4.14- அமெரிக்க சட்டத்துல என்ன தண்டனை தெரியுமா?
கூப்பர் குடும்பமும் ஸ்மித்தும் உள்ளே நுழைந்ததும் கயலும் கால்டனும் உள்ளுக்குள் நடுங்கித்தான் போயினர். அதிலும் ஸ்மித் கேட்ட கேள்வியில் கயல் இன்னும் பீதியானாள்.
“எப்படி அந்த ட்ரில் போட்ட கயல்?” என்று ஸ்மித் கேட்டதும் கயலின் பார்வை செலீனா பக்கம் திரும்பியது. அவருக்கு புத்திர சோகத்தைப் பரிசளித்துவிட்டோமா என்று கண்கள் கலங்க குற்ற உணர்வுடன் பார்த்தாள் கயல்.
“என்னாச்சு Prof! அவரு பிழைச்சுட்டாரா?”
“ம்.. பிழைச்சுட்டாரு. அதான் கேக்குறேன் எப்படி அந்த ட்ரில்ல இவளோ துல்லியமா போட்ட?. சி.டி இல்லாம இது எப்படி சாத்தியம்? என்ன கணக்கு? நாங்க இதைச் சொல்லித் தரல்லையே!”
உயிரே வந்தது போல் இருந்தது கயலுக்கும் கால்டனுக்கும்.
“உன் சமயோஜித புத்தியும் மருத்துவ அறிவும் திறமையும் மறுபடியும் நிரூபனம் ஆகியிருக்கு கயல்” என்று தன் மாணவியை நினைத்துப் பெருமைப்பட்டார் ஸ்மித். செலீனாவும் ஹன்னாவும் கயலை நன்றியோடு பார்த்தனர்.
“பிராட் நல்லா இருக்காரு. ஆனா குறைஞ்சது 1 வருஷத்துக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி செய்யக்கூடாது” என்று சொன்னார் Prof. Dr. ஸ்மித். “அப்பறமா எப்படி ட்ரில் போட்டன்னு எனக்கு சொல்லி தா” என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.
மற்ற அனைவரும் கயலுக்கு நன்றி சொல்லிவிட்டு விடைபெற்றனர். நிக்கை மட்டும் கயல் நிற்கச் சொன்னாள். அனைவரும் சென்றதும் செலீனா முன்னிலையில் நிக்கிடம் அவர் மகனுக்கு உள்ள வலிப்பு நோய் பற்றி விளக்கினாள்.
“இதோ பார். உன் உதவியோ ஆலோசனையோ எனக்கு தேவையில்ல. நான் கெண்டக்கிலயே பெரிய டாக்டர் கிட்ட என் பையனைக் காட்டிக்குவேன். எல்லாரும் உன்ன தேவதை ரேஞ்சுக்குப் பாராட்டுறாங்க. உண்மையில நீ செஞ்சிருக்கறது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? யார் அனுமதி கொடுத்து என் தம்பி தலையில ட்ரில் போட்ட நீ? வராண்டாவில எந்த பாதுகாப்பும் இல்லாம ஒருத்தர் மண்டை ஓட்டுல துளை போட்டிருக்க. என் தம்பிக்கு லக். பிழைச்சிட்டான். ஆனா வேற மாதிரி ஆகியிருந்தா உனக்கு அமெரிக்க சட்டத்தில என்ன தண்டனை தெரியுமா?” என்று மிரட்டும் பாணியில் நிக் பேசியதும் கால்டனுக்குக் கோபம் எல்லை கடந்தது.
“இப்ப கூட உன் மேல நான் கேஸ் போடத்தான் போறேன்.” என்று சொன்ன நிக்குக்குக் கால்டனை முந்திக்கொண்டு செலீனா பதிலடி கொடுத்தார்.
“நீ கயல் மேல கேஸ் போட்டா அந்த கேஸ்ல நீ வாதாட வருவதற்குள்ள உன் வக்கீல் லைசென்ஸ் கேன்சல் ஆகிடும் நிக். மறந்திடாத.” என்று கர்ஜித்தார் செலீனா கூப்பர். அம்மா தான் பேசுகிறார்களா என்பது போல் பார்த்துவிட்டு பெருங்கோபத்துடன் வெளியேறினார் நிக் கூப்பர்.
“போகலாமா?” என்று கால்டன் கடுகடுப்பாய்க் கயலிடம் கேட்டார். கயல் செலீனாவைப் பார்த்தாள். போவென்று அவரும் சொல்லவே கால்டனிடம் “ம்” கொட்டினாள் கயல்.
அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார் கால்டன். ஹன்னாவுக்கு ஃபோன் செய்து செலீனாவுடன் எவரேனும் ஒருவர் தங்க ஏற்பாடு செய்யச்சொன்னார். பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்புவதற்காக இருவரும் கயலின் அறைக்குச் சென்ற போது அங்கே வேறு ஒருவர் காத்திருந்தார்.
“யார் நீங்க?”
“எனக்கு உங்க உதவி வேணும். எனக்கு மூளையில என்னவோ இருக்கு. அதை நீங்க தான் வெளிய எடுத்துவிட்டு சரி செய்யனும்.” என்று பதட்டமாய்ச் சொன்னார் அந்த நபர்.
பார்ப்பதற்கு ஒல்லியாய் இருந்தார். 5 அடி உயரம். படிக்கும் மாணவர் போல் இருந்தார். அவர் மன அழுத்தத்தில் இருப்பதைக் கால்டனால் கூடப் புரிந்துகொள்ள முடிந்தது. கை கால் எல்லாம் நடுங்கியபடி கண்களில் மிரட்சியோடு கயலை உதவும்படிக் கேட்டார் அந்த நபர்.
“எதுவா இருந்தாலும் 4 நாள் கழிச்சு வாங்க.” என்று அவரிடம் சொல்லிவிட்டு கயலின் பொருட்களை எடுத்துக்கொண்டு அவளையும் இழுத்துக்கொண்டு நடையைக் கட்டினார் கால்டன். கயலும் ஒன்றும் பேசவில்லை. அந்த நபர் சிறப்பு அனுமதி பெற்று கயலைக் காண காத்திருந்ததால் மிகுந்த ஏமாற்றமடைந்தார். கயல் கால்டனுடன் கிளம்பினாள்.
3 நாட்களுக்குப் பிறகு இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். மணி இரவு 11. பால் மட்டும் குடித்துவிட்டு கயல் உறங்கிப் போய்விட்டாள். அதீத சோர்வாகி விட்டிருந்தாள். லீலாவிடம் காரில் வந்த போதே சுருக்கமாய்ப் பேசிவிட்டாள். அதனால் வீட்டுக்கு வந்ததும் தூங்கிவிட்டாள்.
உடன்பாடில்லாவிட்டாலும் வேறு வழியின்று 2 நாட்களாக வாந்திக்கு மாத்திரை எடுத்துக்கொண்டதால் வாந்தி அவ்வளவாக எடுக்கவில்லையே தவிர தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருந்ததாலும் வேலை பளுவினாலும் அவள் மிகவும் அசதியாகிவிட்டாள். பால் டம்பிளரை வைத்துவிட்டு வருவதற்குள் தூங்கியே போய்விட்ட கயலைக் கண்ட கால்டன் பிரசவம் வரை அவளைக் கூடவே இருந்து அதிகம் அலட்டிக்கொள்ள விடாமல் பார்த்துக்கொள்வது என ஒரு முடிவெடுத்தார். தன் குடும்பத்தோடு, குறிப்பாக செலீனாவோடு, கயலை அதிகம் நெருங்கவிட வேண்டாம் என்றும் நினைத்தார்.
தான், கயல், குழந்தை என்ற சிறிய உலகத்தைக் கற்பனை செய்துகொண்டே அவள் பக்கத்தில் படுத்து உறங்கியும் போனார். மறுநாள் முதல் அடுத்து வந்த 4 நாட்களும் இருவரும் வெளியில் செல்லவே இல்லை. வாழ்வில் மறக்கவே முடியாத இனிப்பான நாட்களாக அவை மாறின.
இருவரும் அத்தனை நிமிடங்களையும் சேர்ந்தே கழித்தனர். சமைத்தனர், தோட்டவேலை செய்தனர். ஒன்றாய் வீட்டைச் சுத்தம் செய்தனர். கதை கதையாய்ப் பேசினர். நிகழ்கால நொடிகளில் சிரித்து மகிழ்ந்திருப்பது என்ற ஒரு முடிவோடு இருவருமே கடந்து போன நிகழ்வுகளைப் பற்றியோ எதிர்காலத்தில் காத்திருக்கும் குழப்பங்களைப் பற்றியோ பேச்சே எடுக்கவில்லை.
தெரெக்கும் எல்க்கும் ஒரு முறை வந்து சிறிது நேரம் இருந்து விட்டுச் சென்றனரே தவிர மற்றபடி தலைவனும் தலைவியும் தனிமையில் தான் இருந்தனர். கரைகடந்த காதலிலும் கால்டன் கன்னியம் தவறாதிருந்தது கயலை மொத்தமாய்க் கவர்ந்தது.
கால்டனின் ஓவியத் திறமையிலும் கிட்டார் வாசிப்பிலும் கயல் சொக்கித்தான் போனாள். இருவரும் தரமான நேரத்தினைப் பகிர்ந்துகொண்டனர். அவ்வப்போது காதல் பார்வைகளும், பட்டும் படாத கூடல்களும், வார்த்தை வலை விரிப்புக்களும் மறுபுறம் நடக்கத் தவறவில்லை.
கயலின் வாந்தி சோர்வு மசக்கையும் கால்டனின் ஸ்பரிசத்தினால் சுகமாகிப் போனது. கயலின் கைப் பக்குவத்தில் சில இந்திய உணவுகளையும் ருசிபார்த்தார் கால்டன். மிகவும் பிடித்தது அவருக்கு. கயலுக்குப் புல்லாங்குழல் வாசிக்கத் தெரிந்திருந்தது. குழலின் கானங்களில் கால்டன் தொலைந்தே போனார்.
மொத்தத்தில் அந்த 4 முழு நாட்கள், அவர்கள் இருவரையும் இணைத்து விதி பின்னிவைத்திருந்த முடிச்சுக்களைக் கன்னாபின்னாவென்று இறுக்கிவிட்டன. இருவரும் நல்ல நண்பர்களாக, நல்ல கூட்டாளிகளாக மாறினர்.
கயலின் தந்தையின் உடல்நிலை சிறிய அளவில் முன்னேற்றம் அடைந்தது. அவ்வப்போது நினைவுக்குக் கொண்டுவரப்படார். வெண்டிலேட்டர் சப்போர்ட் அளவினைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைக்கலாம் என்ற நிலைக்கு வந்தார். கயலுக்கு அது பெரிய நிம்மதியை அளித்தது. கால்டனும் கம்பெனி செல்லவில்லையே தவிர, அனைத்தும் சுமூகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. அதனால் அவரும் மகிழ்ச்சியாய் இருந்தார்.
நான்காம் நாள் முன்னிரவு. தோட்டத்து பால்கனியில் நெருப்பிடத்தின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் கயல். பக்கத்தில் உரசிக்கொண்டு அமர்ந்த கால்டனின் அணைப்புக்குள் சென்ற கயலிடம், தயங்கித் தயங்கி ஆரம்பித்தார் கால்டன்.
4.15 – உன்கிட்ட ஒன்னு கேக்கனும்
-வித்யாகுரு