சந்தியா சுடிதார் துப்பட்டாவின் நுனியை திருகியபடி நின்றவள் தனது வலக்கையில் மறைத்து வைத்திருந்த நாணயத்தை அவனிடம் நீட்ட சூரியா “ஹேய் பிரவுனி! இது எனக்கே எனக்கு தானே? திருப்பி கேக்க மாட்டல்ல?” என்று குழந்தைக்கு உண்டான குதூகலத்துடன் அதை வாங்கிக் கொண்டான். அதை அவனது வாலட்டில் பத்திரப்படுத்தியவன் யாருக்கும் இதை கொடுக்கப் போவது இல்லை என்று அவளிடம் உறுதியளிக்க சந்தியா புன்னகைத்தாள்.
அவள் ஒருமுறை கூறியிருக்கிறாள், அந்த நாணயங்கள் அனைத்தும் அவளின் தாத்தா அவளுக்கு அளித்தவை என்று. அதை தனக்கு தருகிறாள் என்றால் அந்த பெரியவரின் நினைவையும் சேர்த்து தான் தனக்கு தந்திருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டவன் அதை என்றும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.
சூரியா சலனமற்ற விழிகளால் அவளை ஏறிட தொண்டையை செறுமிக் கொண்டவள் “நான் உன் கிட்ட பேச வந்த விஷயம் இது இல்ல. எனக்கு சுத்தி வளைச்சு பேச பிடிக்காது மார்ஸ்மாலோ. ஐ லவ் யூ” என்று கூறிவிட்டு அவனை நோக்க சூரியாவுக்கோ அவளது வார்த்தை உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்தது.
சந்தியா தொடர்ந்து “எனக்கு உன் கூடவே இருக்கணும் போல தோணுது சூரியா. உன்னோட சிரிப்பை, கோவத்தை ரசிச்சிட்டே உன்னோடவே வாழ்க்கை முழுக்க இருக்கணும். அது போதும்” என்று மனதின் எண்ணத்தை வார்த்தையில் வெளியிட சூரியாவோ பதிலளிக்க இயலாதவனாய் வாய் மூடி நின்றான்.
அவனது மவுனம் அவளுக்கு பயத்தை தர “நீ ஏன் சைலண்டா இருக்க? ஒரு வேளை உனக்கு என்னை பிடிக்கலையோ?” என்றவளை நோக்கி ஒரு குழப்பமான புன்னகையை மட்டும் வீசினான் அவன்.
சூரியாவை பொறுத்தவரை சந்தியா என்றால் அவனுக்கு ஸ்பெஷல் தான். ஒரு நல்ல தோழி, குறும்புக்கார பெண், குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்திருக்கும் ஒரு வளர்ந்த குழந்தை; இப்படி தான் அவளைப் பற்றி அவன் எண்ணியிருந்தான். தனது செய்கைகள் அவளது மனதை குழப்பிவிட்டது என்று எண்ணி வருந்தியவன் அவளின் என்னை பிடிக்கவில்லையா என்ற கேள்வியில் அதிர்ந்தான்.
“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் பிரவுனி. அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா உனக்கு இருக்கிற ஃபீலிங்குக்கு பேரு லவ் இல்ல. இது இன்பாக்சுவேசன். உனக்கு லவ் பண்ணுறதுக்கான வயசு இல்ல! உன் மனசு அந்தளவுக்கு இன்னும் மெச்சூர் ஆகவும் இல்ல.
இந்த ஏஜ்ல நீ தேவையில்லாத சிந்தனையில மனசை விட்டுட்டேனா என் கிட்ட சொன்னியே என் கம்பெனி பேலன்ஸ்ஷீட்ல ஆடிட்டரா கையெழுத்து போடுவேனு, அதுல்லாம் இம்பாசிபிள். சோ இந்த பப்பி லவ்வை தூர தூக்கி போட்டுட்டு படிப்புல கவனத்தை வை. மத்த எல்லாம் அதுக்கான வயசுல தானா நடக்கும். ஃபியூச்சர்ல நான் உன்னை மீட் பண்ணுறப்போ போல்டான, மெச்சூரான பொண்ணா தான் பார்க்கணும்” என்று அழுத்தமான குரலில் கூற அவளோ அவனது வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளே உடைந்து கொண்டிருந்தாள்.
அவளுக்கு தெரிந்தவரை அவளது மனதில் இருப்பது காதல் மட்டுமே. அவன் கூறிய விளக்கத்தை கேட்டவளுக்கு மனதில் வாள் கொண்டு அறுப்பது போல வலித்தது.
[the_ad id=”6605″]
சூரியாவோ தன்னால் அவளது வாழ்விலோ லட்சியத்திலோ எந்த குழப்பமும் வந்துவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தான். சந்தியாவின் காதல் என்ற வார்த்தை அவனுக்கு சிறுபிள்ளைத்தனமாக தோன்றியது. அவனுக்கே அந்த வார்த்தையில் நம்பிக்கை இல்லை என்பதே உண்மை. எனவே அறிவுரை சொன்னால் அவள் கேட்டுக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் சந்தியாவுக்கு எடுத்துக் கூறினான் சூரியா.
அவன் கூறிய அனைத்துக்கும் தலையாட்டி விட்டு தனது வீட்டை நோக்கி நடைபோட்டவள் அன்றைய இரவை கண்ணீரில் தான் கழித்தாள். காலையில் எழுந்து குளித்தபிறகு தூக்கமற்ற அழுது வீங்கிய விழிகளே அவளது நிலையைப் பறைச்சாற்ற வெளியே சூரியாவின் குரல் கேட்டதும் வேகமாகச் சென்று பார்த்தாள் சந்தியா.
சந்தியாவைக் கண்டதும் புன்னகைத்தவனுக்கு அவளது அழுது சிவந்த விழிகள் மனதை நெருட அவளிடம் வந்தவன் “நீ தைரியமான பொண்ணு. அதோட தெளிவா யோசிக்கிறவளும் கூட. இப்போ நான் சொன்னது உனக்கு வருத்தத்தை குடுத்திருக்கலாம். உன் மனசை காயப்படுத்திருக்கலாம்.
ஆனா உன்னோட மனசுல தேவை இல்லாத ஆசையை வளர்த்துட்டு நீ உன்னோட லட்சியத்தை விட்டு விலகிப் போயிடக் கூடாதுனு நான் நினைக்கிறேன். உனக்கும் அந்த அக்கறை இருந்தா இனி நடந்து முடிஞ்சதை நினைச்சு அழக் கூடாது. நல்லா படிக்கணும். சரியா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அறிவுரை கூற சந்தியா தலையாட்டினாள்.
“நீ அடிக்கடி சொல்லுவேல்ல; இருக்கிற ஒரே வாழ்க்கையை அழுது புலம்பி வீணாக்காம ஒவ்வொரு நிமிசத்தையும் அனுபவிச்சு வாழணும்னு. இனி நான் அப்பிடி தான் வாழப் போறேன் பிரவுனி. நீயும் உன்னோட அந்த் பிரினிசிபிள்ல இருந்து மாறக் கூடாது” என்று தெளிவாக உரைத்துவிட்டு புன்னகையுடன் நகர்ந்தான் அவன்.
அவளின் பெற்றோரிடம் விடைபெற்றவன் கோமதியம்மாளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு காரை நோக்கிச் சென்றான். இனி அவனை பார்க்கவே போவதில்லை என்ற எண்ணமே அவளுக்கு அழுகையை வரவழைக்க அவனது அறிவுரை அதை தடுத்தது. சூரியாவின் கார் அங்கிருந்து செல்ல அன்று அவள் அழவில்லை.
அன்று மட்டுமின்றி அதை தொடர்ந்த மூன்று வருடங்களிலும் அவன் கூறியபடி படிப்பை மட்டும் மனதில் வைத்து வேறு சிந்தனைகளை புறந்தள்ளியவளுக்கு சில நேரங்களில் அவனது நியாபகம் வருவதுண்டு. என்ன இருந்தாலும் சூரியா அவளின் முதல் காதல் அல்லவா? முதல் காதல் கொடுத்த வலி மூச்சு நிற்கும் வரை இருக்கும் என்பது நூறு சதவீத உண்மை.
அப்போதெல்லாம் சுமித்ரா தான் அவளுக்கு ஆறுதலாக இருந்தாள். அவர்கள் இருவருக்கும் இடையே ரகசியங்கள் என்றுமே இருந்தது இல்லை என்பதால் சந்தியா சூரியா கூறிய அனைத்தையும் சுமித்ராவிடம் கொட்டிவிட அவளுக்குமே சூரியாவின் மீது மரியாதை பிறந்தது. மெதுவாக தங்கையை அவன் நினைவில் இருந்து வெளியே கொண்டு வந்தவள் மூன்று வருட கல்லூரி வாழ்க்கை முடிந்ததும் அவள் விருப்பப்பட்ட படிப்பைப் படிக்க சென்னைக்கு செல்வதற்கு சித்தி, சித்தப்பாவிடம் சம்மதம் வாங்கினாள்.
அவர்களும் சென்னைக்கு செல்ல மகள்களுக்கு அனுமதி கொடுத்து பாதுகாப்பான ஏரியாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துவிட்டு திருநெல்வேலிக்கு திரும்பி விட்டனர். ஊரிலிருந்து புறப்படும் போதே ரேணுகா சுமித்ராவிடம் “சுமி நீ சொன்னேனு தான் நான் அவளை சென்னைக்கு அனுப்புறேன். அவ சொன்ன மாதிரி அந்த கம்பெனியில இண்டர்ன்ஷிப் கிடைக்கலைனு வை, அடுத்த ட்ரெயின்ல அவ திருநெல்வேலி வந்திருக்கணும்” என்று கண்டிப்பாகக் கூறியிருந்தார்.
அவர்களும் சென்னை வந்ததில் சுமித்ரா ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சேர்ந்து விட சந்தியாவுக்கு இன்றைக்கு நடந்த நேர்க்காணலில் ஏற்பட்ட குழப்பத்தால் அவள் எந்த சூரியாவை பார்க்க இயலாது என்று எண்ணியிருந்தாலோ அவனே அவளது முதலாளியாக வந்து நின்றான்.
அனைத்தையும் நினைத்தவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு அந்த புகைப்படத்தை மீண்டும் வார்ட்ரோபிலேயே வைத்துவிட்டு வந்தாள். மாலை சுமித்ரா வரும்வரை நேரத்தை நெட்டி தள்ளியவள் அவள் வந்ததும் அவளிடம் கண்ணீரும் கம்பலையுமாக விஷயத்தைக் கூற சுமித்ராவுக்கே கடவுளின் விளையாட்டை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று புரியாத நிலை.
அவளுக்கு நினைவு தெரிந்தவரை சந்தியா அழுது அவள் பார்த்ததில்லை. அப்படி பட்ட அவளது தங்கை தனது கண்ணீரை முதல் முதலாக ஒரு வெளிமனிதனுக்காக சிந்தினாள் என்றால் அவன் சூரியா மட்டுமே. அன்றைக்கு சந்தியாவின் காதலை மறுக்க அவன் கூறிய காரணம் நூறு சதவீதம் நியாயமானதே. எனவே அவனிடம் வேலை செய்தால் தங்கை பாதுகாப்பாக இருப்பாள் என்ற எண்ணம் அவள் மனதில் உதிக்காமல் இல்லை.
தனது தோளில் சாய்ந்திருந்த தங்கையை எழுப்பியவள் அவள் கண்ணீரை துடைத்துவிட்டு “சந்து! வாழ்க்கையில எதுவும் காரணம் இல்லாம நடக்கிறது இல்லை. அன்னைக்கு சூரியா உன்னோட லவ்வை கண்ணியமா மறுத்ததுக்கு காரணம் இருந்துச்சு. அப்போ உன்னோட வயசு அப்பிடி. உனக்குனு ஒரு லட்சியத்தை வச்சுகிட்டு நீ தேவையில்லாம டிஸ்ட்ராக்ட் ஆக கூடாதுங்கிற நல்லெண்ணத்துல தான் அவர் அப்பிடி சொல்லிருக்கார்.
[the_ad id=”6605″]அதே மாதிரி இப்போ உன் கிட்ட உரிமையா பேசறதுக்கும் நீ அவரோட குளோஸ் ஃப்ரெண்ட்ங்கிறது தான் காரணம். நீயே சொல்லு, அவர் உன்னோட ஃப்ரெண்டா? இல்லையா?” என்று அவள் கேட்க சந்தியா ஆமென்று தலையாட்டினாள்.
“அப்போ ஏன் நீ இவ்ளோ அழற? அவர் கிட்ட வேலைக்கு போக உனக்கு என்ன தயக்கம்? அவர் உன்னை ஒரு நல்ல ஃப்ரெண்டா பார்க்கிற மாதிரி நீயும் அவரை ஒரு நண்பனா நடத்து. தேவையில்லாம அவர் கிட்ட இருந்து ஒதுங்கி போறதால எதுவும் மாறப் போறது இல்லை. நீ இங்க வந்தது சி.ஏ பண்ணுறதுக்கு. அதுல உன் கவனத்தை வை. அதுக்கு உனக்கு ஒரு பாதுகாப்பான அதே நேரம் அதிகமா ஒர்க் பிரஷர் இல்லாத வேலை வேணும். இப்போ உனக்கு கிடைச்சிருக்கிற வேலை தான் உன்னோட படிப்புக்கு சரியா வரும்.
நீ ஃபினான்ஸ்ல இண்டர்னா சேர்ந்திருந்தா எப்போவும் உனக்கு லெட்ஜர், ஃப்ராபிட் அண்ட் லாஸ் அக்கவுண்ட் நினைவு தான் இருக்கும். இதுல நீ எங்கே இருந்து உன்னோட ஸ்டடீஸ்ல கான்சென்ட்ரேட் பண்ணுவ? அதனால நாளையில இருந்து அழாம நல்லப்பிள்ளையா வேலைக்குப் போகணும். சரியா?” என்று அறிவுரை கூற சந்தியா சரியென்று தலையாட்டினாள்.
அதற்கு பிறகு இருவரும் வீட்டுக்கு போன் செய்து சந்தியாவுக்கு வேலை கிடைத்த விஷயத்தையும், சூரியா தான் அவளது எம்.டி என்ற விஷயத்தையும் கூற அவர்களும் நிம்மதியுற்றனர். ரேணுகாவும் இனி தாராளமாக சென்னையில் தங்கிப் படி என்று சந்தியாவுக்கு அனுமதி கொடுத்துவிட அவளுக்கும் இனி தாய் தந்தை தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவது மட்டுமே முக்கியம் என்று பட்டது.
அதோடு சுமித்ரா சொன்னபடி சூரியாவை கண்டு இனி ஒதுங்கிப் போகக் கூடாது என்று தனக்கு தானே உறுதியளித்துக் கொண்டாள்.
***********
சூரியா அன்று மிகவும் சந்தோசமாக வீட்டுக்கு திரும்பினான். வீட்டுக்குள் வரும் போதே “லெட்சுமிம்மா இன்னைக்கு நைட் எனக்கு ஸ்வீட் எதாவது பண்ணிடுங்க” என்ற உற்சாகக்குரலுடன் வந்த மகனை ஆச்சரியத்துடன் தலையுயர்த்தி பார்த்தார் ஹால் சோஃபாவில் அமர்ந்து லேப்டாப்பில் அடுத்த மீட்டிங்குக்கான விஷயங்களை பார்த்துக் கொண்டிருந்த நாராயணன்
அதே நேரம் அவன் சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து வெளியே வந்தார் லெட்சுமி. அவர் என்றால் சூரியாவுக்கு மிகவும் இஷ்டம். சிறுவயதில் தாயின் அரவணைப்புக்கு தவிப்பவனை பெறாத தாயாக இருந்து தேற்றியவர் அவர் தான். சூரியா அவர் மீது வைத்திருக்கும் மரியாதை பாசம் காரணமாக அந்த வீட்டின் மற்ற வேலையாட்களும் அவரை மரியாதையாகவே நடத்துவர்.
முகம் மலர “சூரியா தம்பி இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கிங்க போல? என்ன விஷயம்னு சொன்னா நானும் கூட சந்தோசப்படுவேன்ல” என்று வெள்ளந்தியாக கூறிய அந்த பெண்மணியை பார்த்து சிரித்தவன் “உங்களுக்கு சொல்லாமலா லெட்சுமிம்மா? ரெண்டு பேருக்கும் ஒரு குட் நியூஸ் கொண்டு வந்திருக்கேன். அதை கேட்டா நீங்களும் ஹேப்பி ஆயிடுவிங்க. என்னோட பிரவுனி சென்னைக்கு வந்துட்டா” என்று கூற அவன் சொன்ன மாதிரியே இருவரின் முகமும் மலர்ந்தது.
லெட்சுமி “என்னது? நீங்க உண்மையாவா சொல்லுறிங்க தம்பி? எங்கே அந்த பொண்ணு? வெளியே நிக்குதா?” என்று பரபரக்க அவரை கையமர்த்தினான் சூரியா.
“லெட்சுமிம்மா அவ என்னோட ஆபிஸ்ல எனக்கு செகரட்டரியா ஜாயிண் பண்ணிருக்கா. டாட் இது கண்டிப்பா மிராக்கிள் தான். நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி கேப்பிங்கல்ல, அப்பிடி திருநெல்வேலில என்ன தான் நடந்துச்சு? நீ ஏன் இப்பிடி மாறிட்டன்னு. எல்லாத்துக்கும் அவ தான் காரணம் டாட். இருக்கிறதை வச்சு எப்பிடி சந்தோசமா வாழணும்னு எனக்கு கத்துக் குடுத்தவ.
நம்ம சின்ன வாழ்க்கையில அழறதுக்கோ வருத்தப்படுறதுக்கோ நேரம் ஒதுக்குனா நமக்கான வாழ்க்கையை நம்ம எப்போ சந்தோசமா வாழறது? இதுவும் அவ சொல்லிக் குடுத்தது தான். அவளால தான் நான் எனக்குனு போட்டு வச்சிருந்த சின்ன வட்டத்தில இருந்து வெளியே வந்து இன்னைக்கு ஒரு சந்தோசமான மனுசனா நிக்கிறேன்” என்று உணர்ச்சிப்பூர்வமாய் அவன் பேசுவதை கேட்டபடி இருந்தனர் லெட்சுமியும், நாராயணனும்.
அப்போது படிக்கட்டில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்க இவ்வளவு நேரம் மகிழ்ச்சியில் மின்னிய சூரியாவின் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசம் குறைய தொடங்கியது.
“என்னைக்கும் இல்லாம நீ இவ்ளோ சந்தோசமா இருக்கியே சூரியா? நியாயப்படி நீ உன்னோட சந்தோசத்தை முதல்ல சொல்ல வேண்டியது என் கிட்ட. அதை விட்டுட்டு வேலைக்காரங்க கிட்ட சொல்லி சிரிச்சிட்டிருக்க?” என்றபடி அவன் அருகில் வந்தார் ஒரு நடுத்தரவயதுள்ள பெண்மணி. கட்டியிருந்த புடவையிலிருந்து காலில் போட்டிருந்த செருப்பு வரை படாடோபம் மட்டும் மின்ன தன் அருகில் வந்து நின்றவரை சூரியா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
நாராயணனிடம் “டாட் எனக்கு டயர்டா இருக்கு. நான் ரூமுக்கு போறேன்” என்றபடி அவன் அறையை நோக்கி விறுவிறுவென்று செல்ல அந்தப் பெண்மணி சீற்றத்துடன் நாராயணனை நோக்கினார்.
“பார்த்திங்களா? அம்மானு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம அவன் இஷ்டத்துக்கு முகத்தை திருப்பிட்டு போறான். எல்லாம் நீங்க குடுக்கிற இடம்” என்றபடி லெட்சுமியை முறைக்க அவரும் கணவன் மனைவி பேசும் போது தான் இருப்பது சரியில்லை என்று உணர்ந்து அவரது வேலையை கவனிக்க சென்றார்.
நாராயணன் லேப்டாப்பை மூடிவிட்டு சோஃபாவிலிருந்து எழுந்தவர் “ஹேமா! பசங்க கிட்ட பாசத்தை சண்டை போட்டு வாங்க முடியாது. நீ உண்மையான அக்கறையோட கேட்டிருந்தா அவனும் உன் கிட்ட பாசத்தோட பேசிருப்பான். பெத்த பிள்ளைங்க கிட்ட காட்ட வேண்டியது அலட்டலும், அலட்சியமும் இல்லை ஹேமா. அக்கறையும் அன்பும் தான். அதை நீ எப்போ புரிஞ்சுக்கிறியோ அப்போ தான் நம்ம பசங்க உன் கிட்ட பாசமா நடந்துப்பாங்க” என்று தெளிவான குரலில் உரைத்து விட்டுச் செல்ல தனது கையாலாகாத கோபத்தை அந்த சோஃபாவில் குத்தி வெளிப்படுத்தினார் ஹேமா.
ஹேமா நாராயணின் மனைவி மற்றும் சூரியா, ஆரியா என்ற இரு ஆண்மக்களின் தாய். அந்த தாய் என்ற பதத்திற்கு ஏற்றவராய் இது வரை அவர் செய்த ஒரே காரியம் இருவரையும் பெத்தது மட்டுமே.
பரம்பரை பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் யாரிடமும் பணிவாகப் பேசி அறியாதவர். அதிகாரத்தாலே எதையும் சாதித்து பழகியவருக்கு பிள்ளைகளிடம் பாசமாகப் பேசுவது கூட கடினமாகத் தான் தோன்றியது. அதனாலே அவருடைய இரு மகன்களும் அவரிடமிருந்து விலகுவதை அவரால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.
தனது அறைக்குச் சென்ற சூரியா கோட்டை கழற்றி வீசியவன் அதிலிருந்து விழுந்த வாலட்டை எடுத்தவன் அதிலிருந்து விழுந்த அந்த இருபத்தைந்து காசு நாணயத்தைக் கண்டதும் பழைய நினைவில் ஒரு குறுஞ்சிரிப்பில் அவன் இதழ்கள் வளைய லெட்சுமி கையில் இனிப்புடன் அவன் அறைக்குள் வந்தார்.
ஆள் வரும் அரவம் கேட்டு திரும்பியவன் அவரைக் கண்டதும் கையைப் பிடித்து அழைத்துச் சென்று சோஃபாவில் அமர்த்தியவன் கிண்ணத்தைப் பார்த்ததும் “வாவ்! நெய்வாசம் செம. பட் டுமாரோ நான் எக்ஸ்ட்ரா ஒன் ஹவர் ஒர்க் அவுட் பண்ணனுமே” என்று கேலி செய்தபடியே கிண்ணத்தை காலி செய்தவனின் கையிலிருக்கும் நாணயத்தைப் பார்த்தவர் “தம்பி இந்த நாலணாவை வச்சு என்ன பண்ணுறிங்க?” கேட்டுவிட்டு அவனை வித்தியாசமாக பார்த்தார்.
அவன் சிரித்தபடி அவரிடமிருந்து அந்த நாணயத்தை வாங்கியபடி “இது பிரவுனி எனக்கு குடுத்த கிஃப்ட். அவங்க தாத்தா நியாபகமா வச்சிருந்த காயின் இது. மத்தவங்களுக்கு வேணும்னா இது செல்லாக்காசா இருக்கலாம். பட் எனக்கு இது என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டோட அழகான மெமரி. இதோட வேல்யூவே தனி” என்று சிலாகித்துவிட்டு அதை மீண்டும் வாலட்டினுள் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான்.
லெட்சுமி அவனது சிகையை வருடிக் கொடுத்தவர் கிண்ணத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேற சூரியா கதவை அடைத்துவிட்டு வந்தவன் உடை மாற்றிவிட்டு தனது மேஜையின் அறையை திறந்தான்.
அதில் இருந்த புகைப்படத்தை எடுத்தவன் அதை வருடிக் கொடுத்தபடியே சோஃபாவில் சரிந்தான். அதில் இருந்த பெரியவர்களின் முகம் இப்போதும் அவன் மனதில் மரியாதையை வரவழைக்க சந்தியா திரும்பி அவனைப் பார்த்தது சிரிப்பு மூட்டியது.
ஒரு நிமிடம் அவன் மனதில் எப்படி இருந்த பெண் இவள்; ஏன் இவ்வளவு மவுனியாகி விட்டாள் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. எத்தனையோ தடவை நினைத்து நொந்தது தான். இருந்தாலும் அப்போது கூட அவன் மனசாட்சி அவனை குத்திக் காட்டியது.
“குழந்தை மாதிரி இருந்த பொண்ணு. அவ மனசை கலைச்சது நீ தானே; உனக்கு கொஞ்சம் கூட கில்டியா தோணலை?” என்ற மனசாட்சியின் குரலில் எழுந்து அமர்ந்தவன் புகைப்படத்தை டீபாயின் மீது வைத்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.
“அது என்னை அறியாம நடந்த விஷயம். ஆனா அவளை பழையபடி மாத்துறதுக்கு கடவுள் இப்போ ஒரு சான்ஸ் குடுத்துருக்காரே! இனி டெய்லி எய்ட் ஹவர்ஸ் என் பார்வையிலேயே தான் இருக்கப் போறா. அவளை பழையபடி கலகலப்பான பிரவுனியா மாத்த என்னால என்னென்ன செய்ய முடியுமோ எல்லாத்தையும் செய்வேன்” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
[the_ad id=”6605″]********
மறுநாள் காலை சீக்கிரமாகவே அலுவலகம் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியவனின் கார் போய் சேர்ந்த இடம் சந்தியாவும் சுமித்ராவும் தங்கியிருந்த வீடு. வீட்டின் முன் காரை நிறுத்தியவன் பெண்கள் இருக்கும் வீட்டுக்கு முன்னறிவிப்பின்றி வந்ததுக்கு தன்னையே திட்டிக் கொண்டவனாய் போனில் சந்தியாவுக்கு அழைத்தான்.
அவன் கவனம் போனில் பாதியும் வீட்டின் தோற்றத்தில் மீதியுமாக இருக்க அவன் கண்கள் வீடு இருந்த சுற்றுபுறத்தை ஆராயத் தொடங்கின. ஓரளவுக்கு வசதியான மனிதர்கள் வாழும் பகுதி தான் என்பதை அங்கிருந்த வீடுகளின் தோற்றமே அவனுக்கு உணர்த்த சந்தியா இருந்த வீட்டை ஸ்கேன் செய்தன அவனது கண்கள்.
கிரில் கேட் பாதுகாப்பில் காம்பவுண்ட் சுவர்கள் அரணாய் இருக்க நடுநாயகமாய் இருந்தது அந்த கான்கிரீட் வீடு. முன்பக்கத்தில் சிறிது இடம் விட்டு நடைபாதையின் இரு ஓரங்களிலும் குரோட்டன்ஸை வைத்திருந்தனர். மேலே மொட்டை மாடியும் அதன் படிக்கட்டை ஒட்டியபடி நின்ற தென்னைமரமும் என இரண்டு பேருக்கு அந்த வீடு அதிகம் தான்.
அவன் யோசனை அலைபாயும் போதே சந்தியா போனை எடுத்து “ஹலோ” என்க சூரியா “பிரவுனி நான் தான்” என்றபடி பேச ஆரம்பித்தான். சந்தியாவுக்கு அடுத்து என்ன கூறுவது என்று புரியாத நிலையில் அவனே “ஆபிஸ்கு ரெடியாயிட்டியா?” என்று கேட்க அவள் உம் கொட்டினாள்.
“ஓ! எவ்ளோ பெரிய வார்த்தை பேசிருக்க. சரி வந்து கதவை திற. எவ்ளோ நேரம் தான் ஒரு மனுசன் வாசல்லயே நிக்கிறது?” என்று சலித்துக் கொள்ள
சந்தியா “வாட்? நீ வாசல்ல நிக்கிறியா?” என்றபடி ஓடிவரும் சத்தம் போனில் கேட்க அவன் “யெஸ் பிரவுனி. ஐ அம் ஹியர்” என்று ராகமாக கூறிக் கொண்டே கதவை பார்த்துக் கொண்டிருக்க சந்தியா அவசரமாக கதவை திறந்தாள்.
அவளது அக்மார்க் முட்டைக்கண் பார்வையுடன் உருட்டி விழித்தவள் “காத்தாலே இங்க என்ன பண்ணுற?” என்று கேட்க
சூரியா அங்கே ஒருவர் நாயுடன் வாக்கிங் செல்வதைச் சுட்டிக்காட்டி “இந்த டைமுக்கு வந்தா இவர் நாயோட வாக்கிங் போவாருனு பிபிசில நியூஸ் பார்த்தேன். அதான் இந்த சீனை மிஸ் பண்ணிட கூடாதுனு வேக வேகமா வந்து உன் வீட்டு வாசல்ல நிக்கிறேன் பிரவுனி” என்று தீவிரமான ஆனால் கேலி விரவிய குரலில் கூறிவிட்டு குறும்புடன் அவளைப் பார்க்க சந்தியா இடுப்பில் கைகளை ஊன்றி அவனை முறைக்க ஆரம்பித்தாள்.
[the_ad id=”6605″]“இவ்ளோ கேவலமா காமெடி பண்ண யார் கிட்ட கத்துகிட்ட மார்ஸ்மாலோ?” என்றவளை பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்தபடி அவளை தலையிலிருந்து கால் வரை சுட்டிக்காட்டியவன் “இதோ என் எதிர்ல நிக்கிறாங்களே இவங்க கிட்ட தான். இவங்க அளவுக்கு இல்லைனாலும் ஏதோ கொஞ்சம் நானும் ஜோக் அடிப்பேன்” என்று அமர்த்தலாக மொழிந்தான்.
சந்தியா தலையை இடவலமாக ஆட்டியவள் “என்னை வச்சு காமெடி பண்ணுனது போதும். நீ ஆபிஸ்கு கிளம்புறியா?” என்றபடி அவனது காரை சுட்டிக்காட்ட பதிலுக்கு அவனும் சிறிதும் சளைக்காதவனாய் பேண்ட் பாக்கெட்டினுள் கைவைத்து அவளைப் பார்த்தபடி “என் அழகை ரசிச்சது போதும். இப்போ வீட்டுக்குள்ள போலாமா?” என்று கேட்டான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க விதி அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் எப்போதோ இறங்கிவிட்டது.
சாரல் வீசும்…