ஜெயவர்மர் வீட்டுக்கு வந்து, ஒரு வாரத்திற்கும் மேலே கடந்து இருந்த நிலையில், பெருமளவு உடல்நிலை தேறி விட்டார். காயங்களில் தையல்கள் எல்லாம் கூட கரைந்துவிட்டன.
முறையான உணவும், சரியான மருந்துகளும், சிறப்பான கவனிப்பும் அவரை வெகுவிரைவில் குணமாக்கி இருந்தன.
எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டு இருந்த மனிதர், இப்போது உடல்நிலை சரி இல்லாத நிலையில், யாருமில்லா தனிமையில் தவிப்பாரே என்று தான், உமையாள் அலுவகம் கூட செல்லாமல், தன் நேரங்களை அவரோடு செலவிட்டது.
அன்றும் தங்களின் வழக்கம் போல, உமையாளும், ஜெயவர்மரும், தங்களுக்கு பிடித்த புத்தகங்களை பற்றி விவாதித்து கொண்டு இருந்தனர்.
ஆனால் பாதியிலே, ஜெயவர்மரின் எண்ணங்கள் எங்கோ பயணிக்க ஆரம்பிக்க, அவரின் கவனம் பேச்சில் இல்லை என்பது புரிய, உமையாள் பேசுவதை நிறுத்திவிட்டு அவரையே பார்த்து கொண்டிருந்தாள்.
உமையாளின் அமைதியை உணராமல், கொஞ்ச நேரம் தன் எண்ணத்தின் போக்கிலே சஞ்சரித்தவர், உமையாளை பார்த்து,
“ஏன் உமா நீ இன்னும் நம்ப வீட்டுக்கு வராம, உங்க அத்தை வீட்டுல இருக்க” என்று கேட்க, இந்நேரம், இவரிடம் இருந்து இக்கேள்வியை எதிர்பார்க்காமல் உமையாள் திகைத்த, அவரோ,
“நீயும் சரி, கிருஷ்ணாவும் சரி, இந்த கல்யாணம் நடந்த மாதிரியே காட்டிக்காம, அடுத்தது என்னனு பேசாமலே இருக்கீங்க, என்ன முடிவு பண்ணி இருக்கீங்க என்ன ரெண்டு பேரும்” என்று கேட்க, தன் திகைப்பில் இருந்து வெளிவந்து இருந்த உமையாள்,
“உங்க ஹெல்த் ரெகவர் ஆக தான் வெய்ட்டிங் அங்கிள், எங்க வீட்டில் பெரியவங்க கிட்ட சொல்லணும், அடுத்த வாரம் அவங்க எல்லாரும் வராங்க, அவங்க கிட்டயும் பேசிட்டு தான், அடுத்து என்ன பண்ணனும் முடிவு பண்ணனும்” என்று தான் ஏற்கனவே முடிவு பண்ணதை சொல்ல, அவரோ,
“உனக்கு அங்கிள் மேல கோவமா உமா, உன்கிட்ட சம்மதம் கூட கேட்காம, கிருஷ்ணாவை தாலி கட்ட சொல்லிட்டனு” என்று கேட்க, உமையாளோ மௌனம் சாதிக்க, ஜெயவர்மரே தொடர்ந்து
“எனக்கு என்னமோ நீங்க ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்கன்னு தோணுச்சு உமா, ஏதோ ஒரு விதத்தில் நீ அவனை ஈர்க்கிற உமா, அதுவும் இல்லாம, அந்த நேரம் எனக்கு அவனோட கல்யாணத்தை பார்க்கணுமா ஆப்பேரஷன் பண்ணிக்க பயமா இருந்தது, என்னை மன்னிச்சிடு உமா”, என்று மன்னிப்பு கேட்க, உமையாளோ பதறி,
“நீங்க வயசுல பெரியவங்க, என் கிட்ட போய் ஏன் சாரி எல்லாம் கேட்குறீங்க, என்னால புரிஞ்சிக்க முடியுது அங்கிள்” என்று அவரை தேற்றினாலும் மனதிலோ பலத்த சிந்தனை.
“கிருஷ்ணாவுக்கு என் மேல் ஈர்ப்பா?????”
ஜெயவர்மரின் சொல்லிய வரிகளை மனதிற்குள் அசைபோட, பல நிகழ்வுகள் முட்டி மோதி கொண்டு நினைவு அடுக்கில் மேலே வந்தன.
பொதுவாக ஒருவரிடம் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் தான், நம் மனதின் பயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.
சாதாரண ஒருவருக்கே அப்படி என்றால், பேசவே அதிகம் யோசிக்கும் கிருஷ்ணாவை பற்றி சொல்லவே வேண்டியது இல்லை.
ஆனால் அவன் தன் இறுக்கமான முகமூடியை தாண்டி, உள்ளே ஒளிந்து இருக்கும் அந்த மென்மையான மனதை, அதன் ஏக்கங்களை, பயங்களை, வெறும் ஒரு மாதமே பழகிய, தன்னிடம் தயக்கம் இல்லாமல் எப்படி பகிர முடிந்தது????
அவனின் இளமைக்காலத்தில் கூட, அவனும், அவனின் தலையணையும் மட்டுமே அறிந்த கண்ணீரை, அன்று தன் முன்னால், எப்படி அது ஒரு துளியேனும் உகுக்க முடிந்தது அவனால்????
அன்று அவன் சொன்ன செய்திகளில் உழன்ற தான், இப்போது சிந்தித்த எதை பற்றியும், அப்போது யோசிக்காதது புரிந்தது உமையாளுக்கு.
முப்பொழுதும் உணர்வுகள் தொலைத்து இருக்கும் கிருஷ்ணாவின் முகம், தன்னருகில், தன்னிடம் மட்டுமே உணர்வுகளை வெளிப்படுத்துவதும், இப்போது புரிந்தது.
கொஞ்ச நாளுக்கு முன்னால் நடந்த கைப்பேசி, மருதாணி அச்சு உள்ள அந்த சட்டை என எல்லாமே ஜெயவர்மரின் கூற்றுக்கு வலுசேர்க்க, உமையாள் எப்படி உணர்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.
மனம் எல்லாம் ஒரு மாதிரி வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத நிலையில் இருக்க, அவள் தான் நிலை கொள்ளாமல் தவித்து கொண்டிருந்தாள்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இதை பற்றி கிருஷ்ணாவிடம் கேட்க வேண்டும் என மனது அலைக் கடலென ஆர்பரிக்க ஆரம்பித்தது.
தன் சிந்தனைளில் மூழ்கிய உமையாளை பார்த்த ஜெயவர்மர் அவளின் சிந்தனையை தடை செய்யவில்லை.
அதன்பிறகு நேரம் செல்ல, மாலை நேரத்தில் ஜெயவர்மரை சந்திக்க, சரண்யாவின் அப்பாவும், சரண்யாவும் வந்து இருந்தனர்.
அவர்களை வரவேற்ற உமையாள், வேலையாட்களிடம் அவர்களுக்கு குடிக்க, கொரிக்க எல்லாம் எடுத்து வர சொல்லி, அவர்களை உபசரிக்கவும் தவறவில்லை.
சரண்யாவின் அப்பா, ஜெயவர்மரிடம் நலம் விசாரிக்க, சரண்யாவும் அவள் பங்குக்கு தன் மாமாவை நலம் விசாரித்து கொண்டு இருந்தாள்.
சரண்யாவின் அப்பாக்கு ஜெயவர்மர் உமையாளை கிருஷ்ணாவுக்கு திருமணம் செய்து வைத்தது அவ்வளவு உவப்பாக இல்லை.
அவர்கள் நடுத்தரதிற்கும் சற்று மேலான வகை. தன் தங்கையின் காதல் தெரிந்து கொந்தளித்தவர் தான் அவரும்.
ஜெயவர்மரை திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய போது பார்த்த தங்கையை, மறுபடியும் பார்த்தது அவரின் இறுதி சடங்கில் தான்.
மனைவியின் அண்ணன் என்பதாலேயே ஜெயவர்மர் அவருக்கு தொழிலில் நிறைய உதவிகள் செய்ய, இப்போது பணக்காரர்கள் வரிசையில் அவரின் குடும்பம்.
இந்த உறவும், அதன் ஆதாயமும் நித்தமும் வேண்டும் என்று தான் அவர் சரண்யாவை கிருஷ்ணாவுக்கு மணமுடிக்க நினைத்தது.
ஆனால் திடிரென சரண்யாவே வந்து, “எனக்கு கிருஷ்ணாவின் மேல் கல்யாணம் செய்து கொள்ளும் அளவு விருப்பம் இல்லை” எனவும் அவருக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான்.
அதன் பிறகு, “காதல் இல்லை என்றால் என்ன, வீட்டில் பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்தில் எல்லாம், அறிமுகம் இல்லவதர்களை கல்யாணம் செய்து கொள்வது இல்லையா, ஆனால் கிருஷ்ணா உனக்கு நல்ல அறிமுகமான நபர் தானே, காதல் திருமணத்திற்கு பின்பு வரும்” என்று தன் பெண்ணை பலதும் பேசியே கரைத்தார் மனிதர்.
இதற்கு மேலும் இந்த திருமணத்தை தள்ளி போட கூடாது என்று தான், ஜெயவர்மருக்கு நெஞ்சு வலி வந்த அன்று சரண்யாவையும் உடன் அழைத்து கொண்டு வந்து, திருமணத்தை பற்றி பேசியது.
ஆனால் இடையிலே ஜெயவர்மருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போக, மருத்துவமனையில் சேர்க்க, அங்கு நடந்தது எல்லாம் இவர் கனவில் கூட நினைத்து பார்க்காதவை.
அன்று அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. இன்னும் அன்று நடந்த திருமணம் ஊரறிய சொல்லப்படவில்லை என்பதால், எதோ ஒரு நம்பிக்கையில், ஜெயவர்மரிடம் பேசி பார்க்கவே வந்தார் மனிதர்.
சரண்யா சற்று தள்ளி உமையாளுடம் பேசி கொண்டிருக்க, இங்கு சரண்யாவின் அப்பாவோ ஜெயவர்மரிடம் பொதுவாக அவரின் உடல்நிலை பற்றி விசரித்தவர், பின்பு மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்,
“கிருஷ்ணா கல்யாணத்துல நீங்க அவசர பட்டுட்டீங்களோனு எனக்கு தோணுது” என்று சொல்ல, ஜெயவர்மரோ அவரை புரியாமல் பார்க்க, அவர்,
“கிருஷ்ணாவை பற்றி என்ன தெரியும் இந்த பொண்ணுக்கு, நல்லா பழகின பொண்ணா இருந்தா, கிருஷ்ணாவோட கோவம் எல்லாம் தெரிஞ்சி அனுசரிச்சி போகும், பாவம் கிருஷ்ணா உங்களுக்காக கல்யாணம் பண்ணிட்டு, இப்போ சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் முழிச்சிகிட்டு இருக்காரு” என்றார்.
“நிறைய நாள் பழக்கமான என் பெண்ணை திருமணம் செய்து வைத்திருந்தால், கிருஷ்ணாவை பற்றி அறிந்து, அவனுக்கு ஏற்ற மாதிரி நடந்து இருப்பாள், இப்போது நீங்கள் செய்து வைத்த திருமணத்தில் கிருஷ்ணாவுக்கு விருப்பம் இல்லை, அதனால் தான் இன்னும் ஊருக்கு அறிவிக்காமல் இருக்கிறான்”
என்று அவர் சொல்லியதின் மறைப்பொருளை புரிந்து கொண்ட ஜெயவர்மருக்கு சிரிப்பு தான் வந்தது.
கிருஷ்ணாவை பற்றி தெரியாமல் பேசும் அவருக்கு சொல்லி புரியவைக்க தோன்றவில்லை ஜெயவர்மருக்கு.
அங்கு சரண்யவோ, உமையாளிடம் கிருஷ்ணா இப்படி, அப்படி, என்று அவளுக்கு தான் கிருஷ்ணாவை பற்றி தெரியும் என்ற ரீதியில் அவனை பற்றிய தகவல்களை சொல்லிகொண்டு இருந்தாள்.
சரண்யாவின் மனதில் தவறான எண்ணம் எல்லாம் இல்லை. அவளை பொறுத்தவரைக்கும் அவளுக்கு தெரிந்ததை உமையாளுக்கு சொல்லும் எண்ணம் மட்டும் தான்.
ஆனால் அவளுக்கு தான் தெரியவில்லை, யாருமே அறியாத கிருஷ்ணாவின் உள்ளகிடங்கை கூட அறிந்தவள் இந்த உமையாள் என்று.
இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது தான் அலுவலகம் முடிந்து, தந்தையை காண வந்தான் கிருஷ்ணா.
வந்தவன் அங்கு இருந்தவர்களை எதிர்ப்பார்க்க வில்லை என்பதும், அவர்களின் வரவை தான் விரும்பவில்லை என்பதையும், முகத்தில் காட்டியபடியே உள்ளே வந்தான்.
உணர்வுகளை பிரதிபளிக்காத கிருஷ்ணாவின் முகத்தில், அவனின் தேவைக்கேற்ப, அடுத்தவர் உணர வேண்டும் என்று நினைக்கும் போது, எப்படி தான் இப்படி பாவங்களை வெளிப்படுத்துகிறதோ…
உள்ளே வந்தவன், உமையாளை ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் தந்தையிடம் சென்று, அங்கு இருந்தவர்களை கண்டு கொள்ளாத பாவத்தில், அவனின் தந்தையிடம் அவரின் நலத்தை விசாரிக்க ஆரம்பித்தான்.
அவனின் செய்கையில் அதிருப்தியான உமையாள், அவனை நெருங்கி, மற்றவருக்கு கேட்காத குரலில்,
“வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு கூப்பிடுறது தான் நல்ல பழக்கம்” என்று உரைக்க, அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், சரண்யாவின் அப்பாவை பார்த்து,
“வாங்க” என்று கடமைக்காக அழைத்துவிட்டு, ஜெயவர்மரிடம் உடல்நலத்தை விசாரித்து விட்டு, மீண்டும் உமையாளை நோக்கி ஒரு பார்வையை செலுத்தி விட்டு கிளம்பி விட்டான்.
அவனின் செய்கையில் சரண்யா ஆச்சர்யபட, அவளின் அப்பா அதிர்ச்சியாக, ஜெயவர்மரோ ஆனந்தமானார்.
கிருஷ்ணா சென்றதும், ஜெயவர்மர் சரண்யாவின் அப்பாவை, “இப்போ என்ன சொல்றிங்க” எனும் விதமாக ஒரு பார்வை பார்க்க, மனிதர் இதற்கு மேலும் என்ன தான் பேசுவார்.
உமையாள் சொல்லியது மற்றவருக்கு கேட்க வில்லை என்றாலும், அவள் சொல்லி தான் இவரை அவன் வரவேற்றான் என்பதை புரிந்து கொள்ள பெரிய அறிவாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா..
கிருஷ்ணா, உமையாளுக்கு கட்டுப்பட்டு அவள் சொல்வதை செய்ய, இனி மேற்கொண்டு இதில் தனக்கு சாதமாக நடத்திக்கொள்ள எதுவுமே இல்லை என்பது புரிய, சோர்ந்த முகத்துடன் மனிதர் விடைப்பெற்று கிளம்பி விட்டார்.
அன்று கிருஷ்ணா அதன் பிறகு வேலையில் மூழ்கி விட, உமையாளுக்கு அவனிடம் பேசவே சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
அதற்கு அடுத்தநாள் புதன்கிழமை, அன்று கிருஷ்ணா அலுவலகத்தில் இருந்து நேராக வசீகரனின் வீட்டிற்கு தான் சென்றான்.
அங்கு சென்று வரவேற்பறையில் வசீகரனுக்காக காத்திருக்க, வசீகரனும் வந்து சேர்ந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு, நண்பர்கள் இன்று தான் நேருக்கு நேர் பார்த்து கொள்கின்றனர்.
ஏனோ ஊருக்கு செல்லும் முன் நண்பனிடம் பேசிவிட்டு செல்ல வேண்டும் என்று எதுவோ உந்த வசீகரனை பார்க்க வந்துவிட்டான் கிருஷ்ணா.
ஆனாலும் பேசுவதற்கு சிறிய தயக்கம் இருக்கவே,
“கரன்” என்று தன் நண்பனை விளிக்க, வசீகரன் அமைதியாய் அவனை பார்க்க, கிருஷ்ணாவே,
“பிசினஸ் விஷயமா நான் இன்னைக்கு நயிட் மும்பை போறேன், வர ஒரு த்ரீ டேஸ் ஆகும், அப்பாவை கொஞ்சம் பார்த்துக்கோ கரன்” என்று சொல்ல, வசீகரனுக்கோ சொல்ல முடியாத உணர்வு நெஞ்சம் எல்லாம் வியாபிக்க, தன்னையும் அறியாமல்,
“கண்டிப்பா போய் தான் ஆகணுமா கிருஷ்ணா” என்று கேட்டிருந்தான், அவனின் கேள்வியில் அவனை ஆச்சரியமாக பார்த்த கிருஷ்ணா,
“ஏன் கரன்” அவனின் வழக்கம் போல இரத்தின சுருக்கமாக கேள்வி கேட்க, வசீகரனோ, தான் ஏன் அப்படி கேட்டோம் என்று புரியாமல் யோசித்து கொண்டு இருந்தான்.
இப்போது கிருஷ்ணாவும் அதையே கேட்க, அவனுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை இருப்பதால், சமாளிப்பாக,
“இல்லை, நீ இப்போ போன சன் டே தான் வருவ, என்னோட அப்பா, அம்மா, பாப்புவோட அப்பா, பாட்டி எல்லாரும் அன்னைக்கு ஈவ்னிங் வந்துருவாங்க, அவங்க வரும் போது நீ இங்க இருந்தா தான் சரியா இருக்கும், அதான் கேட்டேன், போய்ட்டு சன் டே வந்ததுடுவ இல்ல கிருஷ்ணா”
ஏனோ புரியாத ஒரு உணர்வு ஆட்டிப்படைக்க, வசீகரன் மீண்டும் அப்படியே கேட்டு இருந்தான். அவனின் கேள்வியில் அவனை பார்த்த கிருஷ்ணா, நண்பனின் சஞ்சலத்தை புரிந்து கொண்டவன் போல,
“அவங்க வருவதற்கு முன்னாடி கண்டிப்பா நான் வந்துடுவேன் கரன்” என்றவன், அவனின் கையை பிடித்து, கையில் ஒரு அழுத்தமும் கொடுத்தான்.
கிருஷ்ணாவின் செய்கையில், வசீகரன் சற்று தெளிய, அந்நேரம் பொன்னம்மா இருவருக்கும் தேனீர் எடுத்து வந்தார்.
ஒரு கோப்பையை எடுத்து கிருஷ்ணாவுக்கு கொடுக்க வந்த வசீகரனின் கை, இன்னும் மிட்சம் இருந்த அந்த புரியாத உணர்வில் சற்று தடுமாற, தேனீர் கொஞ்சம் கிருஷ்ணாவின் சட்டையில் சிந்தி விட்டது.
கிருஷ்ணா ஒரு உணர்வும் இல்லாமல் கைக்குட்டை கொண்டு அதை துடைக்க, வசீகரனோ பதறி,
“சாரி கிருஷ்ணா, சாரி” என்றவன், அவனை கட்டாயப்படுத்தி அருகில் இருந்த அறைக்கு அழைத்து சென்று, அவனை சுத்தப்படுத்தி கொள்ளுமாறு பணித்துவிட்டு வெளியே வந்தான்.
கிருஷ்ணாவும் வசீகரன் சொல்லியதற்காக, கொஞ்சம் தண்ணீர் விட்டு கைக்குட்டையை நனைத்து சட்டையை சுத்தப் படுத்தியவன், வெளியே வர, அந்த அறையின் மேசையின் மீது இருந்த புத்தகம் அவனின் கருத்தை கவர்ந்தது.
பொதுவாக அடுத்தவர் பொருட்களையே, விஷயங்களையோ ஆராய்ச்சி செய்ய விரும்பாதவன் கிருஷ்ணா.
ஆனால் அந்த புத்தகம் அவனை காந்தம் என இழுக்க, ஏதோ அவன் தெரிந்துகொள்ள வேண்டிய, மிக அவசியமானது அதில் இருப்பதாக உள்ளுணர்வு ஓயாமல் உரைத்தது.
அந்த உணர்வை தடுக்கவோ, மீறவோ முடியாமல், அந்த புத்தகத்தை நெருங்கி, அதை கைகளில் எடுத்தான் கிருஷ்ணா.
அது ஒரு ஓவிய புத்தகம். அவனையும் அறியாமல் கைகள் முதல் பக்கத்தை திருப்ப, அதில் ஒரு ஜோடி கண்களில் ஓவியம்.
அந்த கண்கள், அன்றாடம் பார்த்து பழக்கப்பட்டதாக, மிகவும் பரிச்சயமானதாக தோன்ற, “யாருடைய கண்கள் இது” என்று யோசித்தவாறே அடுத்த பக்கத்தையும் திருப்பினான் கிருஷ்ணா.
அடுத்தடுத்த பக்கங்களிளும் கண்கள் மட்டுமே, ஆனால் பல பல உணர்ச்சிகளுடன் அழகிய பென்சில் ஓவியங்களாக தீட்டப்பட்டு இருந்தது.
அது வரையப்பட்ட இருந்த விதத்திலே இலயிப்புடனும், ஈடுபாட்டுடன், வரையப்பட்டு இருப்பது புரிய, தீராத யோசனையுடனும், ஒரு இரசிப்பு தன்மையையுடனும் தான் அந்த ஓவியங்களை பார்த்து கொண்டு இருந்தான் கிருஷ்ணா.
அளவில்லாத காதலை சிந்தும் நயனங்களை பார்த்தவன், இதற்கு முன்பு ஒரு முறை இந்த கண்களை இதே உணர்வோடு பார்த்தது நினைவு வர, உயிர் மொத்தமும் நடுங்கியது கிருஷ்ணாவுக்கு.
இருந்தும் ஏதோ ஒரு சந்தேகம் இருக்க, தன்னை சமாளித்து கொண்டு, நடுங்கும் கரங்களோடு, அடுத்த பக்கம் திருப்பியவன், அப்படியே உறைந்து நின்றுவிட்டான்.
அவன் நினைத்தை உறுதிசெய்யும் விதமாக, அந்த கண்களின் சொந்தக்காரன் முழு ஓவியம் இருக்க, கண்கள் சொல்லும் செய்தியை, மூளை ஏற்றுக்கொள்ள மறுக்க ஒரு யுத்தமே நடந்து கொண்டிருந்தது கிருஷ்ணாவுக்குள்.
உமையாள் முதல் முதலில் மாலில் இரசித்த அவளின் வசீயையும், இவர்கள் நால்வரும் மால் சென்றிருந்த போது, அவள் தன்னை மறந்து பார்த்த அவள் வசீயின் முழு ஓவியமும் தான் இருந்தது அந்த பக்கத்தில்.
கிருஷ்ணாவுக்கு அவர்கள் மால் சென்ற அன்று, நடந்தது இன்றும் நினைவில் இருந்தது.
உணவகத்தில் அவனின் மூளை சொல்லிய தகவலை மனம் நம்ப மறுக்க, அதன் சாட்சி இப்போது அவன் கைகளில்.
அதும் அந்த ஓவியத்தின் கீழே, “மை வசீ, வித் லவ் உமையாள்” என்று அவளின் கையொப்பமும் இருக்க, கிருஷ்ணா பல உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி, அப்படியே வடித்து வைத்த சிலை என நின்று கொண்டிருந்தான்.
இப்பொழுதே உமையாளை பார்த்து கேட்க வேண்டிய கேள்விகள் ஆயிரம் மனதிற்குள் படையெடுக்க, இது இப்படி அவசர அவசரமாக பேச வேண்டிய விஷயம் இல்லை என்பதும் புரிந்தது.
நடந்து கொண்டிருப்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே, தனக்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படும் என்று தோன்றியது கிருஷ்ணாவுக்கு.
அப்போது தான் நேரத்தை பார்க்க, மும்பை செல்ல நேரம் வேறு நெருங்க, வழக்கம் போல முகத்தில் உணர்வுகளை துடைத்துவிட்டு, அந்த புத்தகத்தை அதன் இடத்தில் வைத்துவிட்டு, வெளியே வந்தான் கிருஷ்ணா.
வசீகரனிடம் விடைபெற்று வீட்டிற்கு வந்தவன், நேராக தனது அறைக்கு சென்று, பயணத்திற்கு வேண்டியவற்றை எல்லாம் தயார்செய்து கொண்டு கீழே வந்தான்.
தன் தந்தையின் அறைக்கு சென்று அவரிடம் விடைபெற்றவன், உமையாளை கண்ணெடுக்காமல் பார்க்க, அந்த பார்வையில் துணுக்குற்ற உமையாள்,
“என்ன கிருஷ்ணா” என்று கேட்டும் விட, சட்டென தன் பார்வையை மாற்றியவன், அவளிடம்,
“நான் மும்பை போறேன், வந்ததும் உன் கிட்ட நிறைய கேட்கணும் உமையாள், தயாரா இரு” என்று உரைத்துவிட்டு, அவள் அடுத்து ஏதும் கேள்வி கேட்கும் முன் கிளம்பியும் விட்டான்.
ஆயிற்று கிருஷ்ணா மும்பை சென்று மூன்று நாட்கள்.
இந்த மூன்று நாட்களிலும், வசீகரனை எதுவோ ஒன்று அலைகழித்து கொண்டே இருந்தது.
உமையாளோ, ஊருக்கு செல்லும் முன் கிருஷ்ணா பேசிய பேச்சில், அவனின் குரலில் இருந்த பாவத்தில், அதை பற்றிய எண்ணங்களில் இருந்தாள்.
அன்று ஞாயிறு, காலையிலே பாலாவும் வசீகரனின் வீட்டிற்கு வந்து இருக்க, உமையாளும் அவனும் தான் பேசிக்கொண்டு இருந்தனர்.
உள்ளறையில் இருந்து வந்த வசீகரன், உமையாளிடம் கிருஷ்ணா இன்று திரும்பி வர பயணசீட்டு எடுத்து இருக்கும், விமானத்தின் பெயரை சொல்லி, எப்போது கிளம்பும், எப்போது சென்னை வந்து சேரும் என இணையத்தில் பார்க்க சொல்லி கேட்டான்.
மூன்று நாட்களாக அவனின் அலைப்புறுதலை உணர்ந்து இருந்த உமையாளும் எதுவும் சொல்லாமல், அவன் கேட்ட தகவலை பார்க்க, விமானம் மும்பையில் இருந்து கிளம்பிவிட்டதாக தகவல் கிடைத்தது இணையத்தில்.
பாலாவும் அமைதியாய் இதை எல்லாம் பார்த்து கொண்டிருக்க, தான் கேட்ட தகவல் கிடைத்ததும், ஏதோ யோசனையிலே உள்ளே சென்று விட்டான் வசீகரன்.
பாலாவும் உமையாளும் தொலைக்காட்சி பார்க்கலாம் என்று ஒரு நகைச்சுவை சேனலை வைத்துவிட்டு அதன் முன் உட்கார்ந்தனர்.
அப்போது அவசர செய்தி ஒன்று, அந்த சேனலின் அடியில் வர, முதலில் அசட்டையாய் அந்த செய்தியை பார்த்த உமையாள், அதை படித்து முடிக்கவும், அபப்டியே கண்கள் நிலைகுத்தி நிற்க நின்றாள்.
ஏதோ கேட்க உமையாளை திரும்பி பார்த்த பாலா, அவளின் பார்வை சென்ற இடத்தை பார்க்க, அங்கு தொலைகாட்சியில்,
“சற்று முன்பு மும்பையில் இருந்து கிளம்பிய ******** விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடு வானில் வெடித்து சிதறியது, பயணிகள் அனைவரும் இறந்தது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது”
என்ற செய்தியை படித்தவன், அப்போது தான் அது கிருஷ்ணா சென்னை வர ஏறி இருக்க வேண்டிய விமானம் என்று புரிந்தது.
கைகள் அனிச்சை செயலாக மீண்டும் மீண்டும் கிருஷ்ணாவின் எண்ணிற்கு அழைக்க, அதுவோ “தாங்கள் தொடர்பு கொள்ள முயலும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்” என்ற தகவலையே மீண்டும் மீண்டும் சொல்லியது.
விடாமல் முயன்றவாறே, அப்போது தான் உமையாள் நினைவு வந்து அவளை திரும்பி பார்த்த பாலா, அவள் மூச்சுக்கு கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதை தான் கண்டான்.
அவசரமாக அவளை நெருங்கிய பாலா, என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறி,
“கரன், கரன் இங்க சீக்கிரம் வா” என்று கத்த, அதற்குள் உமையாள் மெல்ல மயக்க நிலைக்கு நழுவ, அவள் மயங்கி விழ, பாலா அவளின் நிலையில் சர்வமும் உறைந்து நின்றான்.
உமையாள் தரையில் விழ போகும் கடைசி நொடியில் அவளை தன் கைகளில் தாங்கி கொண்டான் வசீகரன்.
காதல் கொள்வோம்.………………