சூரியா சொன்னபடி சந்தியாவை கவுன்சிலுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு பட்டயக்கணக்காளர்(CHARTERED ACCOUNTANT) படிப்புக்கு பதிவு செய்துவிட்டு தான் வந்தான். அன்று இருவரும் அலுவலகத்துக்கு தாமதமாகவே வந்து சேர அதுவே அன்று முழுவதும் அலுவலகத்தில் பேச்சுப்பொருளாகி விட்டது.
சூரியா அதை கண்டுகொள்ளவே இல்லை. சந்தியாவின் காதுகளுக்கு இந்த வார்த்தை வந்து சேரவே இல்லை. அவளின் சக பணியாளர்கள் நேரடியாக அவளிடம் பேசும் போது நன்றாக தான் பேசினர். அவள் கட்டளையிட்ட வேலைகளை எப்போதும் போலவே செய்து கொடுக்கவே தனக்கும் சூரியாவுக்குமான நட்பை அவர்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என்பதை அவள் பெரிதுபடுத்தி பார்க்கவில்லை.
சூரியாவும் அவளிடம் தனது காதில் விழுந்த எந்த விஷயத்தையும் அவளிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. அலுவலகத்தின் பெண் ஊழியர்கள் பேசும் கிசுகிசுக்கள் முதலில் சென்றடைந்தது ஆரியாவின் காதுகளை தான். ஊழியர்கள் கஃபடேரியாவில் பேசிக் கொண்டிருந்ததை அவன் அங்கே கஃபடேரியாவின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய சென்ற போது கேட்டுவிட்டான்.
கேட்டவன் அடுத்து சென்ற இடம் அண்ணனின் அலுலக அறை தான். சூரியா யாருடனோ பேசிக் கொண்டிருந்தவன் வேகமாக அறையினுள் நுழைந்த தம்பியை நாற்காலியில் அமருமாறு சைகை காட்ட அவனும் நாற்காலியில் அமர்ந்துவிட்டு சூரியா பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தான்.
அவன் பேசி முடித்து போனை மேஜையின் மீது வைத்தவன் “என்னடா இவ்ளோ வேகமா வந்திருக்க? எனி பிராப்ளம்?” என்று கேட்டுவிட்டு ஆரியாவை நோக்க
அவனோ “அண்ணா! ஆபிஸ்ல ஹாட் டாபிக் என்ன தெரியுமா? உனக்கும் தியாக்கும் ஏதோ ரிலேசன்ஷிப்னு லேடி ஸ்டாஃப்ஸ்லாம் பேசிக்கிறாங்க. வாட் இஸ் திஸ்?” என்று கேட்டுவிட்டு மேஜையின் மீது இரு கைகளையும் கோர்த்தபடி அண்ணனின் பதிலுக்கு காத்திருக்க
சூரியா நாற்காலியில் சவுகரியமாக சாய்ந்து கொண்டபடி “நான் உன் கிட்ட இந்த த்ரீ வீக்ஸ்ல அடிக்கடி சொல்லிட்டேன், பிரவுனியை தியானு கூப்பிடாதேனு. நீ இன்னும் கேக்கிறதா இல்லையே” என்றபடி தம்பியை கூரியவிழிகளால் கூறு போட்டுவிட்டு நாற்காலியில் அமர பிடிக்காதவனாய் எழுந்து நின்று கொண்டான்.
[the_ad id=”6605″]ஆரியாவோ தான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறோம்; இவன் என்ன பேசுகிறான் என்று அங்கலாய்க்க அவன் பொறுமையாக தம்பியை திரும்பி பார்த்தவன் “லிசன் நீ இப்பிடி அவளை வித்தியாசமா பேர் வச்சு கூப்பிட ஆரம்பிச்சா எல்லாரும் என்ன நினைப்பாங்க?” என்று கேட்க
ஆரியா “டேய் அண்ணா! நான் தியானு கூப்பிட்டா எல்லாரும் தப்பா நினைச்சுப்பாங்க.. ஆனா நீ அவளை ஆபிஸுக்கு கூட்டிட்டு வர்றது, ஈவினிங் கிளாஸ்ல டிராப் பண்ணுறது இதைல்லாம் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க! அதானே சொல்ல வர்ற? நீ ரொம்ப தெளிவுடா” என்று ஒரு மாதிரி குரலில் கூற
சூரியா “ஆரியா அவ சென்னைக்கு புதுசுடா! அவளால தனியா சிட்டிக்குள்ள மேனேஜ் பண்ணிக்க முடியும்னு அவளுக்கே இன்னும் நம்பிக்கை வரலைடா. அதனால தான் நானே ஆபிசுக்கு அழைச்சிட்டு வர்றேன், கிளாஸுக்கும் கூட்டிட்டு போய் விடுறேன். பட் அதை தப்பா நினைச்சு இவங்க காசிப் பேசுனா நான் என்ன பண்ணுறது?” என்று பதிலுக்கு அவனை கேட்டுவிட்டு இதோடு இந்த உரையாடல் முடிந்தது என்ற ரீதியில் மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்து கம்ப்யூட்டரின் திரையில் பார்வையை பதித்து வேலையை தொடர்ந்தான்.
ஆரியாவும் இதற்கு மேல் இவனிடம் வாதிட இயலாது என்ற முடிவுடன் எழும்பியவன் வெளியே செல்ல திரும்ப அங்கே அறைவாயிலில் நின்ற சந்தியாவை கண்டு திகைத்தான்.
“தியா” என்று அவன் சற்று உரக்கவே சொல்லிவிட சூரியா அவனது கண்களை கம்ப்யூட்டர் திரையிலிருந்து விலக்கிவிட்டு அங்கே நின்ற சந்தியாவிடம் “கம் இன் பிரவுனி! நான் சொன்ன டாக்குமெண்ட்ஸ் கம்ப்ளீட் ஆயிடுச்சா?” என்று புன்னகையுடன் கேட்க அவளோ அண்ணன் தம்பியின் உரையாடலை முழுவதுமாய் கேட்டு சிலையாய் சமைந்தபடி நின்றிருந்தாள்.
பின்னர் சுதாரித்தவள் “டாக்குமெண்ட் ரெடி ஆயிடுச்சு சார். உங்களுக்கு மெயில் பண்ணிட்டேன். இது ஹார்ட் காப்பி” என்றபடி உள்ளே வரவும் ஆரியா அவளது முகம் வாடிப் போனதை கண்டுகொண்டான்.
சூரியாவும் அவள் கையிலிருந்த கோப்பை வாங்கியடி “என்னாச்சு பிரவுனி? ஏன் உன்னோட முகம் ஒரு மாதிரியா இருக்கு?” என்று அவளிடம் கேட்டபடியே அவளை நோக்க
சந்தியா “நீங்க ரெண்டு பேரும் பேசுனதை நான் கேட்டுட்டேன் சார். இப்பிடிலாம் பேசிப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் உங்க கூட கார்ல வந்திருக்கவே மாட்டேன்” என்று சங்கடத்துடன் கூறிவிட்டு “இனிமே நான் தனியா போய் பழகிக்கிறேன் சார்,. எப்போவுமே நீங்க என்னோட பாடிகார்ட் மாதிரி என் கூடவே இருக்க முடியாது இல்லையா?” என்று நிதானமான அதே சமயம் தெளிவான குரலில் கூறிவிட்டு நிற்க
சூரியா “நீ எப்போ மத்தவங்களை பத்தி கவலைப்பட ஆரம்பிச்ச? நீ முன்ன மாதிரி இல்ல… ரொம்ப மாறிட்ட பிரவுனி” என்று இறுக்கமான குரலில் கூற
சந்தியா “மூனு வருசத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்கள் வேற; இது வேற. அங்கே எல்லாரும் நம்மளை நம்புனாங்க. நம்ம ஃப்ரெண்ட்ஷிப்பை மதிச்சாங்க. இங்கே நீங்க என்ன தான் ஃப்ரெண்டுனு சொன்னாலும் ஆபிஸை பொறுத்தவரைக்கும் நான் உன்னோட எம்ப்ளாயி மட்டும் தான். அதை தாண்டி நீங்க எனக்கு ஃபேவர் பண்ணுனா பார்க்கிறவங்க தப்பா தான் நினைப்பாங்க” என்று பொறுமையுடன் விளக்கிவிட்டு அவன் பதிலை எதிர்பாராது அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்றதும் ஆரியாவை முறைத்தவன் “என்னடா ஜீன்ஸ் போட்ட நாரதா! வந்த வேலை முடிஞ்சுதுல்ல, கிளம்பு” என்று கூற
அவன் “சில் ப்ரோ! டென்சன் ஆகாதேடா..சாருக்கு ஏன் இப்போ இவ்ளோ கோவம் வருது?” என்று கேலி செய்துவிட்டு வெளியேறினான். அவன் சென்றதும் சூரியா அவனது அன்றாட அலுவல்களை கவனிக்க தொடங்கிவிட சந்தியாவின் பேச்சை கிட்டத்தட்ட மறந்தே போனான்.
ஆனால் அன்று மாலை சந்தியா அலுவலகம் முடிந்து அவளது வகுப்புக்கு கிளம்பியவள் வெளியே வந்து நிற்க சூரியா வழக்கம் போல “பிரவுனி கொஞ்சம் வெயிட் பண்ணு., நான் காரை எடுத்துட்டு வர்றேன்” என்று கூற
சந்தியா சுற்றுமுற்றும் பார்வையை அலையவிட்டபடி அவசரமாக “இல்ல சார்! நானே போய்க்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல ஆட்டோ வந்துடும்” என்று மறுத்தாள்.
சூரியா திகைத்தவனாக “பிரவுனி சீரியஸாவா சொல்லுற? யாரோ நாலு பேர் நேரம் போகாம ஏதோ சொன்னாங்கன்னு நீ என் கூட வராம என்னை அவாய்ட் பண்ணுறியா?” என்று கேட்க
சந்தியாவோ இவன் ஏன் நிலமையை புரிந்து கொள்ள மறுக்கிறான் என்ற எரிச்சலில் “ஆமா! அவாய்ட் பண்ணுறேன்னே வச்சுக்கோ. நீ என்னோட பாஸ். அந்த லிமிட்ல மட்டும் நீ இருந்திருந்தா இன்னைக்கு அவங்கலாம் இப்பிடி பேசிருப்பாங்களா? பிளீஸ்! நான் அமைதியான மனநிலையோட இருந்தா மட்டும் தான் என்னால படிப்புல கான்சென்ட்ரேட் பண்ண முடியும்..என்னை நீ உன்னோட ஸ்டாஃபா மட்டும் நினைச்சாலே போதும்” என்று மனதில் இருப்பதை கொட்டி முடிக்கவும் ஆட்டோ வரவும் சரியாக இருந்தது.
[the_ad id=”6605″]அவனிடம் வேறு எதுவும் பேசாமல் அவள் ஆட்டோவில் ஏறிச் சென்றுவிட சூரியாவுக்கு அவளை தடுத்து நிறுத்த முடியாமல் போன தனது கையாலாகாத்தனத்தின் மீது கோபம் வந்தது. அந்த கோபம் முழுவதையும் காரின் ஸ்டீயரிங்வீலின் மீது காட்ட கார் சீறி பாய்ந்தது.
*********
அந்த சம்பவத்துக்கு பின் சூரியா சந்தியாவிடம் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் பேசிக் கொள்வான். அதை தாண்டி ஒரு வார்த்தை அவன் வாயிலிருந்து உதிரவில்லை. சந்தியாவுக்கு இது கஷ்டமாக இருந்தாலும் அவனது இந்த மாற்றம் நன்மைக்கே என்று மனதை தேற்றிக் கொண்டபடி வேலையிலும் படிப்பிலும் மட்டும் கவனத்தை வைத்தாள்.
அதே நேரம் இருவரின் மாற்றமும் அலுவலகத்திலும் அனைவரின் கண்ணையும் உறுத்தாமல் இல்லை. அதனால் இனிமேல் அவர்களைப் பற்றி இரகசியமாக பேசி சிரிக்கும் வாய்ப்பு பறிபோன துக்கம் தொண்டையை அடைக்க அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தனர் சந்தியாவின் சக ஊழியர்கள். எனவே முன்பு போல அவர்கள் முதுக்குக்கு பின் ஆயிரம் பார்வைகள் துளைக்கும் உணர்வு சந்தியா, சூரியா இருவருக்குமே இல்லை.
ஆரியாவுமே அண்ணன் இவ்வாறு சந்தியாவிடம் முன்பு போல் பேசாமல் இருப்பதை கண்டுகொண்டவன் சந்தியாவிடம் அதைப் பற்றி கேட்க அவள் “எல்லாமே நல்லதுக்கு தான் ஆரியா சார்” என்று புன்னகையுடன் கடக்க முயல
அதைக் கேட்ட ஆரியா “பட் நீ ரொம்ப மாறிட்டேனு சொல்லி ஃபீல் பண்ணுறான்” என்று கூறவும் நின்றவள்
“மாற்றம்கிறது மனுசங்க ஜீன்ல பதிவான விஷயம் சார். ஆதிமனுசங்க மாறாமலே காட்டுவாசியா இருந்திருந்தா இன்னைக்கு நாம இவ்ளோ முன்னேறி இருக்க மாட்டோம்” என்று அர்த்தபுஷ்டியுடன் உரைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
இருவரின் மனநிலையையும் தெரிந்து கொண்ட ஒருவன் ஆரியா மட்டுமே. அவர்களிடையே இருந்த நட்பும் அதன் மேல் மெல்லிய இழையாய் ஓடிய பெயரிடப்படாத நேசமும் அவனுக்கு புரிந்த அளவுக்கு கூட சம்பந்தப்பட்ட இருவருக்கும் புரிந்ததா என்று கேட்டால் ஆரியா இல்லையென்றே கூறுவான்.
அதனால் அவர்கள் போக்கிலேயே போய் சந்தியாவுக்கும் சூரியாவுக்கும் புரியவைத்துவிடலாம் என்று எண்ணியிருந்தான் அவன். ஆனால் அதற்கு முன் இந்த அலுவலகப்பிரச்சனையால் அவர்களிடம் சிறு விலகல் நேர, இந்த பிணக்கு தீரும் வரை காத்திருக்க தீர்மானித்தான் அவன்.
********