4.32 மீண்டும் லெக்ஸிங்டன் நோக்கி..
இருவரும் அப்பா புகழேந்தியிடம் ஆஜராகினர்.
வாயசைப்பில், “நீங்க தான் சிகிச்சைக்காக பணம் கொடுத்து உதவினிங்களா?!” என்று கேட்டார் அப்பா. கால்டனுக்கு முழுமையாய் அவரின் வாயசைப்பு புரியாவிடினும் ஏறக்குறைய அவர் கேட்பது அதுதான் என்பது புரியவே ஆமோதிக்கும் வகையில் தலையாட்டினார்.
“நன்றிப்பா..” என்று சிரமப்பட்டுச் சொன்னவரைக் கால்டன் ஓடிச்சென்று கையினைப் பிடித்துக்கொண்டு தடுத்தார்.
கால்டனையும் அப்பாவையும் ஒருங்கே பார்த்ததும் கயலுக்குத் தொண்டை அடைத்தது. தன் வாழ்வின் இரு ஆண்களையும் ஒருசேர பார்த்ததாலோ என்னவோ அவள் உணர்வுப்பள்ளத்தாக்கின் ஒட்டில் நின்றிருந்தாள்.
கால்டன் அப்பாவிடம் அன்பாகவும் மரியாதையுடனும் பேசிய பாங்கினை இரசித்துப் பார்த்தாள். அவளின் அப்பாவும் கால்டனிடம் சகஜமாய் இருந்தது போல் தோன்றியது அவளுக்கு.
கால்டனிடம் அப்பா வாயசைப்பில் பேசிக்கொண்டே இருந்தார். சிலது புரிந்தது. பெரும்பாலும் புரியவில்லை அவருக்கு. கயல் கால்டனுக்கு எடுத்துச் சொன்னாள். இப்படி அரை மணிக்கு சம்பாஷனை தொடர்ந்தது.
கால்டன் விடைபெறுவதாய் அறிவிக்க, அப்பா அவரிடம் மீண்டும் பணம் தந்து உயிர் காத்தமைக்கு நன்றி சொன்னார்.
“இன்னும் கொஞ்ச நாள் இருக்கனும் பா.. என் மகளை ஒரு நல்லவன் கையில ஒப்படைச்சுட்டா அப்பறம் நிம்மதியா போவேன் நானு” என்று வாயசைப்பில் சொல்லிக்கொண்டே கயலைப் பார்த்தார் புகழேந்தி.
அப்பாவைப் பார்த்துக்கொண்டிருந்த கயலின் கலங்கிய விழிகள், ஒன்றும் புரியாமல் பக்கத்தில் நின்றிருந்த கால்டன் பக்கம் மெல்லத் திரும்பின. மீண்டும் அப்பாவிடம் வந்தன. பின் நிலத்தில் நிலைபெற்றன.
அந்தப் பார்வைப் பயணத்தைக் கவனித்த அப்பா, தன் முன் நின்றிருந்த அந்த இருவருக்கும் இடையிலான காதல் பயணத்தை நொடிப்பொழுதில் ஊகித்துவிட்டார்.
கால்டன் விடைபெற்று வெளியில் போனதும், தேங்காய் உடைத்தது போல் தன் மகளிடம் கேட்டார் அப்பா.
“இந்தத் தம்பியை விரும்பறியா மா?!” என்று.
சற்றும் இதை எதிர்பாராத கயல் தடுமாறிப் போனாள். பிறகு துணிவினை வரவழைத்துக்கொண்டு மண்டையை ஆட்டி ஆமோதித்தாள்.
மொத்தக் கதையையும் அவரிடம் ஒப்பித்தாள். மன்னிப்பு கோறினாள். அழுதாள்! அப்பா புகழேந்தி அதிர்ச்சியில் ஸ்தம்பித்தார்.
***
1 மாதத்துக்குப் பிறகு..
***
லெக்ஸிங்டன் திரும்பிச்செல்ல விமானத்தில் ஏறுவதற்காய் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் உள்ளே நடந்த கால்டனின் முகம் வாட்டமாய் இருந்தது. அவரின் அந்த ஹேசல் நிற காந்த விழிகள் ஈரமாய் இருந்தன. இதயம் கனத்திருந்தது.
விமானத்தில் தன் இருக்கையில் அமர்ந்தார். சென்னையை விட்டு வானூர்தி மேலே எழும்பி நிலையாகப் பறக்கத் துவங்கியது. விமானத்தை விட அவரின் மனம் வேகமாய்ப் பின்னோக்கிப் பறந்து இந்த 1 மாத இந்திய வாழ்க்கை நடத்திவிட்ட நிகழ்வுகளை அசைபோட்டது.
இறுக்க மனநிலையில் அமர்ந்திருந்தார்.
“இப்ப எதுக்கு இப்படி முகத்தை வச்சுக்கிட்டு இருக்கிங்க!?” என்று அதட்டல் தொணியில் கேள்வியொன்று வந்தது.
குரல் வந்த திசையில் திரும்பிய கால்டன், பக்கத்தில் புதுத் தாலியுடன் தன் மனைவியாக அமர்ந்திருந்த கயலைப் பார்த்தார்.
“இந்தியாவைப் பிரிஞ்சு போக மனசே இல்ல எனக்கு!”
“அதுதான் திரும்ப வரப்போறோமில்ல.. அப்பறம் என்ன..!?”
“உன் ஹாஸ்பிட்டல் காண்ட்ராக்ட் முடிய இன்னும் ஒன்னரை வருஷம் இருக்கே..”
“அதுக்கு என்ன செய்யுறது? வேணுமின்னா பாராசூட் போட்டு குதிச்சு இறங்கி இங்கையே இருங்க..” என்று கடுப்பாய்ச் சொன்னாள்.
“ஏன் நான் குதிக்கனும்? எனக்கு வேண்டியது பக்கத்தில இருக்கும் போது..” என்று அவளைத் தன் உடலோடு ஒட்டிக்கொண்டார் கால்டன்.
“நீங்க தான் இப்ப வருத்தபட்டுக்கிட்டு உக்காந்திருந்திங்க..”
“ஆமா.. மிஸ் பண்ணுவேன் ல..”
“யார.?!”
“உன் தோழி லீலாவ.. அப்பறம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகமா இருந்த உன் சொந்தக்காரங்கள.. பிரச்சினைகள.. இந்த வெயில.. இந்தியாவ.. கோவில்கள.. தமிழ.. முக்கியமா உங்க அப்பாவ..”
“ம்… இந்தியா அவளோ புடிச்சு போச்சோ!”
“ஆமா.. என்ன டவுட்? இல்லைன்னா என் பிஸினெஸ்ஸையே இங்க மாத்துவேனா!”
“ம்… என்னல்லாம் நடந்து போச்சு இந்த 1 மாசத்தில.. திரும்பி பாத்தா மலைப்பா இருக்கு..”
“ஆமா.. இன்னும் 100 எபிசோட் எழுதலாம்.. அவளோ சுவாரஸ்ஸியமான 1 மாசம்.”
“ஆனா இன்னைக்கி கணவன் மனைவியா நாம திரும்பிப் போவோமின்னு நான் சத்தியமா நினைக்கல்ல.. போன வாரம் வரை கூட நமக்குக் கல்யாணம் ஆகுமின்னு நம்பிக்கையே இல்ல எனக்கு. முந்தாநாள் கல்யாணம் ஆகி இன்னைக்கு இப்படி திரும்பி போகறது ஏதோ கனவு மாதிரி இருக்கு.. ”
“எத்தனை போராட்டம்! அப்பப்பா.. எப்படியோ.. நீ நினைச்ச மாதிரி எல்லாம் முடிஞ்சிதுல்ல.. இப்ப திரும்பி போனதும் மருத்துவர் குடியிருப்பைக் காலி பண்ணிட்டு நல்ல பொண்ணா புருஷன் வீட்டுக்கு வந்துரு. புரிஞ்சிதா..”
“ஆமா. இனி அங்க என்ன வேலை எனக்கு!!”
“ம்.. தெரிஞ்சா சரி! ஆனா நம்ம வீட்டுல உனக்கு வேலை ரொம்ப அதிகம். இங்க உன் அத்தை அவங்க வீட்டுக்காரரை எப்படியெல்லாம் கவனிச்சுக்குறாங்கன்னு நோட் பண்ணி வச்சுருக்கேன். எல்லாத்தையும் சரியா செய்யுற. புரியுதா..”
“ஆ… மாமா அளவு எதிர்பார்க்குறீங்களோ… கண்டிப்பா நடக்காது. இந்தியாவுலேருந்து எல்லாத்தையும் கத்துக்க வேண்டாம். இங்க ஆண் பெண் பாகுபாடுகள் அதிகம். அதுனால இந்த விஷயத்தில நீங்க நீங்களாவே இருங்க..”
“அப்படிங்கற.. ஓக்கே! அப்பறம் இந்த மஞ்சள் கயிறு, கால்ல மோதிரம் எல்லாம் உனக்கு ரொம்ப அழகா இருக்கு. சரி எனக்கு ஒன்னும் போட மாட்டிங்களா!”
“உங்களுக்கா…. இருக்கே..” என்று கன்னத்தில் ரெண்டு போட்டாள் கயல்.
சிரித்துக்கொண்டு அவள் தோளில் கைபோட்டு வாட்டமாய்ச் சாய்த்துக்கொண்டார் கால்டன்.
“ம்.. இன்னும் 18 மாசம் தான். அப்பறம் உன் இஷ்டப்படி இங்க செட்டில் ஆகிடலாம்! அம்மாவும் ஓக்கே சொல்லிட்டாங்க! எத்தனை குழப்பங்கள்.. எப்பா.. ஒரு வழியா பிரச்சினை எல்லாம் முடிஞ்சிது. அப்பாடா….!” என்று பெருமூச்சு விட்டார்.
“அப்பா இந்த அளவு சப்போர்ட் பண்ணுவாருன்னு நான் எதிர்பார்க்கல்ல..”
“பா.. என்ன மனுஷன் அவரு! இந்த நிலையில இல்லாம நல்லா இருந்திருந்தார்னு வை.. என்னைக் கொண்டாடிருப்பாரு.. எனக்கு தான் குடுப்பினை இல்ல..”
“உண்மை தான். உங்களை ரொம்ப புடிச்சு போச்சு அவருக்கு. நான் கூட தமிழ் கலாச்சாரம் பேசி மறுப்பாரோன்னு நினைச்சேன். ஆனா அவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் வகை தமிழர்னு நிரூபிச்சிட்டாரு.”
“என்னது… எனக்கு புரியல்ல நீ சொன்னது. ஆனா அவருக்கு உன் மேல மலை போல நம்பிக்கை இருக்கு. உன்னை அவரு ரொம்ப மதிக்குறாரு. உன் சந்தோஷம் ஒன்னு தான் அவருக்கு முக்கியமா இருக்கு. என்னைப் புடிச்சு போச்சுன்னு சொன்னியே.. அதுக்கு ஒரே ஒரு காரணம் தான். நானு, நீ தேர்ந்தெடுத்த ஒருத்தன். ஸிம்பிள்! க்ரேட் அப்பா அவரு! அதுனால தான் இங்க அவரு கூப்பிட்டதுக்கு நான் உடனே ஓக்கே சொல்லிட்டேன்.”
“ஆனா உங்களுக்கு இங்க பிஸினெஸ் ஒத்து வருமா..”
“அது என் பிரச்சினை.. நான் பாத்துக்கறேன் விடு.. ஆக்சுவலி நீ முதல் முதல்ல என்கிட்ட இந்தியாவில தான் வேலை பாக்க ஆசைன்னு சொன்னியே, அன்னைக்கே நான் இந்த முடிவை எடுத்துட்டேன். அதுக்கான வேலைகளையும் அன்னைக்கே துவங்கிட்டேன்.”
அந்த நாள் கயலின் நினைப்பில் வந்து போனது. அன்றும் கால்டனைத் தவறாக நினைத்தோமே என்று நொந்துகொண்டாள்.
“அப்பறம் இப்ப போனதும் அம்மா அவங்க டிசைன் பண்ண ஒரு வெட்டிங் கவுனோட ரெடியா இருப்பாங்க. உனக்கு மாட்டிவிட்டு இன்னொரு தடபுடல் கல்யாணம் ஏற்பாடு பண்ணுவாங்க. தயாரா இருந்துக்க..”
“நீங்க இங்க எனக்காக எவளோ விட்டு கொடுத்துருக்கிங்க. எவளோ சமாளிச்சிருக்கிங்க. எவளோ பொறுத்து போனிங்க. பதிலுக்கு நான் இதைக் கூட செய்ய மாட்டேனா! என்ன.. கணவரையே திரும்ப திரும்ப கல்யாணம் பண்ணிக்கறது தான் வேடிக்கையா இருக்கு!
“ஆனா நான் உன்னை எத்தனை முறை வேணுமின்னாலும் காதலிப்பேன்.. எத்தனை முறை வேணுமின்னாலும் கல்யாணம் பண்ணிப்பேன். உன் கூட இருக்கறதுன்னா எங்க வேணுமின்னாலும் இருப்பேன்.” என்று அவளை அணைப்புக்குள் சிறைவைத்த படியே சொன்னார் கால்டன்.
“1 மாசம் முன்ன இதே ஃப்ளைட்ல நாம வந்த போது நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேத்தி வைக்கிறது தான் என் வாழ்க்கை இனிமே..” என்றும் கூறினார்.
மனைவியான கயலுக்கு இதைக் கேட்க ஆனந்தமாய் இருந்தது.
“வேறெதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும்..” என்ற பாடல் வரியையும் அமெரிக்க சாயலுடன் தமிழில் பாடினார்.
காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்த விமானத்தில் காற்றெல்லாம் காதல் மணத்தது..
சுபம்.
ஆசிரியர் உரை:
காற்றெல்லாம் காதல்..
எப்படி இருந்தது!!!?????
பொறுமையாய் 100 பாகங்களையும் படித்த ஒவ்வொருவருக்கும் அன்பும் நன்றியும்.
கருத்துக்கள் தெரிவித்திடுங்கள்.
அதோடு கேள்விகள் இருந்தாலும் கேளுங்கள். பதில் சொல்ல காத்திருக்கிறேன்.
இத்தொடரில்
பிடித்த பாகம்
பிடித்த சம்பவம்
பிடித்த கதாப்பாத்திரம்
பிடித்த விஷயம்
பிடிக்காத விஷயம்
இன்னும் எதிர்பார்க்கும் விஷயம்
தவிர்த்திருக்கலாம் என்று பட்ட இடம்
பற்றியும் கூறுங்கள்.
உங்களின் பின்னூட்டங்களைப் பொக்கிஷமாய் வைத்துக்கொள்வேன்.
நான் ஒரு சாதாரண ஆரம்பப்பள்ளி ஆசிரியர். அமெரிக்க வாழ்கை, நரம்பியல் மருத்துவம், கட்டிடக்கலை மூன்றைப் பற்றியுமே எனக்கு ஒன்றும் தெரியாது. ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு வசனத்தையும் நிறைய யோசித்து நிறைய வாசித்தும் கேட்டும் படித்தும் தெரிந்துகொண்டு தான் எழுத வேண்டியிருந்தது. பெருந்தொற்று காலத்தில் நான் எழுதிய கதை இது. குட்டிக்குட்டி அத்தியாயங்கள் தான் எனக்கு எழுத வருகிறது. முயன்றாலும் பெரிதாக எழுதத் தெரியவில்லை. இக்கதை மூலம் பெரிய கருத்தொன்றும் சொல்லிவிடவில்லை.. just ஒரு good to read காதல் கதை இது.
என் நாயகிகள் அனைவரையும் நான் கொஞ்சம் கெத்தாக திமிராகத்தான் படைப்பேன். அந்த வகையில் கயல் எனக்கு மிகவும் பிடித்த நாயகி. சித்ரா, சாதனா, சூர்யகுமாரி, வேல்விழி ஆகிய என் நாயகிகளின் வரிசையில் கயலும் ஒரு சிறந்த பெண்மணி தான்.
கால்டனைப் பற்றி நான் என்ன சொல்வது. ஆரம்பத்தில் இருந்தே ஏனோ அவன் இவன் என்று கால்டனை எழுத மனம் வரவில்லை எனக்கு. நான் படைத்த கால்டன் கூப்பர் மேல் பெருத்த மரியாதை உண்டெனக்கு. தன்னவளை இந்த அளவு காதலிக்கும் ஓர் ஆண்மகன் நிச்சயமாக அனைத்து மரியாதைகளுக்கும் தகுதி உடையவன் தானே..
இது எதார்த்தமான காதல் கதைக்களம் இல்லாவிட்டாலும் எதார்த்தத்தை விட்டு விலகிவிடக் கூடாதென்று கவனமாக இருந்தேன். எதிர்மறை பாத்திரங்கள் இருந்தால் தான் கதை சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இக்கதையில் வில்லன் வில்லிகள் இல்லை.
எங்கேனும் பிழை இருந்திருந்தால், தருக்கக்குற்றங்கள் இருந்திருந்தால் சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்ளத் தயார்..
கயல் கால்டனோடு பொறுமையாகப் பயணித்தமைக்கு நன்றிகள் பல.
நாளை முதல் “இரண்டு நொடிகள்” தொடரை விட்டதிலிருந்து தொடருகிறேன்.
அனைவருக்கும் நன்றி..
-வித்யா குரு..