அந்தச் சிந்தனைகளுடனே இருவரும் கடற்கரையை அடைந்தனர். வாரவிடுமுறை என்பதால் கடல்காற்று வாங்க வந்தவர்களால் கடற்கரை நிறைந்திருந்தது. சூரியா அவளுக்கும் தனக்கும் ஐஸ் க்ரீம் வாங்கிவிட்டு தூரத்தில் நடந்து வர சந்தியாவுக்கு அந்த கடற்கரையில் வேறு யாருமின்றி தாங்கள் இருவர் மட்டுமே இருக்கும் உணர்வு.
கடல்காற்றில் சிகை கலைந்து நெற்றியில் புரள, கருப்பு நிற காலர் இல்லாத முக்கால் ஸ்லீவ் வைத்த சட்டையும், கருப்பு நிற ஜீன்சும் அணிந்து வெற்றுக்கால்கள் மணலில் புதைய நடந்து வந்தவனின் தோற்றம் மனதைக் கவர கண்ணில் ஒளி மின்ன அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் அருகில் வரவும் அவளது மனசாட்சி விழித்துக் கொண்டு மண்டையில் இரண்டு அடி போடச் சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டவள் அவன் வந்து அமரவும் “இன்னைக்கு அடிக்கடி மனசாட்சிக்கு வேலை குடுத்துட்டேன் போல” என்று எண்ணியபடி அவனிடமிருந்து ஐஸ் க்ரீமை வாங்கிச் சுவைக்க ஆரம்பித்தாள்.
கடல் அலையில் விளையாடுபவர்களைக் காட்டி அவன் ஏதோ சொல்லி சிரிக்க அவனைக் கண்ட நாள் முதல் இந்நாள் வரை அவளை வாய் மூடச் செய்து மவுனியாக்கும், அந்த மாயப்புன்னகை என்னும் சுழலில் சிக்கித் தவித்தபடி மீள இயலாமல் விழித்தாள் சந்தியா.
அச்சுழலில் இருந்து அவளை வெளியே இழுக்கும் விதமாக “அக்கா பூ வாங்கிக்கோங்கக்கா” என்ற சிறுவனின் குரல் காதில் விழ சந்தியாவோடு சேர்ந்து சூரியாவுமே அவன் புறம் திரும்பினான். சந்தியா அந்தப் பையனிடம் “தம்பி! நீ ஸ்கூலுக்குப் போற வயசுல இப்பிடி பூ விக்கிறியே? உங்க அப்பா அம்மா உன்னை வேலை செய்யச் சொலிட்டு அவங்க என்ன பண்ணுறாங்க?” என்று கேட்க
[the_ad id=”6605″]
அந்தச் சிறுவன் தூரத்தில் நீலநிறத்தில் கருப்பு புள்ளியிட்ட புடவை அணிந்த ஒரு பெண்மணி தலைகுனிந்து அமர்ந்தபடி பூக்கட்டுவதைக் காட்டி “அது எங்க அம்மா தான்கா… டெய்லிக்கும் ஸ்கூல் முடியவும் நான் அம்மாக்கு உதவியா இங்கே வந்துடுவேன். இன்னைக்கு லீவுலா, அதான் சீக்கிரமா வந்துட்டோம். நான் அம்மாக்கு துணையா இங்கே தான் இருப்பேன்கா” என்று இது அவனது வாடிக்கையான வேலை என்பது போல சொல்ல சூரியாவுக்கு இது எல்லாமே கேட்பதற்கு புதிதாக இருந்தது.
சந்தியா அவனிடம் பேரம் பேசாமல் பூவை வாங்கிக் கொள்ள அவன் “தேங்க்ஸ்கா, வர்றேண்ணா” என்று அவளுக்கும், சூரியாவுக்கும் ஒரு சலாம் போட்டுவிட்டு அடுத்த வாடிக்கையாளரை நோக்கி நகர்ந்தான்.
சூரியா அவனை வெறித்தபடியே சந்தியாவிடம் “இந்த பையனோட வயசுல நான் ஊட்டி கான்வென்ட்ல நகத்துல கூட அழுக்குப் படாம எவ்ளோ வசதியா இருந்தேன் தெரியுமா? இவனுக்கு மட்டும் கடவுள் ஏன் இந்த நிலமையை குடுத்தாரு பிரவுனி?” என்று மனத்தாங்கலுடன் கூறிவிட்டு அந்த எண்ணங்களே மனதைப் பாரமாக்க கையில் வைத்திருக்கும் ஐஸ் க்ரீமை சாப்பிட மனமில்லாதவனாய் அங்கே இருந்த குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு வந்தான்.
அதன் பின் சந்தியாவுடன் பேசிக் கொண்டிருந்தாலும் சூரியாவின் சிந்தனையை அந்தச் சிறுவன் தன்வசப்படுத்திக் கொண்டான். அங்கிருந்த கூட்டத்தினரிடையே அனாயசமாக நுழைந்து அவர்களின் எரிச்சல்மிகுந்த சொற்களைப் பொருட்படுத்தாது பூவை விற்கும் போதெல்லாம் அவன் முகத்தில் தெரியும் உணர்வை கண் கூடாக பார்த்தபடி இருந்தவன் சட்டென்று எழும்ப சந்தியா “என்னாச்சு மார்ஸ்மாலோ?” என்று கேட்க அவன் பதில் கூறாது வேகமாக நடந்துச் செல்லவும் சந்தியா வேறு வழியின்றி அவனைத் தொடர்ந்தாள்.
சூரியா போய் நின்ற இடத்தில் ஒரு கட்டுமஸ்தான மனிதன் அந்த பூ விற்ற சிறுவனின் தலைமுடியைப் பிடித்திருக்க அவனது அன்னை அந்த மனிதனை நோக்கி கைகூப்பியபடி அழுதுக் கொண்டிருந்தார்.
“எம்புள்ளைய விட்டுரு சாமி! நான் புதன்கிழமை வட்டிப்பணத்தைக் குடுத்துடுறேன்” என்று அவர் கெஞ்ச அவன் கொஞ்சம் கூட இரக்கமின்றி அந்தப் பெண்மணியின் கன்னத்திலும் அறைந்தான். அவர் சுருண்டு போய் கடற்கரை மணலில் விழ அவனது அல்லக்கைகள் அதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தனர்.
சூரியாவுக்கு இதைக் கண்டு உள்ளுக்குள் கொதித்துக் கொண்டு வர பாய்ந்து அந்த வட்டிக்கு கொடுத்தவனின் கன்னத்தில் மாற்றி மாற்றி அறைய அவனைச் சுற்றியிருந்தவர்கள் சூரியாவை விலக்க முயல சந்தியாவும் பதறிப் போனவளாய் தன் பங்குக்கு அவனை இழுக்க முயன்றாள்.
ஆனால் அவனோ வெறியோடு அந்த வட்டிக்கு பணம் கொடுத்தவனைப் போட்டுப் புரட்டி எடுக்க அந்த ஆளின் மூக்கில், வாயிலிருந்து உதிரம் சொட்ட ஆரம்பிக்கவுமே சந்தியா பதறியவளாய் “சூரியா அடிக்காதே! அவனை விட்டுரு…. சூரியா சொல்லுறதை கேளுடா” என்று அவன் கையைப் பற்ற அவன் அவளை விலக்கித் தள்ளிவிட சந்தியா ஒருவாறு சமாளித்து நின்று கொண்டாள்.
[the_ad id=”6605″]
சூரியா இன்னும் அந்த மனிதனை அடிப்பதை நிறுத்தாததைக் கண்டவள் ஆத்திரத்தோடு அவனது சட்டையைப் பற்றித் தன் பக்கம் திருப்பி அவன் கன்னத்தில் பளாரென்று அறைய சூரியா சுளீரென்ற வலியில் திகைத்து நின்றான்.
“ஒருத்தனை மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிற….ரவுடியா நீ? அவன் இந்தப் பையன் கிட்ட நடந்துகிட்டதுக்கும் நீ அவன் கிட்ட நடந்துகிட்டதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? அவன் லோ கிளாஸ் ரவுடினா நீ எலைட் கிளாஸ் ரவுடி. அவ்ளோ தான் வித்தியாசம்” என்று கத்திவிட
சூரியா இது வரை பெற்றோர், ஆசிரியர் என்று யாரிடமும் அடி வாங்கிய பழக்கம் இல்லாதவன் முதன் முதலில் அறை வாங்கிய கோபம் அடங்காதவனாய் “ஏய்! நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ. ஆனா இன்னைக்கு நான் நடந்துகிட்ட விதம் தப்பு இல்லை. சின்னப்பையன் கிட்டவும் லேடி கிட்டவும் வீரத்தை காட்டுற அவனும், அவன் பண்ணுன தப்புக்கு அவனை அடிச்ச நானும் உனக்கு ஒன்னா?” என்று பதிலுக்குச் சீற அதற்குள் சண்டையை வேடிக்கை பார்த்தவர்கள் ரோந்து சென்ற காவல்துறையினரிடம் விஷயத்தைச் சொல்லிவிட அவர்களும் அங்கே ஆஜராகி விட்டனர்.
அந்தப் பூ விற்ற சிறுவனின் தாயும், அவனும் விஷயத்தை விளக்கிவிட்டு சூரியா தங்களுக்காகத் தான் சண்டை போட்டான் என்று கூறிவிட்டனர். சந்தியாவும் காவல்துறையினரிடம் அவன் ஜே.கே.ஆர் குரூப் சேர்மன் நாராயணின் மகன் என்று கூறி இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று வேண்டிக் கொள்ள அவர்கள் அந்த வட்டிக்கு கொடுத்து மிரட்டியவனை மட்டும் கையோடு இழுத்துச் சென்றனர்.
இந்த களேபரம் முடிந்ததும் சந்தியா இன்னும் கோபம் தணியாமல் நின்று கொண்டிருக்கும் சூரியாவிடம் பேச முன்வர கையுர்த்தி அவளைப் பேசாதே என்று தடுத்தவன் அந்த பெண்மணியையும் சிறுவனையும் சுட்டிக்காட்டி “இவங்க டீடெய்ல்ஸ் எல்லாம் விசாரிச்சிட்டு வீட்டுல கொண்டு போய் விட்டுருங்க. உங்க எம்.டியா திஸ் இஸ் மை ஆர்டர்” என்றவன் வாலட்டிலிருந்து பணத்தை எடுத்து அவள் கையில் திணித்தபடி “ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போயிடுங்க” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றான்.
சந்தியாவோ அவனது மரியாதைப்பன்மை உள்ளுக்குள் எரிச்சலை மூட்ட கோபத்தில் செய்வதறியாது திகைத்தவள் “நீ கோவப்பட்டா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது” என்று எண்ணியவாறு தலையைச் சிலுப்பிக் கொண்டவள் அவன் சொன்னபடியே இருவரையும் அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு அவர்கள் பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டபின் ஆட்டோவில் வீடு திரும்பினாள்.
சுமித்ரா அவள் மட்டும் தனியாக வருவதைக் கண்டு “சூரியாண்ணா எங்கே?” என்றபடி அவனைத் தேட சந்தியா எரிச்சலுடன் “அவன் இந்நேரம் அவங்க வீட்டுல இருப்பான் சுமிக்கா… அண்ணா நொண்ணானு..சை” என்று ஆரம்பித்தவள் கடற்கரையில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சுமித்ராவிடம் ஒப்பித்துவிட்டாள்.
“நீயே சொல்லு, அவன் நடந்துகிட்ட விதம் தப்பு தானே… படிச்சவனா மெச்சூர்டா பிஹேவ் பண்ணுவானு பார்த்தா அவன் தேர்ட் ரேட்டட் ரவுடி மாதிரி அந்தாளை போட்டுப் புரட்டி எடுத்துட்டான் சுமிக்கா. அவனை தடுக்க நான் எவ்ளோவோ டிரை பண்ணுனேன். அவன் என்னை கண்டுக்கவேல்ல. அதான் அறைஞ்சுட்டேன். நான் அப்பிடி பண்ணிருக்கக் கூடாது தான். ஆனா அவனோட பிஹேவியரால நாராயணன் சாருக்கு, கம்பெனிக்கு எதுவும் கெட்டப்பெயர் வந்துடக் கூடாதுனு தான் நான் அப்பிடி பண்ணிட்டேன்.
அதுக்கு அவன் கோவப்பட்டா நான் என்ன பண்ணுறது? பெரிய இவனாட்டம் ஒரு எம்.டியா என்னோட ஆர்டர்னு சொல்லிட்டுப் போறான் அந்த மார்ஸ்மாலோ. சனிக்கிழமை சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் தான் இந்த எம்.டி செகரட்டரிலாம். அதுக்கு மேல அவன் யாரோ நான் யாரோ…எந்த எம்.டி செகரட்டரி கூட பீச்சுக்குப் போறாரு?” என்று பொருமித் தீர்த்துவிட்டு அவளது அறைக்குள் தஞ்சமடைந்தாள். சுமித்ரா இது சாதாரணமாக நண்பர்களுக்குள் எழும் சண்டை தான் என்பதால் பெரிதாக இதை நினைத்து வருந்தவில்லை.
[the_ad id=”6605″]
ஆனால் அறைக்குள் சென்ற சந்தியாவோ இன்று காலையிலிருந்து நிகழ்ந்த அனைத்தையும் எண்ணியவள் கோயிலில் அவளை வெட்கப்பட வைத்த அவனது ரசனைப்பார்வையையும் மாலை கடல்காற்றில் சிகை கலைய அவன் நடந்து வந்த தோற்றத்தையும், அதன் பின் நடந்த களேபரங்களையும் நினைத்தபடி “ரொம்ப நாளுக்கு அப்புறம் நான் கொஞ்சம் சந்தோசமா இருந்தேன். அது கூட கடவுளுக்குப் பொறுக்கலை போல” என்று மனதிற்குள் வெதும்ப ஆரம்பித்தாள்.
அதே நேரம் சூரியாவோ அவனது அறையில் கண்ணாடியில் தனது இடதுகன்னத்தில் இருந்த சந்தியாவின் கைத்தடத்தைத் தடவிக் கொடுத்தபடி புருவம் சுளிக்க நின்றான்.
“ஒருத்தனை மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிற….ரவுடியா நீ? அவன் இந்தப் பையன் கிட்ட நடந்துகிட்டதுக்கும் நீ அவன் கிட்ட நடந்துகிட்டதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? அவன் லோ கிளாஸ் ரவுடினா நீ எலைட் கிளாஸ் ரவுடி. அவ்ளோ தான் வித்தியாசம்” என்ற சந்தியாவின் குரல் காதுக்குள் வண்டாய்க் குடைய அவள் அறைந்தது கூட அவனுக்குப் பெரிதாய் படவில்லை.
ஒரு தோழியாய் அங்கே அவள் அவனுக்கு ஆதரவாய் நின்றிருக்க வேண்டுமே தவிர தன்னைப் புரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கக் கூடாது என்ற ஆதங்கம் தான் சூரியாவின் மனதை அழுத்தியது. அவனது ஆதங்கம் முழுவதையும் டிரேட் மில்லில் ஓடித் தணிக்க முயல அவன் உடலில் பெருகிய வியர்வையைப் போல நேரமாக நேரமாக அவனது கோபம் அதிகரித்ததே தவிர அது குறையவே இல்லை.
சாரல் வீசும்….