காலம் என்னும் எழுத்தாளன் சந்தியாவின் வாழ்க்கை கதையின் அடுத்தடுத்த அத்தியாங்களை எழுத ஆரம்பிக்க ஒவ்வொரு அத்தியாயமும் சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருந்தது. இவ்வாறு இருக்க எங்கோ தூரத்தில் இருந்த அவளின் ஐ.பி.சி.சி தேர்வும் பக்கத்தில் வந்துவிட்டது.
நவம்பரில் தான் தேர்வு என்றாலும் அவள் அக்டோபர் முழுவதுமே விடுப்பு எடுத்துக் கொண்டாள். சூரியாவுமே அதற்கு முன்னரே எம்.ஓ.ஏ சம்பந்தப்பட்ட வேலைகளை முடித்துவிட்டதால் அவள் விடுப்பு எடுப்பதில் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டான். ஆனால் டிசம்பரில் அவனும் மார்க்கும் ஹூஸ்டனில் உள்ள மார்க்கின் அலுவலகத்தில் சந்திப்பதாக முடிவு செய்துவிட்டதால் அதற்கு முன்னர் சந்தியா அலுவலகம் வந்துவிட்டால் நல்லதென்று எண்ணினான் சூரியா.
சந்தியா நீண்டவிடுப்பில் போவதற்கு முன்னர் கேண்டின் சென்று சுப்புலெட்சுமியிடம் “அக்கா நான் ஒரு மாசம் லீவ். எனக்கு எக்சாம் வரப் போகுது.. நான் பாஸ் பண்ணனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கோங்கக்கா” என்று கூறிவிட அவரது தினசரி வேண்டுதலில் பாபுவின் படிப்போடு சந்தியாவின் தேர்வும் இடம்பெற்றுக் கொண்டது.
அவள் நிறுவனத்தின் ஆடிட்டரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்ப வர அவர் “நீ பிரைட் ஸ்டூடண்ட்னு எனக்குத் தெரியும்மா… ஆனா இந்த எக்சாம் மத்த எக்சாம் மாதிரி படிச்சதை அப்பிடியே எழுதுறது இல்லை… நம்ம படிச்சதை வச்சு நமக்கு கிடைச்ச அறிவை யூஸ் பண்ணி கொஸ்டீன் பேப்பர்ல உள்ள பிராப்ளமுக்கு சொல்யூசன் குடுக்கப் போறோம்… அப்போ உன்னோட மனசும், மூளையும் அதைப் பத்தி மட்டுமே யோசிக்கணும்…
எப்பிடி அர்ஜூனன் பறவையோட கண்ணை மட்டும் குறிவைச்சானோ அதே மாதிரி உன்னோட கவனம் எல்லாம் கொஸ்டீன் பேப்பர்ல மட்டும் தான் இருக்கணும்.. அர்ஜுனனுக்கு அம்பும், வில்லும் மாதிரி உன்னை மாதிரி இந்த எக்சாமை கிளியர் பண்ணனும்னு வெறியா படிக்கிறவங்களுக்கு அந்த ஹால்ல இருக்கிற வால் கிளாக்கும், கால்குளேட்டரும் தான் துணை… இந்த மூனு விஷயங்களைத் தாண்டி வேற எது மேல உன் பார்வை பட்டாலும் உன்னோட கவனம் சிதறிடும்..இதை மட்டும் மனசுல வச்சுக்கோ.. உன்னால எல்லா பேப்பரும் கிளியர் பண்ண முடியும்” என்று இத்தனை வருட அனுபவத்தை அவளுக்கு அறிவுரையாகக் கூறி நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்தார்.
சந்தியா அவர் சொன்னதை மனதில் நிறுத்திக் கொண்டவள் அக்டோபர் முழுவதும் படிப்பில் மூழ்கிவிட சூரியாவுமே அவளைத் தொந்தரவு செய்யவில்லை. இந்நிலையில் தான் சூரியாவின் அமெரிக்கப் பயணம் குறித்தத் தகவல் ஹேமாவைச் சென்றடைந்தது. அதைக் கேட்டதும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மகன் ஹூஸ்டன் சென்றால் கட்டாயமாக அவளைச்(?) சந்திக்காமல் இருக்க மாட்டான். அவன் மனதைக் குழப்பும் ஆரியாவும், நாராயணனும் அவனுடன் இருக்கப் போவதில்லை என்பதால் சூரியாவுக்குமே தனது இளம்பிராயத்தோழியோடு செலவளிக்க நேரம் கிடைக்கும்… அது மட்டும் போதுமே அவர்களிடம் நெருக்கத்தை உருவாக்க என்பது ஹேமாவின் எண்ணம். அதோடு அந்நேரத்தில் சந்தியாவும் இங்கே தான் இருப்பாள் என்பதால் சந்தியாவா? அவளா? என்று சூரியா குழம்பத் தேவையில்லாது போய்விடும் என்று அவர் ஒரு கணக்கைப் போட்டுவைத்தார்.
ஆனால் நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல அவரது இந்த எண்ணத்தை அவர் தன் இளையமகனிடம் வெளியிட்டு அவனுள் உறங்கிக் கொண்டிருந்த சிங்கத்தைச் சுரண்டி எழுப்பிவிட்டார்.
[the_ad id=”6605″]அன்று வழக்கம் போல ஆரியாவும் நாராயணனும் அலுவலகத்திலிருந்து திரும்பும் போது ஹேமா மூத்தமகனின் டிசம்பர் மாத ஹூஸ்டன் பயணத்தகவல் தெரிந்த குஷியில் இருந்தவர் அமைதி காக்க இயலாதவராய் வந்ததும் வராததுமாக கணவரையும், இளைய மகனையும் சீண்ட ஆரம்பித்தார்.
“லெட்சுமி நான் செய்யச் சொன்ன ஸ்வீட்டை எடுத்துட்டு வா” என்று உற்சாகமாக லெட்சுமிம்மாவை அழைத்தவர் அவர் கொண்டு வந்த இனிப்பை தானே தன் கையால் கணவருக்கும் இளைய மகனுக்கும் கொடுத்தவர் “நான் இன்னைக்கு ஒரு ஹேப்பி நியூஸ் கேள்விப்பட்டேங்க… அதை கேட்டுட்டுச் சந்தோசம் தாங்க முடியாம தான் லெட்சுமியை அல்வா பண்ணச் சொன்னேன்” என்று சொன்னபடி கணவர் அருகில் அமர ஆரியாவும் நாராயணனும் புருவமுடிச்சுடன் இனிப்பைச் சாப்பிட ஆரம்பித்திருந்தனர்.
ஆரியா காரியத்தில் கண்ணாக “நீங்க இவ்ளோ சந்தோசமா இருக்கிறளவுக்கு என்ன நடந்துடுச்சு? இந்த வருசத்தோட பெஸ்ட் சோஷியல் ஒர்க்கர்னு உங்களுக்கு எந்த கிளப்லயாச்சும் அவார்ட் அனவுன்ஸ் பண்ணிட்டாங்களா?” என்று கேட்க
அதை மறுத்தவர் “நம்ம சூரியா ஹூஸ்டன் டிரிப் போறானு கேள்விப்பட்டேன்.. அதுக்கு தான் இந்த ஸ்வீட்..” என்றார் அர்த்த புஷ்டியுடன்.
இதுக்கும் இனிப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கணவரும் மகனும் விழிப்பதைத் திருப்தியுடன் பார்த்துவிட்டு “ஹூஸ்டன் போனா தான் அவனுக்கு வாழ்க்கையில யாரை எங்கே வைக்கணும்? யாரு அவனோட வாழ்க்கை முழுக்க அவன் கூட வரப் போறாங்கனு புரியவரும்…. எப்பிடியும் என் பையன் திரும்பி வர்றப்போ நல்லச் செய்தியோட தான் வருவான்… எனக்கு என் பையனை விட அவன் ஃப்ரெண்ட் மேல நம்பிக்கை அதிகமா இருக்கு…
அவ லாஸ்ட் வீக் எனக்கு கால் பண்ணுனப்போவே சூரியாவை மிஸ் பண்ணுறதா சொன்னா.. ரெண்டு பேரும் மீட் பண்ணிகிட்டா அது அவங்க ஃப்ரெண்ட்ஷிப்புக்கும் சரி, வருங்காலத்துல அவங்களுக்குள்ள வரப் போற உறவுக்கும் சரி, ரொம்ப உதவியா இருக்கும்.. ஆரியா அல்வா நல்லா இருக்கா?“ என்று கேட்டு இளையமகனின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து விட்டு அங்கிருந்து நகர ஆரியா இனிப்பு அடங்கியக் கிண்ணத்தை நங்கென்று டீபாய் மீது வைத்தான்.
நாராயணன் “கூல் மை சன்! ஏன் இவ்ளோ கோவம் வருது உனக்கு?” என்று அவனைச் சாந்தப்படுத்த முயல
ஆரியா எரிச்சலுடன் “உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலைனு இந்த மதர் இந்தியாவை மேரேஜ் பண்ணுனிங்களா டாட்? ஒரு அம்மாவா மகனுக்கு யாரு பொருத்தமா இருப்பானு யோசிக்காம இப்போ கூட ஸ்டேட்டஸ் மண்ணாங்கட்டினு சுத்துறாங்க… இவங்களைச் சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை,…உங்கப் பையன் தான் இதுக்குலாம் காரணம்.. அவனும் குழம்பி நம்மளையும் குழப்புறான்… இதுல என்னை விட ஒன் இயர் மூத்தவன் வேற… என் ராஜதந்திரத்துல கொஞ்சம் கூட அவனுக்கு இல்லையே டாட்.. அவன் ஏன் இப்பிடி தத்தியா இருக்கான்?” என்று பொறிந்துத் தள்ளிவிட்டான்…
நாராயணன் அவனை மிகுந்தச் சிரமப்பட்டு அமைதிப்படுத்திவிட்டு அவரது அறையை நோக்கிச் செல்ல ஆரியா அவனது அன்னையின் இந்தப் பகல்கனவு பலிக்காமல் போக என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தான்.
அவன் யோசனையில் ஆழ்ந்தபடியே தனது அறையை நோக்கிச் சென்றான். அங்கே சென்று அவன் உடைமாற்றிவிட்டு வழக்கம் போல போனை நோண்டிக் கொண்டிருக்க கீழே சூரியாவின் கார் நிற்கும் அரவம் கேட்கவே விறுவிறுவென்று அண்ணனின் அறையை அடைந்தான்.
சூரியா தனது அறைக்குள் வந்தவன் தனக்கு முன்பாக அங்கே ஆஜராகி இருந்தத் தம்பியைக் கண்டதும் “என்னடா இப்போலாம் நீ அடிக்கடி எனக்கு முன்னாடியே என்னோட ரூமுகுள்ள வந்துடுற… என்ன விஷயம்?” என்று கேட்டபடி கோட்டை கழற்றிவிட்டு கழுத்தை இறுக்கிய டையைக் கழற்றினான்.
ஆரியா சோஃபாவில் அமர்ந்து டீபாய் மீது கால் நீட்டியிருந்தவன் “ஒன்னும் இல்லைடா ப்ரோ.. நீ எப்போ ஹூஸ்டன் போற? சொன்னா நானும் அதுக்கேத்த மாதிரி என்னோட ஒர்க் ஷெட்யூலை அரேஞ்ச் பண்ணிப்பேன்…” என்று கூற சூரியா தேதியை அறிவிக்க ஆரியா உச்சுக் கொட்டிக் கொண்டான்.
[the_ad id=”6605″]இவன் ஏன் இவ்வளவு வேகமாக உச்சுக் கொட்டுகிறான் என்று சூரியா அவனைப் பார்த்தபடியே முகத்தைக் கழுவிவிட்டு வர ஆரியா “அப்போ நீ வர்ற வரைக்கும் எனக்கு சண்டே நோ என்ஜாய்மெண்ட்… ஆபிஸ்லயும் வேலை பார்த்துட்டு சண்டேயும் அலையுறது எனக்கு சரிபடாதுடா.. சண்டே தியா கூட சேர்ந்து ஒர்க் பத்தி டிஸ்கஸ் பண்ணிப்பேன்…அவ கூட வேலை பார்க்கிறப்போ டயர்டே தெரியாதுடா… அவளோட ஒர்க் டெடிகேசன், ஹியுமர் சென்ஸ் எல்லாம் சான்ஸே இல்லை” என்று சந்தியாவைக் குறித்துச் சிலாகித்து அவனை அறியாமலே அவன் அன்னையின் கனவுக்குக் குண்டு வைத்துக் கொண்டிருந்தான்.
சூரியா தம்பியின் சிலாகிப்பைக் கேட்டு நெஞ்சுக்குள் புகைந்தபடியே டவலைத் தூக்கி அவன் மீது எறிந்துவிட்டு “ஷட் அப் இடியட்… அவ இங்கே உன் கூட இருந்தா தானே? நல்லா கேட்டுக்கோ நான் மட்டும் ஹூஸ்டன் போகப் போறது இல்லை, என் கூட சேர்ந்து பிரவுனியும் வருவா.. சோ நாங்க இந்தியா திரும்புற வரைக்கும் ஆபிஸை நீ தான் பார்த்துக்கணும்… நீ மட்டும் தான்” என்று அவனை நோக்கி கை நீட்டிக் கூறிவிட்டு அவனுக்கு எதிரே சோஃபாவில் அமர
ஆரியா அதைக் கேட்டு மனதுக்குள் குதூகலித்தவன் வெளியே சோகமாய் “டேய் ஏண்டா இப்பிடி? அவ இருந்தா கூட நான் கொஞ்சம் ரிலாக்சா ஃபீல் பண்ணுவேன்… நீ ஏன்டா எப்போவும் எங்களைப் பிரிக்கப் பாக்கிற?” என்று கேட்க
சூரியா விஷமமாகப் புன்னகைத்தபடி “பிகாஸ் அவ என்னோட ஃப்ரெண்ட்… என்றுச் சொல்லிவிட்டு சோஃபாவில் சாய்ந்தவன் கைகளை தலைக்கு அண்டை கொடுத்தபடி படுத்துக் கொண்டான்.
ஆரியா “இதுலல்லாம் தெளிவு தான்…” என்று மனதிற்குள் கிண்டலாகச் சொன்னபடி சோஃபாவிலிருந்து எழுந்தவன் “எப்பிடியோ நீ யூ.எஸ் போயிட்டுத் திரும்புறதுக்குள்ள ஒர்க் லோடால நான் பைத்தியம் ஆகுறது கன்ஃபார்ம். அதுக்கு தான் தியா கூட இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன்… நீ அதுல மண் அள்ளிப் போட்டுட்ட.. சந்தோசமா இருடா” என்று பொய்யான வருத்தத்துடன் சொல்லிவிட்டு நகர்ந்தான்.
ஆனால் தன் அறைக்குள் சென்றதும் உற்சாகத்தில் குதியாட்டம் போட்டுவிட்டு “மதர் இந்தியா எனக்கே அல்வா குடுக்கிறிங்களோ? கூடிய சீக்கிரம் அதே அல்வாவை உங்களுக்குக் குடுக்கலை, என் பேரு ஆரியா இல்லை” என்றுச் சொல்லிக் கொண்டவன் அதன் பின் நிம்மதியாக நித்திராலோகத்திற்குச் சென்றான்.
***********