4.22- மிரட்டிய நிக் கூப்பர்!
ஆசை ஆசையாய்த் தன்னவளை பிக் அப் செய்து அழைத்துப் போகையில் கயல் மீண்டும் துவங்கிய புள்ளிக்கே வந்து நின்றதும் அதிர்ச்சியானார் கால்டன்!
“என்ன திரும்பவும் பிரிஞ்சு போறேன்னே சொல்லிட்ருக்க?”
“நான் பிரிஞ்சு போறேன்னு சொல்லல்லியே! வீட்டை விட்டு போறேன்னு தானே சொல்றேன்!”
“ரெண்டும் ஒன்னு தானே!”
“இல்லையே!”
“எனக்கு இந்த கான்செப்ட் சுத்தமா புரியல்ல! நீ என்னைக் காதலிக்குற தானே! அப்படின்னா ஒரே வீட்டுல தானே இருக்கனும்!!!”
“அது உங்க நாட்டுல! எனக்கு ஒரே வீட்ல ஒன்னா வாழ காதல் மட்டும் பத்தாது. கல்யாணம் பண்ணனும். உங்க மனைவியாத்தான் உங்க கூட நான் சேர்ந்து இருப்பேன். இது என் கலாச்சார நம்பிக்கை.”
“எனக்கு இன்னும் கூட தெளிவா புரியல்ல. பட் புரியல்லான்னாலும் உன் எண்ணத்துக்கு நான் மதிப்பு குடுக்குறேன் கயல்!”
குழம்பியிருந்த முகத்தில் சட்டென்று ஒரு தெளிவும் பிரகாசமும் வந்தது. அதைக் கால்டனும் கவனித்தார்.
கலாச்சார வித்தியாசங்கள் தான் இவர்களுக்குள் பெரும் குழப்பங்களைத் தோற்றுவிக்கும் என்பது கயலின் கனிப்பு. தர்க்க ரீதியில் அது உண்மையும் கூட. ஆனால் கால்டன், புரியாவிடினும் மதிப்பு கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராய் இருப்பது அவளுக்குள் பெரியதொரு நிம்மதியினைத் தோற்றுவித்தது.
“நீ மருத்துவமனை குடியிருப்புக்கு மாறிக்கோ! ஆனா உன்னை என் மனைவியா நான் ரொம்ப ரொம்ப சீக்கிரம் திருப்பி கூட்டிக்கிட்டு வந்திடுவேன். நாளைக்கே பதிவுத் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிச்சுருவேன்.”
“அதுலையும் ஒரு சிக்கல் இருக்கு.”
“என்ன!? குடியுரிமை சிக்கலைச் சொல்றியா!?
“இல்ல.. அதெல்லாம் சமாளிச்சுக்கலாம்.”.
“பின்ன..”
“அப்பா சம்மதிக்கனும்.”
“எது! உன் அப்பாவா?!”
“உங்க அப்பாவும் தான்! 2 குடும்பங்களும் சம்மதிச்சு ஆசிர்வாதம் பண்ணி கல்யாணம் செஞ்சு வைக்கனுங்கறதுதான் என் விருப்பம்.”
கால்டன் அதிர்ச்சியானார். அவருக்கு இது சுத்தமாகவே புரியவில்லை. இருப்பினும், “அவளோ தானே! வாங்கிக்கலாம். ஏற்பாடு பண்ணிடலாம்” என்று சொல்லிவைத்தார்.
அவர் இதைச் சுலபமாய் நினைக்கிறார் என்று புரிந்துகொண்டாள் கயல். கயலின் அத்தை, சித்தி, மாமாக்கள், பாட்டி, பெரியப்பா, பெரியப்பா மகள், அப்பா, நெருக்கமான அக்கம்பக்கத்தினர், அவள் வீட்டுப் பசுமாடு என அனைவரின் முகங்களும் அவள் மனதுக்குள் அணிவகுத்தன. கூரைப்புடவையும் நெற்றிப்பட்டமும் கட்டி வயலுக்கு நடுவே இருக்கும் குலதெய்வமான அருஞ்சுனை காத்த அய்யனார் முன் மணமுடித்துக்கொள்ளும் குடும்ப வழக்கமும் கயலுக்குள் வந்து நிழலாடிவிட்டுப் போனது.
பெருமூச்சு விட்டாள்!
அதே நேரம் அவளின் குடும்பத்துக்கு நேர் எதிர் துருவமான கூப்பர் குடும்பத்தையும் நினைத்துப் பார்த்தாள். தலை சுற்றியது அவளுக்கு. எப்படி இதைச் சாத்தியப்படுத்தப்போகிறோமென்ற வழியே புலப்படவில்லை அவளுக்கு.
கயலின் ஒரே நம்பிக்கை அவள் அப்பா புகழேந்தி! அவரே தன் வாழ்வில் நல்லதொரு வழி அமைக்க முடியும் என்று மலைபோல் நம்பினாள்.
கால்டன் சுலுவில் சொல்லிவிட்டாரே தவிர அவர் குடும்பம் திருமணத்துக்குச் சம்மதம் சொல்லுமா என்ற சந்தேகம் அவருக்குள்ளுன் எழுந்தது. ஹன்னாவுக்குத் தன் விருப்பமே அவள் விருப்பமும் ஆகையால் அவளால் பிரச்சினை இல்லை. சமீபத்தில் கயல் தன் குடும்பத்தில் , அம்மா, நிக், பிராட் ஆகியோருக்கு மிகமிகப் பெரிய உதவிகள் செய்திருக்கிறாள். அதனால் அவர்கள் சம்மதிக்காவிடினும் குறுக்கே நிற்கமாட்டார்கள் என்பது அவர் எண்ணமாய் இருந்தது. அதனால் கயல் விருப்பப்படி தன் குடும்பத்தில் எப்படியாவது சம்மதம் வாங்கிவிடலாம் என்று நினைத்தார்.
ஆனால் கயல் வட்டத்தில் கயலைத் தவிர வேறு யாரையும் வேறு எதையும் அவர் அறியமாட்டார். அதனால் அது பற்றி அவருக்கு எதுவும் புரியவில்லை. இருப்பினும் தன்னவளின் விருப்பத்தைத் தலைமேல் ஏற்றார் அக்மார்க் ஆம்பிளையான கால்டன் கூப்பர்.
வீடு வந்து சேர்ந்ததும் இருவரும் காதலை வெளிப்படுத்திக் கொண்டது பற்றியும் திருமண முடிவு பற்றியும் அறிந்த எல்க் பேரானந்தப்பட்டாள். கயல் வீட்டை விட்டுத் தற்காலிகமாகப் போவது வருத்தமளித்தாலும் அவளின் இந்திய தோழியிடமிருந்து அவள் இந்தியாவில் திருமணத்துக்கான முக்கியத்துவம் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறாள் என்பதால் சட்டென்று சூழ்நிலையினைப் புரிந்துகொண்டு கயலுக்குப் பேக்கிங்கில் உதவி செய்தாள்.
சரியாக 7 மணிக்குத் திட்டப்படி கயல் மருத்துவர்கள் குடியிருப்பில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஃபிளாட்டுக்குக் குடிபெயர்ந்தாள்.
கால்டனும் எல்க்கும் கூட கயலுக்கு சாமான்களைப் பிரித்து அடுக்குவதில் உதவினர். 9 மணிக்கு எல்க் விடைபெற காதலர்கள் இருவரும் மனமே இல்லாமல் பிரியாவிடை கொடுத்துக்கொண்டனர்.
இந்த தற்காலிக பிரிவு கால்டனுக்குள்ளே திருமணத்திற்கானதொரு அவசரத்தைக் கிள்ளிவிட்டது. சிறிதும் தாமதிக்காமல் தன்னவளை மனைவியாக்கிவிடுவது என்று முடிவுகட்டிக்கொண்டு களத்தில் குதித்தார். தமிழ் கலாச்சாரக் கூறுகளைப் பற்றிப் படிக்கத் துவங்கினார்.
***
மறுநாள் கெல்லி கூப்பரின் டிஸ்சார்ஜ்! கயல் செலீனாவுடனும் கெல்லியுடனும் ஓரளவு உறவு வளர்த்துவிட்டிருந்தாள். குறிப்பாய் செலீனா கயலை நேசிக்கவே துவங்கிவிட்டார் எனலாம்.
டிஸ்சார் ஆகியபோது கயல் வாசல் வரை வந்து வாழ்த்து சொல்லி வழியனுப்பி வைத்தாள். கூப்பர் தம்பதியர் அவளை இரவு உணவுக்குத் தங்களின் மேன்ஷனுக்கு அழைத்தனர். (இது மிகப்பெரிய அழைப்பு அங்கே!!!)
அவர்கள் கிளம்பியதும் பின்னால் காரில் செல்ல ஆயத்தமான நிக் கூப்பர், கயலிடம் மிரட்டல் தொணியில் ஆரம்பித்தார்.
“தேங்க் யூ டாக்டர். உங்க அளவு தாண்டியே உதவியிருக்கிங்க! கூப்பர் குடும்ப டின்னர் அழைப்பு வேற கிடைச்சிருக்கு! பெரிய விஷயம் தான். வாங்க. டின்னர் சாப்பிடுங்க. ஏதாச்சு பரிசு கொடுப்பாங்க. வாங்கிட்டு போய்டுங்க. கால்டனைக் கல்யாணம் பண்ணி குடும்பத்துல ஒருத்தர் ஆகனுங்கற ஆசையெல்லாம் வேண்டாம். எங்க பணம் செல்வாக்கு பத்தி தெரிஞ்சு கால்டனை வளைச்சுப் போடற உங்க முயற்சியை விட்டுட்டிங்கன்னா ஹாஸ்பிட்டல் வேலையை முடிச்சு முழுசா திரும்பி இந்தியா போகலாம். இல்லான்னா…”
“இல்லன்னா..”
“நாசமாய்டுவ”
வில்லத்தனமான புன்னகை சிந்திவிட்டு காரில் ஏறிப்புறப்பட்டார் கிரிமினல் வக்கீலான நிக் கூப்பர்.
முகத்தில் ஈயாடாமல் கார் போன திசையினில் கண்களும் போனபடி அதே இடத்தில் நின்றாள் கயல்.
4.23- புகுந்த வீட்டில்!
-வித்யாகுரு