4.13- வராண்டாவில் முதலுதவி
கெல்லி கூப்பரைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது பிராட் கூப்பரின் அறிக்கைகள் கயலிடம் சமர்பிக்கப்பட்டன. அதைப் பார்த்த கயலின் பார்வைகள் விரிந்தன.
“உங்களுக்கு உடனடியா ஒரு சின்ன சர்ஜரி தேவைப்படுது. 1 நொடி கூட தாமதிக்கக் கூடாது” என்று அவசரமாய்ச் சொல்லிவிட்டு செவிலிகளுக்கும் படிக்கும் மருத்துவர்களுக்கும் படபடவென பல உத்தரவுகள் போட்டாள் கயல். கூப்பர் குடும்பத்தினருக்கு ஒன்றுமே புரியவில்லை.
துரதிர்ஷ்டவசமாக அன்றும் இரவு நேர எமர்ஜென்ஸி டூட்டி சர்ஜன் எவாஞ்சலின். அன்று தான் அவள் முறையின் கடைசி டூட்டி. அவளே அவசர அறுவை சிகிச்சைகளுக்கு ஒப்புதல் தர வேண்டும். கடுப்பில் இருந்த அவள் லேசில் தந்துவிடுவாளா? போக்கு காட்டினாள். கோபத்தின் உச்சிக்கே போய்விட்ட கயல் அவளை ஒப்புதல் தரச்சொல்லிக் கத்திக்கொண்டிருந்தாள். அவளின் சத்தம் கேட்டு ஆபத்பாந்தவனாய் வந்தார் prof.Dr.ஸ்மித்.
“என்ன கயல்? எதுக்கு வராண்டாவுல நின்னு இப்படி கத்திகிட்டு இருக்க?”
“prof. இவரு கெல்லி கூப்பரோட கடைசி மகன். 2 நாள் முன்ன விழுந்துருக்காரு. தலையில அடி பட்டிருக்கு. ஆனா கவனிக்கல்ல. இப்ப மூக்குலேருந்து CSF திரவம் வழியுது. (CSF திரவம் மூளைக்கும் மண்டை ஓட்டிற்கும் இடையில் உள்ள ஒரு வகை திரவம். மூளையின் குஷன் போன்றது. மூளைக்குத் தேவையான சத்துக்களை இதுவே சுமந்து செல்கிறது. சிலருக்கு மூளையில் அடி பட்டால் அந்த திரவம் மூக்கு வழியாய் ஒழுகும். அதைச் சளி என்று தவறாய் நினைத்து அலட்சியம் செய்து மண்டையைப் போட்டவர்கள் ஏராளம்.) சி.டி ஸ்கேன் ல மூளையில ஒரு ஏர் பபுள் பாத்தேன். உடனடியா ட்ரில் போட்டு ப்ரஷரை வெளியேத்தனும். ஆனா இவ ஓ.டி போஸ்ட் பண்ண சம்மதிக்க மாட்டேங்கறா. நேரம் வீணாகுது”
“நா போஸ்ட் பண்றேன். சர்ஜன்ஸ் வேற யாரு இருக்காங்க?” என்று ஸ்மித் கயல் சொல்வதில் உள்ள தீவிரத்தைச் சட்டென்று புரிந்துகொண்டு பரபரப்புடன் செயலில் இறங்கிய போது சரியாக பிராட் வராண்டாவிலேயே மயங்கி விழுந்துவிட்டார். ட்ராலிக்கு ஸ்மித் கத்தினார்.
“வேண்டாம் prof. டைம் இல்ல.” என்று சொல்லி பக்கத்து அறைக்கு விரைந்து தேவையான கருவிகளை எடுத்து வந்தாள் கயல்.
பிராட் கழுத்தை ஒரு உருளை தலையணையில் வைத்தாள். இண்டுபேட் செய்தாள். (தொண்டைக்குள் பெரிய டுயூப் விட்டு செயற்கை சுவாசத்தோடு பொருத்துவது)
தலையில் விரலை வைத்து ஏதோ அளந்தாள். குறித்துக்கொண்டு அந்த பகுதியை மட்டும் ஷேவ் செய்தாள். ட்ரில் கருவியை ஆன் செய்தாள். சுற்றி இருந்த கால்டனின் மொத்த குடும்பமும் ஸ்தம்பித்தது. ஸ்மித்தும் தான்.
“இங்கையே ட்ரில் பண்ணப்போறியா கயல்??!!!!” என்று ஸ்மித் வினவ, “வேற வழி இல்ல Prof.” என்று சொல்லிவிட்டு பிராட் தலையில் ட்ரில் போட்டுக்கொண்டு மூளை வரை சென்று பின்வாங்கினாள். ரத்தம் பீறிட்டது. அதற்குள் ட்ராலி வந்துவிட பிராட் ட்ராலிக்கு மாற்றப்பட்டார்.
“மத்ததை நானே பாத்துக்குறேன் கயல்” என்று சொல்லிவிட்டு ஸ்மித் தியேட்டர் நோக்கி ஓடினார். எவாஞ்சலினையும் திட்டி அழைத்தார். அதிர்ச்சிக்கு இடையே அவளும் தியேட்டருக்கு ஓடிப் போனாள்.
கயலுக்கு மூச்சு வாங்கியது. தளர்ந்து போனவளைக் கால்டன் ஏந்தி பக்கத்தில் ஒரு நாற்காலியில் அமர வைத்தார். கால்டனின் குடும்பம் மொத்தமும் என்ன நடந்தது என்று புரியாமல் அதிர்ச்சியில் உறைந்தது.
செலீனா கால்டனிடம் கயலைத் தன் அறைக்கு அழைத்துச் செல்லும்படிச் சொன்னார். யாரும் எதுவும் பேசவில்லை. காரணம் செலீனாவே அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவரைத் தாண்டி அங்கே யாரும் பேச முடியாது. செலீனா அனைவரையும் அறுவை சிகிச்சை அரங்கின் வாயிலில் காத்திருக்கும் படி சொல்லிவிட்டு கயல் கால்டனுடன் தன் அறைக்குச் சென்றார்.
அறைக்குத் தள்ளாடி நடந்து வந்த கயல் உள்ளே வந்ததும் மயங்கினாள்.
கால்டன் பதறிப் போனார். மருத்துவர் வந்து பார்த்துவிட்டு பிரச்சினை ஒன்றுமில்லை அதீத சோர்வு தான் என்று சொன்னது வரை கால்டன் துடித்த துடிப்பைப் பார்த்த செலீனாவுக்கு சந்தேகமின்றி கயல் யாரென்பது புரிந்து போனது.
மயங்கிக் கிடந்த அவளின் உள்ளங்கைகளைப் பிடித்துக்கொண்டே கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த கால்டன் சட்டென்று செலீனாவிடம் திரும்பி, “கயல் எழுந்ததும் நா வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போய்டுவேன். நீங்க வேற யாரையவது கூட தங்க வச்சுக்கோங்க. 3 நாளா ஓய்வே இல்லாம சுத்தி இப்படி ஆகிடுச்சு. இனிமே நீங்களே பாத்துக்கங்க. நான் போகும் போது 4 நாள் லீவ் சொல்லிட்டு கூட்டிக்கிட்டு போய்டுவேன்” என்று கடுகடுப்பாய்ச் சொன்னார்.
“நீ விரும்பறது கயலைத்தானா?” என்று முறைத்துக்கொண்டே கேட்டார் செலீனா.
ஆமென்று ஆமோதித்தார் கால்டன்.
“இது கொஞ்சம் கூட ஒத்து வராது கால்டன். நீங்க 2 பேரும் டோட்டல் காண்ட்ராஸ்ட் உலகங்களைச் சேர்ந்தவங்க. வீணா குழப்பம் தான் வரும்”
“உங்க கிட்ட நான் கருத்தோ அனுமதியோ கேக்கல்ல. நான் அன்னிக்கே சொன்ன மாதிரி, என்னை என் வழியில விட்டுடுங்க”
“கயலுக்கு இந்தியாவுல வைத்தியம் பாக்கனுமின்னு லட்சியம் இருக்கு. அப்பாவைத் தாண்டி அவ உன்னோட வாழ வரவே மாட்டா. வீணா ஏமாந்து போகாத. கயலையும் கஷ்டப்படுத்தாத. பாவம்! விட்டுடு கால்டன். ஒரு அம்மாவா என்னோட வேண்டுகோள் இது.” என்று சொல்லிவிட்டு வேக நடையில் வெளியேறினார் செலீனா.
கால்டன் குழம்பினார். செலீனா என்ன சொல்ல வந்தாரென்று புரிந்துகொள்ள முடியவில்லை. பணத்தையும் குடும்ப செல்வாக்கையும் அவர் காரணம் காட்டவில்லை என்று மட்டும் அவருக்கு நன்றாய்த் தெரிந்தது. ஆனால் கயலைக் கஷ்டப்படுத்தாதே என்று சொன்னதன் அர்த்தம் விளங்கவில்லை. தீவிரமாய்ச் சிந்தித்தார்.
அரை மணியில் கண்விழித்த கயல் பதறி எழுந்தாள். சர்ஜரி என்ன ஆனறதென்று புலம்பியபடி எழுந்தவளைக் கால்டன் தடுத்து அமர்த்தினார்.
“எங்க போற? இப்ப வீட்டுக்கு போறோம் நாம. 4 நாள் உனக்கு லீவ் சொல்லிட்டேன். ரெஸ்ட் எடுக்குற. வேற எதையும் நீ பாக்க வேண்டாம்”
“கால்டன். உங்களுக்கு புரியல்ல. நான் பெரிய சிக்கல்ல மாட்டியிருக்கேன். சர்ஜரி என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிக்காம நான் வர மாட்டேன்”
“என்ன சிக்கல்?”
“நா செஞ்ச எல்லாமே தப்பு கால்டன். யாரோட அனுமதியும் வாங்காம எந்த கையெழுத்தும் வாங்காம வராண்டாவுல வச்சு ஒருத்தர் மண்டைல ட்ரில் போட்ருக்கேன். அவருக்கு எதாச்சும் தப்பா ஆச்சுன்னா காலத்துக்கும் நா ஜெயில் ல இருக்கனும் கால்டன். என் டாக்டர் வாழ்க்கையே முடிஞ்சு போய்டும்” என்று பதறினாள். அழுதாள்.
கால்டனுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது. “என்ன சொல்ற கயல்.!!?? இது தப்புன்னா ஏன் செஞ்ச?”
“தியேட்டருக்கு கூட்டிட்டு போய் சி.டி ஸ்கேன் பண்ணி பாத்துக்கிட்டே தான் ட்ரில் போடனும். ஆனா அதுக்குள்ள அவரு இறந்துபோய்டுவாரு கால்டன். அதான் ஒரு முறை பாத்த சி.டி இமேஜ வச்சுக்கிட்டு தோராயமா ட்ரில் போட்டேன். சரியான்னு தெரியாது”
“என்ன கயல்??!! எதுக்கு இத்தனை பெரிய ரிஸ்க் எடுத்து வச்சிருக்க? இப்ப என்ன செய்யுறது? நிக் வேற இருக்கானே. சட்டமெல்லாம் அவனுக்கு தெரியுமே!”
கயல் டென்ஷனாகி அழுதாள்.
“நான் அறிமுகம் ஆன நேரம் தானா இப்படி உங்க குடும்பத்துல எல்லாரும் பேஷண்ட் ஆகனும்!?” என்று நொந்து கொண்டாள்.
“என்ன பேசுற கயல்? என் குடும்பத்துல 10 பேர் இருக்கோம். எங்க எல்லாரும் பேஷண்ட் ஆயிருக்கோம்? எப்படி இப்படியெல்லாம் தோணுது உனக்கு!!”
“உங்க அப்பா, அம்மா, அண்ணன் பையன், இப்போ உங்க தம்பி. அவங்க நேரம் சரியில்லியா என் நேரம் சரி இல்லையா தெரியல்ல”
“எனக்கு கோவமா வருது நீ பேசுறது. என்ன மூட நம்பிக்கை இது!!?? 2 நாள் முன்ன வரை யாருன்னே தெரியாதவங்க வாழ்க்கையில நடக்குற விபத்துக்களுக்கு நீ அறிமுகமான நேரம் எப்படி காரணம் ஆகும்? சரி உன் பேச்சுக்கே வரேன். போக வேண்டிய அப்பா உன்னால பிழைச்சாரு. பல வருஷ இறுக்கத்துலேருந்து அம்மா உன்னால விடுதலை ஆனாங்க. அண்ணன் பையனுக்கு இத்தனை வருஷமா இருந்த வலிப்பு நோய் உன்னால தெரிய வந்திருக்கு. உன் கரியரையே பணையம் வச்சு பிராட் அ காப்பாத்த ரிஸ்க் எடுத்து முயற்சி செஞ்சிருக்க. நீ வந்த நேரம் நல்லா இருக்கு தானே கயல்!”
“நீங்க சொல்ற மாதிரி அவங்களுக்கு தோணாது கால்டன். என்ன துரதிர்ஷ்டக்காரியா தான் பாப்பாங்க”
“அப்படி பாத்தா அவங்க எல்லாருமே முட்டாள். இப்ப அதுவா பிரச்சின?! சர்ஜரி நல்ல விதமா முடிஞ்சு அவன் பிழைக்கனும். அப்படி நீ பயப்படுற மாதிரி ஏதாச்சு நடந்தா உன்ன மீட்க நான் என்ன வேணுமின்னாலும் பண்ணுவேன். தயவு செஞ்சு டென்ஷன் ஆகாத கயல். நீ ப்ரெக்னெண்டா இருக்க. நியாபகம் வச்சுக்கோ” என்று கால்டன் ஆதரவாய் பாசிட்டிவாய்ப் பேசினார்.
ஆனால் கயலுக்கு ரொம்பவே பயமாய் இருந்தது. எண்ணித்துணிக கருமம் குறளை அவளின் அப்பா சொல்வது போல் தோன்றியது. ஓர் உயிரைக் காக்கும்பொருட்டு அவள் செய்த காரியம் அவளுக்கே வினையாய் முடிந்துவிடுமோ என்று அஞ்சினாள். தன் அம்மாவை வேண்டிக்கொண்டாள்.
கால்டன் கயலுக்கு தைரியம் சொன்னாரே தவிர உண்மையில் அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பயம் தொற்றிக்கொண்டது.
சில நிமிடங்களில் கூப்பர் குடும்பமும் Prof.Dr.ஸ்மித்தும் உள்ளே வந்தனர்.
கயலும் கால்டனும் பீதியடைந்தனர். கால்டனுக்கு வயிறு கலக்கியது. கயலுக்கு தொண்டை அடைத்தது.
4.14- அமெரிக்க சட்டத்துல என்ன தண்டனை தெரியுமா?
-வித்யாகுரு