4.23- புகுந்த வீட்டில்!
சற்றும் எதிர்பார்க்காத மோசமானதொரு மிரட்டல் கால்டனின் அண்ணனிடமிருந்து வந்ததும் சற்று ஆடித்தான் போய்விட்டாள் கயல்.
அவர் சொன்ன வார்த்தைகள் அவளின் தன்மானத்தை வெகுவாகச் சீண்டிவிடவே கோபம் கொப்பளித்தது. எப்படி நிக் கூப்பருக்குக் கால்டனுக்கும் தனக்குமான உறவு பற்றித் தெரியுமென்று நீண்ட நேரம் சிந்தித்தாள். வக்கீலுக்கு இதைக் கண்டுபிடிப்பாதா கஷ்டமென்று பிறகு புரிந்துகொண்டாள். தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்தாள். இனி என்ன ஆயினும் கால்டனை விட்டுக்கொடுப்பதில்லை என்ற முடிவுதான் அது!
அவள் முடிவுக்கு வரவும் அவளவனிடமிருந்து அலைபேசி அழைப்பு வரவும் சரியாய் இருந்தது.
“சொல்லுங்க கால்டன்”
“அம்மா டின்னருக்கு மேன்ஷனுக்கு கூப்பிட்டாங்களா?!”
“ஆமா.. உதவி செஞ்ச டாக்டர் இல்லையா! அதுனால கூப்பிட்டாங்க”
“இல்ல. அதுக்காக இல்ல!”
“பின்ன??!!”
“அங்க போனா தான் தெரியும். சரி எப்ப வரட்டும்?”
“3 மணிக்கு வந்திடுங்க. நம்ம வீட்ல தான் ரெடி ஆகனும். அங்க தான் பொருட்கள் எல்லாம் இருக்கு.”
“சரி!” என்று துண்டித்துவிட்டு அவள் நம்ம வீடு என்று சொன்னதை நினைத்து ஆனந்தப்பட்டார்.
அவள் முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களை மட்டும் தான் எடுத்துப்போயிருந்தாள். மீதி எல்லாம் அங்கே தான் இருந்தது.
3 மணிக்குக் கால்டன் வந்து அவளை அழைத்துப் போனார். ஒரு மணி நேரத்தில், ஸிம்பிளான வெள்ளை நிறத்தில் தங்கநிற மாங்காய்கள் பவுடர் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த ஜார்ஜெட் புடவை அணிந்து, முத்தில் நீள ஆரமும் ஜிமிக்கி கம்மலும் வளையலும் போட்டுக்கொண்டு, காதோரம் எடுத்துக்கட்டி லூசான பின்னலிட்டு, அவள் அமைத்த தோட்டத்தில் நன்றாய்ப் பூத்திருந்த நித்திய மல்லிப் பூவினைச் சரமாகத் தொடுத்து சூடிக்கொண்டு, நெற்றிப் பொட்டுடன் அஞ்சனம் தீட்டி, அசல் அழகில் வெளியே வந்த கயலைப் பார்த்த கால்டன், வெண்ணிலவு மாலையிலேயே தரையிறங்கி தன் வீட்டின் அறையிலிருந்து வெளியே நடந்து வருகிறதோ என்று ஐயம் கொண்டார்.
“காதல் கொஞ்சம் கம்மி.. காமம் கொஞ்சம் தூக்கல்..” என்ற நிலையில் இருந்த கால்டன், “போகலாம்” என்று சொல்லித் தன்னைக் கடந்து சென்ற அவளின் வாசனையில் மையல் கொண்டார்.
அசையாமல் நின்றிருந்த தன்னவனைத் திரும்பிப் பார்த்த தலைவி, அந்த பார்வையின் அர்த்தம் புரிந்ததும் படபடப்பு கொண்டாள்.
“போகலாம்..” என்று தப்பிப்பதற்காக சற்று பதட்டமாய் மீண்டும் சொன்னாள்.
களிறொன்று கம்பீரமாய் அசைந்து வருவது போல் அவள் அருகில் வந்த கால்டன், நழுவி ஓடப்பார்த்தவளை இழுத்து அணைத்தார். அவளை அனாயாசமாகத் தூக்கிச் சுற்றி வசமாகச் சுவற்றில் சாய்த்து நிறுத்திவைத்துக்கொண்டார்.
இம்முறை முத்தமிட அதரங்களுக்குக் கால்டன் குறிவைக்க, உடம்பெல்லாம் இதயம் முளைத்து பட் பட்டென்று துடிப்பது போல் தலைவி உணர, சிவ பூஜைக் கரடியாய் கலாச்சாரம் கயலின் மூளைக்குள் அலார ஒலி எழுப்பியது.
“கல்யாணத்தை மொதல்ல பண்ணிக்கலாமே..” என்று மிக மெல்லிய குரலில் மயக்கத்தினூடே சொன்னாள் கயல்.
“நீ இப்ப எனக்கு எந்த அளவு அநியாயம் பண்றன்னு உனக்கு கொஞ்சமாச்சு ஐடியா இருக்கா?” என்று அவளின் நெற்றியில் முட்டிக்கொண்டபடி கேட்டுவிட்டு ஏங்கிக்கொண்டே பெருமூச்சுடன் விலகினார் கால்டன்.
2 நாட்களாக அவர் தமிழ் கலாச்சாரக் கூறுகளைப் பற்றி படிக்கத் துவங்கியிருந்த படியால் கயலின் தயக்கத்துக்குத் தன் மேல் நம்பிக்கை இல்லை என்பது அர்த்தமில்லை என்று அவருக்கு நன்றாய்ப் புரிந்தது.
அவளின் நம்பிக்கைகளுக்கும் கருத்தியலுக்கும் மதிப்பளிக்கும் முடிவினை அவர் திண்ணமாக எடுத்துவிட்டபடியால் அவளை எந்த விதத்திலும் சங்கடப்படுத்த அவருக்கு விருப்பமில்லை.
“ஓகே.. மேட்டர் ஆஃப் வீக்ஸ்” என்று சொல்லி அவளோடு கை கோர்த்தார். இருவரும் கிளம்பினர்.
வழியில் சில மலர்கொத்துக்களை வாங்கிக் கொண்டு தன் வருங்கால புகுந்த வீட்டுக்குள் முதன்முதலாய் அடியெடுத்து வைத்தாள் கயல்.
வாசலிலேயே அவளை செலீனாவும் ஹன்னாவும் வரவேற்றனர். ஓய்வில் இருந்த கால்டனின் அப்பாவையும் தம்பியையும் முதல் வேலையாய் அவரவர் அறைகளுக்குச் சென்று பார்த்துவிட்டு வந்தாள் கயல்.
பிறகு மேன்ஷனை அவளுக்குச் சுற்றிக்காட்டும் பொறுப்பினைக் கால்டனே ஏற்றார். ஓரளவு சுற்றியும் காட்டினார். பெரும்பாலும் சுட்டியே காட்டினார்.
மேன்ஷன் தன் கோர்காடு கிராமம் அளவு இருப்பதைக் கண்டு வியந்தாள் கயல். பிரம்மித்தாள். ஆனால் கால்டனுக்கு இங்கே துளியும் பிடிப்பில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாகவே புரிந்துகொண்டாள்.
அங்கே எல்லாம் இருந்தது; ஆனால் எல்லாம் அன்னியமாய் இருந்தது. ஏதோ ஒன்று குறைந்ததாய் கயலும் நினைத்தாள்.
பிறகு கால்டன் கயலை ஜெசிகாவிடம் அழைத்துப்போனார். எல்க்கும் அங்கே இருந்தாள். அத்தனை பாசமாய் வரவேற்கப்பட்டாள் கயல்.
கால்டன், ஜெசிகாவிடம் மிகவும் ஃபிரீயாகப் பழகுவதைக் கவனித்தாள். செலீனாவை விட ஜெசிகாவுடன் கால்டன் அதிகம் பிணைப்பு கொண்டிருப்பதும் நன்றாகவே தெரிந்தது. மடை திறந்த வெள்ளமென ஜெசிகா தன் அன்புக்குரிய வளர்ப்பு மகன் கால்டனைப் பற்றி சகலத்தையும் ஒப்பித்தார். கயலுக்கு ஜெசிகாவையும் ஜெசிகாவுக்குக் கயலையும் மிகவும் பிடித்துப்போனது.
7 மணிக்கு கூப்பர் குடும்ப டின்னர் அரங்கில் கெல்லி, பிராட் தவிர அனைவரும் ஆஜர் ஆகினர். நிக் கூப்பரும் தான். விஷமத்தனமாய்க் கயலைப் பார்த்தபடி இருந்த நிக் கூப்பரைக் கயல் கண்டுகொள்ளவில்லை.
நிக்கின் மனைவி நிக்கைப் போல் கயலிடம் பேதம் பார்க்கவில்லை. தன் மகனுக்கு உதவியவள் என்ற நன்றி அவளிடம் துளி இருந்தது. ஆனால் அதே நேரம் கயலைப் பெரிதாக வரவேற்கவும் இல்லை அவள்.
டின்னர் துவங்கும் முன் வழக்கமாக விருந்தினர் பற்றி ஒரு சில வார்த்தைகள் செலீனா பேசுவார். அதுபோல் அன்றும் கயலைப் பற்றி பேசினார். அவர் கயலை அறிமுகம் செய்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். குறிப்பாகக் கயல்…
“இன்னிக்கி நம்ம விருந்தினர் யாருன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். டாக்டர்.கயல்.. கெல்லி, பிராட் உயிரைக் காப்பாத்தி கொடுத்த தேவதை. கால்டனோட வருங்கால மனைவி!” என்று பகிரங்கமாக அறிவித்தார் செலீனா.
விழிகள் விரிய அமர்ந்திருந்த கயலைக் காதலுடன் புன்னகைத்தபடி பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் கால்டன்.
4.24 அடங்கிய நிக் கூப்பர்
-வித்யாகுரு