4.6- பொறாமைப் படுகிறேன்!
இருவரும் ஒரே சோஃபாவில் ஒருவர் அணைப்புக்குள் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது கயலின் அலைபேசி குறுஞ்செய்தி பெற்றதால் சிணுங்கவே, சட்டென்று உறக்கம் கலைத்தாள். கால்டனின் அணைப்பில் தான் உறங்குவதை உணர்ந்து நினைவுகளை நோண்டிப்பார்த்து நடந்தவைகளை நியாபகப்படுத்திக்கொண்டாள்.
தன் மேல் கிடந்த கால்டனின் கையினை மெதுவாக அப்பறப்படுத்தி அவர் உறக்கத்தைக் கலைக்காமல் எழுந்தாள். மணியைப் பார்த்தாள். அதிகாலை 5.
தன் அறையிலேயே குளித்து அங்கே முன்பு வைத்திருந்த உடைகளில் ஒன்றினை அணிந்து தயாரானாள். கூந்தலைப் பின்னலிடாது அள்ளி முடிந்து கோட்டை மாட்டிக்கொண்டு கால்டனைப் பார்த்தாள். அவர் அசையவே இல்லை. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். கிட்டே சென்று அமர்ந்தாள். உறங்கும் அவரை இரசித்துப் பார்த்தாள். அவரின் வடிவமான மூக்கு அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு விரலால் அவர் மூக்கினைத் தொட்டுப்பார்த்தாள். எப்படி ஆரம்பித்த உறவு தற்போது எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்று எண்ணிப்பார்த்து வியந்தாள். சிறிது சிறிதாய்த் தன்னைக் கால்டன் கவர்ந்துவிட்டதாய் நினைத்தாள். அவர் முத்தமிட்ட தருணங்களை நினைத்துப் பார்த்துப் புன்னகைத்தாள். எவாஞ்சலினை அவர் மூக்கறுத்ததை எண்ணிச் சிரித்தாள். திருமணத்தை மறுக்கக் கால்டன் என்ன காரணம் சொன்னார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தது அவளுக்கு. அவரின் தந்தை தாய்க்கு ஓரளவு உடல்நிலை தேறியதும் நேராகவே கேட்டுத் தெரிந்துகொண்டு விடுவது என்று எண்ணிக்கொண்டாள். இரவு அவர் கோபப்பட்ட காரணம் மட்டும் புரியவில்லை அவளுக்கு.
ஆனால், காதலை அவர் விரைவில் வெளிப்படுத்திவிடுவார் என்று ஊகித்தாள். அப்படி வெளிப்படுத்தினால் என்ன சொல்வது என்றும் புரியவில்லை.
வெறும் காதலியாகத் தொடர முடியாது, மனைவி என்ற அங்கீகாரம் தேவை, திருமணம் செய்ய வேண்டும், அதுவும் தந்தையின் சம்மதம் பெற்றுத்தான் செய்ய வேண்டும், இந்தியாவில் மருத்துவம் பார்க்கவேண்டுமென்பதே தன் நீண்ட கால லட்சியம் ஆகிய இவற்றையெல்லாம் எப்படி அவரிடம் சொல்ல முடியும்??!! சொன்னால் அவரின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்!! அநேகமாக பின்வாங்கிவிடுவார் என்று நினைத்தாள். வாடிய முகத்தோடு எழுந்து வெளியே சென்றாள்.
செலீனாவின் அறையினை விசாரித்துக்கொண்டு பார்க்கப்போனாள். அங்கே பெருங்கூட்டமாக இருந்தது. இருபதுக்கும் மேற்பட்டோர் முழு கோட் சூட்டில் அங்கே காத்திருந்தனர். அதிகாலை செய்யவேண்டிய சிகிச்சைகளுக்கு உள்ளே போகத் தயங்கிக் கொண்டு படிக்கும் மருத்துவர்களும் செவிலிகளும் முழித்துக்கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த கயல் கடுப்பாகிக் கடகடவென உள்ளே போனாள். அங்கே கால்டனின் தங்கையும் அண்ணனும் இருந்தனர்.
“இவங்களை செக் பண்ணனும். எல்லாரும் கொஞ்சம் வெளியே போங்க. இவங்களை செக் பண்ணி முடிச்சிட்டு நாங்க போகும்போது வெளிய இப்ப இருக்கற கூட்டம் இருக்கக்கூடாது. இது ஹாஸ்பிட்டல்னு நியாபகப்படுத்துறேன்.” என்று உத்தரவிட்டாள்.
கயலை முதல்முறை பார்த்த கால்டனின் அண்ணன் நிக் கூப்பருக்கு அவளின் அதிகாரத் தோரணை ஆத்திரத்தை உண்டுபண்ணியது. அவளைப் பார்த்தவுடனேயே அவள் இந்தியப்பெண் என்று புரிந்துகொண்டார். ஹன்னாவுக்குக் கயலை எவாஞ்சலின் காட்டிய விதத்தில் தெரியும் என்பதால் அவளும் கயலைக் குறைவாகப் பார்த்தாள். அவளின் உடையையும் கொண்டையையும் மிகமிகச் சாதாரண தோற்றத்தையும் கண்டு இருவரும் அவளை மட்டமாக மதிப்பிட்டனர்.
“யாருக்கு உத்தரவு போடுறீங்க?” என்று நிக் கூப்பர் தன் வக்கீல் தோரணையில் சற்று சீறிக்கொண்டு கேட்டார்.
அவரை அடக்கினார் செலீனா. “இவ சொல்லுறது போல செய். இல்லைன்னா உன்னைக் கட் பண்ணிடுவா” என்று சொன்னார். அம்மா தான் பேசுகிறார்களா என்று இருவரும் அதிர்ச்சியாய்ப் பார்த்தனர். முன்தின இரவிலிருந்து செலீனா ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. உறங்கவுமில்லை. அப்பா கீழே தவறி விழுந்துவிட்டார், கம்பி வயிற்றில் துளைத்தது, அறுவை சிகிச்சை நடக்கிறது என்ற தகவல் மட்டும் தான் கால்டன் சொல்லி அவர்களுக்குத் தெரியுமே தவிர தங்கள் முன்னின்று உத்தரவிடும் இந்த சாதாரண இந்தியப் பெண் உண்மையில் யாரென்று அவர்கள் அறிய மாட்டார்கள்.
செலீனா கூப்பர் முன்னிலையில் இந்த தோரணையில் யாரும் பேசியதில்லை பேசவும் முடியாது. ஆனால் இவள் உத்தரவை நிறைவேற்றும்படி அம்மாவே சொல்கிறாரே என்று இருவரும் வியந்தனர்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் அனைவரும் வெளியேறினர்.
கயல் செலீனாவுக்கு ஏறிக்கொண்டிருந்த ட்ரிப்ஸை நிறுத்தினாள். உடன் வந்த செவிலிகள் சர்க்கரை அளவு BP ECG எல்லாம் எடுத்தனர். இரத்தம் எடுத்துக்கொள்ள கயல் அனுமதி கேட்டாள். செலீனா சம்மதித்ததும் அவளே இரத்த மாதிரி சேகரித்தாள். அவள் குத்தியதே தெரியவில்லை செலீனாவுக்கு. கயலின் நேர்த்தியைக் கண்டு வியந்தார்.பிறகு செவிலிகளை அனுப்பிவிட்டாள் கயல்.
“நான் இதைச் சொல்லலாமா தெரியல்ல. உங்க BP அளவு கவலைப் பட வேண்டிய விதத்துல இருக்கு. ஊசிக்கும் சிகிச்சைக்கும் இந்நேரம் குறைய ஆரம்பிச்சிருக்கனும். பட் இல்ல. நீங்க பெரிய பணக்காரங்கன்னு சொன்னாங்க. நிறைய பிஸினஸ் விஷயங்கள் இருக்கும், புரியுது. ஆனா ஒரு 2 நாளைக்கு நீங்க ரிலாக்ஸா இருந்தா இந்த 2 நாளோட முடிஞ்சிடும். வருத்திக்கிட்டிங்கன்னா BP நார்மல் ஆக இன்னும் நாளாகும்.” என்றாள்.
“நீ எந்த ஊரு?”
“இந்தியா”
“டெல்லியா மும்மையா?”
புன்னகைத்தாள். “டெல்லி மும்மை மட்டும் இந்தியா இல்ல. நான் இந்தியாவோட தெற்குப் பகுதியில பாண்டிச்சேரிங்கற சின்ன ஊருல ‘கோர்க்காடு’ங்கற சின்ன கிராமத்தைச் சேர்ந்தவ.” என்று பெருமிதத்தோடு சொன்னாள் கயல்.
“நாங்க எவ்வளவு பணக்காரங்கன்னு உனக்கு ஐடியா இருக்கா?”
“ஓரளவு..”
“நீ இப்ப வெளிய அனுப்பினியே. என் மூத்த வாரிசு. கெண்டக்கியில செல்வாக்கான வக்கில். தெரியுமா?”
“தெரியும்.. Mr. நிக் கூப்பர்.”
“நேத்து நீ மேல ஏறி உக்காந்துகிட்டு போனியே. அவரு எவளோ பெரிய ஆளுன்னு தெரியுமா?”
“தெரியும்! இந்த ஹாஸ்பிட்டலுக்கு நீங்க எவளோ செஞ்சுருக்கிங்கன்னும் தெரியும்!”
“இவளோ பணக்காரங்க, செல்வாக்கானவங்க நாங்க. நீ எங்களைப் பத்தி என்ன நினைக்கிற? தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு!”
“நான் ஒன்னும் நினைக்கல்லையே.. இருந்துட்டு போங்க!!”
இந்த பதிலைக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை செலீனா. “இருந்துட்டு போங்க” என்ற ஒற்றை வரியில் அவர்களின் இத்தனை வருட வாழ்க்கையையே கயல் தூசியாக்கி ஊதிவிட்டது போல் உணர்ந்தார்.
“உன் பேர் என்ன?”
“கயல்”
“உன்னைப் பார்த்து நான் பொறாமைப்படறேன்.”
“என்னைப் பார்த்தா!!!!! ஏன்???!!!!!”
“காரணத்தை இன்னொரு சமயம் சொல்றேன்.”
“நீங்க தூங்கல்லையா ராத்திரி?”
“இல்ல”
செலீனாவின் கிட்டே வந்து தோளில் கை வைத்தாள். “அழனுமா?” என்று கேட்டாள்.
ஆடிப்போய் அதிர்ச்சியாய்ப் பார்த்தார் செலீனா.
4.7- செலீனாவும் கயலும்
-வித்யாகுரு