சந்தியா நடந்த எதையும் நம்ப இயலாதவளாய் திகைத்துப் போய் நிற்க சூரியா அவளது கன்னத்தில் பதித்த முத்தத்தின் குறுகுறுப்பு இன்னும் இருப்பதாய் தோன்றும் போதே வானில் வண்ண மத்தாப்பு பூஞ்சிதறல்கள் எழ அது எழுப்பிய சத்தத்தில் தன்னைச் சமனிலைப்படுத்திக் கொண்டாள்.
கையில் தாங்கியிருக்கும் ரோஜாப்பூங்கொத்தையும் அதைப் பரிசாய் அளித்தவனையும் மாறி மாறிப் பார்க்க சூரியா ஆவலுடன் “பிரவுனி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டு அவளை மீண்டும் அதிரவைக்க
கன்னத்தில் அவன் இதழ் ஏற்படுத்திய குறுகுறுப்பு, அவன் திடீரென்று காதலைச் சொல்லி அவளுக்கு ஏற்படுத்திய அதிர்ச்சி எல்லாமுமாய் சேர்ந்து அவளை திகைக்க வைக்க அவள் “இவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் கன்னத்துல கிஸ் பண்ணுவான்?” என்று எண்ணவும் அவளுக்குள் சுறுசுறுவென்று கோபம் ஏணிப்படி வைத்து வேகமாய் ஏறி அவளது தலையை அடைந்தது.
அதன் விளைவாக அவன் கொடுத்த பூங்கொத்தை வைத்து அவனை அடித்தவள் “ஹவ் டேர் யூ டு கிஸ் மீ? நீ பிரபோஸ் பண்ணிட்டேனா என்ன வேணும்னாலும் பண்ணுவியா மார்ஸ்மாலோ?” என்று கேட்டபடி அவனை பூங்கொத்தாலே வெளுக்கத் தொடங்க
சூரியாவுக்கு அது வலிக்கவில்லை என்றாலும் அவன் வலிப்பது போல நடித்தபடி “ஏய் பிரவுனி! பிளீஸ் அடிக்காதே! ஐ அம் சாரி… ஏதோ ஒரு ஆர்வத்துல கிஸ் பண்ணிட்டேன்…. அடிக்காதே தாயே…” என்று அவளைத் தடுக்க முயல
சந்தியா “என்னடா ஆர்வம்? நானும் தான் ஒரு காலத்துல உன் கிட்ட பிரபோஸ் பண்ணுனேன்… அப்போ நான் உன்னை கிஸ் பண்ணுனேனா? அது என்ன பசங்க மட்டும் பிரபோஸ் பண்ணுன உடனே அட்வாண்டேஜ் எடுத்துக்கிறிங்க? இனிமே என் கன்செண்ட் இல்லாம நீ என்னை கிஸ் பண்ண டிரை பண்ணுனேனு வையேன், நான் பேச மாட்டேன்… என்னோட வெப்பன்ஸ் தான் பேசும்” என்று மிரட்டிவிட்டு விறுவிறுவென்று வீட்டுக்குள் செல்லத் தொடங்கினாள்.
சூரியா காதலைச் சொன்ன அடுத்த நிமிடமே அடி வாங்கிய ஆள் நானாக தான் இருப்பேன் என்று புலம்பியவண்ணம் “பிரவுனி ஸ்டாப்….. கஷ்டப்பட்டு நல்ல டைமிங்க்ல பிரபோஸ் பண்ணிருக்கேன்.. அதுக்கு பதில் சொல்லிட்டுப் போ” என்றபடி அவள் பின்னே ஓடினான். ஆனால் அவன் வீட்டுக்குள் செல்வதற்குள் சந்தியா அவளது அறைக்குள் புகுந்துக் கதவைச் சாய்த்துக் கொள்ளவே அதற்கு மேல் அவளை தொல்லை செய்ய விரும்பாமல் தனது அறைக்குத் திரும்பினான்.
அவனது அறைக்குச் சென்றவனின் எண்ணங்கள் யாவும் சந்தியாவைச் சுற்றி வர “ஏன் நான் பிரபோஸ் பண்ணுனதுக்கு அவ ரிப்ளை பண்ணவேயில்ல? ஒருவேளை மார்க் பத்தி அவ மனசுல எதுவும் எண்ணம் இருக்குமோ? பிரவுனிக்கு மார்க்கைப் பிடிக்க ஆரம்பிச்சிருக்குமோ? அப்போ அவ இனிமே என்னோட பிரவுனி கிடையாதா?” என்று தாறுமாறாகச் சிந்தித்தவன் அந்தக் களைப்பிலேயே உறங்கிப் போனான்.
அதே நேரம் சந்தியா சூரியாவின் காதல் கொடுத்த அதிர்ச்சி நீங்காதவளாய் அவனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவள் “மார்ஸ்மாலோக்கு திடீர்னு இந்த லவ் எங்கே இருந்து வந்துச்சு? அந்த நிப்பான் பெயிண்ட் அழுதுட்டே ஓடுனதைப் பார்த்துட்டு நான் என்னென்னவோ நினைச்சேனே… அங்கே என்ன ஆகியிருக்கும்? பேசாம மார்ஸ்மாலோ கிட்ட போய் என்ன நடந்துச்சுனு கேட்டுடலாமா?” என்று எண்ணமிடவும்
அவளின் மனசாட்சி “இப்போ தான் அந்த குழந்தைமனசு உள்ள பையனை அவன் குடுத்த பொக்கேவை வச்சே அடி பின்னி எடுத்த…எந்த மூஞ்சியை வச்சுகிட்டு அவன் கிட்டப் போய் பேசுவ நீ?” என்று அவளைத் திட்டித் தீர்த்துவிட சூரியாவைப் பார்க்கும் முடிவை அப்போதைக்குத் தள்ளி போட்டுவிட்டு உறங்கும் முடிவுடன் படுக்கையில் விழுந்தாள் சந்தியா.
இருவரும் வெவ்வேறு விதமாய் சிந்தித்தபடி உறக்கத்தில் ஆழ ஹூஸ்டன் நகரமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.