பகுதி – 16
நள்ளிரவில் ரிஷி அறைக்கு வந்த போது… அவன் போதை கொஞ்சம் இறங்கி இருந்தது. எங்கே மனம் இருக்கும் நிலையில் சாதனாவிடம் கோபத்தைக் காட்டி விடப் போகிறோம் என்ற அச்சத்தில் அதிக நேரம் பாரில் இருந்து விட்டே அறைக்கு வந்தான்.
அவன் வந்த போது… சாதனாவும் உறங்காமல் விழித்தே இருந்தாள். சிறிது நேரத்திற்கு முன்பு தான் வெற்றியும் ப்ரீதாவும் ஹனிமூன்னுக்குப் பாரிஸ் செல்ல விமான நிலையம் சென்றிருந்தனர்.
ஜோதியும் ஊரில் இருந்து வந்த உறவினர்களோடு ஏசி பஸ்சில் கிளம்பி சென்றுவிட்டார். ரிஷிக்குச் சென்னையில் வேலை இருப்பதால்…இரண்டு நாட்கள் சென்று தான் இவர்கள் மதுரை கிளம்புகிறார்கள்.
தலை அலங்காரம் கலைத்து உடை மாற்றி இரவு உடையில் இருந்தவள், ரிஷியை பார்த்ததுமே அவன் குடித்து இருக்கிறான் என்று புரிந்து கொண்டாள். அவனிடம் இப்போது பேச்சுக் கொடுத்தால்… வீணாகச் சண்டை வரும் என அமைதியாக இருந்தாள்.
ரிஷி அவளிடம் எதுவும் பேசவில்லை… தன் உடைகளை மாற்றிவிட்டு அமைதியாகச் சென்று படுத்து விட… சாதனாவும் விளக்கணைத்து விட்டுக் கட்டிலில் அவனுக்கு மறுபக்கம் சென்று படுத்தாள்.
இருவருமே மனதில் அமைதி இல்லாமல் இருந்தனர். ஆனால் வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை….
ரிஷி ஒரு பக்கமாக இல்லாமல்… இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று மாறி மாறி படுக்க…. சாதனாவால் உறங்கவே முடியவில்லை….
சிறிது நேரம் பார்த்தவள், அதற்கு மேல் முடியாமல் எழுந்து விளக்கை ஒளிர விட்டாள்.
“என்ன ஆச்சு ரிஷி?”
[the_ad id=”6605″]“ரொம்ப ஒரு மாதிரியா இருக்கு… படுக்கவே முடியலை…”
கட்டிலில் அவன் அருகில் சென்று அமர்ந்த சாதனா “என்ன செய்யுது?” எனக் கேட்டபடி அவன் நெற்றியில் கை வைத்து பார்க்க காய்ச்சல் ஒன்றும் இல்லை.
“வயிறு ஒரு மாதிரி இருக்கு.”
“இருங்க வரேன்.” என்றவள், இண்டர்காமில் சமையல் அறைக்குத் தொடர்பு கொண்டு, சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து எடுத்து வர சொன்னாள்.
அவள் கேட்டபடி சிறிது நேரத்திலேயே எலுமிச்சை சாறு வந்து விட… அதை ரிஷிக்கு கொடுத்து பருக வைத்தவள் “கொஞ்ச நேரம் படுக்காம உட்கார்ந்திருங்க.” என்றாள்.
ரிஷியும் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தான். சிறிது நேரத்தில் அவனுக்குக் குமட்டி கொண்டு வர…. குளியல் அறைக்குள் சென்று வாந்தி எடுத்தான். சாதனா அவனோடு சென்று அவன் தலையைத் தாங்கிக் கொண்டாள்.
ஒருவாறு வயிற்றில் இருந்த எல்லாம் வெளியில் வந்துவிட… தான் வாந்தி எடுத்ததை ரிஷியே சுத்தம் செய்ய முயன்றான். அவனைத் தடுத்த சாதனா… அங்கிருந்த வாஷ்பேசினில் அவன் முகம் வாய் கழுவ வைத்து, அவனை வெளியே அனுப்பி விட்டு…. நன்றாக நீர் விட்டு குளியல் அறையைச் சுத்தம் செய்தாள்.
சுத்தம் செய்து முடித்ததும், அவளும் கை கால் கழுவி கொண்டு வந்தாள். ரிஷி மிகவும் சோர்ந்து போய் இருந்தான்.
“இப்ப பரவாயில்லையா ரிஷி?”
“ம்ம்… ஆனா தலை வலிக்குது. எதாவது மாத்திரை கொடு சாதனா…”
“இப்ப தான வாமிட் பண்ணீங்க. வயித்துல ஒன்னும் இருக்காது. வெறும் வயித்துல மாத்திரை போட கூடாது. நீங்க இப்ப எதுவும் சாப்பிடவும் முடியாது. சாப்பிட்டா திரும்ப வாந்தி வரும். அதனால பேசாம படுத்து தூங்குங்க. தூங்கி எழுந்தா சரி ஆகிடும்.” என்றவள், தன்னிடம் இருந்த தலை வலி தைலத்தை எடுத்து அவனின் நெற்றியில் இதமாய்த் தேய்த்து விட்டாள்.
ரிஷி சிறிது நேரத்தில் அயர்ந்து உறங்கி விட்டான். ஆனால் சாதனாவால் தான் தூங்க முடியவில்லை. தன்னால் தானே அவன் குடித்து உடம்பை கெடுத்துக் கொள்கிறான் என நினைத்து வேதனை பட்டபடி இருந்தாள்.
மறுநாள் காலை எழுந்த ரிஷி மிகவும் சுறுசுறுப்பாக உணர்ந்தான். சாதனா வழக்கம் போல் உறங்கிக் கொண்டு இருந்தாள். ரிஷிக்கு மிகவும் பசித்தது.
“டாக்டர்… டாக்டர்…” என அவன் சாதனாவை எழுப்ப….
டாக்டர் என்று அழைத்ததும் சாதனா சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். எதுக்கு இப்ப டாக்டரை கூப்பிடுகிறான்? என்பது போல் பார்த்தாள்.
“என்ன டி இவ்வளவு சந்தேகமா பார்க்கிற? நீ டாக்டர் தான….”
“என்ன ஆச்சு ரிஷி? இன்னும் உடம்பு சரி ஆகலையா…” சாதனா கவலையுடன் கேட்க….
அவள் கவலையை உணர்ந்து “நான் ரொம்ப நல்லா இருக்கேன். இப்ப தலை வலி கூட இல்லை.” என்றான்.
“அப்ப ஏன் என்னை எழுப்புனீங்க?”
[the_ad id=”6605″]“ரொம்பப் பசிக்குது சாதனா… சீக்கிரம் கிளம்பு கீழ போய்ச் சாப்பிடலாம். பஃபே இருக்கும்.”
“ம்ம்… சரி.” என்றபடி சாதனா எழுந்து கொள்ள….
“நான் காபி சொல்றேன்.” என்றபடி ரிஷி இண்டர்காமை எடுக்க….
“நீங்க இப்ப காபி குடிக்க வேண்டாம். டீ குடிங்க.” என்றாள் சாதனா.
“ஓகே டாக்டர்.” என்றவன், தனக்கு டீயும் சாதனாவிற்கு க் காபியும் சொன்னான்.
காபி வருவதற்குள் சாதனா குளித்து முடித்தே வந்து விட்டாள். ரிஷி அவளிடம் காபியை கொடுத்து விட்டு அவனுக்கு டீ எடுத்துக்கொண்டான்.
டீ குடிக்கும் போது ரிஷி எதையோ நினைத்து தனக்குள் சிரித்துக்கொள்ள… எதுக்கு இந்தச் சிரிப்பு? என்பது போல் சாதனா அவனைப் பார்த்தாள்.
“நீ நிஜமாவே டாக்டர் தான். போலி டாக்டர் இல்லை…”
“நான் இப்ப உங்க கிட்ட சர்டிபிகேட் கேட்டேனா… எதுக்கு இப்ப இந்த ஆராய்ச்சி?”
“நேத்து எனக்கு ரொம்பக் கஷ்ட்டமா இருந்தது. உட்காரவும் முடியலை படுக்கவும் முடியலை… ஆனா பாரு, நீ ஒரே நிமிஷத்துல எல்லாத்தையும் வெளிய கொண்டு வந்துட்ட… தேங்க்ஸ்.”
“நான் வயிறு சரியாகத்தான் உங்களுக்கு எலுமிச்சை சாறு கொடுத்தேன். ஆனா நீங்க ஏற்கனவே மூக்கு முட்ட குடிச்சிருந்ததுனால…. மேல இதையும் குடிச்சதும், இடம் இல்லாம எல்லாம் வெளிய வந்துடுச்சு. இப்ப புரியுதா… நான் ஒன்னும் பண்ணலை….” சாதனா கடுப்புடன் சொல்ல…
“இதுக்குத் தான் நான் ரொம்பக் குடிக்க மாட்டேன். நேத்துக் கொஞ்சம் ஓவர் ஆகிடுச்சு?”
“கர்மம் அதுல அப்படி என்ன தான் இருக்கு?”
சாதனா எரிச்சலாகக் கேட்க… “வேணா நீயும் குடிச்சு பாரு.” என்றான் ரிஷி நக்கலாக.
“குடிக்க மாட்டேன்னு நினைக்கிறீங்களா… இன்னைக்கு நைட் நானும் தண்ணி அடிக்கத்தான் போறேன். அப்படி அதுல என்ன தான் இருக்குன்னு பார்த்திடலாம்.”
“ஓ… நீ இப்படிச் சொன்னா…. நான் உடனே வேண்டாம், நானும் குடிக்க மாட்டேன்னு சொல்வேன்னு நினைச்சியா…. அதுதான் இல்லை. நீ இன்னைக்குக் குடிக்கிற… அப்பத்தான் ஆம்பளைங்க அதை எப்படிக் கஷ்ட்டப்பட்டுக் குடிக்கிறாங்கன்னு உனக்குத் தெரியும்.”
ரிஷி சொன்னதைக் கேட்ட சாதனா தலையிலேயே அடித்துக்கொண்டாள். “உங்களை எல்லாம் திருத்தவே முடியாது. எப்படியும் போய்த் தொலைங்க.”
“தேங்க்ஸ்… நான் போய்க் குளிச்சிட்டு வரேன்.” என ரிஷி எழுந்து செல்ல… செல்லும் அவனையே முறைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு அவன் சென்றதும் சிரிப்பு வந்து விட்டது.
ஹப்பா சாமி ! நல்ல மூட்ல இருக்கான் என அவள் சந்தோஷப்பட்ட வேளையில்… அவள் நிம்மதியை கெடுக்க வென்றே ரிஷியின் செல் ஒலித்தது.
சாதாரணமாக எல்லா அழைப்பும் ரிஷிக்கு வராது. அவனின் உதவியாளன் உதய்க்கு தான் செல்லும். முக்கியமான அழைப்புகள் மட்டும் தான் இவனுக்கு வரும். வீட்டினர் யாரும் அழைக்கிறார்களோ என்ற எண்ணத்தில் சாதனா சென்று அவன் செல்லை எடுத்து பார்க்க… அழைப்பு நேகாவிடம் இருந்து.
ஐயோ ! இவளா எதுக்குக் கூப்பிடுறான்னு தெரியலையே என மனதிற்குள் புலம்பியபடி சாதனா கிளம்ப ஆரம்பித்தாள். சில நொடிகளில் செல்லும் அடிப்பது நின்று விட… ஆனால் எப்படியும் ரிஷி வந்ததும் செல்லை எடுத்து பார்ப்பான் என்று தெரியும்.
ரிஷி குளியல் அறையில் இருந்து வெளியே வர… சாதனா அப்போது தலை வாரிக்கொண்டு இருந்தாள். அவன் அடைகளை எடுத்து அணிய துவங்கிய நேரம் மீண்டும் செல் அழைத்தது.
“ஹலோ…”
“….”
“ஓ அப்படியா குளிச்சிட்டு இருந்தேன்.” என்றவன், திரும்பி சாதனாவை ஒரு பார்வை பார்த்துக்கொண்டான். கண்ணாடியின் முன்பு நின்றதால் சாதனாவிற்கு அவன் பார்த்தது தெரியும்.
“இப்பவா.. என்ன பேசணும்?”
“சரி வா…” என்றவன் தொடர்பை துண்டித்தான்.
“ஒரு பத்து நிமிஷம் கழிச்சு சாப்பிட போகலாம்.” என்றவன், வேறு எதுவும் சொல்லவில்லை.
நேகா தான் வரப்போகிறாள் என அவளுக்குப் புரிந்தது. சாதனா கருப்பு வண்ண சுடிதாரில் சிவப்பு வண்ண நூலால் வேலைப்பாடு அமைந்த சிந்தடிக் சுடிதார் அணிந்து, எளிமையான அலங்காரம் செய்து தயாராக இருந்தாள். அவள் உயரத்திற்கு அந்த உடை பொருத்தமாக இருந்தது.
ரிஷி வேகமாகக் கிளம்ப ஆரம்பித்தான். அப்போது அறையின் அழைப்பு மணி ஒலிக்க…..
“நீ போய்க் கதவை திற சாதனா நான் இப்ப வரேன்.” என்றான் ரிஷி.
கதவை திறந்து வெளியே நின்ற நேகாவை வரவேற்று உள்ளே இருந்த வரவேற்பு அறையில் அமர வைத்த சாதனா, அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
நேகா கையில்லாத வெஸ்டர்ன் டாப்பும் த்ரீ போர்த் ஜீன்ஸும் அணிந்திருந்தாள். கால் மேல் கால் போட்டு அலட்சியமாக அமர்ந்திருந்தாள்.
ரிஷி அறைக்குள் இருந்து வந்தவன், நேகாவை பார்த்து “ஹாய்…” என்றபடி சாதனாவின் அருகே அமர்ந்தான். அதைப் பார்த்து நேகாவின் முகம் மாறியது.
[the_ad id=”6605″]“ஹாய் ரிஷி.”
“என்ன சாப்பிடுற? நீ ஆப்பிள் ஜூஸ் தான குடிப்ப… அதே சொல்லட்டுமா…” ரிஷி நேகாவை பார்த்து கேட்க… இப்போது நேகவின் முகம் பளிரென்று ஒளிர… சாதனாவின் முகம் இருண்டது.
“ஓகே சொல்லுங்க.” என்றாள் நேகா உல்லாசமாக…. தனக்குப் பிடித்ததை ரிஷி இன்னும் நினைவு வைத்துச் சொல்லியதில் மகிழ்ந்து போய் விட்டாள்.
ரிஷி இண்டர்காமில் அழைத்து ஆப்பிள் ஜூஸ் கொண்டு வர சொல்லிவிட்டு வைத்தான்.
“போன்ல எதோ பேசனும்னு சொன்னியே என்ன?”
“நானும் இங்க தான் ஸ்டே பண்ணி இருக்கேன். இன்னைக்கு இவ்னிங் மும்பை போறேன். நேத்து உங்ககிட்ட ப்ரீயா பேச முடியலை… அதுதான் பேசிட்டு போகலாம்னு வந்தேன்.”
சாதனா சட்டென்று எழுந்து விட்டாள். “நீங்க பேசிட்டு வாங்க ரிஷி. நான் கீழ டைனிங் ஹால்ல இருக்கேன்.” என்றவள், அவன் பதிலுக்காகக் காத்திருக்காமல்… அவள் செல்லை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே சென்றும் விட்டாள்.
அவள் செல்வதையே ரிஷி பார்த்திருக்க…. “உங்க மனைவி ரொம்பச் சிம்பிள்ளா இருக்காங்க இல்ல…” என்றாள் நேகா…
“அவ அவளோட ப்ரோபெஷனுக்கு ஏத்த மாதிரி இருக்கா… டாக்டர் ஆச்சே ஆளை பார்க்கும் போதே ஒரு மரியாதை வரனும். இவங்க கண்டிப்பா நம்மைச் சரி பண்ணுவாங்கன்னு நம்பிக்கை வரணும். அதனால அவ எப்பவுமே ரொம்பக் காடியா டிரஸ் பண்ண மாட்டா…”
சாதனா மேல் ரிஷிக்கு எந்த அளவு பிடித்தம் என்பதை அறியவே நேகா அவ்வாறு கேட்டது. ஆனால் ரிஷி அவளை இம்மியளவும் விட்டுக்கொடுக்காமல் பேசவும் ஏமாற்றமாக உணர்ந்தாள். வேறு விதமாக முயன்று பார்ப்போம் என்று நினைத்தாள்.
“ரிஷி, நீங்க எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுவீங்கன்னு நினைச்சேன். ஆனா நீங்க என்னை விட்டு வேற ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிபீங்கன்னு நான் நினைக்கவே இல்லை….”
“ஓ….. நீ வேண்டாம்னு போன பிறகும் நான் உன்னையே சுத்தி வருவேன்னு நினைச்சியா…” ரிஷி காட்டமாகக் கேட்க…
“நானா அப்படிச் சொல்லலை ரிஷி. என்னோட அம்மாதான் அப்படிச் சொல்ல சொன்னாங்க. உங்களுக்கே தெரியும் நான் இந்த அளவு வளர என் அம்மாதான் காரணம். என்னால அவங்க பேச்சை மீற முடியலை…” நேகா ரொம்பவும் உருக்கமாகப் பேச….
“நாம பழகின மரியாதைக்காக, நான் உன்கிட்ட உட்கார்ந்து பேசிட்டு இருக்கேன். ஆனா நீ முடிஞ்சு போன விஷயத்தைப் பேசி என் டைமை வேஸ்ட் பண்ற.”
“நீ என்கிட்டே இதைப் பத்தி தான் பேச வந்தேன்னா… நீ இப்ப கிளம்பலாம். எனக்காகச் சாதனா வெயிட் பண்ணுவா…” என்றபடி ரிஷி எழுந்துகொள்ள… வேறு வழியில்லாமல் நேகாவும் எழுந்து கொண்டாள்.
“கூப்பிடாமலே என்னோட கல்யாண வரவேற்புக்கு வந்ததுக்குத் தேங்க்ஸ்.”
[the_ad id=”6605″]“ஓகே ரிஷி, பாய்.” என்றபடி நேகா அங்கிருந்து விரைந்து சென்று விட… ரிஷி கதவை அறைந்து சாற்றியவன், அங்கிருந்த சோபாவில் பொத்தென்று அமர்ந்தான்.
ஆளுக்கு ஒருபக்கம் சாகடிக்கிறாங்க. யாரு இப்ப இவகிட்ட விளக்கம் கேட்டா… எல்லாம் தன்னைப் பத்தி மட்டும் யோசிக்கிற சுயநலம் என மனதிற்குள் புலம்பியபடி இருந்தான்.
அப்போது கதவை திறந்து கொண்டு ராஜ்மோகன் உள்ளே வந்தார்.
“டேய், நீ இன்னும் திருந்தலையா…. அவளை உன் ரூம் வரை வர விட்டிருக்க… அப்படி அவளோட உனக்கு என்ன பேச்சு?”
ரிஷி ஏற்கனவே எரிச்சலில் இருந்தான். இப்போது அவன் தந்தை பேசியது வேறு மேலும் எரிச்சலை கிளப்ப….
“எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியுமா…” என்றான் வரவழைத்த அலட்சியத்துடன்.
இப்படிப் பேசுபவனிடம் மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் ராஜ்மோகன் திகைத்துப் போய்ப் பார்க்க…
“என் விருப்பத்தை மதிக்காம உங்க இஷ்ட்டத்துக்குக் கல்யாணம் பண்ணி வச்சீங்க இல்லை… இப்ப அவஸ்த்தை படுங்க.” என்றான் திமிராக.
“சாதனா எங்க டா?”
“அவ கீழ போய் இருக்கா…”
“ஓ இவளோட தனியா பேச அவளை அனுப்பிட்டியா…”
“நான் அனுப்பலை அவளாத்தான் போனா…”
“ரிஷி, நீ உன் இஷ்ட்டத்துக்கு நடந்துக்க முடியாது. இப்ப உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. சாதனாவிற்கு உன்னைக் கேள்வி கேட்க உரிமை இருக்கு.”
“அவ கேட்கட்டும் நான் பதில் சொல்லிக்கிறேன். சாதனா தனியா இருப்பா… இப்ப நான் போகணும்.” என்றபடி ரிஷி எழுந்து வெளியே செல்ல… ராஜ்மோகனும் அவனுடன் வெளியே வந்தார்.
சாதனா தன்னைக் கேள்வி கேட்டால் பதில் சொல்லிக் கொள்கிறேன் என்று ரிஷி எளிதாகச் சொல்லிவிட்டாலும். இப்போது சாதனா கோபமாக இருப்பாளோ…. அவள் வேறு என்ன கேட்பாளோ என நினைத்தபடி ரிஷி செல்ல… ஆனால் சாதனா அவனை எதுவுமே கேட்கவில்லை…
அவனுக்காக உணவகத்தில் காத்திருந்தவள், அவனிடம் வெகு சாதாரணமாக நடந்து கொண்டாள்.
“சாரி சாதனா லேட் ஆகிடுச்சா…”
“இல்லை நான் எதிர்ப்பார்த்ததை விடச் சீக்கிரமா வந்துடீங்க.”
“சாப்பிட போவோமா…”
“ம்ம்…” என்றபடி சாதனா எழுந்து ரிஷியுடன் சென்றாள்.
திருமணம் தான் ரிஷியின் விருப்பம் இல்லாமல் நடந்தது. இனி மேல் வாழும் வாழ்க்கையாவது அவனின் விருப்பம் போல் இருக்கட்டும். அவனை எதற்கும் வற்புறுத்த போவதில்லை… அவன் தன்னை முழு மனதுடன் மனைவியாக ஏற்றுக் கொள்ளும்வரை காத்திருப்பது.
சாதனா நேற்று இரவெல்லாம் யோசித்து எடுத்து முடிவு இதுதான். அதனால்தான் அவள் நேகா வந்த போது கூடப் பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை…
ஒருவர் மேல் நமது விருப்பத்தைத் திணிக்கும் போது தான், அவர்களுக்கு நம் மேல் வெறுப்பு தோன்றும். ஏற்கனவே எல்லோரும் சேர்ந்து ரிஷிக்கு ரொம்ப அழுத்தம் கொடுத்ததால் தான் அவன் திமிறிக்கொண்டு செல்கிறான். கொஞ்ச நாட்கள் அவனை ப்ரீயாக விடுவோம் என நினைத்தாள்.
இதையெல்லாம் விட அவளுக்கு ரிஷி மீது நிறைய நம்பிக்கை இருந்தது. மனைவி என்று ஒருத்தி இருக்கும் போது.. ரிஷி வேறு பெண்ணுடன் தவறாக நடந்து கொள்ளமாட்டான் என உறுதியாக நம்பினாள். ரிஷி அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவானா…
[the_ad id=”6605″]ரிஷி வெளியே சென்று இருந்ததால்… சாதனா மட்டும் மதிய உணவு அருந்த தனியாக சென்றுவிட்டுத் திரும்பி வந்து கொண்டு இருந்தாள். அப்போது அவள் ஏறிய மின் தூக்கியில் நேகாவும் வந்து ஏறினாள்.
சாதனா அவளைப்பார்த்து புன்னகைக்க… நேகா முகத்தை திருப்பிக் கொண்டாள். சாதனாவும் தோளை குலுக்கி விட்டு பேசாமல் இருந்தாள். மூன்றாவது தளம் வந்ததும், சாதனா வெளியே செல்ல முயல…
“ரிஷியை என்கிட்டே இருந்து பிரிச்சிட்ட இல்லை… ரொம்ப சந்தோஷப்படாத… நான் நினைச்சா எப்ப வேணா ரிஷியை திரும்ப என் பக்கம் இழுக்க முடியும்.” நேகா சவால் விட….
“அப்படியா முயற்சி செஞ்சு பாரு… ஆல் தி பெஸ்ட்.” அவளை விட சாதனா அலட்சியமாக பதில் கொடுக்க…. நேகாவிற்கு ஆத்திரமாக வந்தது.
“என்னால முடியாதுன்னு நினைக்கிறியா…”
“ஏன் முடியாம? உன்னால முடியும். ஆனா ரிஷிகிட்ட முடியாது.”
“நீ மட்டும் நடுவுல வரலைன்னா… ரிஷி என்னைத்தான் கல்யாணம் பண்ணி இருப்பாங்க.”
“அப்படி உன் கனவுல வேணா நடந்திருக்கும். நிஜத்தில நடக்க நான் விட்டிருக்க மாட்டேன்.” திடிரென்று வேறு ஒரு குரல் கேட்கவும் இருவரும் திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தனர்.