4.14 அமெரிக்க சட்டத்தில என்ன தண்டனை தெரியுமா?
4.15 – உன்கிட்ட ஒன்னு கேக்கனும்
செப்டம்பர் மாதத்தின் முன்னிரவு நேரத்தில், நான்கு நாட்கள் கிடைத்த ப்ரைவசி நிகழ்த்திய மாயாஜாலத்தில் தலைவனின் அணைப்பில் நெருப்பிடத்தின் பக்கம் அமர்ந்திருந்த கயல், “உன்கிட்ட ஒன்னு கேக்கனும்” என்ற கால்டனிடம் வெறும் “ம்” மட்டுமே கொட்டினாள். உண்மையில் அப்படியே இறுதிவரைக்கும் இருந்துவிட்டால் எத்தனை நன்றாக இருக்குமென்று தான் உள்ளுக்குள் அவள் மனம் சொல்லிக்கொண்டிருந்தது.
4 நாள்கள் அவளும் அவரும் முழுக்க முழுக்க சேர்ந்து செலவிட்ட அத்தனை நிமிடங்களும் இருவருக்கும் நிம்மதியினை அள்ளித்தந்தது. நம் இணை நமக்கு எப்போதும் நிலையான நிம்மதியினை அளிக்க முடிந்தால் அதை விட மகிழ்ச்சி வேறென்ன இருக்கிறது??!!
இவளோடு/இவரோரு இருப்பது, இவளோடு/இவரோரு பகிர்வது, கம்ஃபர்டபிளாக உள்ளது என இருவரும் உணர்ந்தனர். இத்தனைக்கும் இன்னும் காதல் அவளிடமிருந்து வார்த்தைப்படவில்லை. ஆனால் கால்டன் அதை எதிர்பார்க்கவும் இல்லை. கயல் தன்னைக் காதலிக்கிறாள் என்பதை அவர் உணர்ந்துவிட்டார். கயல் அதை வார்த்தையின்றி விளக்கிவிட்டாள்.
ஆனால் கயலுக்குச் சில குழப்பங்கள் இருக்கத்தான் செய்தது. கால்டன் அளவுக்கு அவள் தெளிவடையவில்லை.
மருத்துவமனையில் செலீனாவுடன் தங்கியிருந்த அந்த இரவுக்குப் பிந்தைய காலையில் அவள் டூட்டிக்குத் தயாரான பின்பு, செலீனாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். அப்போது செலீனா தன் ஒவ்வொரு பிள்ளையைப் பற்றியும் அவர்களை நானிக்களைக் கொண்டு வளர்த்ததைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஒவ்வொருவரையும் அவர்களிடம் தெரிந்த திறமையைக் கண்டுபிடித்து அந்தந்த துறைகளில் கல்வி கொடுத்து இன்று அனைவரையும் தத்தம் துறைகளில் வல்லவர்களாக்கி விட்டிருப்பதைப் பற்றிச்சொல்லி பெருமைப்பட்டார்.
நிக் மற்றும் ஹன்னாவுக்குத் தங்கள் குடும்ப ஸ்டேட்டஸுக்குத் தக்கபடி மணமுடித்து வைத்திருப்பது பற்றியும், பிராட்-டுக்கும் பெண் தயாராய் இருப்பது பற்றியும் சொல்லிவிட்டு கால்டனிடம் வந்தார்.
“எமிலின்னு ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடுகள் செஞ்சோம். ஆனா கால்டன் போட்ட ஒரு கண்டிஷனால கல்யாணத்துக்கு வராம மானத்த வாங்கிட்டா.”
“அப்படி என்ன கண்டிஷன் போட்டாரு?!”
“கல்யாணத்துக்கு அப்பறம் நிறைய நேரம் ஒன்னா செலவிடனுமின்னு”
“கரெக்ட் தானே!”
“எமிலி அவளோட அப்பா கம்பெனியை நிர்வகிக்குறா. அவ வீட்டுல கால்டனோட நிறைய நேரம் எப்படி செலவிடுவா? சரோகேட் வைக்க கூடாது நானி வைக்க கூடாதுன்னா எப்படி?! பணம் சொத்துன்னு அலையக்கூடாதுன்னு கால்டனோட எண்ணத்துக்கு எங்க ஸ்டேட்டஸ்-ல ஒரு பொண்ணும் சம்மதிக்க மாட்டா! ஆனா எமிலி கொஞ்சம் முன்னாடி சொல்லியிருக்கலாம். கல்யாண மேடையில வராம இருந்து.. இப்படி காலடனை மறுத்துருக்க வேண்டாம். பாவம்.. ரொம்ப அவமானமா போச்சு. அதுக்கு அப்பறம் தனியா ஒரு சின்ன வில்லாவுக்குப் போயிட்டான். ஒரு மனமாற்றத்துக்காக போறான்னு நானும் நினைச்சேன். ஆனா அப்படி இல்லயோன்னு இப்ப தோணுது. அவன் மொத்தமா வேற பாதையில போகப்பாக்குறான்.”
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“எமிலிக்கு அப்பறம் இந்த எவாஞ்சலின் தான் எங்க அளவு குடும்பம். அதனால எவாஞ்சலினைக் கல்யாணம் பண்ணிக்க சொன்னோம். முடியவே முடியாதுங்கறான். அவன் சொன்ன காரணம் தான் கவலையா இருக்கு!!”
“என்ன காரணம் சொன்னாரு?”
“அவன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துட்டானாம். அவ தான் இனி அவன் உயிரும் உலகமுமாம். அவளைக் கூடிய விரைவுல கல்யாணம் பண்ணிக்க போறானாம். அந்தப் பொண்ணு வெளிநாட்டு பொண்ணாம். எங்க பணத்துக்கு ஏணி வச்சாலும் எட்டாதாம். எங்க சம்மதம் கூட அவன் எதிர்பார்க்கல்லை. என் வழியில விட்டுடுங்கன்னுட்டான். ஆனா அப்படியெல்லாம் விடவே முடியாது. அந்த பொண்ணப்பத்தி சகலமும் விசாரிப்பேன். கெல்லி முதல்ல சரி ஆகட்டும். ஆனா கால்டன் தன் காதல்ல நான் எதிரே பார்க்காத அளவு உறுதியா இருக்கான்” என்று செலீனா முடித்ததும் கயல் உணர்வு வசமானாள்.
கால்டன் குறிப்பிட்ட “அவள்” யாரென்று தான் அவளுக்குத் தெரியுமே!!
இந்தக் காரணத்தை அவர் சொல்லியிருப்பார் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. காதலை வெளிப்படுத்தாத நிலையிலும், தன் சம்மதத்தைப் பெறாத நிலையிலும் கால்டன் எத்தனை உறுதியாகத் தன் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார் என்று சிலாகித்தாள். எந்த அளவு தன் மீது காதலும் நம்பிக்கையும் அவர் வளர்த்திருக்கிறார் என்று புரிந்தது அவளுக்கு.
அவருக்குத் தன் மேல் இருக்கும் அளவு நம்பிக்கையை அவர் மீது தான் வைக்கத் தவறிவிட்டோம் என்றும் உணர்ந்தாள். முந்தைய நாள் இரவு அவர் கோபப்பட்டதன் காரணம் அப்போது நன்றாய்ப் புரிந்தது அவளுக்கு.
சிந்தித்துக்கொண்டே தன் அறைக்கு வந்துகொண்டிருந்த போது அவரை உடனே பார்க்கவேண்டும் என்ற வேட்கை மிகுந்தது. அறைக்குள் நுழைந்ததும் சரியாக அங்கே கால்டன் காத்திருந்ததும் காதல் பெருக்கெடுத்து முத்தமுட்டாள்.
முத்தம் பெற்ற அன்றைய நாள் மாலை அவரும் “பைத்தியக்காரத் தனமா உன்னைக் காதலிக்குறேன்” என்று வெளிப்படுத்தியும் விட்டார். இருப்பினும் திருமணம், வேறுபாடுகளைக் கடந்து வாழ்வது பற்றியெல்லாம் அவளுக்குள் குழப்பங்கள் ஓடிக்கொண்டிருந்துதான் இருந்தது. ஆனால் இந்த 4 நாட்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அவரோடு நேரம் செலவிடுவதென்று முடிவெடுத்து அவள் வாயைத் திறக்கவே இல்லை.
தற்போது நெருப்பிடத்தின் பக்கத்தில் அவளை அணைத்துக்கொண்டு வந்தமர்ந்த கால்டன், “உன்கிட்ட ஒன்னு கேக்கனும்” என்று துவங்கினார். கயல் மயங்கிக் கிடந்த போது செலீனா விட்ட வார்த்தைகள் அவர் மனதைக் குடைந்துகொண்டே இருந்தன.
“ம்..”
“உன் வருங்கால ப்ளான் என்ன?”
“புரியல்ல..”
“ஐ மீன்.. இந்தியாவுல தான் வேலை பாக்கனுமா?”
“ஆமா.. என் நீண்ட கால லட்சியம் அது.”
“ஏன் அப்படி? எல்லா நாட்டு மனுஷங்களும் உயிர் தானே!!?”
“அப்படி இல்ல கால்டன். இந்தியாவுல மூளை அறுவை சிகிச்சைக்கு சர்ஜன்ஸ் கம்மி. அமெரிக்கா மாதிரி எங்க மக்களால வைத்தியத்துக்கு செலவு பண்ண முடியாது. வசதிகளும் இல்ல. என் அம்மாவும் அதுனாலத்தான் செத்துப் போனாங்க. அப்பத்திலேந்து ஒரு வைராக்கியம். அரசு மருத்துவமனையில வேலை செய்யனுமின்னு. அதோட அப்பாவும் இருக்காரு. அதுனால இந்தியாவில தான் வேலை பாக்கனும் எனக்கு.”
கால்டன் மேற்கொண்டு எதுவும் பேசவோ கேட்கவோ இல்லை. அவர் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது. அவளை அணைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவர் சட்டென்று எழுந்து போய்விட்டார்.
கயல் அதிர்ச்சியாய் அவர் போன வழியையே பார்த்துக்கொண்டிருந்தாள். கண்கள் கலங்கின.
4.16- சூழ்ந்து வந்த ஆபத்து
-வித்யாகுரு