4.8 இன்னைக்கு இங்க தங்க முடியுமா?
4.9- தடுமாறிய கால்டன்
கயல் உள்ளே வந்ததும், செலீனாவின் BP அளவினைச் செக் செய்தாள். அதிகமாகத்தான் இருந்தது. பிறகு இருவரும் பேச ஆரம்பித்தனர். விடிய விடிய பேசினர்.
செலீனா கயலைப் பற்றி அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். இந்தியாவில் அவள் வளர்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் ஆச்சரியமாய்க் கண்கள் விரிய வாய் பிளக்க கேட்டுக்கொண்டிருந்தார். தான் வளர்ந்த விதத்தையும் பணக்கார வாழ்க்கை முறையையும், கயல் சொல்லச் சொல்ல மனதுக்குள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தார். இறுதியாய் அவர் புரிந்துகொண்டது ஒன்றே ஒன்று தான்.
பணம் எக்கச்சக்கமாய் இருந்தும் தன் மனதில் பெரிதாக இருக்கும் விளக்கமுடியாத வெற்றிடத்துக்குக் காரணம் எக்கச்சக்கமாய் இருக்கும் அதே பணம் தான் என்பதுதான் அது. கயல் தன் எளிமையான போராட்டம் நிறைந்த வாழ்வை விளக்க விளக்க, வாழ்வதற்கான உந்துதல் அவளது வாழ்க்கை முறையில் அதிகமாய் கிடைக்கிறது என்று புரிந்துகொண்டார். தன் வாழ்க்கைக் கதையினை விட அவளின் வாழ்க்கைக் கதை சுவாரஸ்யமாக இருப்பதாய்த் தோன்றியது.
கயலின் அப்பா, மறைந்த அவள் அம்மா, சொந்த பந்தங்கள், சுற்றம் நட்புகள் என எல்லாவற்றைப்பற்றியும் பகிர்ந்துகொண்டாள் கயல். முழுக்க முழுக்கத் தன் சொந்த முயற்சியால் போராடிப் போராடி முன்னேறி வந்து இன்று தனக்கே வைத்தியம் பார்க்கும் கயலோடு, பிறந்தது முதலே பணத்தின் நிழலில் ஐந்தும் பெற்றுக் கறி சமைத்த தன்னை ஒப்பிட்டுப் பார்த்தார் செலீனா கூப்பர். சாதனைப்பெண் கயல் தான் என்று தோன்றியது.
அவளைப் பற்றி அனைத்தும் தெரிந்துகொண்டதும் அவள் மேல் வியப்பும் அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டார். வழக்கம் போல் 10 மணிக்கு லீலாவுடன் பேசினாள் கயல். தன் அப்பா மீதும் அம்மா மீதும் அவள் வைத்திருக்குமளவான பாசத்தைத் தன் பிள்ளைகளிடமிருந்து ஒரு அம்மாவாகத் தான் சம்பாதிக்கவில்லையென்று நினைத்தார். அது உண்மையும் கூட.
கயலின் அம்மா அவளுக்கு 13 வயதிருந்த போதே தவறிப்போனாலும் மறுமணம் பற்றி மனதிலும் நினையாமல் கயலுக்காக அர்ப்பணிப்பு வாழ்வு வாழ்ந்த அப்பாவும், அவரைக் காப்பாற்றப் கடல் கடந்து இருந்தபோதும் கலங்காமல் போராடும் மகளான கயலும் உள்ளத்தை நெகிழச்செய்து விட்டனர்.
ஆனால் எல்லாவற்றையும் ஓரளவு சொல்லிவிட்ட கயல், கால்டன் டாப்பிக்கை மட்டும் எடுக்கவே இல்லை. அவர் கோபித்துக்கொண்டு போனது வேறு அடிக்கடி அத்தனை பேச்சுக்கு இடையிலும் மனதில் வந்து போனது.
கயலின் அசலான அழகையும் பாராட்டினார் செலீனா. அழகு சாதனப் பொருட்களாலும் பகட்டான ஆடைகளாலும் தான் ஒரு பெண் அழகாகத் தெரிய முடியும் என்ற அவரது அத்தனை கால அடிப்படை நம்பிக்கை ஆட்டம்கண்டது, கயல் தன் ‘அழகு’ பற்றிய கருத்துக்களை வெளியிட்டதும்.
இப்படி இரவு 11 மணி வரை கயலின் கதைகள் ஓடி ஒருவழியாக நிறைவு பெற்றது. பிறகு செலீனா தன் கதைகளைப் பகிர ஆரம்பித்தார்.
பணக்காரர்களுக்குப் பணம் தான் பிரச்சினை என்பதற்கான இன்னொரு சான்று தான் அவரின் வாழ்க்கை என்று புரிந்துகொண்டாள் கயல். செலீனா உண்மையில் நல்ல மனம் கொண்டவர் என்பது சந்தேகமின்றித் தெரிந்துபோனது.
கலாச்சார மாறுபாடுகள் தானே தவிர தாய்மைக்கே உரித்தான அடிப்படை குணம் அவரிடமும் எந்தக் குறைவும் இன்றி இருக்கிறதென்பதையும் புரிந்துகொண்டாள். செலீனா தன் இத்தனை கால வாழ்வில் தன் மனதைக் கொட்ட ஒருவரையும் பெற்றிருக்கவில்லை. சாய்வதற்கு எந்த தோளும் பக்கமிருக்கவில்லை. கண்ணீர் துடைக்க எந்த கையும் நீளவில்லை. சந்தோஷத்தின் பின்னால் இருந்த வெறுமையையும், வெற்றிக்குப் பின்னால் இருந்த வெற்றிடத்தையும் புரிந்துகொள்ள ஒருவரும் இல்லை.
செலீனாவின் பெற்றோர் சகோதர சகோதரிகள் என்று ஒருவரிடமும் தன் மன உணர்வுகளை அவரால் எப்போதுமே வெளிப்படுத்திட இயலவில்லை. திருமணமும் பணம் சொத்துக்கான திருமணம் தானே அன்றி கணவரைக் காதலித்து ஒன்றும் மணமுடிக்கவில்லை. இருவருக்குள்ளும் பிஸினஸ் பார்ட்னர்ஸ் போன்ற உறவுதான் இதுகாறும் இருந்திருக்கிறது. 4 பிள்ளைகளில் நிக்கையும் கால்டனையும் தவிர மற்ற இருவரும் வாடகைத் தாய் மூலம் பிறந்தவர்கள். 4 பேரையுமே நானிக்கள் தான் வளர்த்திருக்கிறார்கள். பிள்ளைகளைக் கூட பணம் சொத்துக்காகத் தான் ப்ளான் செய்து பெற்றிருக்கிறார்கள் இருவரும்.
இதில் கால்டன் மட்டும் தான் ப்ளான் இல்லாமல் உதித்தவர். அதுவும் கணவரோடு காதலுடன் சேர்ந்ததினால் உதித்தவர். அதனால் தானோ என்னவோ அவர் மட்டும் வித்தியாசமாய் இருக்கிறார்.
மற்றபடி செலீனாவுக்கும் கெல்லி கூப்பருக்கும் இடையில் பெரிய நீண்ட கால காதலோ நேசமோ இருக்கவே இல்லை. இப்படி இதுகாறும் நினைத்திருந்தவர் தற்போது தான் அது தவறு எனப் புரிந்துகொண்டிருக்கிறார். கம்பி துளைத்த நிலையில் தன் கணவரைப் பார்த்த நொடி தான், அவரைக் காதலிக்கத்தான் செய்கிறோம் என்பது புரிந்திருக்கிறது. இவை அனைத்தையும் செலீனா வாயிலிருந்தே அறிந்துகொண்டாள் கயல்.
“நான் என் வாழ்க்கையிலயே இப்படி யாருக்கிட்டையும் பகிர்ந்துகிட்டதே இல்ல.”
“ம்… இந்தியாவில நாங்க அக்கம்பக்கத்துல சொந்த பந்தங்க கிட்ட நண்பர்கள் கிட்டன்னு அப்ப அப்ப மனச்சுமையைக் கொட்டிருவோம். லேசா ஆய்டும்”
“நானும் லேசா ஆயிட்டேன்”
“தெரியும். BP குறைஞ்சிடுச்சே!!”
“நாம பேசின விஷயங்கள் நமக்குள்ள இருக்கட்டும்”
“இந்த சுவர்கள் வெளிய சொன்னாத்தான் உண்டு”
“இங்கிருந்து வெளியே போன அப்பறம் திரும்ப BP ஏறிட்டா!!?”
“வாங்க. இல்ல நான் உங்களை வந்து பாக்குறேன்!”
“நீ இந்தியா போன பிறகு!!”
“📞 எதுக்கு இருக்கு?”
“நான் என்ன சொல்ல வறேன்னா..”
“மனச்சுமை அழுத்தினா என்கிட்டத்தான் கொட்டுவிங்கன்னு சொல்ல வர்றீங்க. அதானே!!”
“ஆமா..நான் இதுவரை யார்கிட்டையும் இப்படி பேசினதே இல்ல! இனிமே இன்னொருத்தர் கிட்ட இந்த அளவு ஃப்ரீயா பேச முடியுமா தெரியல்ல. அதுனால நீ என் புலம்பல்களைக் கேக்க கடைசி வர இருப்பியா!?” என்று அவள் உள்ளங்கைகளைப் பிடித்துக்கொண்டு குழந்தை போல் கேட்டார் செலீனா. கயலும் வாக்குக் கொடுத்தாள்.
“எப்ப தேவைப்பட்டாலும், அடுத்த நிமிஷம் உங்க கைகளைப் பிடிச்சுக்க நான் வருவேன்” என்று கயல் சொன்னதும் முதல் முறையாக ஆத்மார்த்தமாக ஆனந்தப்பட்டார் செலீனா. முதன்முறையாக தன் பணத்துக்காக அல்லாமல் ‘தனக்கென’ ஒருவர் கிட்டிவிட்ட திருப்தியை உணர்ந்தார்.
மணி அதிகாலை 4..
செலீனாவுடன் படுக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கயல் அப்படியே அங்கேயே படுத்து உறங்கிப்போய்விட்டாள்.
உறங்கும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் செலீனா. மனதில் பலவாறான எண்ணங்கள் ஓடின.
“மாம்..” என்று குரல் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தார். கால்டன்..
விரலால் உஷ் என்று சைகை செய்துவிட்டு உள்ளே அழைத்தார்.
கால்டன் கட்டிலில் கால்மாட்டில் குறுக்காய்ப் படுத்து உறங்கிக்கொண்டிருந்த கயலையும், உறங்கும் அவளை இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த செலீனாவையும் வியப்புடனும் அதிர்ச்சியுடனும் பார்த்தார்.
“இங்க என்ன நடக்குது??!!!!”
“என் இத்தனை வருஷ வாழ்க்கையில நான் இப்படி ஒரு 10 நிமிஷம் கூட தூங்கினது இல்ல..”
“ம்..”
“எப்படி நிம்மதியா தூங்குறா பாரு!!”
“அசதியில தூங்குறாங்க”
“அசதி இருக்கும். நான் அதைச் சொல்லல்ல..”
“வேற எதைச் சொல்றீங்க??!!”
“சரி விடு! நீ எதுக்கு வந்த?”
“அது.. அது.. சும்மா உங்களைப் பாக்க வந்தேன்”
“எனக்கு ஒன்னும் இல்ல. நீ போய் ஓய்வெடு. BP நார்மல் ஆகிடுச்சு.”
“அப்பறம்.. அப்பாவைப் பார்த்துட்டு வர்றேன். நல்லா இருக்காரு.”
“பேசினாரா”
“ரொம்ப மெல்லிய குரல்ல பேசினாரு”
“என்ன சொன்னாரு?”
“நீங்க எப்படி இருக்கிங்கன்னு, எங்க இருக்கிங்கன்னு கேட்டாரு”
“..”
“சரி. நான் வர்றேன்” என்று உறங்கும் தன்னவளை ஒரு முறை நைஸாகப் பார்த்துவிட்டு வெளியேறினார் கால்டன்.
உண்மையில் கயல் தன் அம்மாவுடன் தங்கியிருக்கும் பயத்தில் தான் அவர் பார்க்க வந்தார். ஒன்றும் பிரச்சினை இல்லை என்று தெரிந்ததும் நிம்மதியானார். நேராகக் கயலின் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.
மறுநாள் காலை, கயலின் அறையில் காலை உணவு தயார் செய்து வைத்துக் காத்திருந்தார். எப்படியும் கயல் டூட்டி ஆரம்பிக்கும் முன் ரூமுக்கு வருவாள் என்று எதிர்பார்த்தார். முன்தினம் கோபத்தில் சென்றுவிட்டதால் தற்போது ஒரு சிறு சர்ப்ரைஸ் தரலாம் என்று அறையில் இருப்பதைக் கயலிடம் தெரியப்படுத்தவில்லை கால்டன். அவர் ஊகித்தது போல் கயல் வந்தாள்.
“வெல்கம் டாக்டர். சாப்பிடலாமா!”
என்று கேட்டார்.
கயல் அதிர்ச்சியில் பதில் சொல்லவில்லை. மாறாக அவள் கண்கள் கலங்கியிருந்தன. முகம் உணர்ச்சி வசப்பட்டிருந்தது. அதைப் பார்த்த கால்டன் பதறிப் போனார்.
“ஹே.. ஆர் யூ ஓக்கே?” என்று கேட்டார்.
கயல் பதில் சொல்லவில்லை. கால்டனைக் கலங்கிய கண்களோடு ஊடுருவிப் பார்த்தாள். பிறகு அவர் கன்னத்தில் அழுத்தமாய் ஆழமாய் இதழ் பதித்தாள்.
முதன்முதலாய் முத்தமிட்டுப் பின்வாங்கி மீண்டும் அவரைப் பார்த்தாள். அவளின் வலது கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் சிந்தியது. எதுவும் பேசாமல் மெதுவாக வெளியே சென்றுவிட்டாள்.
அவள் தந்த முத்தத்திலும் அவள் பார்த்த பார்வையிலும் காதலை உணர்ந்த கால்டன் தடுமாறிப்போனார். இதை அவர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
மேகத்திலிருந்து வெளிப்படும் முதல் மழைத்துளி, குழந்தையிடமிருந்து வெளிப்படும் முதல் சிரிப்பு, செடியிலிருந்து பூத்த முதல் மலர் இவற்றைப் போல் பரிசுத்தமானதல்லவா காதலி தரும் முதல் முத்தம்!!
அதன் சக்தியால் கால்டன் தடுமாறுவதிலென்ன வியப்பு!!
4.10- சொல்லட்டுமா?
-வித்யாகுரு