மறுநாள் காலையில் அலுவலகம் சென்ற சந்தியா வழக்கம் போல சூரியாவின் அலுவலக அறைக்குள் தலை காட்டிவிட்டுத் தனது அறையை நோக்கிச் செல்ல முயல “சந்தியா தேவராஜ் கொஞ்சம் நில்லுங்க” என்றவனின் குரல் காதில் விழவும் அவன் முழுப்பெயர் சொல்லி அழைத்த எரிச்சல் உள்ளுக்குள் சுருசுருவென்று ஏற புருவச்சுழிப்புடன் திரும்பினாள் சந்தியா.
சூரியா முந்தைய நாளின் நினைவுகளை அசை போட்டபடி சலனமின்றி அவளைப் பார்த்தவன் “நேத்து நான் உங்க கிட்ட சில டீடெய்ல்ஸ் வாங்கச் சொல்லிருந்தேன். அதுல்லாம் வாங்கிட்டிங்களா?” என்று கேட்க அவள் ஆமென்று தலையை மேலும் கீழுமாக ஆட்டி வைத்தாள்.
“அந்த லேடி நேம் சுப்புலெட்சுமி…. அவங்க ஹஸ்பெண்ட் அவங்களையும் அவங்க பையனையும் விட்டுட்டு ரொம்ப வருசத்துக்கு முன்னாடியே போயிட்டாரு… அந்தப் பையன் பாபு பக்கத்துல இருக்கிற ஸ்கூல்ல தான் படிச்சிட்டிருக்கான்… அவங்க பூ வியாபாரத்தை கடந்த மூனு மாசமா தான் பார்க்கிறாங்க. இதுக்கு முன்னாடி சில வீடுகள்ல சமையல் செய்யுற வேலை பார்த்திருக்கிறாங்க… பட் அங்கேலாம் ஓனர்ஸ் அவங்க கிட்ட மிஸ்பிஹேவ் பண்ண டிரை பண்ணுனதால அவங்க வேலையை விட்டு நின்னுட்டாங்க” என்று அவனிடம் ஒப்பித்து முடிக்க
சூரியாவுக்கு அவரது பெயரிலுள்ள லெட்சுமி என்ற வார்த்தை அவனது பிரியத்துக்குரிய லெட்சுமிம்மாவை நினைவுறுத்தவே சந்தியாவிடம் திரும்பியவன் “ம்ம்… குட்! இப்போ நீங்க என்ன பண்ணுறிங்கனா நேரா அந்த லேடியோட வீட்டுக்குப் போய் அவங்களை நம்ம கம்பெனி கேண்டின்ல குக்கிங் அஸிஸ்டெண்டா ஜாயின் பண்ணச் சொல்லி கூப்பிடுறிங்க….அப்பிடியே அந்தப் பையனோட ஸ்டடீஸுக்கு கம்பெனியே பொறுப்பேத்துக்கும்னு சொல்லி நாளைக்கு அவங்களை ஜாயின் பண்ணிக்கச் சொல்லுங்க” என்று கடகடவென்று கட்டளையிட சந்தியா வாய்ப்பேச்சின்றி நின்று கொண்டிருந்தாள்.
பின்னர் “சார் நம்ம ஒர்க் பண்ணக் கூப்பிட்டாலும் வர்றதும் வராததும் அவங்க இஷ்டம் தானே! இதுல நம்ம அவங்களைக் கட்டாயப்படுத்த முடியாது” என்று இழுத்துப் பிடித்த பொறுமையுடன் கூற
சூரியா சாதாரணமாக “அவங்களை இங்க ஜாயின் பண்ண வைக்கிறது உங்களோட வேலை…போய் அதைப் பாருங்க” என்று தெனாவட்டாகக் கூறிவிட்டு நீ போகலாம் என்று சைகை காட்ட சந்தியா பிடிவாதமாக “நான் பெர்சனல் செகரட்டரி வேலைக்குத் தான் வந்தேன்…. அதுல இந்த வேலையும் சேருமா சார்?” என்று கண்ணை விரித்துக் கேட்க
சூரியா “என்னோட பெர்சனல் செகரட்டரியோட முக்கியமான வேலையே நான் சொல்லுறதை செய்யுறது தான். இப்போ உங்களுக்கு நான் என்ன ஆர்டர் போட்டேனோ அதைச் கம்ப்ளீட் பண்ணிட்டு என் முன்னாடி வாங்க. இல்லைனா டெர்மினேசன் ஆர்டரை வாங்கிக்க ரெடி ஆகிக்கோங்க” என்று சிறிதும் அசராமல் கூறிவிட சந்தியாவுக்கு திக்கென்றது.
இவன் வேலையை விட்டு மட்டும் அனுப்ப மாட்டான்.. கட்டாயம் தனது பெற்றோருக்கு வேலையை விட்டு அனுப்பிய செய்தியையும் சொல்லிவிடுவான்; அப்படி கூறிவிட்டால் தான் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு திருநெல்வேலிக்கு மூட்டை முடிச்சுடன் கிளம்ப வேண்டியது தான் என்று எண்ணும் போதே அவள் கண்ணீரும் கம்பலையுமாக இரயில் நிலையத்தில் நிற்கும் காட்சி சந்தியாவின் கற்பனையில் தோன்றிவிட
சூரியாவும் “சப்போஸ் உங்களுக்கு வசதிப்படாதுனா சொல்லிடுங்க…. நான் உங்க அம்மாக்கு கால் பண்ணி நீங்க உங்க வேலையைச் செய்யுறதுக்கு ரொம்ப யோசிக்கிறிங்கன்னு சொல்லிடுறேன்” என்று மறைமுகமாக மிரட்ட வேறுவழியின்றி அந்தப் பெண்மணியைச் சந்திக்கக் கிளம்பினாள் அவள்.
ஸ்கூட்டியை எடுக்கும் போதே “கிண்டர்கார்டன்ல குழந்தைங்களை மிரட்டுற மாதிரி இவன் என்னை மிரட்டுறான். ஒரு சண்டைக்கு இவ்ளோ பெரிய பழிவாங்கலா?” என்று புலம்பியபடியே அந்தப் பெண்மணியின் வீடு இருக்கும் இடத்தை நோக்கி ஸ்கூட்டியை விரட்டினாள்.
அங்கே சென்று ஸ்கூட்டியை நிறுத்தியவள் வீட்டின் கதவைத் தட்ட அதே பெண்மணி வந்து திறந்தவர் அவளைக் கண்டதும் முதலில் திகைத்தவர் பின்னர் மகிழ்ச்சியுடன் “உள்ளே வாங்கம்மா” என்று அழைத்துச் சென்றார். வீட்டின் உள்ளே சென்ற சந்தியா வீட்டின் ஒவ்வொரு அடியிலும் வறுமை தன் பெயரைப் பொறித்திருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டபடி அவர் இழுத்துப் போட்ட பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தாள்.
அவள் வேண்டாமென்று மறுக்க அவளுக்காக தேநீர் தயாரித்துக் கொடுத்த சுப்புலெட்சுமி தேநீரைக் குடித்துவிட்டு அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டுச் சந்தோசத்தில் வாயடைத்துப் போனார். தனக்கு ஒரு பாதுகாப்பான வேலை, அதோடு சேர்த்து தனது மகனுடைய படிப்பையும் அவர்களே பார்த்துக் கொள்வதாகக் கூற அவரால் நன்றியுணர்ச்சியில் பேச முடியவில்லை.
ஆனால் சந்தியாவோ அவரது மவுனத்தைப் பிடித்தமின்மையாக இருக்குமோ என்ற கோணத்தில் எண்ணியவள் “அக்கா நீங்க மட்டும் ஜாயின் பண்ணலைனு வைங்க, எங்க பாஸ் என் வேலையைவே காலி பண்ணிடுவாருக்கா” என்று பரிதாபமான முகபாவத்துடன் கூற சுப்புலெட்சுமி குறுநகை புரிந்தார்.
“இல்லம்மா! எனக்கு வேலையில சேர்றதுக்கு முழுச்சம்மதம்… நான் நாளைக்கு எப்பிடி வர்றது? அட்ரஸ்…” என்று அவர் தயங்க ஊழியர்களுக்கு என்று பேருந்துவசதி செய்யப்பட்டிருப்பதால் அவரது ஏரியா பேருந்து நிறுத்தத்தில் நின்றால் போதும் என்று கூறிவிட்டு சந்தியா கிளம்ப எத்தனிக்க சுப்புலெட்சுமி இருகரம் கூப்பி அவளுக்கு நன்றி கூறினார்.
சந்தியா பதறிப் போனவளாய் “அக்கா கையை கீழே போடுங்க…என்னை நீங்க கும்பிடக் கூடாது… உங்க வயசு என்ன? என் வயசு என்ன?” அவரது கையை இறக்கிவிட்டவள் ஆதரவாகத் தட்டிக் கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள். ஸ்கூட்டியை எடுத்தவள் தலைகவசத்தை மாட்டிக் கொண்டபடி அவரிடமிருந்து கையைசைத்து விடைபெற்றாள்.
அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் முகத்தில் நீண்டநாள் கழித்து நம்பிக்கை சுடர் விட்டு ஒளிர்ந்தது.
சிறிது நேரத்தில் அலுவலகம் திரும்பிய சந்தியா சூரியாவிடம் அவர் வருவதற்கு ஒப்புக் கொண்டார் என்பதைத் தெரிவித்துவிட்டு தனது அறையை நோக்கிச் செல்ல அவள் சென்றபின்னர் “நேத்தைக்கு அவ்ளோ பேசிட்டு கொஞ்சம் கூட வருத்தம் இல்லாம போறா…நீ அடிச்சது கூட வலிக்கலை…பட் இப்பிடி என்னைக் கண்டுக்காம போறது எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா பிரவுனி?” என்று ஆதங்கப்பட்டுக் கொண்டான் சூரியா. சந்தியாவும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் இருக்க இருவருமே அவரவர் ஈகோவை விட்டுக்கொடுக்காமல் பணி சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவிர வேறு எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.
இரவில் வகுப்பு முடிந்து வீடு திரும்பிய சந்தியா சுமித்ராவிடம் புலம்பித் தீர்த்துவிட்டாள்.
“நான் பாட்டுக்கு சிவனேனு இன்ஸ்டிட்டியூட்டுக்கு தானே கிளம்பிட்டிருந்தேன். அவன் தானே ஊர் சுத்துவோம்னு சொல்லி வம்படியா என்னை இழுத்துட்டுப் போனான்? அவன் பண்ணுன ரவுடித்தனத்தை ரவுடித்தனம்னு சொன்னது தான் சாருக்கு கோவம். இன்னைக்கு முழுக்க முசுடு மாதிரி மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு இருக்கான். இருந்தா இருந்துட்டுப் போகட்டும்… நான் அவன் கூட பேச மாட்டேன்” என்று கையைக் கட்டிக் கொண்டு ஆவேசமாக உரையாடியவளைக் கண்டு சுமித்ராவுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியாத நிலை,.
இருந்தாலும் அவள் மனநிலையை மாற்றும் விதமாக “அதை விடு சந்து! என் முடியைப் பாரு. ஸ்பிளிட் எண்ட் வந்துடுச்சு…பேசாம இடுப்பு அளவுக்கு கட் பண்ணிடவா?” என்று தரையில் பரந்துக் கிடக்கும் அவளது கார்மேகக் குழலைச் சுட்டிக் காட்டிக் கூற சந்தியா அவசரமாக வேண்டாமென்று தலையசைத்தாள்.
“சுமிக்கா உன் ஹேர் எவ்ளோ நீளமா அழகா இருக்கு… ஆச்சி கூட அடிக்கடி சொல்லுவாங்க சுமியோட முடியழகைப் பார்த்தே ராஜகுமாரன் மாதிரி ஒருத்தன் வந்து கட்டிப்பான்னு…நீ அதுல போய் கைவைக்கப் போறியா? எனக்குலாம் முடி வளரவே மாட்டேங்குதுனு நான் வருத்தத்துல இருக்கேன்…ஒழுங்கா ஹேருக்கு எண்ணெய் தேய்ச்சு பராமரிக்கணுமே தவிர இனிமே முடியை வெட்டப் போறேனு சொன்னா நான் பெரியம்மாக்கு போன் பண்ணி உன்னை ஊருக்கே கூட்டிப் போகச் சொல்லிடுவேன்” என்று மிரட்டினாள்.
அதைக் கேட்டு முறுவலித்தாள் சுமித்ரா. அவளுக்குத் தெரியும் எது சொன்னால் அவள் கவனம் திரும்பும் என்று… தங்கையுடன் இரவுணவு தயார் செய்ய ஆரம்பித்தவள் “சந்து நாளைக்கு ஆபிஸ்ல மீட்டிங்டி! நீயே பிரேக்பாஸ்ட் பண்ணிடு…நான் லஞ்ச் வெளியே பார்த்துக்கிறேன்” என்று கூற சந்தியாவும் தலையசைத்தாள்.
************