4.7- செலீனாவும் கயலும்
“அழனுமா?” என்று கயல் கேட்பாளென்று எதிர்பார்க்கவே இல்லை செலீனா.
மனம் குமுறிக்கொண்டிருக்கும் போது, உயிரில் ஒருவித பயம் குடிகொண்டிருக்கும் போது, ஆறுதலாய்த் தோள் தொட்டு அழவேண்டுமா என்று ஒருவர் நம்மைக் கேட்பது எப்படி இருக்குமென்பதை, அந்த பெரும் பணக்காரிக்கு, செல்வாக்கான அந்த பெண்மணிக்கு, நொடிப்பொழுதில் உணர்த்திவிட்டாள் கயல் என்னும் எளிய, வயதில் சிறிய தமிழ்ப் பெண்.
“உன்னையும் என்னையும் போல உறுதியான பெண்கள் அழுதா அவமானம்”
“என்னை உறுதியான பொண்ணுன்னு சொன்னதுக்கு நன்றி. ஆனா நான் நிறைய அழுவேன். அழறதுக்கும் ஒரு தைரியம் வேணும். இதுல எந்த அவமானமும் இல்ல. அழறது மனசுக்கு ஒரு சிகிச்சை.”
கயல் பேசப்பேச செலீனாவின் கண்கள் கண்ணீரைத் திரட்டத் துவங்கின. வெளியே கொட்டிவிடத் தயாராய் இருந்தன. ஆனால் அவரின் அணைக் கதவுகள் கொஞ்சம் திடப்பட்டவையாக இருக்கவே, அவ்வளவு சீக்கிரம் திறந்துவிட முடியவில்லை.
“புலம்பனுமின்னா புலம்புங்க. காது கொடுக்க ரெடி. அழனுமின்னா அழுங்க. தோள் தர ரெடி. என்கிட்ட இல்லைன்னாலும் யார்கிட்டையாவது கொட்டிடுங்க. பளுவைச் சுமக்காதிங்க”
“ஏன் இதெல்லாம் சொல்ற? எனக்கு எந்த பளுவும் இல்ல. புலம்பவோ அழவோ கொட்டவோ என்கிட்ட எதுவும் இல்ல. உன் வேலைய மட்டும் பாரு” என்று கலங்கிய கண்களுடன் கோபமாய்ச் சொன்னார். காரணம் கயல் அவரை உலுக்கிவிட்டாள்.
“சரி.. எதுவும் இல்லைன்னா சந்தோஷம். BP குறைஞ்சிடும். நான் கிளம்பறேன்.” என்று சொல்லிவிட்டு அன்பான புன்னகை வீசிவிட்டு வெளியே செல்ல நடந்தாள் கயல்.
“ஹெள இஸ் ஹீ?” என்று ஒரு கேள்வி கிளம்பி வந்தது. கயல் அது காதில் விழாதது போல் பாசாங்கு செய்தாள்.
“உனக்கு நான் கேட்டது காதுல விழுந்துதுன்னு தெரியும் எனக்கு. பதில் சொல்லறியா?”
“திருப்பி ஒரு முறை கேக்கலாமேன்னு பாத்தேன்”
“சொல்ல முடியுமா முடியாதா?”
“ஐ.சி.யூவில இருக்காரு. சர்ஜரி நல்லா தான் முடிஞ்சிருக்கு. 8 மணிக்குத் தான் முதற்கட்ட பரிசோதனை. பாத்துட்டு வந்து சொல்றேன்”
“உயிருக்கு ஒன்னும் இல்லையே..”
“இல்லைன்னு நினைக்கறேன். பாத்துட்டு தான் சொல்ல முடியும்”
“வந்து சொல்லிட்டு அப்பறம் உன் வேலையைப் பார்க்க போ!”
“ட்ரை பண்றேன்” மீண்டும் புன்னகைத்துவிட்டு வெளியேறினாள்.
செலீனாவுக்கு விளக்கமுடியாத ஒரு பிணைப்பு கயலுடன் ஏற்படுவதை நன்றாய் உணர முடிந்தது. கயல் அவரைக் கவர்ந்துவிட்டாள்.
முதல் காரணம் செலீனா ஒரு ப்ரொஃபஷனல் லேடி. நேர்த்தியானவர். இளமையும் திறமையும் நேர்த்தியும் சமயோஜித புத்தியும் இண்டெலிஜென்ஸும் துணிச்சலும் ஒரு சேர கயலிடம் கண்டதும் அவர் கவரப்பட்டுவிட்டார்.
இரண்டாவது காரணம் பணத்தைப் பற்றிய அவளின் அபிப்ராயம். பணமென்றால் வாலாட்டி அவர் போடும் எலும்புத் துண்டுகளுக்காகக் குழைந்து காத்துக்கிடக்கும் நபர்களைத் தான் இன்றுவரை அவர் பார்த்திருக்கிறார். கால்டனுக்குப் பிறகு பணத்திற்கு அதிகம் முக்கியத்துவம் தராத நபராகக் கயலைத்தான் அவர் சந்திக்கிறார்.
மூன்றாவதாக கயலின் தன்மானமும் திமிரும் துணிச்சலும் நேர்மையும் பெண் என்கிற கர்வமும் அவரைச் சுண்டி இழுத்தது.
நான்காவதாக ‘அழனுமா’ என்ற கேள்வியில் கயல் நேராக அவர் உயிருக்குள் தடம்பதித்துவிட்டாள்.
பிள்ளையை ஆட்கொண்டது போல் அம்மாவின் மனதையும் ஆக்கிரமிக்கத் துவங்கிவிடாள் கயல் என்னும் மாயாவி.
***
கயலின் அறையில் உறக்கம் கலைத்த கால்டன் கண்ணைத் திறக்காமலேயே பக்கத்தில் துழாவினார். சட்டென்று கண் விழித்தார். கயல் இல்லை. அவள் தன் பக்கத்தில் படுத்திருந்தது போன்றதொரு உணர்வு இருந்தது. மெள்ள எழுந்து முந்தினம் நடந்தவைகளை நினைவூட்டிக் கொண்டார்.
கதவு தட்டும் சத்தம் கேட்டது. சென்று திறந்தால் தெரெக். கால்டனுக்கு மாற்று உடை மற்றும் இதர பொருட்களைக் கயல் சொன்னபடி கொண்டு வந்திருந்தார். சிறிது நேரம் ஆலோசனை செய்துவிட்டுச் செய்ய வேண்டியவைகளைக் கேட்டுக்கொண்டு விடைபெற்றார். தனக்கு இது தோனவில்லையே என்று நினைத்தார் கால்டன். கயலின் மற்றொரு அசல் தன்மை என்று எண்ணிக்கையில் சேர்த்துக்கொண்டார். குளித்துத் தயாராகவும் கயல் வரவும் சரியாய் இருந்தது.
“எங்க போயிட்ட?”
“அம்மாவைப் பார்க்க!”
“அம்மாவையா!!!!”
“ம்.. BP குறையல்ல.”
“ஓ.. எதுவும் பேசல்லையா?”
“பேசினாங்களே..”
அதிர்ச்சியானார். என்ன ஏது என்று பதட்டமாய்க் கேட்டார்.
“சும்மா தான் பேசிட்டிருந்தாங்க.. ஏன் இவளோ நோண்டுறீங்க?”
“காயப்படுத்துற மாதிரி ஒன்னும் சொல்லிடல்லையே.?”
“இல்லையே. நான் யாருன்னு அவங்களுக்கு தெரியாது. அவங்களைப் பொருத்தவரை நான் ஒரு டாக்டர். காயப்படுத்த என்ன இருக்கு?”
“ஓகே! பிரச்சனை வராத வரை சந்தோஷம். பட் அம்மாகிட்ட ரொம்ப வச்சுக்காத”
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“இன்னொரு சமயம் விளக்கறேன்”
“சரி அப்பாவைப் பார்க்க போறேன். இங்கையே வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
அரை மணியில் திரும்பி வந்தாள். தந்தையின் மயக்கம் தெளியவில்லையாயினும் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், கம்பி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்பதையும் தெரிவித்தாள். காயம் ஆறும் வரை தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனவும் சொன்னாள். கால்டன் காலை உணவுக்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்ததால் சாப்பாடு தயாராய் இருந்தது. இருவரும் சாப்பிட்டனர். பிறகு கயல் சொன்னதன் பேரில் கால்டன் அலுவலகம் கிளம்பினார்.
“3 மணிக்கு வர்றேன்”
“ம்.. அம்மாவைப் பார்த்துட்டு போங்க”
“இல்ல அப்பறம் பார்த்துக்கறேன்.”
“அதென்ன அப்பறம்?. இப்ப பார்த்துட்டு போங்க.”
“சரி. உத்தரவு. யாரெல்லாம் இருக்காங்க அவங்களோட.”
“தங்கச்சியும் அண்ணனும். அப்பறம் இன்னும் நிறைய பேர் வெளிய காத்திருந்தாங்க”
“சரி. நான் பார்த்துட்டு போறேன்.”
“அவங்க ரொம்ப இறுக்கமா இருக்காங்க. முடிஞ்சா இளக்க முயற்சி பண்ணுங்க”
“அது பல வருஷ இறுக்கம் கயல். என்னால எல்லாம் இளக்க முடியாது. நான் சும்மா பார்த்துட்டு போவேன். அவளோ தான். அதுவும் நீ சொல்லுறதுக்காக தான்.”
“2 வார்த்தை பேசுங்க..”
“ட்ரை பண்றேன். சரி.. ராத்திரி… என் பக்கத்துல படுத்திருந்தியா??!!!”
“அ.. அது.. இல்லையே.. நோ நோ..”
“இல்லையா!!??”
“இல்ல. ஏன் கேட்டீங்க?”
“பக்கத்துல பாத்த மாதிரி ஒரு நியாபகம். கனவா நிஜமான்னு சரியா தெரியல்ல. அதான் கேட்டேன்.”
“இல்ல..”
“சரி.. அப்ப வழக்கம் போல கனவா தான் இருக்கும்”
“கிளம்புங்க..”
“ஓகே. ஏதாவதுன்னா கால் பண்ணு”
“ம்..”
பட்டென்று குட்டியாய்க் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு வேகத்தில் வெளியேறிவிட்டார் கால்டன். அறை பயம் போகவில்லை அவருக்கு.
கயல் வெட்கத்தோடு கன்னத்தைத் துடைத்துக்கொண்டாள். கனவு காண்கிறேனென்று வெளிப்படுத்திய கால்டன் மீதான காதல் முழு நிலவாய் வளர்ந்து நின்றது. சந்தோஷமாக இருந்தது. அதே நேரம், கால்டன் மீது காதல் கூடக் கூட, மனக்குழப்பமும் கூடிக்கொண்டே வந்தது. கால்டனோடு வெற்றுக் காதல் செய்வதில் அவளுக்குத் துளியும் உடன்பாடில்லை. திருமணம் செய்ய முடியாத பட்சத்தில் இத்துடன் நிறுத்திக்கொள்வது தான் சரியென்று நினைத்தாள்.
3 மணிக்கு வீடு சென்றதும் இதுபற்றி வெளிப்படையாகப் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிடத் தீர்மானித்தாள். கால்டன் திருமணம் பற்றிச் சொன்னால் நிச்சியம் குழம்பிப் பின்வாங்கிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாய் எண்ணினாள். வலித்தது. என்ன வலித்தாலும் வெறும் காதலோடு ஈராண்டுகளில் முடியும் ஓர் உறவினைத் தொடருவதில்லையென்ற முடிவுக்கு எந்த குழப்பமும் இன்றி வந்து சேர்ந்தாள் அந்த தமிழாசிரியரின் மகள். கலங்கிய கண்களோடு ஓ.பி.டி நோக்கி நடந்தாள்.
***
கால்டன் செலீனாவைப் பார்க்கப் போனார். ஹன்னா மட்டுமே கூட இருந்தாள்.
“எப்படி இருக்கிங்க மா?”
“ம்..”
“நிக் எங்க ஹன்னா?”
“இப்ப தான் போனாரு.”
“அப்பா எப்படி இருக்காருன்னு தெரியலியே! அவங்களே வந்து சொல்லுவாங்களா இல்ல நாம போய் கேக்கனுமா! ரொம்ப மரியாதை தெரிஞ்ச ஹாஸ்பிடல் தான்.” என்று அலுத்துக்கொண்டாள் ஹன்னா.
“மரியாதை எதிர்பார்க்க நாம ஹோட்டல்ல ரூம் போட்டா தங்கிருக்கோம்?! என்ன ஆட்டிட்யூட் இது? நான் கேட்டேன். அப்பாவுக்கு மயக்கம் தெளியல்ல. பட் நல்லா இருக்காரு. கம்பி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தல்லியாம்.”
“யார்கிட்ட கேட்டிங்க?”
“ஒரு டாக்டர் ஃபிரெண்ட் கிட்ட”
“கயல் கிட்டையா?” என்று அதுவரை அமைதிகாத்த செலீனா ஆர்வமாய்க் கேட்டார்.
“ஆமா!!”
“உனக்கு கயல் பழக்கமா?”
“ஏன் கேக்குறீங்க!?”
“நேத்து கூட நீ அவகிட்ட பேசின இல்ல. எவாஞ்சலின் மேல நம்பிக்கை இல்ல, நீ பாரு கயல்னு சொன்ன இல்ல. நான் கவனிச்சேன். உனக்கு கயல் எவளோ நாள் பழக்கம்? எப்படி பழக்கம்?” என்று ஆர்வமிகுதியாய்க் கேள்விகளை அடுக்கினார் செலீனா.
கால்டன், “தெரியும்.. அவளோதான்.” என்று வளர்க்காமல் பட்டென்று முடித்தார்.
“சரி நான் கம்பனி கிளம்பறேன். நீ இங்க தானே இருப்ப ஹன்னா?”
“இல்ல. அண்ணியும் அவங்க பையனும் வந்த உடனே கிளம்பிடுவேன்” என்று சொன்னாள் ஹன்னா.
“ஓகே! ஏதாவதுன்னா கால் பண்ணுங்க மா. உடனே வந்துருவேன்” என்று ரொம்ப கஷ்டப்பட்டு சொல்லிவிட்டார். இப்படிப் பேசி பழக்கமே இல்லை அவருக்கு.
செலீனா ஆச்சரியமாய் கால்டனைப் பார்த்து மண்டையை ஆட்டினார். விடைபெற்றார் கால்டன்.
4.8- இன்னிக்கி இங்க தங்க முடியுமா?
-வித்யாகுரு