மறுநாள் பொழுது விடிய உறக்கம் கலைந்து எழுந்த இருவருக்குமே மனதில் ஆயிரம் கேள்விகள். அதற்கான விடை தெரியாவிட்டால் தலை வெடித்துச் சிதறும் அளவுக்கு இருவருக்குள்ளும் குறுகுறுப்பு எழவே விறுவிறுவென்று படுக்கையிலிருந்து எழுந்து வேகமாகக் குளித்து முடித்துவிட்டு ஓரளவுக்கு தெளிந்த முகத்துடன் ஆனால் குழம்பிய மனதுடன் அறைக்கதவைத் திறந்து ஒரே நேரத்தில் வெளியே வர இருவரின் அறையும் எதிரெதிரே இருந்ததால் ஒருவரை ஒருவர் கேள்வியாகப் பார்த்தபடி “குட் மார்னிங்” என்றனர் ஒரே குரலில்.
ஒரே சமயத்தில் காலை வணக்கத்தைச் சொல்லிவிட்டு திருதிருவென்று விழித்தனர் இருவரும். முதலில் சமாளித்தது சூரியா தான். தன் எதிரே சில அடிகள் இடைவெளியில் நின்றவளிடம் “பிரவுனி உன் கிட்ட நான் நிறைய விஷயம் பேசணும்… ஷால் வீ டாக்?” என்று அமைதியாகக் கேட்க
சந்தியாவுக்குமே நேற்று தான் அவனிடம் கொஞ்சம் கடுமையாகவே நடந்துகொண்ட குற்றவுணர்ச்சி மேலிட சரியென்று தலையாட்டியபடி அவனுடன் சேர்ந்து ஹாலுக்குள் வந்தவள் சோஃபாவில் அமர அவளது எதிர் இருக்கையில் அமர்ந்தான் சூரியா.
சூரியா மெதுவாகத் தொண்டையைச் செறுமியபடி “பிரவுனி! ஆக்சுவலி….” என்று ஆரம்பிக்கவும் வாயில் கதவை யாரோ தட்டும் கேட்கவும் அவன் பேச்சைச் சட்டென்று நிறுத்திவிட்டு யாரென்று பார்க்கச் சென்றான். கதவைத் திறந்தவன் அங்கே கருப்புநிற கோட், ஜீன்ஸில் அங்கே நின்று கொண்டிருந்த மார்க்கை கண்டதும் காலையில் இவனுக்கு இங்கே என்ன வேலை என்று யோசித்தபடி நிற்க மார்க் “ஹாய் டியூட்! வாட் ஹேப்பண்ட் மேன்? ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு?” என்று கேட்டபடி வீட்டுக்குள் நுழைந்தான்.
சூரியா முகத்தைச் சீராக்கியபடியே “நத்திங் டு ஒரி… என்ன திடீர் விஸிட்?” என்று கேட்டபடி அவனுடன் ஹாலுக்கு நடையைக் கட்டினான். மார்க் அன்று மாலை சூரியாவும் சந்தியாவும் இந்தியா திரும்பும் போது தன்னால் ஹூஸ்டனில் இருக்க முடியாதென்றும், தனக்கு நியூயார்க்கில் ஒரு முக்கியமான தொழில் சம்பந்தப்பட்ட கூட்டம் இருக்கிறது என்றும் கூறியவன் அதனால் இப்போதே அவர்களைப் பார்த்துவிட்டு நேராக நியூயார்க் செல்லவுள்ளதாகச் சொன்னபடியே ஹாலுக்குள் சூரியாவுடன் நுழைந்தான்.
ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த சந்தியா மார்க்கின் குரலைக் கேட்டதும் உற்சாகமாகத் திரும்பியவள் சூரியாவுடன் நடந்து வந்தவனைக் கண்டதும் வாயெல்லாம் பல்லாக வரவேற்கவே அது சூரியாவின் குழப்பத்தை இன்னும் அதிகரித்தது. மார்க்கும் சூரியாவுடன் அமராமல் சந்தியாவுடன் சென்று அமர்ந்து கொண்டவன் அவளுடன் உரையாட ஆரம்பிக்க சந்தியா “ஹேவ் யூ டேக்கன் யுவர் பிரேக்பாஸ்ட்?” என்று பெண்களுக்கே உரித்தான அக்கறையுடன் வினவ மார்க் இன்னும் இல்லையென்று தலையாட்டினான். தான் நியூயார்க் சென்றதும் ஒரேயடியாகச் சாப்பிட்டுக் கொள்வதாகக் கூறியவனைக் கண்டிப்புப் பார்வை பார்த்தபடி எழுந்தாள் சந்தியா.
“நோ வே! நான் இப்போ என்னால முடிஞ்சதை செஞ்சு குடுப்பேன். சாப்பிட்டிட்டு தான் நீங்க ஏர்போர்ட் கிளம்பணும் வில் ஸ்மித்” என்று அவள் பிடிவாதம் பிடிக்கவே மார்க்கும் சாப்பிட ஒத்துக்கொண்டான். சமையலறையை நோக்கிச் செல்லும் போதே “சூரியா உனக்கும் சேர்த்து சமைக்கவா?” என்று கத்தியபடி சென்றவளுக்கு வேண்டாம் என்று பதிலளித்தான் அவன்.
“ஏதோ போனா போகுதுங்கிற மாதிரி உனக்கும் செய்யவானு கேக்குறா! தேவை இல்லை தாயே… இதுக்கு நான் பட்டினியா கிடந்துடுவேன்” என்று எரிச்சலுடன் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டவன் அதற்கு பிறகு மார்க்கிடம் அவன் செல்லப் போகிற தொழில்முறைக்கூட்டம் பற்றி பேச ஆரம்பித்தான். இருவரும் அந்தக் கூட்டத்தின் சாதக பாதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க இருபது நிமிடங்கள் கழித்து சமையலறையில் இருந்து திரும்பி வந்த சந்தியா இருவரையும் சாப்பிட அழைத்தாள்.
மார்க் சாப்பிட எழ சூரியாவோ “நான் தான் வேண்டாம்னு சொன்னேனே! நீ எனக்காக ஏன் சமைச்ச?” என்று தெனாவட்டாகப் பதிலிறுத்தபடி சோஃபாவிலேயே அமர்ந்து கொள்ள
சந்தியா “இதுக்கு அப்புறம் உன் இஷ்டம்.. நான் ஒன்னும் நீ இல்லை! புதுசா வந்தவங்க நியாபகத்துல கூடவே எப்போவும் இருக்கிறவங்களைப் பட்டினி போடறதுக்கு… வேணும்னா சாப்பிடு… இல்லைனா அது டஸ்ட்பின்னுக்கு போயிடும்” என்று கறாராகச் சொல்லிவிட்டு மார்க்குடன் உணவுமேஜையை நோக்கி நகர்ந்தாள் அவள்.
அவர்களின் உரையாடல் தமிழில் இருந்ததால் மார்க்கால் அதைப் புரிந்து கொள்ள இயலாவிட்டாலும் சந்தியா மற்றும் சூரியா இருவரின் முகங்களுமே மனதை அப்படியே எடுத்துக் காட்டும் கண்ணாடியைப் போல என்பதால் இருவருக்கும் ஏதோ பிணக்கு போலும் என்று மனதிற்குள் எண்ணியபடி ஒரு நமட்டுச்சிரிப்புடன் சந்தியாவுடன் உணவுமேஜையில் அமர்ந்தான்.
அவன் முன்பாக தட்டை நகர்த்தியவள் “பிரெட் ஆம்ளேட் வித் பிளாக் டீ… உங்களுக்குப் பிடிக்குமானு தெரியலை… பட் ஃபிளைட்டுக்கு டைம் ஆகுதுல்ல.. சோ இது தான் குயிக்கா செய்ய முடிஞ்சது” என்று சொன்னபடி அவனுக்கு பால் கலக்காத தேநீரை ஒரு கோப்பையில் ஊற்றி அதன் அவன் புறம் நகர்த்தினாள்.
இந்தக் காட்சியை அசூயையாகப் பார்த்தபடி அங்கே வந்த சூரியா தானும் உணவு மேஜையில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமரச் சந்தியா அவன் புறம் ஒரு தட்டை நகர்த்தினாள். எதுவும் பேசாமல் பிரெட் ஆம்ளேட்டை விழுங்கியவன் அவள் கொடுத்த பாலில்லாத தேநீரைச் சொட்டு விடாமல் குடித்துவிட்டு தட்டு மற்றும் கோப்பைகளைப் பாத்திரம் கழுவும் தொட்டியில் போட்டவன் மார்க்கின் தட்டையும் வாங்கிச் சென்றான்.
சந்தியா தானும் உண்டவள் கையலம்பிவிட்டு அங்கிருந்து நீங்கி ஹாலுக்குச் செல்ல மார்க் தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்து சந்தியாவிடம் நீட்டினான்.
“திஸ் இஸ் ஃபார் யூ சான்டி!” என்று சொன்னவனின் கையிலிருந்தப் பெட்டியை வாங்கிய சந்தியா அதைத் திறக்க அதில் ஒரு எளிமையான ஆனால் வேலைபாடுகள் கொண்ட பிளாட்டினம் செயின் சுருண்டிருக்க அதைக் கையில் எடுத்தவள் அதில் தொங்கிய ஒற்றைவைர லாக்கெட்டை ரசனையுடன் பார்த்தபடி தடவிக் கொடுத்தாள்.
மார்க் “இது ஏஞ்சலினாவோட செயின். அவளோட நியாபகார்த்தமா என் கிட்ட இவ்ளோ நாள் இருந்துச்சு.. எனக்கு இதை உன் கிட்ட குடுக்கணும்னு தோணுச்சு… டூ யூ லைக் இட்?” என்று கேட்க சந்தியா ஆமென்று தலையை மேலும் கீழுமாக ஆட்டும் போதே சமையலறையில் கழுவப்போட்டப் பாத்திரங்களைச் சுத்தம் செய்துவிட்டு சூரியாவும் ஹாலுக்கு வந்து சேர்ந்தான்.
வந்தவனின் பார்வையில் சந்தியாவின் கையில் வெட்டி ஜொலிக்கும் அந்த செயினைக் கண்டதும் அவன் மனம் துணுக்குற்றது. மார்க் சந்தியாவை அந்தச் செயினை அணிந்துக் கொள்ளும்படி சொல்ல அவளும் தயக்கமின்றி அதை கழுத்தில் போட்டு அவனிடம் எப்படி இருக்கிறது என்று கேட்க மார்க் அதற்கு மூன்று விரல்களை அபிநயித்துக் காட்ட இவையனைத்தையும் கண்ட சூரியாவுக்கு “என்னடா நடக்குது இங்கே?” என்று கத்த வேண்டும் போலத் தோன்றினாலும் இருவரும் அவனுக்கு வேண்டியவர்களாகி விட்டனர்.
மார்க் அவனது நல்ல நண்பன் என்றால் சந்தியாவோ அவனது வாழ்க்கைக்கு அர்த்தம். இருவரில் யாரிடமும் அவனால் முகம் கோணும்படி நடந்துகொள்ள இயலாது. அவ்வாறிருக்க சூரியா என்ற ஒருவன் அங்கே நிற்பதைப் பார்த்துவிட்ட மார்க் அவனை அழைக்க வலிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவர்களிடத்துக்கு விரைந்தான்.
மார்க் தன்னருகில் வந்து நின்றவனைக் கட்டியணைத்துக் கொள்ள சூரியாவும் இவ்வளவு நேரம் இருந்த குழப்பங்கள் சற்று அகல நெகிழ்ச்சியுடன் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தான்.
மார்க் அவனிடம் “டேக் கேர் டியூட்! இந்த எம்.ஓ.ஏ நம்ம ரெண்டு கன்சர்னுக்கும் இடையில இருக்கிற உறவுக்கு ஒரு ஆரம்பமா இருக்கும்.. இந்த உறவு இன்னும் பல வருசங்களுக்கு நிலைச்சு இருக்கணும்” என்று சொல்லிவிட்டு சூரியாவின் கையைக் குலுக்கினான். சூரியாவும் மனநிறைவுடன் “கண்டிப்பா! இன்னைக்கு நீ கலந்துக்கப் போற மீட்டிங் உனக்கு நல்ல ரிசல்டை குடுக்கணும்னு நானும் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்” என்று கூறினான்.
அதன் பின் மார்க் சூரியா மற்றும் சந்தியாவிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றுவிட அவன் சென்றதும் சூரியாவின் மனம் முருங்கைமரத்தில் ஏறியமர்ந்து கொண்டது. கதவை அடைத்துவிட்டு வந்த சந்தியாவிடம் “பிரவுனி! என்னை கிச்சன்ல தனியாளா நின்னு மூனு பேர் சாப்பிட்ட பிளேட்டை வாஷ் பண்ண வச்சிட்டு கொஞ்சம் கூட கவலைப்படாம ஹாயா மார்க் கூட நின்னு கதை பேசிட்டிருக்க… வெரி பேட்” என்று ஆதங்கத்துடன் பேச ஆரம்பிக்க
சந்தியா “இப்போ என்ன பண்ணனும் மிஸ்டர் சூரியா? நீங்க பாத்திரம் கழுவுனதுக்காக உங்களுக்கு மெடல் குடுத்துருவோமா? ஏன்டா காலங்காலமா இதை நாங்க தானே செய்யுறோம். ஒரு நாளாச்சும் நாங்க இப்பிடி ஆதங்கப்பட்டிருப்போமா?
லுக்! பாத்திரம் கழுவுறது, சமைக்கிறது, வீடு சுத்தம் பண்ணுறது இதுல்லாம் பேஸிக் சர்வைவல் ஸ்கில்ஸ்… இதுல என்ன ஆம்பளை பொம்பளை வித்தியாசம் வேண்டியது கிடக்கு?” என்று பதிலுக்கு எகிற
சூரியா ஏளனத்துடன் “ஓஹோ! நீங்க ஃபெமினிசம் பேசுறிங்களோ?” என்று சந்தியாவைக் கடுப்பாக்கிவிட்டு நகர முயல அவன் கையைப் பற்றி நிறுத்தியவள் “இது ஃபெமினிசமானு எனக்குத் தெரியாது… ஆனா இனிமே இந்த மாதிரி சில்லறை வேலைகளைச் செஞ்சுட்டு, அதுக்காக என் கிட்ட கிரெடிட் எதிர்பார்க்காதே” என்று அழுத்தமாக உரைத்துவிட்டு நகர்ந்தாள்.
சூரியாவின் மனசாட்சியோ “ஏன்டா கேக்க வேண்டிய விஷயத்தைக் கேக்காம ஒரு நாலு பாத்திரத்தை க்ளீன் பண்ணுனதை சொல்லிக் காட்டுவியா நீ? ஒழுங்கா அவ கிட்ட மார்க் ஏன் உனக்கு செயின் குடுத்தான் பிரவுனினு கேளு, அப்பிடியே அவங்க ரெண்டு பேருக்கும் இடையில அப்பிடி என்ன தான் ஓடுதுனு கேட்டுடுடா” என்று அவனை உசுப்பேற்றிவிட்டது.
ஆனால் சந்தியாவோ இந்தியா திரும்பும் மும்முரத்தில் இருக்க சூரியா கேட்க விரும்பிய கேள்விகள் எல்லாம் தொண்டைக்குழி வரைக்கும் வந்துவிட்ட நிலையில் அவளிடம் கேட்காமல் தனது உடைமைகளைப் பெட்டியில் அடுக்கத் தொடங்கினான். இருவரும் மூட்டை முடிச்சுகளோடு ஏர்போர்ட் அடைந்தபின்னும் சரி, விமானத்தில் ஏறி அமர்ந்த பின்னும் சரி சூரியா சிந்தனைவயப்பட்டவனாக இருக்க சந்தியா இவன் இவ்வளவு யோசிக்குமளவுக்கு இப்போது என்ன நடந்துவிட்டது என்று எண்ணியபடியே விமானத்தினுள்ளே திக் திக்கென்ற இதயத்துடன் அமர்ந்திருந்தாள்.
விமானம் ஓடுதளப்பாதையின் மெதுவாக ஓட ஆரம்பிக்கவும் பயத்துடன் இறுக்கமாகக் கண்களை மூடிக்கொண்டு சூரியாவின் புஜத்தைப் பற்றிக்கொண்டாள் அவள். சூரியா குழப்பமேகங்கள் சூழ இருந்தவன் தனது புஜத்தை அழுந்தப் பற்றுபவளின் ஸ்பரிசத்தில் திரும்பி அவளைப் பார்த்தபடி “க்கும்! இப்போ தான் நான் உன்னோட கண்ணுக்குத் தெரியுறேனா பிரவுனி? பயம் எப்பிடிலாம் வேலை செய்யுது பாரு” என்று கேலி செய்தபடியே அவள் தலையில் தட்டினான்.
விமானம் வேகமெடுத்து வான்வெளியில் பறக்க ஆரம்பிக்கையில் சந்தியா திடம்பெற்றவளாய் அவன் புஜத்தை விடுவித்தபடி “கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நீ என்னவோ சொன்னேனு நினைக்கேன்… ஆனா அது என் காதுல விழலை… இன்னொரு தடவை சொல்லு” என்று கேட்க
சூரியா “இவ்ளோ நேரம் என்னை கண்டுக்காம இருந்துட்டு உனக்குப் பயமா இருக்குனதும் என்னோட கையைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டியே! அதை தான் சொல்லுறேன்” என்று நக்கலடிக்க சந்தியா “ஃப்ளைட் ஜர்னில இதெல்லாம் சாதாரணமப்பா” என்று அமர்த்தலாகச் சொன்னபடி அவனுக்கு அழகு காட்டினாள்.
சூரியா அவளது செய்கைகள் ஏற்படுத்திய குழப்பங்களைத் தீர்க்க விரும்பியவனாக “நீ ஏன் மார்க் குடுத்தச் செயினைப் போட்டுக்கிட்ட பிரவுனி? ப்ளீஸ் சாக்குபோக்கு எதுவும் சொல்லாம உண்மையான காரணத்தைச் சொல்லு” என்று கண்களைச் சுருக்கி சிறுகுழந்தை போல் வேண்ட சந்தியா அந்தச் செயினை வாங்கியதற்கானக் காரணத்தை வெளியிட்டாள்.
“இது ஏஞ்சலினாவோட செயின் மார்ஸ்மாலோ”
“வாட்? ஏஞ்சலினாவோட செயினையா மார்க் உனக்கு குடுத்தான் பிரவுனி? ஏன்? எனி ஸ்பெஷல் ரீசன்?”
“ம்ம்..காரணம் இருக்கு.. பிகாஸ் வில் ஸ்மித் என்னை ஏஞ்சலினாவோட இடத்துல வச்சு பார்க்கிறாரு… அது தான் காரணம்” என்று அவள் சொல்லி முடித்தது தான் தாமதம், சூரியாவுக்குள் ஜிவ்வென்ற உணர்வு. தனது உடல் எடை முழுவதும் காணாமல் போய் இறகு போல காற்றில் பறப்பது போலத் தோண, உள்ளுக்குள் சந்தோசம் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
முகம் மகிழ்ச்சியில் விகசிக்கச் சந்தியாவின் கன்னங்களைக் கையில் ஏந்தியவன் “நீ நிஜமாவா சொல்லுற? அப்போ மார்க் உன்னை ஏஞ்சலினா மாதிரி தான் நினைக்குறானா?” என்று கேட்க சந்தியா சிறிதும் தாமதமின்றி ஆமென்று தலையசைத்து அவனுடைய மனப்போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
அவள் தலையசைத்ததும் மனதிலிருந்து பெரும்பாரம் இறங்கிய உணர்வுடன் “ஏஏஏஏ! ஐ அம் சோ ஹேப்பி பிரவுனி” என்று உற்சாகத்தில் இருக்கையிலிருந்து எழுந்து அவன் கத்திவிட சகபயணிகள் அனைவரின் பார்வையும் இந்த இருவர் புறம் திரும்பியது.
சந்தியா திடீரென்று அவன் அப்படி உற்சாகமாகக் கத்துவான் என்று தெரியாததால் அவனது செய்கையில் திருதிருவென்று விழித்தவள் சகபயணிகளின் பார்வையைச் சங்கடத்துடன் எதிர்கொண்டபடி “நத்திங் டு ஒரி!” என்று முப்பத்திரெண்டு பற்களையும் காட்டி இளித்துவைத்துவிட்டு
சூரியாவின் டிசர்ட்டைப் பிடித்து இழுத்து “ஒழுங்கா உக்காரு மார்ஸ்மாலோ! எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க” என்று கூறவும் தான் அவனுக்கு தான் சத்தமாகக் கத்திவிட்டோம் என்பதே உரைத்தது. அவளைப் போலவே அவனும் ஒரு சமாளிப்புப்புன்னகையைச் சிந்திவிட்டு சந்தியாவின் அருகில் பழையபடி அமர்ந்தான்.
அமர்ந்ததும் “நான் ரொம்ப சத்தமா கத்திட்டேனா பிரவுனி?” என்று சந்தேகமாகக் கேட்டவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்தாள் சந்தியா.
“சே சே! நீ கத்துன சத்தம் காக்பிட்ல இருக்கிற பைலட்டுக்கு சரியா கேக்கலையாம்.. ஒன்ஸ் அகெய்ன் கத்துறியா?” என்று பல்லைக் கடித்தபடி கேட்டுவிட்டு தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.
சூரியா இதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இருந்தால் தானே.. அவன் தான் காதல் வானில் பறப்பதற்காகப் பூஞ்சிறகு விரித்த சிறுபறவை போல உற்சாகத்தில் குதித்துக்கொண்டிருந்தானே. பின்னே மார்க் சந்தியாவை ஏஞ்சலினா போலத் தான் நினைக்கிறான் என்று அறிந்த அக்கணமே அவனது இத்தனை நாட்கள் இருந்தக் குழப்பம் தீர்ந்து மனம் நிறைந்த மகிழ்ச்சியில் இருப்பவனுக்கு காதலிப்பவளின் இந்தச் சிறுகோபம் எல்லாம் தூசுக்குச் சமானம் தானே…
சந்தியாவின் முகத்தை அதே ஆனந்தத்துடன் பார்த்தவன் “நானும் நேத்தைக்கு நீ கீழே விழுந்தது, மார்க் உன்னை விழாமத் தாங்குனது, நீ அவன் கிட்ட கையை ஹார்ட்டின் ஷேப்ல காட்டி ஏதோ சொன்னது இதைலாம் வச்சுக்கிட்டு என்னென்னவோ கற்பனை பண்ணிட்டேன் பிரவுனி.. இப்போ தான் நிம்மதியா இருக்கு” என்று சொல்ல சந்தியா அவன் என்ன நினைத்துக் குழம்பியிருப்பான் என்பதைக் கண்டுகொண்டு பக்கென்று நகைத்துவிட சூரியாவும் அவளின் கிண்கிணிச்சிரிப்பில் கலந்து கொண்டான்.
சந்தியா சிரித்து முடித்துவிட்டு “நீ சரியான மண்டூகம்டா! ஆக்சுவலி அன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?” என்று அன்றைய நிகழ்வுகளை விவரிக்க ஆரம்பித்தாள்.
அன்று சாயாவை விலக்கிக்கொண்டு மார்க்கை அணுகும் போதே செருப்பின் வார் தடுக்கிவிட கீழே விழவிருந்தவளை மார்க் தாங்கிக் கொண்டான். அவளை நேரே நிறுத்தியவன் “உன்னோட செருப்பு வார் கழண்டிருக்கு சான்டி” என்று கூறிவிட்டு சந்தியா எதிர்பாராவிதமாய் அவனே குனிந்து வாரை சரியாக மாட்ட முயல
அவனது அதிரடியை எதிர்பார்க்காத சந்தியா “ஐயோ! வில் ஸ்மித் நீங்க என் காலை தொடக்கூடாது… எங்க கலாச்சாரப்படி பெரியவங்க சின்னவங்களோட காலைத் தொடக்கூடாது” என்று பதறிப்போய் விலக முயல
மார்க் புன்னகையுடன் “அது எனக்கு தெரியாது சான்டி… பட் என்னோட சிஸ்டர் ஏஞ்சலினாக்கு செருப்பு ஸ்லிப் ஆகிறப்போ நான் தான் வாரை சரிபண்ணி விடுவேன்.. நீ எனக்கு இன்னொரு சிஸ்டர் தானே.. ஒரு சகோதரன் சகோதரியோட செருப்புவாரை சரி பண்ணி விடுறது அவ்ளோ பெரிய தப்பு இல்லை” என்றுச் சொல்ல சந்தியாவுக்கு அவன் சொன்ன ‘சிஸ்டர்’ என்ற வார்த்தையில் மனம் நிறைந்தது. இவ்வளவு ஏன் கண்ணில் நீர் கூடத் திரண்டுவிட்டது.
உடன்பிறந்த சகோதரன் இல்லாத பெண்கள் அனைவரும் தன்னை தங்கையாக, அக்காவாக பாவிக்கும் ஆணைக் கண்டுவிட்டால் எப்போதுமே உற்சாகத்தில் நிறைந்து போவார்கள். அவர்கள் ஆழ்மனதில் இருக்கும் சகோதரனுக்கான ஏக்கத்தைப் போக்கும் ஆணும், அவனது பாசமும் அப்பெண்களுக்கு வரம் மாதிரி…
சந்தியாவுக்கு அந்த வரம் எதிர்பாரா நேரத்தில், எதிர்பாரா மனிதனிடம் கிடைக்கவே ஆனந்தத்தில் கண்ணில் நிரம்பிய கண்ணீரை நாசூக்காக அவள் துடைக்கவும் செருப்பு வாரை மாட்டிவிட்டு மார்க் எழவும் சரியாக இருந்தது.
அவள் கண்ணீரைத் துடைப்பதைக் கண்டவன் பதறிப் போய் ஏனென்று வினவ சந்தியா கேலியாக “நீங்க என் இதயத்தை உடைச்சிட்டிங்க மார்க். உங்களை நான் க்ரஷ்னு சொல்லிட்டிருந்தேன்… இப்பிடி தங்கச்சினு ஒரே வார்த்தையில என் இதயத்தை நொறுக்கிட்டிங்களே” என்று ராகத்துடன் சொன்னடி கரங்களை இதயவடிவில் வைத்துக் காட்ட
மார்க் “நாட்டி கேர்ள்” என்று சிரித்தபடி நின்ற அக்காட்சியைத் தான் சூரியா கண்டான். இப்போது அதைச் சந்தியாவின் வாயிலிருந்து கேட்டதும் அவன் மனம் இருமடங்கு நிம்மதியுற்றது.
நிம்மதியுற்ற மனம் மீண்டும் துள்ளாட்டம் போட அவனைத் தூண்ட சந்தியாவிடம் “பிரவுனி! ஒன்ஸ அகெய்ன் சத்தம் போட்டுக் கத்தணும் போல இருக்கு… ஒரே ஒரு தடவை கத்திக்கவா?” என்று அனுமதி கேட்க
சந்தியா அவனை முறைத்தபடி “எனக்கும் கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நீ பண்ணுன கூத்தைப் பார்த்து உன் சங்கை நெறிச்சுக் கொல்லணும் போல இருக்கு… ஒரே ஒரு தடவை கொன்னுக்கவா?” என்று கண்ணில் கொலைவெறி மின்னக் கேட்க
சூரியா இவள் செய்தாலும் செய்வாள் என்று எண்ணியவனாய் “ஐ அம் கிட்டிங் பிரவுனி.. பார்த்தியா, நீ கூட நம்பிட்ட… ஆக்சுவலி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.. சோ நான் கண்ணை மூடித் தூங்குறேன்” என்று சொல்லிவிட்டு கண்களைச் சிக்கென்று மூடிக்கொள்ள சந்தியா நமட்டுச்சிரிப்புடன் தனது இருக்கையில் சாய்ந்துக் கொண்டாள்.
சாரல் வீசும்…..