கள்வன் – 11
“ஏய் அவர் சும்மா ஒரு பேச்சிற்கு மரியாதை நிமித்தமாக வீட்டிற்கு அழைத்தால் நீ என்னடி என்னை இன்றைக்கே இங்கே இழுத்துட்டு வந்துட்ட…”
இன்பனின் வீட்டு வாசலில் தத்தம் வண்டியை நிறுத்த, தாங்கள் வந்திருப்பது இன்பன் வீடு என்று தெரிந்தவுடன் இனியாவிடம் வினா எழுப்பினாள் யுக்தா.
“சும்மா இருடி. உன்னோட அவரோட விருப்பத்தை நான் நிறைவேற்றவில்லை என்றால் தெய்வ குத்தமாகிடும்டி…” என்று கன்னத்தில் போட்டு பழிப்பு காட்டினாள் இனியா.
“ஐயோடா… மேடம் பெரிய பக்திமான்… தெய்வ குத்ததுக்கு எல்லாம் அஞ்சுர ஆளு… ஆனாலும் நீ செய்வது எதுவும் சரியில்லைடி…” எச்சரிக்கையுடன் வந்தது யுக்தாவின் குரல்.
“ஹே… எனக்கு அவரை பற்றி தெரியவில்லை என்றால் மண்டை வெடித்துவிடும் போல இருக்கு. நீயும் கேட்டு சொல்லமாட்ட அதனால் எனக்கு அமைந்திருக்கும் வாய்ப்பை புத்திசாலித் தனமாக உபயோகப்படுத்துகிறேன்டி… நீ சும்மா என்னை நோண்டாமல் உன்னவரிடம் லவ்ஸ் கற்றுக்கொள்.” என்றதும் யுக்தா கண்கள் இடுங்க அவளை முறைக்க,
“ஹே…! என் பின்னரே வந்துவிட்டீர்களா!? சொல்லியிருந்தால் காத்திருந்து நானே அழைத்து வந்திருப்பேனே…” என்றபடியே ஆச்சர்யத்தை தாங்கி வீட்டிலிருந்து வெளிவந்து அவர்களின் உரையாடலுக்கு முட்டுக்கட்டை போட்டான் இன்பன்.
[the_ad id=”6605″]
அவனுக்கு சற்றும் சளைக்காத குரலில், “என்னை சாக்காக வைத்து உங்களவள் தான் உங்களைப் பார்க்க என்னை இழுத்து வந்துவிட்டாள்.” என்று அப்படியே அந்தர் பல்டி அடித்தாள் இனியா.
அவளின் பல்டியில் யுக்தாவின் இதழ்கள் இரண்டாய் பிளந்து நின்றது. என் வீட்டிற்கு வாடி என்று கூப்பிட்டுவிட்டு ஏமாற்றி இங்கே அழைத்து வந்ததோடு மட்டுமில்லாமல் பழியை அவள் மீதே போட்டால் அதிர்ச்சி ஆகாமல் என்ன செய்வாள் யுக்தா.
“உள்ள வாங்க… அம்மா… யார் வந்திருக்கிறார்கள் என்று வந்து பார்.” என்று அவர்களை உள்ளே அழைத்து விட்டு தன் அன்னையை கூவிக்கொண்டே உள்ளே சென்றான் இன்பன். அந்த அழைப்பில் தான் யுக்தாவினுள் கேள்வி ஒன்று எழுந்தது. அண்ணனிற்கு ஆதரவாய் இனியா பேசியதை காதில் வாங்கியவன் அதை தன் அன்னை காதிலும் போட்டிருப்பானோ? மாமியார் தன் அன்னை பேசியதை மனதில் வைத்து தன் மேல் குரோதம் கொண்டிருப்பாரோ? அவரின் மனந்தாங்கள் அவளின் எதிர்கால வாழ்க்கையை சிக்கலாக்குமோ? என்ற பலவித சிந்தனை அவளுள் ஒரு பெரிய தயக்கத்தையும், கிலியையும் ஏற்படுத்தி இருந்தது.
வேகமாக இரண்டடி வைத்த இனியா திரும்பி, “யுக்தா ஏன் அங்கேயே நிற்கிற? உள்ள வா.” என்று வீட்டிற்கு உரிமைப்பட்டவள் போல் அவளை உள்ளே இழுத்துச் சென்றாள்.
அவர்களை எதிர்கொண்டு சிவகாமி உவப்புடன் உபசரிக்க, நிம்மதியுற்ற யுக்தாவின் பார்வை அவ்வீட்டின் பொலிவின்மையை கவனித்து யோசனையில் ஆழ்ந்தது. நிச்சயத்திற்கு முன்னே மாப்பிள்ளை வீட்டை பார்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறிய போது வீடு முக்கியமில்லை மனிதர்கள் தான் முக்கியம் என்று கூறியது நல்லதாய் போய் விட்டது என்று நினைத்துக் கொண்டாள். வீட்டை பார்த்திருந்தால் இந்த பந்ததிற்கு ஒத்திருப்பார்களோ என்னவோ!?
“என்ன பாஸ் உங்க ஆளு உங்களை ஆராயாமல் உங்க வீட்டை பார்த்திட்டு இருக்கா… நீங்களும் ஒன்னும் பேசாம அமைதியா இருக்கீங்க?” இன்பனை சீண்டினாள் இனியா.
அங்கிருக்கும் முதல் அறைக்கு சென்று அவனைப் பார்க்க கால்கள் பரபரத்தாலும், தான் முந்திக்கொண்டு எந்த உரிமையில் செல்வது என்ற நிதர்சனம் உணர்ந்து அடங்கி அமர்ந்திருந்தாள். யாரும் ஒருவர் அவன் பேச்சை எடுத்தால் உடும்பு பிடியாய் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று காத்திருந்தவளுக்கு அனைவரின் அமைதியும் சிக்கலை ஏற்படுத்த அவர்களுக்கு குடிக்க எடுத்துவர என்று சிவகாமி உள்ளே சென்றதும் மெளனத்தை கலைக்கும் விதமாய் கேலிப்பேச்சை துவங்கினாள்.
அவனோ யுக்தாவை விட்டுக்கொடுக்காமல், “என் வீட்டை பார் என்னை பிடிக்கும் என்று காலையில் நான் சொன்னது ரிவெர்ஸா நடக்குதுங்க… நடக்கட்டும்… அவள் வாழப்போற வீட்டை பார்க்கும் ஆவல் இருக்குமல்லவா…”
[the_ad id=”6605″]
‘என்ன தத்தியா இருக்காங்க இரண்டு பேரும். இவர்கள் நகர்ந்தால் தான் எவ்வித கேள்வியும், விளக்கமும் இல்லாமல் நான் அந்த அறைக்கு செல்ல முடியும்.’ என்று மனதில் அவர்களை வசைபாடிய இனியா அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையில் இறங்கினாள். ஆனால் யுக்தா அவளையும் அறியாமல் இனியாவிற்கு கைகொடுத்தாள்.
“உங்கள் அண்ணன் எங்கே இருக்காங்க இன்பன்? நிச்சயத்திற்கும் நீங்கள் அழைத்து வரவில்லை இப்போது வீடு வரை வந்துவிட்டு பார்க்காமல் எப்படி?”
“வா…” என்று இன்பன் வாய்மொழியிட்டு எழும்ப, யுக்தாவிற்கு முன் இனியா எழுந்து அவனை தொடர தயாராக இருந்தாள். அவளின் வேகம் கண்டவுடன் தான் யுக்தாவிற்கு விபரீதம் புரிந்தது. தோழியின் அதீத ஆர்வம் உரைத்தது. மனதில் கலக்கம் பிறந்தது.
அவளை அடக்கும் விதமாய் யுக்தா இனியாவின் மணிக்கட்டை தன் விரல்கள் கொண்டு கெட்டியாக பிடித்துக்கொண்டாள். அதையெல்லாம் உணராத இனியா அவளையும் இழுத்துக் கொண்டு இதயன் அறைக்கு சென்றாள்.
முதல் சந்திப்பில் தன் வதனத்தில் வெளிப்பட்ட வேதனையின் வெளிப்பாடாய் இதயன் முகம் திருப்பியது நினைவில் வர, இனியா தன் மனதை சீர்படுத்திக் கொண்டு இதழ்களில் உற்சாகத்தை தவழவிட்டு அவ்வறைக்குள் நுழைய, இதயனை மறைத்தபடி குனிந்து நின்று அவனிடம் ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தான் இன்பன்.
இனியா தொண்டையை செருமி அவளின் இருப்பை தெரிவிக்க இன்பன் பட்டென்று நிமிர்ந்து அவர்கள் புறம் திரும்பி வரவேற்பாய் மென்னகை சிந்தினான், “நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று அண்ணனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.”
யுக்தா வாய் திறந்து எதுவும் கூறும் முன் முந்திக்கொண்ட இனியா, இன்பனை நெருங்கி, “ஹாய்…” என்று முகம் மலர கட்டிலில் வீற்றிருந்த இதயனை எதிர்கொண்டாள்.
“என்னை நினைவிருக்கிறதா? ஐ அம் இனியா. அன்றைக்கு உங்க அம்மா மயங்கி வீட்டில் கொண்டுவந்து விட்டேனே… நீங்கள் கூட நன்றி சொன்னீங்களே…” அவனுக்கு தன்னை நினைவுப்படுத்தும் ஆவலில் சூழ்நிலை மறந்து படபடவென்று பேசினாள்.
ஆனால் அவனோ அவளுக்கு நேரெதிராய் முகத்தில் எவ்வித சலனமுமின்றி அவளை எதிர்கொண்டான். அவனைப் பொறுத்தவரை அவள் பாசிங் க்ளவுட். அவன் அன்னைக்கு உதவினாள், நன்றி உரைத்தாகிவிட்டது. அவ்வளவே அவர்களுக்குமான உறவு. அதை மீறி அவளிடம் எவ்வித அனுதாபமோ, நட்புறவோ வளர்க்க விரும்பவில்லை அவன். தன் தம்பியின் மனைவி ஆகப் போகிறவளின் தோழி என்பது அறிந்தும் அவளுக்கு தான் பெரிதாக முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என்பதே அவனின் கருத்தாய் இருக்க, அதுவே அவளை அவனிடம் பிடிவாதம் பிடிக்க வைத்தது.
“ஹலோ என்ன இன்றைக்கு தான் புதிதாக பார்ப்பது போலப் பார்க்கிறீர்கள்? நடிக்க ட்ரை செய்கிறீர்கள்… ஆனால் சரியான சொதப்பல்…” என்றவள் அவனின் உதாசீனத்தை பார்த்து முகத்தை அஷ்டகோணலாக்கினாள். அவளின் செய்கைகளை பார்த்தவனுக்கோ முகத்தை சீராக சலனமின்றி வைக்க பெரும்பாடாய் போயிற்று.
மற்ற இருவருக்கும் காட்சிப் பொருளாக தெரிகிறோம் என்பதை உணராமல் இனியா மல்லுக்கு நிற்க இன்பன் கனைத்து தன் இருப்பை நினைவுபடுத்தி, யுக்தாவை முன் இழுத்து தன் அருகில் நிறுத்தினான்.
“யுக்தா அண்ணா…” அறிமுகப்படுத்தியவன் முகத்தில் பதிலை எதிர்பார்த்து கேள்வி ஒன்று தொக்கி நின்றது. அண்ணன் என்ற அழைப்பும் இரு பெண்கள் முன்னிலையிலும் தானாய் வந்திருந்தது.
“என் ஃபிரண்ட்…” என்று இனியா இப்போதும் குறுக்கிட, சந்தேக மேகங்கள் இன்பனுள்… இனியா அதிகம் உரிமை எடுத்துக்கொள்கிறாளோ என்ற எண்ணம் தோன்றிய நொடியே அது அவளின் குணமாக இருக்கலாம், எதையும் தவறாக நினைக்கக்கூடாது என்று மனதிற்கு கடிவாளமிட்டான்.
ஆனால் தோழிக்கு தெரியாதா தோழியைப் பற்றி… இனியாவின் செய்கைகள் எதுவும் உவப்பானதாய் தெரியவில்லை யுக்தாவிற்கு. மேலும் அதை ஆராய நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்து இதயனை பார்த்து மெலிதாய் ஒரு புன்னகை சிந்தினாள் யுக்தா. அவனும் வரவேற்பாய் முறுவலித்தான். இதை கண்டுகொண்ட இனியாவிற்கு தான் ஏனோ காரணமின்றி கோபம் கொப்பளித்தது. அது முறைப்பாய் உருவெடுத்து அவனை பொசுக்க சுவாரசியமாய் ரசித்துக் கொண்டிருந்தான் அவன்.
[the_ad id=”6605″]
பிரித்தறியாது தன்னையும் சாதாரணமானவன் போல, சக மனிதனாய் மதித்து அவனின் குறையை வெளிக்காட்டாது அவள் நடந்து கொள்ளும் விதம் அவனை வெகுவாய் ஈர்த்தது என்றால் அவளின் இந்த முறைப்பு விந்தையிலும் விந்தையாய் தெரிந்தது. ஒரே ஒரு முறை பார்த்து பழகியிராதவனுடன் அவள் செல்ல சண்டை போட தயாராக இருப்பது வியப்பே. இந்த நிலையிலும் தன்னை ஒருவள் மதித்து நட்பு பாராட்ட விரும்புகிறாள் என்பது அவனுக்கு உவப்பை கூட்டினாலும், அவளின் நட்புக்கு எவ்வித பிரதிபலனும், நியாயமும் செய்ய இயலா தன் நிலை உணர்ந்து கழிவிரக்கம் பிறக்க வதனத்தை கடினமாக்கிக் கொண்டான்.
நட்பு பாராட்ட விரும்புகிறாள் என்று அவனாய் நினைத்துக் கொண்டிருக்க, அவளுக்கோ எதற்கு இவ்வளவு உரிமையெடுத்து அவனை காண, அவனை தன்னுடன் சகஜமாக்க முயல்கிறோம் என்றே தெரியாமல் மனம் செலுத்திய போக்கில் பயணித்தாள்.
“என்ன எல்லோரும் இங்கே இருக்கீங்க? யுக்தா, இனியா வாங்காமா காபி எடுத்துக்கிட்டு காற்றாட வெளியில் வந்து குடிங்க…” அவர்களை தேடிக்கொண்டு உள்ளே நுழைந்த சிவகாமி கூற, யுக்தா ஒரு தம்ளரை எடுத்துக்கொண்டு இனியாவை பார்க்க, அவள் ஒரு தம்ளரை கையில் ஏந்தி வெளியேற விருப்பம் இல்லாதவளாய் யுக்தாவின் முறைப்பை உதாசீனப்படுத்தி அங்கேயே நிற்க, சிவகாமி அவர்கள் தன்னை பின்தொடர்வார்கள் என்றெண்ணி வெளியேறிவிட்டார்.
“இனியா அத்தானுக்கு ரெஸ்ட் கொடுக்கலாம். அவங்க தூங்கட்டும் நாம் வெளியே போகலாம்.” என்று பல்லிடுக்கில் கடுப்படித்தாள் யுக்தா. விட்டால் அவளை இழுத்துக் கொண்டு சென்றுவிடுவாள். நாகரிகம் கருதி தன் உடல் மொழியிலும், வாய் மொழியிலும் தன் நிலையை உணர்த்திக் கொண்டிருந்தாள்.
இனியா அதை சட்டை செய்யாதவளாய் இன்பனை நெருங்கி, “என்ன சார் ஆபிசில் அத்தனை காமிராக்கள் மத்தியில் செமையா லவ்ஸ் விட்டீங்க… ஆனால் இப்போது தனியாக இருக்க கிடைக்கும் அருமையான சான்சை யூஸ் பண்ணாமா இப்படி பண்றீங்களே? உங்களுக்காக தான் பாஸ் அவளை இங்கே கூட்டி வந்திருக்கிறேன் இப்படி சொதப்புறீங்களே? உங்க ஆள் வேறு லவ் பண்ணவே டைம் இல்லைனு ஒரே பீலிங்ஸ்…” என்று ஏற்றிவிட இன்பனின் பார்வை யுக்தாவிடம் சென்று பின் தமையனிடம் சென்று நிலைகுத்தி நின்றது.
வருங்கால மனைவி வந்தவுடன் என்னை விட்டுட்டானே என்று இதயன் நினைக்கக்கூடுமோ என்றதொரு தயக்கம் இன்பனை நகர விடவில்லை. இதயன் அப்படி நினைக்கும் ஆள் இல்லை என்றாலும் அவனின் தற்போதைய சார்ந்திருக்கும் நிலை அவனை சமநிலையில்லாமல் அதிக உணர்ச்சி வசப்படக் கூடியவனாக மாற்றி இருந்தது, அது இன்பனுக்கும் தெரிந்திருந்தது.
தன் வார்த்தைகள் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்த இனியா இதயனை பார்த்து கண்சிமிட்டினாள்.
அவன் புருவங்கள் சுருங்கி என்னவென்பது போல் பார்க்க, இனியா தன் வலப்புறம் கண்காட்டினாள். அவளின் விழி திசையை தொடர்ந்தவன் இன்பன் மற்றும் அவனைத் தொடர்ந்து யுக்தாவும் நிற்பதை கண்டு யோசனையாய் மீண்டும் இனியாவை ஏறிட்டான். அவளோ முகம் கொள்ளா புன்னகையுடன் இன்பனை நோக்கி,
“பாருங்க உங்க அண்ணனே உங்களை யுக்தாவுடன் செல்லச் சொல்கிறார். இப்படி ஒரு கோல்டன் சான்ஸ் எப்போதும் கதவை தட்டாது மிஸ்டர் யுக்தா…” என்று கண்ணடித்தாள்.
அவளின் இந்த திருட்டுத்தனத்தை உணர்ந்த யுக்தாவும், இதயனும் கருவிழி தெறித்து வெளியே விழும் அளவிற்கு அதிர்ச்சியை கண்களில் தேக்கி இருந்தனர். மாறாய் இன்பனோ அவள் சொல்வது உண்மையாய் இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருந்தான். காரணம் அவன் அன்னை கூறிய இனியாவின் கூர்மை. அன்று ஒரு நாள் இதயன் யாசித்ததை கண நொடியில் அவள் கண்டுகொண்டதை சிவகாமி அவனிடம் கூறியிருந்தார். அதே சிந்தையுடன் தமையனை ஏறிட, நொடிப் பொழுதில் தன் அதிர்ச்சியை மறைத்து விட்டான் இதயன். இனியா கூறிவது போல் அவர்களுக்கு தனிமை தேவை என்றுணர்ந்து யுக்தாவையும், இன்பனையும் அழுத்தமாய் பார்த்து கண்சிமிட்டினான். அதிலிருந்த பொருள் புரிந்து இன்பனும் நன்றியாய் கண்சிமிட்டிவிட்டு யுக்தாவை வெளியே அழைத்துச் சென்றான்.
அவர்கள் வெளியே சென்றதும் உதட்டை குவித்து பெருமூச்சை வெளியேற்றியவள் இதயனை நன்றாக முறைத்தாள்.
பழைய இதயனாய் ஓட்டுக்குள் சுருங்கி அவளின் முறைப்பை அலட்சியப்படுத்தியவன் மறுபுறம் திரும்பிக்கொள்ள,
“ஹலோ என்ன ரொம்ப ஓவரா பண்றீங்க? அவளை பார்த்து சிரிக்கிறீங்க… என்னை தெரியாதது போல் காட்டிக் கொள்கிறீர்கள்? அவளுக்கு முன்னே நான் தான் உங்களை பார்த்திருக்கிறேன் என்பது நினைவில் இருக்கட்டும் மிஸ்டர்…” என்று விரல் நீட்டி எச்சரிக்க, அவன் முகத்தை திருப்பாமல் அவளின் கோபத்தை ஏற்றிக்கொண்டிருந்தான்.
[the_ad id=”6605″]
“நான் பேசிட்டே இருக்கேன்… நீங்க எனக்கென்னனு அந்த பக்கம் திரும்பி இருக்கீங்க?” என்றபடியே கட்டிலின் மறுபுறம் சென்றவள் அவனைப் போலவே அவனின் முகத் திருப்பலை சட்டை செய்யாது அவனின் தோய்ந்த கையை எடுத்து தன் கைக்குள் பொறுத்திக்கொண்டு “பிரண்ட்ஸ்…” என்றாள்.
அவளின் மென்மையான தேகத்தை அவனால் உணர முடியவில்லை என்றாலும் விழியால் அதை காண முடிந்தது. உணர முடிந்தது. இந்த புதிய வரவு அவனுக்கு தவிப்பையும், யோசனையும் ஒரு சேர தோற்றுவிக்க, அந்த தவிப்பிலும்,
விலக நினைப்பவனை விலக விடாமல் பிடித்து வைத்துக்கொள்ள முயலும் அழகான இராட்சசியாய் தெரிந்தாள் அவள்.
*^*^*