளோ ஒரு செவிலியிடம் நிக்கின் மகனை ஒப்படைத்துவிட்டு மீண்டும் எங்கோ சென்றுவிட்டிருந்தாள்.
கண்ணாமூச்சி காட்டுகிறாளே என்று கடுப்பாய் இருந்தது கால்டனுக்கு. 4 மணி வரை அவள் சிக்கவே இல்லை. அலுத்துப் போய் செலீனாவிடம் விடைபெற்றுச் செல்லலாமென்று வந்தார்.
“நான் நளைக்கு வர்றேன் மா. எதாவது வேணுமா?”
“இன்னும் நீ இங்க தான் இருக்கியா?!!”
“இல்ல.. கம்பெனி போயிட்டு வீட்டுக்கு போகற வழியில பாத்துட்டு போக வந்தேன்.” என்று பொய்யுரைத்தார். நிஜத்தில் அவர் கயலைத் தேடி அங்கேயே தான் சுற்றிக்கொண்டிருந்தார். ஆனால் அவள் தான் அகப்படவே இல்லை. வீட்டுக்கு வருவாளா என்றும் தெரியவில்லை. 100 மெசேஜ் அனுப்பியும் பதிலே இல்லை. சோகமாக பாவமாக இருந்தது அவரைப் பார்க்கவே.
“எனக்கு எதுவும் வேண்டாம்! எதுக்கு டல்லா இருக்க?”
“இல்லையே! டயட் ஆ இருக்கேன். அவளோ தான்”
“சரி அப்ப வீட்டுக்கு கிளம்பு. பிராட் வரேன்னு சொல்லிருக்கான். முடிஞ்சா 7 மணிக்கு வா.”
“சரி முயற்சி பண்றேன். அவனையும் பாத்து ரொம்ப நாள் ஆச்சு. இப்ப யாரு வருவா? நிக்கா?”
“இல்ல. கயல் தான் தங்கறா”
“கயலா!!”
“ஆமா! கயலே தான்!” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் கயல்.
கால்டனுக்குக் கோபமாய் வந்தது.
“ஹோ.. ரொம்ப நல்லது. நன்றி டாக்டர். அம்மாவை ரொம்ப நல்லா கவனிச்சுக்குறீங்க! சரி மாம்! அப்ப நான் வர்றேன்” என்று கயலை முறைத்துவிட்டு வெளியேறினார்.
கயல், அவர் கோபத்தினை நன்றாகத் தெரிந்துகொண்டாள். அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். மெசேஜுகளின் எண்ணிக்கை பெரிதாய் இருந்தது. ஆனால் அவரிடம் சிக்கினால் அவ்வளவுதான், முத்தமிட்ட காரணத்தைக் கேட்டு படுத்திவிடுவாரென்று நினைத்து அவரைத் தவிர்த்தாள். அந்த காதல் கண்ணாமூச்சி பிடித்திருந்தது அவளுக்கு.
நிக் மகனின் சோதனை அறிக்கை 6.30க்குத் தயாராகிவிடும் என்றும் அதைத் தன் அறையில் இருக்கும் கணினியில் பார்த்துவிட்டு வருவதாகவும் சொல்லிவிட்டுக் கீழ் தளத்தில் இருந்த தன் அறைக்குச் சென்று கதவைத் திறந்தாள். அறை வாசலிலேயே அவள் இடையை வளைத்து சுவற்றுடன் அணைத்துக் கதவினைத் தாழிட்டார் கால்டன். வசமாகச் சிக்கிக்கொண்ட கயல் அதிர்ச்சியடைந்தாள்.
“மாட்டினியா?”
“நீங்க இன்னும் வீட்டுக்கு போகல்லையா? விடுங்க”
“காலையிலேருந்து கிட்டத்தட்ட 12 மணி நேரம் அலைஞ்சு இப்பத்தான் உன்னைப் பிடிச்சிருக்கேன். விட-லாம் முடியாது. சொல்லு”
“என்ன சொல்லனும்?”
“எதுக்கு முத்தம் கொடுத்தன்னு சொல்லு”
இமைகள் படபடத்தன. பதில் சொல்லவில்லை. கால்டனின் அணைப்பில் இடைவெளி குறைந்துகொண்டே வந்தது. அவள் விலக்க விலக்க அவர் அவளை இறுக்கிக்கொண்டார்.
“சொல்லு..”
“கால்டன் விடுங்க”
“முடியாது. சொல்லு”
“என்ன சொல்லு சொல்லு? நீங்க கூடத்தான் எனக்கு பலமுறை முத்தம் கொடுத்துட்டிங்க. ஏன்னு நான் கேட்டேனா?”
“நான் ஏன் முத்தம் கொடுத்தேன்னு உனக்கு தெரியும். ஆனா நீ எதுக்கு கொடுத்தன்ன எனக்கு தெரியல்லையே!”
“நீங்க ஏன் கொடுத்திங்கன்னு எனக்கு எப்படி தெரியும்?”
“தெரியாதா?”
“தெரியாது”
“சொல்லட்டுமா?”
இதயம் படு வேகத்தில் துடித்தது கயலுக்கு. சொல்லட்டுமா என்ற கேள்வியில் கால்டனின் குரல் அவளைக் கிரங்கச் செய்தது. அவரிடமிருந்து அதைக் கேட்கும் ஆவல் மிகுந்தது.
“ம்..” கொட்டினாள்.
அவரும் சட்டென்று சொல்லிவிட்டார்.
“உன்னைப் பைத்தியக்காரத்தனமா காதலிக்குறேன்!” என்று..
கயல் கால்டனின் முன்னால் முதன்முறையாய்த் தன் பெண்மையை உணர்ந்து செய்வதறியாது நின்றாள்.
-வித்யாகுரு