படித்தவர்களோ, பாமரர்களோ நிறைய பேருக்கு உடல் நலத்தின் பேரில் சரியான அக்கறையும், அதை சரியாக பேணுவதற்கான அவசியமும் புரிவது இல்லை.
ஐம்பது வயதை கடந்தால், வருடத்திற்கு ஒரு முறையேனும், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அத்தியாவசியம்.
உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டில் பிரச்சனை எழும் போதும், உடல் ஏதாவது ஒரு வகையில், அதை பற்றிய குறிப்பை நமக்கு கொடுத்து கொண்டே தான் இருக்கும்.
ஜெயவர்மர் கடந்த இரண்டு வருடங்களாக, அவரின் உடல் கொடுத்த குறிப்புகளை புரிந்து கொள்ளாமல், அதன் நிலையை அறிய முற்படாமல், அதை பேணிக்காக்கா தவறியதால் தான் இன்று இந்த நிலைமை அவருக்கு.
இதயத்திற்கு இரத்ததை எடுத்து செல்லும், முக்கியமான “கரோனரி” என்னும் இரத்த குழாயில் அடைப்பு அவருக்கு.
நாளுக்கு நாள் சோர்ந்து கொண்டிருந்த உடலை அவர் அலட்சியப்படுத்தி இருக்க, அதோடு மகனை பற்றி, கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட தீவிரமான மன உளைச்சலும், அவரை இந்த நிலைக்கு தள்ளி இருந்தன.
உடலின் இன்னொரு பாகமான தொடையில் இருந்து வேறு ஒரு இரத்த நாளத்தை எடுத்து, அதை இதயத்தில் அடைப்பு ஏற்பட்ட நாளத்திற்கு பதிலாக இணைத்து, அதை செயல்பட வைப்பது தான், ஜெயவர்மருக்கான சிகிச்சையாக மருத்துவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
தந்தைக்காக திருமணம் செய்து கொண்டவன், அவரிடம் கொஞ்ச நேரம் உரையாடிவிட்டு, உமையாள் அவரின் அருகில் இருக்க, பாலாவுடன் நேராக, அவரின் மருத்துவரை தான் காண சென்றான்.
அவர், ஜெயவரமருக்கு செய்ய இருக்கும் சிகிச்சையை பற்றி விளக்கிவிட்டு, அதன் சாதக பாதகங்களையும் விளங்கி சொல்ல, அந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்பு கொள்வதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை அவனுக்கு.
மருத்துவரை பார்த்துவிட்டு சோர்ந்து போய் கிருஷ்ணா வெளியே வர, பாலா அவனுடனே அமைதியாய் வந்தான்.
ஜெயவர்மரை செவிலியர்கள் அறுவை சிகிச்சைக்கு தயார் செய்து கொண்டு இருக்க, வெளியே காத்திருந்த அனைவருமே, சற்று முன்பு நடந்து முடிந்த திருமணத்தில் திகைத்து போய் தான் இருந்தனர்.
கிருஷ்ணா சோர்ந்து போய் இருந்தாலும், யாருடைய ஆறுதலையும் ஏற்க விரும்பாமல், அந்த வாய்ப்பை கூட யாருக்கும் கொடுக்காமல், எவருமே நெருங்க முடியாத அளவுக்கு இறுகி போய் நின்றிருந்தான்.
கிருஷ்ணாவுக்கு நடந்ததை எப்படி எடுத்துக்கொள்வது என்று இன்னுமே புரியாத நிலை தான்.
தந்தையின் பிடிவாதத்தை இவனால் புரிந்து கொள்ள முடிந்தது. “எங்கே தன் மகன், இப்பொழுது விட்டால், கல்யாணமே செய்து கொள்ள மாட்டானோ, இப்படியே தனியே நின்று விடுவானோ” என்ற பயம் அவரை உந்தி இருக்கிறது.
தந்தையின் உடல்நிலை ஒரு புறம் மிரட்ட, ஆசையாய் காதல் சொல்லி, மனைவியாய் வரிக்க நினைத்தவளுக்கு, அவளின் சம்மதம் கூட கேட்காமல் தாலி கட்ட வேண்டிய சூழ்நிலையை அவன் அறவே வெறுத்தான்.
தனக்கு எதிரில் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு இருந்த உமையாளை பார்க்க, அவளோ இன்னதென்று கூற முடியாத, உணர்வுகள் துடைத்த முகபாவத்துடன் காட்சி அளித்தாள்.
அவளின் கழுத்தில் சற்று முன்பு கிருஷ்ணா அணிவித்த மங்களநாண் உரிமையுடன் உறவாடி, அவள் இனி கிருஷ்ணாவின் உமையாள் என்று அறிவித்து கொண்டு இருந்தது.
இத்தனை கலவரத்திற்கிடையே நடந்த போதிலும், திருமணம் நடந்த விதத்தில் தான் அவனுக்கு வருத்தமே ஒழிய, உமையாள் அவனுக்கு உடையவள் ஆனதில் கிருஷ்ணாவின் மனதில் வார்த்தைகளில் வர்ணிக்க முடியா நிம்மதி தான்.
தனது ஒரே உறவான தந்தையின் உடல்நிலை அவனை மிரட்ட, உமையாள் அவனுக்கு ஆறுதல் அளிக்கவில்லை என்றாலும், அவள் அவனின் அருகில் இருப்பதே அவனுக்கு ஒரு பலத்தை கொடுத்தது.
ஏனோ இந்த நேரத்தை, அதன் கனத்தை, அவளின் துணை இல்லாமல், தன்னால் தனியே கடக்க முடியாதோ என்ற எண்ணம் அவனுக்கு.
நடந்து முடிந்த திருமணம் அப்பட்டமாய் இவனின், சுயநலம் தான். ஆனால் அதை தவிர்க்க தான் முடியவில்லை இவனால்.
உமையாள் இன்னும் நடந்த நிகழ்வுகளின் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பது புரிந்து தான் இருந்தது கிருஷ்ணாவுக்கு.
முதலில் சரண்யா அங்கு இருக்கும் போது, உமையாளை திருமணம் செய்ய சொல்லி, தன் தந்தை சுட்டி காட்டியதே இவனுக்கு அதிர்ச்சி தான்.
சரண்யா இவனை நெருங்க மறைமுகமாக ஆதரவு தெரிவித்தவர் தானே அவர். இப்பொழுது உமையாளை மணக்க சொல்லவும் இவனுக்கு தான் ஒன்றும் புரியவும் இல்லை. அந்நேரத்தில் ஏன் என்று யோசிக்கவும் திராணி இருக்க வில்லை அவனுக்கு.
ஒரு வேளை உமையாள் மீதான தன் விருப்பத்தை அவர் அறிந்து இருக்க கூடுமா?????
அப்படி அறிந்து இருக்கும் பட்சத்தில், இப்படி அவசர அவசரமாக திருமணத்திற்கு நிர்பந்திக்க வேண்டிய அவசியம் தான் என்ன???
அவரின் உடல்நிலையின் தீவிரம் புரியாமல், கிருஷ்ணா முடிந்த வரை அவரை சமாளிக்க பார்க்க, அவரோ திருமணத்தை நடத்தியே தீர்வது என்று வெகு தீவிரமாக இருந்தார்.
இன்று மதியம் உமையாள் ஊருக்கு செல்வது பற்றி சொல்லிய செய்தியும், நேரம் காலம் பார்க்காமல் அந்நேரம் இவனுக்கு நியாபகம் வந்து தொலைத்தது.
தந்தையின் பிடிவாதம், அவரின் உடல்நிலை, எங்கே தன் ஒரே உறவான அவரை இழந்து விடுவோமோ என்ற பயம், உமையாளை தக்கவைத்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்பு என எல்லாம் சேர்ந்து ஆட்டிபடைத்தது அவனை.
மூளை ஒரு பக்கம், இது தவறு, இது தவறு என ஆர்பரிக்க, அவளிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று அறிவுறுத்த, மனம் இதை எல்லாம் சிந்திக்கும் போதே, கைகள் அவளுக்கு மங்களநாணை அணிவித்து இருந்தது.
அவளின் கண்ணோடு கண் நோக்கி உமையாளின் கழுத்தில் மங்களநாணை
கிருஷ்ணா அணிவிக்க, அவளின் முகத்திலோ முதலில் அதிர்ச்சியின் சாயல் தான்.
பின்பு அந்த கண்கள் விரிந்து நடப்பதை கிரகித்து கொள்ள முயல, அவளின் கண்களில் அந்நேரம் இருந்த பாவம், சத்தியமாக கிருஷ்ணாவால் பபுரிந்து கொள்ள முடியவில்லை.
மூன்றாவது முடிச்சிடும் நேரம், இவனின் கைகளில் பட்டு தெறித்தது, அவளின் வலது கண்ணில் இருந்து வந்த ஒரு துளி கண்ணீர்.
கிருஷ்ணா மொத்தமாய் உணர்ச்சிகளின் குவியலாய் இருக்க, அவளோ எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் நின்றிருந்தாள்.
ஒரு வேளை இவனை போலவே அவளும் உள்ளே உணர்வுகளின் பிடியில் இருந்தாலும், வெளியில் எந்த உணர்வையும் பிரதிபளிக்கமல் நிற்கிறாளோ, என்னவோ, உண்மையை இவனும் அறியான்.
அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளின் அதிர்ச்சியில் இருந்த கிருஷ்ணாவுக்கு அப்போது தான், தன் நண்பனின் நினைவே வந்தது.
வசீகரன்!!!!!
நடந்ததை என்னவென்று விளக்குவான் அவனுக்கு, வசீகரனுக்கு அவனின் பாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை, மற்ற அனைவரையும் விட கிருஷ்ணா நன்கு அறிவானே.
இப்படி, தன் வீட்டு பெண்ணுக்கு, நண்பனே ஆனாலும் அடுத்தவர், அதும் அவரின் அவசரத்திற்கு, அந்த பெண்ணின் விருப்பம் கூட கேட்காமல் தாலி கட்டினால், தன்னால் சும்மா இருக்க முடியுமா????
மனதின் கேள்விக்கு, தன் மனமே பகர்ந்த உண்மையாக பதிலில், வசீகரனுடனான தன் இத்தனை வருட நட்பை இழக்க வேண்டி வருமோ என்ற எண்ணம் வேறு கிருஷ்ணாவை பீடித்துக் கொண்டது.
தந்தையின் உடல்நிலை பற்றிய கவலை, கல்யாணம் நடந்த விதத்தில் ஏற்பட்ட தவிப்பு, நண்பனை பற்றிய எண்ணங்கள் என கிருஷ்ணா அலைகழிப்பின் மொத்த உருவமாக உள்ளே ஆர்ப்பரித்த போதிலும், வெளியே முகமும், உடலும் இறுகி போய் தான் நின்று கொண்டிருந்தான்.
பாலா ஒரு பக்கம் தனியாய் தவித்து கொண்டு இருந்தான். இதில் சம்பந்தப்பட்ட மூவருமே அவனுக்கு நெருங்கிய, முக்கியமானவர்கள்.
அவன் யாருக்கென்று பார்ப்பான், கிருஷ்ணா கடைசி வரை எப்படியாவது அவனின் அப்பாவை சமாளித்து விடுவான் என இவன் எதிர்பார்த்திருக்க, அவரின் தீவிரத்தில் இவனுமே வாயடைத்து தான் போகவேண்டி இருந்தது.
அன்று தான் பார்க்க, வசீகரன் வெட்கப்பட்டது, அவனின் காதல், இன்று உமையாள் கல்யாணத்தை பற்றி பேசியது என எல்லாம் அடுத்தடுத்து நினைவு வர, பாலா உமையாளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.
எல்லாரும் அவர் அவரின் சிந்தனையில் மூழ்கி இருக்க, ஜெயவர்மரை அறுவை சிகிச்சைக்கை அறைக்கு செல்ல வெளியே அழைத்து வர, கிருஷ்ணா அவரின் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டான்.
கிருஷ்ணாவின் திருமணத்திலே அவர் அகம் மகிழ்ந்து போய் இருக்க, இரத்த பசை இழந்து, வெளுத்து போய் இருந்தாலும்,அவரின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை, அப்படி ஒரு நிறைவு.
தன் மகனுக்கு அவன் விரும்பியதை கொடுத்த மகிழ்ச்சியில், அவனிடம் விடைபெற்றவர், உமையாளை பார்த்து தலையசைத்துவிட்டு அறுவை சிகிச்சையை தைரியமாகவே எதிர்கொள்ள சென்றார்.
மருதுவை அழைத்த கிருஷ்ணா, தங்களை தவிர மற்ற அனைவரையும் கிளம்ப சொல்ல சொல்ல, இவர்களின் உதவிக்கு என அவர் மட்டும் இருப்பதாக கூறிவிட்டார்.
அந்த புதியவரிடமும், கிருஷ்ணாவின் மாமா மற்றும் சரண்யாவிடமும், ஜெயவர்மர் அறுவை சிகிச்சை முடிந்ததும், அவர் கண் விழித்ததும் தகவல் தருவதாக சொல்லி, இங்கு அதிக பேர் இருக்க வேண்டாம் என்று பேசி அனுப்பி வைத்தார்.
அந்த வீட்டில் மருதுவின் நிலை என்ன என்று அறிந்த, அந்த மூவரும் மறுபேச்சு இல்லாமல் கிளம்பினர்.
கிளம்பும் முன் கிருஷ்ணாவின் மாமா அவனை பார்த்து தலையசைத்து விட்டு கிளம்ப, சரண்யவோ உமையாளை ஒரு ஆறுதல் பார்வையை வீசி விட்டு கிளம்பினாள்.
சரண்யாவின் பார்வையை உணரவோ, அதற்கு பதில் அளிக்கும் நிலமையிலோ உமையாள் இல்லை, அவள் இன்னுமே தீவிர சிந்தனையின் வசம் தான்.
அவர்கள் சென்றதும், கிருஷ்ணாவிடம் வந்த மருது, அவனிடம், தன்னுடன் வந்த அந்த இன்னொருவரை பற்றிய தகவலையும், ஜெயவர்மரை மருத்துவமனை அழைத்து வந்ததையும் கூறலானார்.
அந்த நபர், கிருஷ்ணாவுக்கு தூரத்து உறவு என்றும், ஜெயவர்மர் இரண்டு மாதத்திற்கு முன்பு அவரை அழைத்து, தங்களின் பரம்பரை திருமங்கல்யத்தை செய்து, தங்களின் குலதெய்வ கோவிலில் வைத்து ஒரு மண்டலம் (நாற்பத்தி எட்டு நாள்) பூஜை செய்ய சொல்லியதாகவும், அவர் இன்று பூஜை முடித்து, திருமாங்கல்யத்துடன் வந்ததாகவும் சொன்னார்.
இன்று கிருஷ்ணா அலுவலகத்திற்கு கிளம்பி போன பிறகு, அவனின் மாமாவும், அவரின் மகளும் ஜெயவர்மரை சந்திக்க வந்ததாகவும், அவர்களுடன் பேசி கொண்டு இருக்கும் போதே நெஞ்சு வலி வந்து, ஜெயவர்மர் மயக்கமானதாகவும் கூறினார் மருது.
அவரை பொருத்தவரை, கிருஷ்ணா ஜெயவர்மரை அலுவலகம் செல்லும் முன், தன் பொறுப்பில் விட்டு சென்று இருக்க, நடந்ததை அவனுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை இருப்பதால், அதை செவ்வேனே நிறைவேற்றினார் மனிதர்.
மருது சொல்லிய தகவல் அங்கு நின்றிருந்த மூவரின் செவிகளில் விழுந்தாலும், மூவருமே எந்த பதிலும் அளிக்காமல் இருக்க, அதற்கு பிறகு, கிருஷ்ணாவை தொந்தரவு செய்யாமல், ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டார் அந்த விசுவாசமான வேலையாள்.
இந்த நேரத்தில் தான் அரக்கப்பரக்க இவர்களை நோக்கி ஓடி வந்தான் வசீகரன்.
இவர்கள் அருகில் வந்தவன், நேராக கிருஷ்ணாவின் அருகில் சென்று, அவனை ஆதரவாக தோளோடு அணைத்தவன்,
“அப்பாக்கு ஒன்னும் ஆகாது கிருஷ்ணா, அவர் நல்ல படியா திரும்பி வருவாரு பாரு” என்று சொல்ல, கிருஷ்ணாவோ வெறுமையாக தலையை மட்டுமே அசைத்தான்.
தனக்கு ஆறுதல் கூறும் நண்பன், நடந்த திருமணம் தெரிந்தால் என்ன செய்வானோ என்ற கவலை மனதை ஒரு புறம் அரித்து கொண்டு இருக்க, கிருஷ்ணாவால் வசீகரனுக்கு வாய் வார்த்தைகளால் பதில் கூட அளிக்க முடியவில்லை.
தந்தையின் நிலையால் சோர்ந்து இருக்கும் நண்பனை என்ன நடந்தது என்று மேலும்
கேள்வி கேட்டு குடையாமல், ஒரு நல்ல நண்பனாக ஆறுதல் மட்டுமே அளித்தான் வசீகரன்.
ஜெயவர்மரின் உடல்நிலை பற்றிய மருத்துவரின் அறிக்கை, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அவருக்கு திடிரென்று என்ன ஆனது என்பதை எல்லாம் அறிய வேண்டி, பாலாவை நெருங்கிய வசீகரன், அவனிடம் நடந்ததையும், தற்போது அவரின் நிலையையும் கேட்டு கொண்டிருந்தான்.
பாலாவுடன் பேசியபடி, இருக்கையில் அமர்ந்து இருந்த உமையாளை பார்த்த வசீகரனின் பார்வை அப்படியே உறைந்து போக அவளை பார்த்தது பார்த்தப்படியே தான் இருந்தான்.
முதலில் அவளிடம் ஏதோ வித்தியாசமாக தெரிய அவளை உற்று நோக்கியவனின் கண்களில் அவளின் கழுத்தில், மஞ்சள் நிறத்தில் ஏதோ தெரிய, இன்னும் உற்று பார்க்க, அது திருமாங்கல்யம் என புரிய அவனுக்கு ஏக அதிர்ச்சி.
இது எப்படி, எப்போ நடந்தது என ஒன்றும் விளங்காமல் மூளை வேலை நிறுத்தம் செய்ய அவளையே பார்த்து கொண்டிருந்தான் வசீகரன்.
பாலாவோ வசீகரனின் பார்வை பாய்ந்த திசையை பார்த்ததும், அவனுக்கு தெரிந்துவிட்டது என்பது புரிய, அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் சட்டென அமைதியாகி விட்டான்.
பாலாவின் அமைதியை உணராத வசீகரன், உமையாளை நெருங்கி, தனது இடது கையால், அவளின் இட முழங்கையை பிடித்து முரட்டு தனமாக எழுப்ப, இவ்வளவு நேரம் தன் சிந்தனையில் மூழ்கி இருந்தவள் திட்டுகிட்டு அவனை பார்த்தாள்.
வசீகரனின் இழுப்புக்கு இசைந்து கொடுத்து, எழுந்த உமையாள், வசீகரனை பார்த்து மலங்க மலங்க விழிக்க, அந்நிலையிலும் அவளின் மேல் கோவத்தை காட்ட முடியாமல், தன்னை முடிந்த அளவு கட்டுப்படுத்தி கொண்ட வசீகரன்,
“என்னது இது பாப்பு” என்று உருமலோடு கேட்க, அவளோ அவனின் கேள்வியில் அவனை அதிர்ந்து பார்க்க, அவனோ மீண்டும்,
“எதுக்கு இந்த கல்யாணம், முதலில் யாரு கட்டுன தாலி இது” என மறுபடியும் அதட்டலுடனே கேட்க, இதற்குள் இவர்களை நெருங்கி இருந்த கிருஷ்ணா, வசீகரனுக்கும் உமையாளுக்கு இடையில் வந்து நின்று,
“நான் தான் உமையாளுக்கு தாலி கட்டினேன் கரன்” என்று அவனின் கண்ணை பார்த்து சொல்ல, அடுத்த நிமிடம் வசீகரன் கிருஷ்ணாவின் சட்டையை பிடித்து இருந்தான்.
“என்ன நினைச்சிடா அவ கழுத்துல தாலி கட்டுன நீ, யாரு கொடுத்தா உனக்கு அந்த உரிமையை” என கிருஷ்ணாவை பிடித்து உலுக்க ஆரம்பித்தான்.
நண்பர்களிடையே சட்டென மூண்ட சண்டையில், இவ்வளவு நேரம் ஒரு வார்த்தை பேசாமல் என்ன, அசையாமல் கூட நின்றிருந்த உமையாள் எனும் சிலைக்கு அப்போது தான் உயிர் வந்தது.
அருகில் நின்றிருந்த உமையாளும், சற்று தள்ளி நின்றிருந்த பாலாவும் வேகமாக அவர்களை நெருங்கி, ஒரு சேர இருவரையும் பிரிக்க போராடினர்.
கிருஷ்ணாவுக்கு தந்தையின் உடல் நலத்திற்காகவே என்றாலும், நெஞ்சு நிறைய காதல் இருந்த போதிலும், தான் செய்த செயலின் வீரியமும் தெரிய, அது தவறு என்றும் புரிய, வசீகரனை எதிர்க்காமல் அமைதியாய் நிற்க, வசீகரனோ இவனின் சட்டையை விடாமல் பிடித்து, அவனுடன் சண்டைக்கு நின்றான்.
பாலா, உமையாள் என இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் இருவரையும் பிரிக்க போராடியும், வசீகரனை, கிருஷ்ணாவிடம் இருந்து பிரிக்க முடியாமல் போக, உமையாள்,
“கரன் என்ன நடந்ததுனு கேளு, கரன்” என முதலில் பொறுமையாக சொல்லியவள், அவன் இவளின் குரலுக்கு செவி சாய்க்காமல் போக, கடைசியில் அவள் தன் குரலை உயர்த்தவும் தான், அந்த குரலின் அழுத்தத்தில், அதற்கு மதிப்பு கொடுத்து, கிருஷ்ணாவின் சட்டையில் இருந்து கைகளை பிரித்து எடுத்தான் வசீகரன்.
இரண்டு எட்டு அவனை விட்டு தள்ளி நின்று வசீகரன் கிருஷ்ணாவை பார்வையாலே எரிக்க, வசீகரனின் இந்த அமைதியை உபயோகப்படுத்தி, நடந்ததை விளக்க நினைத்து பாலா,
“கரன், அங்கிள் தான் ஆப்பேரஷன்க்கு முன்னாடி கிருஷ்ணா மேரேஜ் அஹ பார்த்தே ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சாரு, கிருஷ்ணா எவ்ளோ சமாதனம் படுத்தியும் அவரு கேட்கவே இல்லை, இவன் அவரை சமாதானம் படுத்த படுத்த அவரோட பீ.பி ரைஸ் ஆகி டாக்டர் வந்து திட்டி, அப்புறம் வேற வழியே இல்லாம தான் கிருஷ்ணா உமையாளுக்கு தாலி கட்டினான்” என நடந்ததை ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.
பாலா நடந்ததை விளக்க, விளக்க உமையாள் முகம் மறுபடியும் ஏகத்துக்கும் இறுக ஆரம்பிக்க, கிருஷ்ணாவோ உமையாளின் முக இறுக்கத்தையும், வசீகரனின் சிந்தனையுடனான முகத்தையும் தான் பார்த்து கொண்டு நின்றான்.
வசீகரன் எதுவுமே பேசாமல், அமைதியாய் சென்று உமையாள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் அவனும் ஒரு இருக்கையில் அமர, அங்கு ஒரு அசௌகர்யமான, விரும்பதாகாத கனமான அமைதி.
யார் என்ன பேசுவது, யாருக்கென்று பேசுவது என்று புரியாமல் அமைதியாய், அறுவை சிகிச்சை நடைபெறும் அறையையே பார்த்து கொண்டிருந்தனர்.
நடந்த எல்லாவற்றிக்கும் காரண கர்த்தாவான ஜெயவர்மரோ, இங்கு நடக்கும் ஏதும் தெரியாமல் உள்ளே தீவிர சிகிச்சையில் இருந்தார்.
பலமணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்த மருத்துவர், அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், அவர் நலமுடம் இருப்பதாகவும் சொல்லவும் தான் கிருஷ்ணாவின் உடல் இறுக்கம் சற்று தளர்ந்தது.
இன்னும் சற்று நேரத்தில் அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றிய பிறகு, ஒருவர் மட்டும் சென்று பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு மருத்துவர் அவனை ஆறுதலாக தட்டிக்கொடுத்து விட்டு சென்றார்.
அவரின் சொல்லில் ஆசுவாசமாகி அப்படியே அங்கு இருந்த இருக்கையில் தளர்ந்து அமர்ந்தான் கிருஷ்ணா. அங்கு இருந்த மூவருக்கும் அவனின் நிலை நன்கு புரிந்தது.
சிறிது நேரத்தில் செவிலியர் வந்து, ஜெயவர்மரை பார்க்க அழைக்க, கிருஷ்ணா உள்ளே செல்ல, பல மருத்துவ உபகரணங்களின் நடுவில், மயக்கத்தில் இருந்தார் ஜெயவர்மர்.
என்னதான் அவர் இவனை பாசத்தை கொட்டி வளர்க்கவில்லை என்றாலும், தந்தை என்ற இரத்த பாசமும், தன் ஒரே உறவு என்ற எண்ணமும் சேர, அவனின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
எப்போதும் மீசையை முறுக்கி, “ஜமீன் வசம்டா” என்று கம்பீரத்துடன் வலம் வந்த மனிதரை, சத்தியமாக இப்படி பார்க்க முடியவில்லை அவனால்.
செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, வலது கையில் ஊசியின் மூலம் மருந்து ஏறிக் கொண்டிருக்க, அந்த கையை விடுத்து, இடது கையை, மிக மெதுவாக கிருஷ்ணா தொட, அவரிடம் அசைவே இல்லை.
இரண்டு நிமிடம் கண்கள் கலங்க அவரை பார்த்து கொண்டிருந்தவன், அவரை நெருங்கி,”சீக்கிரமா சரி ஆகி வாங்க அப்பா” என்று கரகரப்பான குரலில் கூறியவன், மேலும் அங்கு நிற்க சக்தி இல்லாமல் வெளியே வந்தான்.
கிருஷ்ணா வெளியே வரவும், பாலா அவனிடம் தந்தையை பற்றி விசாரிக்க, உணர்ச்சிகள் துடைத்த குரலிலே, அவரின் நிலையை சொல்லியவன், பாலாவின் அருகிலே அமர்ந்து விட்டான்.
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நால்வரும் அமைதியாய் இருக்க, இவ்வளவு நேரம் சிந்தனையிலே இருந்த உமையாள், நிலைமையை கைகளில் எடுத்து கொண்டவள், மூன்று ஆண்களையும் பொதுவாக பார்த்து,
“இந்த மேரேஞ் பத்தி இப்போ ஏதும் பேச வேண்டாம், இப்போதைக்கு யாரு கிட்டயும் சொல்லவும் வேண்டாம், பஸ்ட் அங்கிள் உடம்பு சரி ஆகட்டும், கரன் நீ அத்தை, மாமாவுக்கு இந்த மன்ந் எண்ட்ல இந்தியா வர மாதிரி டிக்கெட் போடு, அப்படியே என்னோட அப்பாக்கும், பாட்டிக்கும் கூட அவங்க சென்னை வரதுக்கு தேவையான ஏற்பாட்டை பண்ணு, இப்போ ஏதும் சொல்லிக்க வேண்டாம், அங்கிள் சரி ஆனதும், அவங்களையும் வர வச்சி, பேசிக்கலாம், அங்கிள் இங்க ஹாஸ்பிட்டல இருக்கிற வரைக்கும் நான் பகல்ல அவரை பார்த்துக்கிறேன், கிருஷ்ணா நைட்ல கூட இருக்கட்டும், இப்போ வா கரன் நாம வீட்டுக்கு போய் கிருஷ்ணாவுக்கும், அங்கிளுக்கும் தேவையானதை எல்லாம் எடுத்துக்கிட்டு வரலாம்”
என்று ஒரு ஆளுமையுடன் சொல்லியவள், முன்னே செல்ல, அவள் ஒரு முடிவு எடுத்துவிட்டால் என்று வசீகரனுக்கு புரிய, அவளை பின் தொடர்வதை தவிர அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை அந்நேரம்.
அவளின் பேச்சில்,ஆளுமையில் ஆண்கள் மூவருமே அயர்ந்து தான் போய்விட்டனர்.
தந்தையின் உடல்நிலையில் பிரச்சனை இல்லை என்று தெரிந்த பிறகு தான் சற்று இலகுவான கிருஷ்ணா, உமையாளின் செய்கையில் மீண்டும் குழம்பி விட்டான்.
இவ்வளவு நேரம் அவளின் அமைதியை கூட, அதிர்ச்சி என்று எடுத்துக்கொள்ள முடிந்தவனால், அவளின் தெளிவான செய்கையை வைத்து, இந்த திருமணத்தை பற்றிய அவளின் எண்ணம் என்ன என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
ஒருவேளை இதை திருமணமாகவே அவள் ஏற்று கொள்ளவில்லையோ?????
அதனால் தான் தந்தையின் உடல்நிலை சரியான பிறகு, இந்த திருமணத்தை பற்றி பேசி கொள்ளலாம் என்று சொல்கிறாளோ?????
சோர்ந்து கிடந்த மனம் உமையாளின் செய்கையை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியாமல் இன்னும் அதிகம் சோர்ந்து போனது.
அதேநேரம் என்ன ஆனாலும், அவளை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக்கொடுக்க போவதில்லை என்றும் மனம் உறுதி கொள்ள, சற்றே நிமிர்ந்து அமர்ந்தான் கிருஷ்ணா.
காதல் கொள்வோம்……………….