எப்பொழுதும் துயில் எழும் வழக்கத்தை விட விரைவாகவே எழுந்து, குளித்து அலுவலகத்திற்கு கிளம்ப தயாரானான் வசீகரன்.
அவனின் பாப்புடன் நேரமும் செலவழிக்க வேண்டும், அதேநேரம் அலுவலக வேளையிலும் தேக்கம் ஏற்படக்கூடாது என்ற முனைப்பு அவனுக்கு.
விரைவாக தயாராகி வந்தவன், கன்னம் வைக்கும் திருடன் போல கவனமாக, சிறு ஓசை கூட எழுப்பாமல், அவனின் பாப்புவின் அறைக்கு சென்று பார்க்க, அவளோ ஆழ்ந்த உறக்கத்தில்…
ஒரு நிமிடம் தாயின் வாஞ்சையோடு அவளை இமைக்காமல் பார்த்திருந்தவன், அடுத்த நொடி தெளிந்து, வந்த வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
கையோடு எடுத்து வந்திருந்த பேப்பரில் அவளுக்கு சிறு குறிப்பு ஒன்றை எழுதி, அதை அவளின் கண்ணில் படும்படியான இடத்தில் வைத்துவிட்டு, வந்த மாதிரியே, வந்த சுவடு தெரியாமல் கதவை மூடிவிட்டு வெளியே வந்தான்.
வசீகரன் வெளியே வரவும், பொன்னம்மா வரவும் சரியாக இருக்க, வெளியே செல்ல தயாராகி நின்றவனை பார்த்தவர், பதறி,
“தாமதமா வந்துட்டானா தம்பி, இரண்டே நிமிஷம் கொடுங்க, சட்டுனு சமச்சிடுவேன், சாப்பிட்டு கிளம்பளாம்” என்று வசீகரனிடன் சொன்னார்.
எங்கே வசீகரன் மறுத்துவிடுவானோ என்ற எண்ணத்தில், அவனுக்கு பதில் அளிக்க வாய்ப்பே கொடுக்காமல், அவனிடம் சொன்ன அதே வேகத்தோடு சமையலறைக்குள் சென்று சமைக்க ஆரம்பித்தார்.
வீட்டில் நெடுங்காலாமாக வேலை செய்பவர், சமையலை தவிர எதை பற்றி பேசினாலும் காதில் வாங்கவே மாட்டார்.
சம்பளம் வாங்குறோம், சமைக்கிறோம் என்று கடமைக்காக எல்லாம் வேலை செய்யாமல், சமையலை ஒரு கலையாக மதித்து, ரசித்து செய்பவர்.
அவரின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து வசீகரன் அமர, ஐந்து நிமிடங்களில் கம்பு மாவை கரைத்து தோசை வார்த்து, பச்ச வெங்காயத்தை, காய்ந்த மிளகாவுடன் சேர்த்து அரைத்த காரசட்டினியுடன், சுட, சுட பரிமாறினார் அவனுக்கு.
பொன்னம்மாவின் கைப்பக்கும் தேவாமிர்தமாக இருக்க, ருசித்து உண்டான் வசீகரன். உணவை முடித்துவிட்டு கை கழுவி கொண்டு வந்தவன், அவரை பார்த்து,
“அக்கா உமையாள் வந்து இருக்க, தூக்கிக்கிட்டு இருக்கா, அவளை எழுப்ப வேண்டாம், அவளே எந்திரிக்கட்டும், அவ எப்போ எழுந்தாலும் குடிக்க ஏதாவது கொடுங்க, மதியத்துக்கு உருண்டை குழம்பு செஞ்சிடுங்க, நானும் மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்துடுவேன் அக்கா” என்று சிறு இடைவெளி விட்டவன், புரிந்தது எனும் விதமாக அவர் தலை அசைக்கவும் தொடர்ந்து,
“அப்புறம் நீங்க கூட்டிகிட்டு வந்தவங்க எல்லாருக்கும் வேலையை பிரிச்சி கொடுத்துடுங்க, அப்படியே மேற்பார்வையும் பார்த்துகோங்க அக்கா”
என்று மளமளவென உத்தரவுகளை பிறப்பித்தவன், அதே வேகத்தில் அலுவலகத்திற்கு தன் காரில் ஏறி கிளம்பி இருந்தான்.
வசீகரன் இந்த வீட்டுக்கு நாளில் இருந்து, அவனும் கிருஷ்ணாவும் ஒன்றாக கிருஷ்ணாவின் ஜாகுவாரில் செல்லுவது தான் வழக்கம்.
இன்று நேரமே வசீகரன் கிளம்பி இருப்பதால், இவன் அவசரத்துக்கு அவனை கிளம்ப சொல்லுவது முறையாகாது என்பதால், கிருஷ்ணாவிடம் தான் முன்னாடி செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பி இருந்தான்.
தொழிற் சாலை வந்து இறங்கியதும், பரந்து விரிந்து இருந்த அந்த தொழிற்சாலை, எப்பொழுதும் போல இப்பொழுதும் மனதில் ஒரு நிறைவை தர, காரை அதன் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு, தன் வழக்கமான வேக எட்டுகள் வைத்து தனது அறையை நோக்கி விரைந்தான்.
“மைக்ரோ லபோரடரி” பெயர் தாங்கிய அந்த வளாகத்திற்குள் நுழைந்தாலே, பல வண்ணகளில் பூக்களை தாங்கிய சிறு சிறு செடிகளும், புல்வெளிகளும் தான் முதலில் நம் கருத்தை கவரும்.
அந்த சீராக பராமரிக்கப்பட்ட புல்வெளிகளுக்கு நடுவில் கம்பீரமாக நிமிர்ந்து, முழுவதும் கண்ணாடி பதித்து காட்சியளிக்கும், இந்த கட்டடம் முழுதும் அலுவலகம் சார்ந்த பயன்பாட்டிற்காக கட்டமைக்கப்பட்டது.
மூன்று அடுக்குகளை கொண்ட அந்த கட்டடத்தின், முதல் தளம், அலுவலகத்தின் நிதி துறையையும், இரண்டாம் தளம் கலந்துரையாடளுக்கான விசாலமான, பெரிதும் சிறுதுமான மூன்று அறைகளையும் கொண்டது.
மூன்றாம் தளம், நண்பர்கள் மூவருக்குமான, விசாலமான தனி,தனி அறைகளை மட்டுமே உள்ளடக்கியது.
முதலில் வசீகரன் அறை, அடுத்து கிருஷ்ணாவின் அறை, அதற்கு அடுத்தது நம் பாலாவின் அறை.
இந்த அலுவலக கட்டிடத்திற்கு பின்புறம், நீள அகலத்தில் இதை போல மும்மடங்கா இருப்பது தான் தொழிற்சாலை.
மருந்துகள் தயாரிப்பதின் முதன் படியான மூலப்பொருள்களை அளப்பதில் ஆரம்பித்து, மாத்திரைகளை அதற்கான அட்டைகளில் அடைத்து, விநியோகிக்க தயார் செய்வது வரை எல்லாமே இங்கு தான்.
தொழிற்சாலையின் வலதுபுறம் இருக்கும், அந்த நீண்ட ஹால் மாதிரியான இடம், வேலைப்பார்பவர்கள் உணவு உண்பதற்கும், டீ அருந்துவதற்கும் என அவர்களின் ஒய்வு நேரத்தை செலவழிக்க அமைக்கப்பட்ட அவர்களின் ராஜாங்கம்.
மூலப்பொருள்களின் இருப்பு, அவற்றை சரியான முறையில் சேமிப்பாக வைப்பது மற்றும் மூல பொருள்களை சரியான விகிதத்தில் கலந்து, மருந்துகளை தயாரிக்கும் முக்கிய துறை, பாலாவின் பொறுப்பு.
மூலப்பொருட்களின் தரத்தை சோதிப்பது, தயாரித்த மருந்துகளின் தரத்தை சோதிப்பது என தரகட்டுப்பாடு மற்றும் விநியோகிக்க தயார் செய்யும் “பேக்கிங்” துறை வசீகரனின் கட்டுப்பாட்டில்.
தொழிற்சாலையின் மொத்த செயல்பாட்டையும் மேற்பார்வையிடும், கேள்வி கேட்கும் குவாலிட்டி அசுரன்ஸ் பிரிவு மற்றும் நிதி துறை கிருஷ்ணாவின் வசம்.
அலுவகத்திற்கு வந்த வசீகரன் தனது அறைக்கு வந்து, கண்காணிப்பு காமிராவில் தொழிற்சாலையின் எல்லா பிரிவுகளையும் பார்த்து, அதிகாலை வேலை நேரத்திற்கான ஆட்கள் வந்துவிட்டதை உறுதி செய்து கொண்டான்.
அன்றைக்கான வேலைகள் எந்த தொய்வும் இன்றி நடைபெறுவதையும், எந்த பிரச்சனைகளும் இல்லை என்பதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துவிட்டு, தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
ஒருவர் பின் ஒருவராக பாலாவும், கிருஷ்ணாவும் வர, இருவருமே வசீகரனை பார்த்தப்படியே, தம், தம் அறைக்கு சென்று தங்கள் வேலைகளில் மூழ்கினர்.
ஒன்பது மணிக்கு அலுவலகத்தின் எல்லா பிரிவின் மேனேஜர்களும் வந்தவுடன், அவர், அவர்கள் பிரிவின் அன்றைய நாளிற்கான வேலை அட்டவணையை எடுத்துக்கொண்டு தங்கள் துறையின் தலைவர்களை பார்க்க விரைந்தனர்.
ஒருவராக அவர்களின் துறை தலைவர்களின் ஒப்புதலை பெற்று விடைபெற, தன் மேனேஜர்களுக்கு செய்ய வேண்டியதை உரைத்துவிட்டு, வசீகரனிடம் ஏதோ பேச நினைத்து, பாலா தன் அறையில் இருந்து வெளியே வந்து, வசீகரனின் அறையை நெருங்கினான்.
அதேநேரம் வசீகரனின் அறையில் இருந்து வெளியேறினால் அழகி, வசீகரனின் கட்டுப்பாட்டில் இயங்கும் தரகட்டுப்பாடு துறையின் மேனேஜர்.
பெயர் மற்றும் இல்லை, தோற்றத்திலும் அழகி தான். அலட்டல் இல்லாத அடக்கமான அறிவான அழகிய தோற்றம்.
பாலாவுக்கு எப்பொழுதுமே அழகியின் மீது ஒரு பாசம் உண்டு, ஒரு மரியாதை உண்டு. இவர்கள் தொழிற்சாலை ஆரம்பித்த முதல் நாள் முதல் இவர்களுடன் பயணிப்பவள்.
அவளின் திறமைக்காகவே, இந்த மேனஜர் பதவி அவளுக்கு அளிக்கப்பட்டது. இந்த சின்ன வயதில் திறமையாக தனக்கு கிழே பணிபுரிவர்களை கையாளும் விதம், இக்கட்டான சூழ்நிலையில் சடுதியில் முடிவு எடுக்கும் வேகம் என அழகியின் மீது கொஞ்சம் வியப்பு கூட உண்டு பாலாவுக்கு.
அழகியை கண்டதும் பாலாவின் முகத்தில் ஒரு புன்னகை தன் போல தோன்ற, அதே உற்சாகத்துடனே,
“ஹாய் அழகி,குட் மார்னிங்” என விரிந்த புன்னகையுடன் சொல்ல,
“வெரி குட் மார்னிங் பாலா சர்” என, அவனின் புன்னகைக்கு பிரதிபளிப்பாக, அவன் அளவு இல்லை என்றாலும் ஓர் அளவு விரிந்த புன்னகையுடனே அழகி பதிலளித்தாள்.
தேவைக்கு மட்டும் பேசும் கிருஷ்ணாவின் மேல் நிறையவே பயம் கலந்த மரியாதை, வேலை சம்பந்தமாக மட்டும் இல்லாமல், சகஜமாகவே பேசும் வசீகரன் மீது மரியாதை, அவர்களை விட வெகு இயல்பாக எல்லாருடனும் உரையாடும் பாலாவின் மீது அழகிக்கு, முதலாளி என்பதையும் தாண்டி ஒரு தோழமை உணர்வு உண்டு.
“என்ன டெய்லி ரிப்போர்ட் அஹ ஓகே பண்ணிட்டாரா உங்க சர்” என பாலா கேட்க, அவளும்,
“பண்ணிட்டாங்க சர்” என்று அவனின் கேள்விக்கு அழகி பதில் சொல்ல, அடுத்த என்ன கேட்பது என்று தெரியாமல் பாலா,
“சரி அழகி போங்க போய் ஒர்க் அஹ பாருங்க” என அவளுக்கு அவனே விடை கொடுக்க, அவளும்,
“சரி சர்” என ஒரு தலையாட்டாளுடன் விடைபெற, செல்லும் அவளை ஏதோ சிந்தனையுடன் பார்த்தவன், பின்பு ஏதோ புரிந்தவன் போல தனுக்கு தானே தலையை ஆட்டிக்கொண்டு, வசீகரனை பார்க்க வந்தவன், அவனை பார்க்காமலே திரும்பி தனது அறைக்கே சென்றான் .
தனது அறைக்கு வந்த பின்பும் பாலா, கொஞ்ச நேரம் ஏதோ யோசனையிலேயே கழித்தவன் , பின்பு தெளிந்து தனது மடிக்கணிணியின் உள்ளே தலையை நுழைத்து கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
வேலையின் இடையில் வசீகரனுக்கு அவனின் பாப்பு நினைவு உதித்தது. இந்நேரம் எழுந்து இருப்பாளா, ஏதேனும் சாப்பிட்டு இருப்பாளா என கொஞ்ச நேரம் இவனின் நேரத்தையும், கவனத்தையும் களவாடினாள் அவனின் பாப்பு.
ஒருவாறாக மதிய உணவு நேரம் வர, தன் நண்பர்களிடம் சொல்லி விடை பெற நினைத்தவன், பாலாவிற்கு அழைத்து கிருஷ்ணாவின் அறைக்கு வர சொல்லிவிட்டு இவனும் கிருஷ்ணாவின் அறைக்கு விரைந்தான்.
உள்ளே நுழைந்தவன் தன் நண்பர்களை பார்த்து பொதுவாக,
“நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரேன்டா” என அறிவிக்க, கிருஷ்ணாவின் முகம் எந்த உணர்வை வெளிப்படுத்தவில்லை என்றாலும் மனதில் மட்டும் பல எண்ணங்களின் ஊர்வலம்.
பாலாவோ, “சரிடா போய்ட்டுவா” என சொல்ல, கிருஷ்ணாவும் தலைஅசைக்க வசீகரன் அடுத்த நிமிடம் கிளம்பி இருந்தான்.
வசீகரன் கிளப்பிய அவசரத்தை பார்த்து பாலா மனதிற்குள் சிரிக்க, கிருஷ்ணா என்னவென்று விளங்காத அவனின் வழக்கமான பார்வையுடன் அவனை பார்த்திருந்தான்.
வசீகரன் வீட்டிற்கு வந்து நேராக, தனது பாப்புவின் அறைக்கு செல்ல, அங்கோ இன்னும் அவனின் பாப்புக்கு விடியவில்லை போலும், இன்னுமே உறக்கத்தில் பிடியிலேயே தான் அவள்.
உள்ளே சென்றவன் அவள் இன்னும் உறங்குவதை பார்த்து,
“அடியேய் கும்பகரணி, நீ எழுந்து தனியா இருப்பனு நான் வேக, வேகமா வந்தா, நீ இன்னும் தூக்கிக்கிட்டு இருக்க, உன்னை இரு வரேன்” என்றவன் அவளை நெருங்கி,
“எழுந்திரு அஞ்சலி, எழுந்திரு” என, அவளை உலுக்கி எழுப்ப, என்னமோ ஏதோவென்று அடித்துப்பிடித்து எழுந்த உமையாள், சிறு சிறு பிள்ளையென திரு திருவென முழிக்க, வசீகரனோ அவளின் முகபாவத்தை ரசித்தவாறே அவளை பார்க்க, அவளோ
“எருமை மாடு, எதுக்குடா இப்படி எழுப்புனா” என புரியாமல் கேட்டவள், அவனின் உடையை பார்த்து,
“ஆபிஸ் கிளம்பிட்டியா, சொல்லிட்டு போக வந்தியா, இதுக்கு எதுக்குடா என்ன எழுப்புன, போடா, நான் தூங்க போறேன்” என திரும்பவும் படுக்க போக, அவளை தடுத்த வசீகரனோ,
“பக்கி எழுந்திரு, இப்போ மணி என்னனு தெரியுமா, நான் ஆபிஸ் போயிட்டு மதியம் சாப்பிட வந்து இருக்கேன், நீ என்னடான்னா இன்னும் பெட் அஹ விட்டு இறங்கல, இந்த லட்சணத்துல உனக்கு நான் நோட் எல்லாம் எழுதி வச்சிட்டு போனேன் பாரு என்னை சொல்லணும், ஆமா நீ நயிட் தூங்குனியா இல்லையா, இல்லை தூங்காம பேய் கூட பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருந்தியா பிசாசு” என கேட்க, அவளோ,
“எது நான் பிசாசா, ஒழுங்கா இங்கிருந்து ஓடி போய்டா, நயிட் தூக்கமே வரல தெரியுமா, தூங்கவே லேட் அகிடுச்சிடா, சரி சரி நீ போய் டைனிங் டேபிள்ல இரு, ரெண்டே நிமிஷத்துல வரேன்” என, அவனோ,
“சீக்கிரமா வா பாப்பு, இவ்ளோ நேரம் சாப்பிடாம இருந்தா ஹெல்த் என்ன ஆகும்” என, அவளை கண்டித்துவிட்டு, அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான் வசீகரன்.
உமையாளுக்கோ வசீகரன் அவளை கிண்டல் செய்தாலும், அக்கறையில் அதட்டினாலும், அவன் வெளியேறி சென்றதில் ஒரு சிறு நிம்மதி தான்.
இரவு தூங்காமல் என்ன செய்தாய் என்று அவன் கேட்கும் போது,”கேள்வி கேட்குது பாரு பக்கி, டூயட் பாடிக்கிட்டு இருந்தேனு” எப்படி சொல்ல முடியும் என இவள் முழிக்க, இவளின் முகமற்றத்தை அவன் பார்த்துவிட கூடாதே என்ற பதட்டம் வேறு முளைக்க, எதையோ சொல்லி சமாளித்து அவனை அனுப்பிவைத்ததும் தான் அவளுக்கு ஆசுவாசமே.
அதன்பிறகு மின்னல் வேகத்தில் குளித்து முடித்து வெளியே வந்தவள், நேராக உணவு மேசைக்கு சென்று அவளுக்காக காத்திருந்த வசீகரனுடன் இணைந்து கொண்டாள்.
அதே நேரம் உணவு பாத்திரங்களுடன் பொன்னம்மா வர, உமையாள் அவரை பார்த்து உண்மையான மகிழ்ச்சியுடன்,
“அக்கா எப்படி இருக்கீங்க” என ஆர்பரிக்க, அவரும் பாசத்துடன்,
“நான் நல்லா இருக்கேன் உமாமா, நீங்க எப்படி இருக்கீங்க” என்றவர், இருவருக்கும் உணவு பரிமாற, உமையாளுக்கு மிகவும் பிடித்த உருண்டை குழம்பு, பிடித்த கை பக்குவத்தில், சொல்லவும் வேண்டுமா என்ன…
இருவரும் அரட்டையடித்தபடி, சாப்பாட்டை ஒரு பிடி,பிடிக்க, உணவு முடிந்தும் கொஞ்ச நேரம் உமையாளுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவன், பின்பு அவளிடம் விடை பெற்று அலுவலகம் திரும்பினான்.
அலுவலகம் செல்லும் வழியில், கடைக்கு சென்று அவனின் பாப்பு குறைகிறது என்று சொன்ன “அதை” இவனுக்கு வேண்டிய அளவில், வேண்டிய விதத்தில் செய்ய சொல்லிவிட்டு, நாளை தயாரானதும், தனக்கு தகவல் தெரிவிக்கமாறு சொல்லி அலுவலகம் சென்றான்.
அதன்பின்பு வழக்கம் போல வேலையில் மூழ்க, மாலை ஒரு ஆறு மணி அளவில் நண்பர்களிடம் சொல்லிவிட்டு விடைபெற்று வீடு வந்து சேர்ந்தான் வசீகரன்.
வீட்டுக்கு வந்து தன் பாப்புவுடன் பேச நேரம் பனியென கரைய, பொன்னம்மாவும் இரவு உணவை செய்துவிட்டு அவரின் வீட்டுக்கு கிளப்பினார்.
தொழில் சம்பந்தமான ஒரு அழைப்பு வர, வசீகரன் பேச தோட்டத்திற்கு வர, அவனை தொடர்ந்து வந்த உமையாள், அவனை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்த நீச்சல்குளத்தை நோக்கி நகர்ந்தாள்.
தன் கால்களை நீச்சல் குலத்தின் உள்ளே விட்டு, குதிகால் நனையுமாரு அமர்ந்து, குதிகாலில் வழியே உடல் முழுவதும் அந்த குளுமை பரவுவது போல தோற்றமயக்கம் தோன்ற, அப்படியே விழிகளை மூடி, அதை ஆழ்ந்து அனுபவிப்பவள் போல ஒரு மோன நிலையில், தேர்ந்த சிற்பி வடித்து வைத்த சிலையாக அமர்திருந்தாள்.
அப்பொழுது தான் வேலை முடித்து வந்து கிருஷ்ணா நேராக தனது அறைக்கு வந்தவன் உடைமாற்றி விட்டு, வேலையாள் கொடுத்த காபியை அருந்த எடுத்தவன், ஏதோ எண்ணத்தில் தன் அறையில் இருக்கும் ஏராளமான சாளரத்தின், ஒரு சாரளத்தின் பக்கம் வந்து நிற்க, அந்த சாளரம் வசீகரனின் வீட்டின் தோட்டத்தை காட்சியாக இவனின் முன் விரித்தது.
தோட்டமும், அதை ஒட்டிய நீச்சல் குளமும், அதனோடு ஒரு மோன நிலையில் இருந்த அந்த பெண் சிலையையும்..
கையில் இருந்த காபியின் நினைவே இல்லாதவன் போல, ஏதோ ஒன்று அவளை நோக்கி இவனை இழுக்க, அவளை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று நேற்று எடுத்த முடிவை அறவே மறந்தவனாக, இன்னொரு சிலையென அப்படியே இமைகூட சிமிட்டாமல் பார்த்திருந்தான்.
தனது அழைப்பை பேசி முடித்த வசீகரன், அவனின் பாப்புவை தேடி வந்தவன், அவனும் அவனின் பாப்புவின் அருகில் வந்து அவளை மாதிரியே அப்படியே அமர்ந்தான்.
வசீகரன் ஏதோ பேச, உமையாளும் பதில் அளிக்கவென இருக்க, இதை பார்த்திருந்த கிருஷ்ணா தான் அவனின் உணர்வை வரையறுக்க முடியாமல் திணறி போனான்.
தன் எண்ணம் பயணிக்கும் திசை புரியாமல், புரிந்துகொள்ள விரும்பாமல், தன் போக்கு பிடிக்காமல், இனம் புரியாத உணர்வுடன் தன் பார்வையை திருப்ப, அவனின் பார்வை வட்டத்துக்குள் விழுந்தார் மைக்கேல்.
தோட்டத்தின் ஒரு பகுதியில் நின்றிருந்த அவரின் பார்வை முழுவதும் வசீகரனிடமும், அவனிடம் பேசி கொண்டு இருந்த உமையாள் மீதும் தான்.
அதுவரை இருந்த உணர்வு குவியல் அப்படியே மாறி, ஒரு எச்சரிக்கை உணர்வு உடல் முழுதும் வியாபிக்க, அவரையே ஆராய்சி பார்வை பார்த்தபடியே இருந்தான் கிருஷ்ணா.
இந்த மைக்கேலை பற்றி வசீகரனிடம் பேச வேண்டும் என குறித்துக்கொண்டவன், அவரை பார்த்துக்கொண்டு இருக்கும் போதே, அவர் அவரின் வீட்டுக்குள் செல்வது தெரிந்தது.
இங்கு வசீகரனும், உமையாளும் வீட்டுக்குள் செல்வது திரும்பி பார்க்காமலே புரிய, ஒரு நீண்ட பெருமூச்சு அவனை அறியாமலே வெளியிட்டான்.
பார்க்க வேண்டிய வேலைகள் நிறையவே இருந்தும், மனம் எதிலும் லயிக்கும் என்று தோன்றாமல் போக, அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு, அந்த அந்தகாரத்தில் ஏ.சியின் குளிரை அதிகப்படுத்திவிட்டு, புல்லாங்குழலின் இசையை அதிக ஒலியளவில், அந்த அறை முழுக்க எதிரொலிக்கும் அளவு ஒலிக்கவிட்டு, அப்படியே கண்களை மூடி இருக்கையில் அமர்ந்தான்.
அந்த இசை, செவி வழியே நுழைந்து மூளையை அடைந்த நொடி, யாரோ மந்திர கோலை சுழற்றியது போல, மனதின் அலைப்புறதல் படிப்படியாக குறைந்து, மனது ஆழ்கடல் போல அமைதியாக, அப்படியே அமைதியை ஆழ்ந்து அனுபவித்து, கொஞ்ச நேரம் அதிலே திளைத்திருந்தான் கிருஷ்ணா.
காதல் கொள்வோம்………..