4.31 இந்தியாவில்…
ட்ராலியை அம்போவென்று விட்டுவிட்டுத் தன் சொந்தங்களிடம் ஓடிச்சென்ற கயலிடம் நிஜமான மகிழ்ச்சியையும், அவளைத் தூக்கிச் சுற்றிக் கொண்டாடிய அவர்களிடம் ஆழமான பாசத்தையும் பார்த்த கால்டன், அக்கணமே புரிந்துகொண்டார், கயலின் அசல் பக்கத்தினை இனி தான் நாம் பார்க்கப்போகிறோம் என்பதை.
வந்திருப்பவர்கள் அவளின் அம்மாவோ அப்பாவோ உடன்பிறந்தவர்களோ இல்லை என்பது அவருக்குத் தெரியுமே! அதனால் அவர்கள் தான் கயல் அன்று குறிப்பிட்ட கூட்டுக்குடும்ப கும்பல் என்பதைக் கனிக்க கஷ்டமாய் இல்லை கால்டனுக்கு.
அவர்களெல்லாம் எத்தனை பெரிய இடத்துக்குப் போனாலும் தன்னை அதே சின்னப்பெண்ணாய்த்தான் பார்ப்பார்கள் என்று கயல் அன்று சொன்னதன் உண்மை விளங்கியது அவருக்கு.
சின்னப்பெண்ணைப் பார்ப்பதுபோல் அவர்கள் அவளைக் கன்னம் கிள்ளுவதும், தலை வருடுவதும், விபூதி பூசிவிடுவதும், கட்டியணைப்பதுமென வரவேற்றனர். கயலின் முகத்தில் இத்தனை நாள் இல்லாதவொரு நிம்மதியும் சந்தோஷமும் தெரிந்தது. ஏதோ பெரிய பலம் வந்துவிட்டதைப் போல் அவள் உணர்கிறாள் என்பதைக் கால்டனால் புரிந்துகொள்ள முடிந்தது.
அவரின் ட்ராலியோடு கயலின் ட்ராலியினையும் சேர்த்துத் தள்ளிக்கொண்டு, கயலையும் மற்றவர்களையும் கவனித்தபடியே மெதுவாய்க் கால்டனும் அவர்களிடம் வந்து நின்றார்.
கயல் தயங்கித் தயங்கி அவரைப் பார்த்தாள். அவள் கால்டனை என்னவென்று அறிமுகப்படுத்துவது என்று புரியாமல் திருதிருவென விழித்ததைக் கவனித்த கால்டன், “நான் கயலோட ஃப்ரெண்ட். இந்தியாவைச் சுத்தி பாக்க வந்திருக்கேன்” என்று முந்திக்கொண்டு சொல்லிவிட்டார்.
அனைவரும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் என்பதால், சகஜமாகக் கால்டனோடு கை குலுக்கினர். தங்களுடன் வரும்படி அழைத்தவர்களிடம் பிறகு வருவதாய்ச் சொல்லிவிட்டு, கயலைக் கிளம்பச்சொல்லி சமிக்ஞை காட்டினார் கால்டன்.
கயலுக்கு தர்ம சங்கடமாய் இருந்தது. மனமின்றி கால்டனை விட்டுவிட்டு அவர்களுடன் கிளம்பினாள்.
கால்டன் ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டுத் தங்கினார். கயலுக்கு அதைத் தெரியப்படுத்திவிட்டு யோசித்தார்.
கயல் கோபப்பட்டதன் அர்த்தம் நன்றாய் விளங்கியது. கயலை ஆச்சரியப்படுத்த வேண்டும் என்று மட்டும் சிந்தித்தோமே தவிர ஃப்ராக்டிகலாகச் சிந்திக்கத் தவறிவிட்டோம் என்பதை உணர்ந்தார்.
விமான நிலைய வாயிலில் அத்தனை பேருக்கு முன் கயலுக்கு எத்தனை தர்ம சங்கடத்தை உண்டுபண்ணிவிட்டோம் என்று வருந்தினார்.
உடல்நிலை குன்றியுள்ள தந்தையைப் பார்க்க அவள் செல்ல வேண்டிய நேரத்தில் தன்னை அவள் அறிமுகம் செய்திருந்தால் தேவையற்ற குழப்பங்கள் வந்திருக்குமே என்று எண்ணினார்.
தன் குடும்பம் போல் அவள் குடும்பமும் வளர்ப்பும் இல்லை என்பதைக் கண்கூடாய்ப் பார்த்துவிட்டதால், ஒரே உலகம் எத்தனை மாறுபாடுகள் கொண்டதாய் உள்ளதென்று வியந்தார்.
இனி செய்ய வேண்டியதைத் தன்னவளிடம் கலந்துரையாடித்தான் செய்யவேண்டுமே தவிர உணர்ச்சி வசப்பட்டு தானாய் எதுவும் செய்துவிடக்கூடாதென முடிவெடுத்தார்.
இரவானது.
உறங்கி மறுநாள் விழித்தார். கயலைப் பிரிந்து 12 மணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டிருந்தது. அவளுக்குக் கால் செய்யலாமா என்று யோசிக்கத் துவங்கவும் அறையின் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாய் இருந்தது.
சென்று திறந்தார். கயல்..
வெளிர் லாவண்டர் நிறத்தில் வெள்ளை மலர்கள் வரையப்பட்டிருந்த ஸாட்டின் புடவையில் அழகோவியமாய் வந்திருந்த கயலை உள்ளே அழைத்தார்.
கதவைத் தாழிட்டுத் தன்னவளின் பின்னால் போனார்.
தன்னைப் பின்தொடர்ந்து வந்த மன்னவனைச் சட்டென்று திரும்பி இறுகக் கட்டிக்கொண்டாள் தலைவி.
கால்டனும் கயலைத் தன் கரங்களால் வளைத்து இறுக்கி அணைத்துக்கொண்டார்.
இருவரும் ஒருவரின் இன்மையை மற்றொருவர் நன்கு உணர்ந்திருக்கின்றனர் என்பதற்கு அந்த மெளனமான இறுக்கமான 2 நிமிட அணைப்பு சாட்சியம் சொன்னது.
அணைத்தபடியே கயல் மன்னிப்பு கோறினாள்.
“சாரி கால்டன்.”
“எதுக்கு!!”
“உங்களை என் கூட கூட்டிக்கிட்டு போக முடியல்ல.”
“நாந்தான் சாரி சொல்லனும். அரை வேக்காட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்.”
“இல்லை கால்டன். நான் எதுவும் சொல்லாமலேயே நீங்களா நிலமையைச் சமாளிச்சிட்டிங்களே!”
“இருந்தாலும் நீ சங்கடப்பட்ட இல்ல..”
“எனக்கு சட்டுன்னு என்ன செய்யுறதுன்னு புரியல்ல. எனக்கு கொஞ்சம் முன்ன தெரிஞ்சிருந்தா கூட அதுக்கு தகுந்தாப்பில ஏதாவது செஞ்சிருப்பேன். இப்படி ஹோட்டல்ல தங்கற மாதிரி ஆகியிருக்காது.’
“ஹே.. ஹோட்டல்ல தங்கினா என்ன இப்ப? விடு.. ஆக்சுவலி நான் இப்படி ப்ளான் பண்ணினதுக்கு 3 காரணம். ஒன்னு உன்னைப் பிரிஞ்சு 1 மாசமெல்லாம் ஓட்டவே முடியாது. ரெண்டு, என் வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு நான் ரொம்ப ஈசியா அனுமதி வாங்கிட்டேன். ஏன்னா உன்னை அவங்களுக்கு தெரியும். ஸோ மறுக்க அவங்ககிட்ட காரணம் இல்ல. ஆனா உன் நிலைமை அப்படி இல்ல. கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க உன்னை மட்டும் தனியா போராட விட எனக்கு மனசில்ல. அதான் உனக்கு சப்போடர்ட்டுக்காக நானும் வந்தேன். என்னையும் உங்க அப்பா பாத்து பேசினா சூழ்நிலையைச் சமாளிக்க பெட்டரா இருக்குமின்னு தோணுச்சு. மூனாவது காரணம் அப்பறம் சொல்றேன். மத்தபடி எனக்கு யோசிக்க தெரியல்ல கயல்.”
“நீங்க 1 மாசம் என்னோட இருக்கப்போறது எனக்கு எவளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?! நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல. பெரிய பலமா இருக்கு. நீங்க இதை முன்னமே சொல்லியிருந்தா நான் ஏர்போர்ட்டுக்கு அவங்களை வரச் சொல்லாம அவாய்ட் பண்ணியிருப்பேன். உங்களை நேரா அப்பா கிட்ட கூட்டிக்கிட்டு போயிருப்பேன். எனக்கு உங்களை முதல்ல அப்பா கிட்ட அறிமுகப்படுத்தனுமின்னு தான் எண்ணம். அவங்க எல்லாம் குழப்பி விட்டுருவாங்க கால்டன். அதுக்கு தான் சொல்றேன்.”
“புரியுது கயல். எனக்கு இதைப் பத்தி ஐடியாவே இல்ல. உன்னை ஆச்சிரியப்படுத்தனுமின்னு மட்டும் தான் யோசிச்சேன். சாரி டாக்டர்!”
“சரி விடுங்க! எப்படியோ சமாளிச்சாச்சு.”
“அப்பாவைப் பாத்தியா? எப்படி இருக்காரு?”
“பாத்தேன். உங்களைப் பாக்கனுமின்னு சொன்னாரு. கூட்டிக்கிட்டு போகத்தான் வந்தேன்.”
“என்ன!!!! சொல்லிட்டியா!!??”
“நீங்க தான் சிகிச்சைக்கு பணம் கொடுத்திங்கன்னு சொல்லியிருக்கேன். அவரோட முதல் கேள்வியே இது தான்”
“ஓ..”
“உங்க ஃபோட்டோ கேட்டாரு பாக்கறதுக்கு. நீங்களும் கூட வந்துருக்கிங்கன்னு சொன்னேன். கூட்டிக்கிட்டு வர சொல்லிருக்காரு. போகலாமா?!”
“சூப்பர். போகலாம். நான் என்ன சொல்லனும், என்ன பேசனும்??!!”
“அப்பா கிட்ட மறைக்க எதுவும் இல்ல. சூழ்நிலைக்கு தக்கபடி பேச வேண்டியது தான். உடல்நிலை பெருசா கவலைப்படற அளவு இல்ல. ஹீ இஸ் ஓக்கே. அவருக்கும் நல்லா ஆங்கிலம் பேச தெரியும். சோ மொழி பிரச்சினை எதுவும் இல்ல. ஆனா வாயசைப்பு தான். குரல் வராது. துளை போட்டு வெளி சுவாசம் போகுது. பாத்துக்கலாம்”
“ஓக்கே.. போகலாம் வா..”
அணைத்தபடியே பேசிக்கொண்டிருந்தவர்கள் விலகினர். கால்டன் அலைபேசி வாலெட் வகையறாக்களை எடுத்துக்கொண்டார். இருவரும் வெளியேற கதவருகே வந்தனர். கதவினைத் திறக்கும் முன்னர் கயலின் செவ்விதழ்களில் முத்தமிட்டார் கால்டன். குட்டி ரொமான்ஸ் முடிந்து இருவரும் அப்பா புகழேந்தியிடம் ஆஜராகினர்.
4.32 மீண்டும் லெக்ஸிங்டன் நோக்கி
(நிறைவுப்பகுதி)
-வித்யாகுரு