Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனின் தாலாட்டு இவள் 💜

அசுரனின் தாலாட்டு இவள் 💜 21


சைத்து எதிர்பார்த்தது போல் எதிர்ப்பு வர தான் செய்தது.. ஆனால் அதை திறம்பட சமாளித்தாள்… அவள் கல்லூரி முன்னேற்றத்திற்கு யோசனை சொன்னால் அதை மறுத்து இத்தனை வருடம் இங்கு இருக்க கூடிய எங்களுக்கு தெரியாதா என்று அவளை அலட்சியம் செய்தனர்… ஆனால் அவளோ அதை எல்லாம் காதில் வாங்காமல் அவர்களுக்கும் அதை பற்றி புரிய வைத்து அதை நடைமுறையும் படுத்தி இருந்தாள்…

மாணவர்கள் ஒரு சிலர் அவமதித்து கேலி செய்தாலும் அவர்களை தட்டி கொடுத்து நடக்க ஆரம்பித்தாள்… அனைத்தும் ஒழுங்காக செல்கிறதா என்று கேட்டால் இல்லை… அவப்பொழுது பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது…. அதை திறம்பட சமாளித்து நன்முறையில் நடத்தி கொண்டு தான் உள்ளாள் …

நாட்கள் அதன் போக்கில் செல்ல இரண்டு மாதங்கள் சென்று இருந்தது… அன்று இளவரசி வாசு சைத்து இருவரிடமும் ஒன்றை கேட்டார்.. அதற்கு என்ன சொல்வதென்றே இருவருக்கும் தெரியவில்லை… இதில் அவர்கள் இருவராலும் முடிவு எடுக்க முடியாது…
அப்படி என்ன கேட்டார் என்றால் திலீப் திவ்யா இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாமா என்று தான் கேட்டார்… இதில் திலீப் திவ்யா இருவரின் விருப்பமுமே முக்கியம் என கூறி விட்டு வாசு சென்று விட திலீப் திவ்யா இருவரிடமும் யார் பேசுவார் என கேள்வி எழுந்தது…

ஆண்களை விட்டு திலீப்பிடம் பேசலாம் என நினைத்து விட்டு அந்த வாரம் திவ்யாவை ஊருக்கு வர கூறிவிட்டனர் மாமியார் மருமகள் இருவரும்… அப்டியே கோகிலா காதம்பரியிடம் கூறி அவள் வரும் போது வீட்டிற்கு வர கூறிவிட்டனர்…
அந்த வார இறுதி திவ்யா திருச்சி வர காதம்பரியும் அந்த வார இறுதி குடும்பத்துடன் வந்துவிட்டாள்.. அன்று அனைவரும் வாசுவின் வீட்டில் தான் இருந்தனர்… காலை உணவை முடித்து விட்டு ஆண்கள் தொழிலை பற்றி பேச ஆரம்பித்து விட இந்த பக்கம் பெண்கள் திவ்யாவிடம் திருமணத்தை பற்றி பேச்சை ஆரம்பித்தனர்….



Advertisement

திவ்யாவிற்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை… சொல்ல போனால் அவள் திருமணம் என்பதை பற்றியே யோசிக்கவில்லை… தனக்கு இந்த குடும்பம் மட்டும் போதும் என நினைத்து தான் வாழ்ந்து வந்தாள்… தற்போது திருமணம் என்று கூறியதும் அவளுக்கு எப்படி எடுத்து கொள்ள வேண்டும் என்றே தெரியவில்லை…

அவள் இளவரசியை அணைத்து கொண்டு “ம்மா நீங்க என்ன சொன்னாலும் ஓகே… யாரை கல்யாணம் பண்ணாலும் ஓகே ம்மா… நான் கல்யாணம் அப்படி ஒன்னை பத்தி யோசிக்கவே இல்லை… எனக்கு யார் இருக்கா அப்படினு நிறைய தடவை தோணியிருக்கு.. எனக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்கனு நினைக்கும் போது சந்தோசமா இருக்கு ம்மா… சைத்து ஸ்கூல்ல சேருற வரை நான் மட்டும் தான் தனியா இருப்பேன்… இப்போ எனக்காக இத்தனை பேர் இருக்குறது பார்த்து எனக்கு என்ன சொல்றது தெரியல ம்மா… ரொம்ப சந்தோசமா இருக்கு… எனக்கு அழுகை தான் வருது.. கண் எல்லாம் கலங்குது ம்மா… எனக்கு கல்யாணத்துல முழு சம்மதம் ம்மா” என்று தனக்கு இத்தனை பேர் உள்ளனரே என்று ஆனந்தத்தில் கண்ணீர் விட்டாள்…

“அட அசடே எதுக்கு இந்த அழுகை… நீ எப்பயும் எங்க பொண்ணு தான்… வாசுவோட தங்கச்சி தான் சரியா.. இப்போ நீ உன் பிரெண்டோட பேசிட்டு இரு… காது நீயும் இங்க இரு… உன் பசங்க ரெண்டு பேரையும் நானும் அண்ணியும் பாத்துக்குறோம்…” என்று கூறி இளவரசி கோகிலாவை அழைத்து கொண்டு வெளியேறிவிட்டார்

Advertisement

இங்கு திலீப்பை தனியாக அழைத்து சென்ற வாசுவும் கவினும் அவனிடம் எவ்வாறு ஆரம்பிப்பது என தெரியாமல் ஒருவரை ஒருவரை பார்த்து கொண்டனர்… பின் வாசுவே “டேய் திலீப் அம்மா உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்காங்க.. உனக்கு யாரையோ பிடிச்சு இருக்கா டா…” என்று கேட்டான்…
அவன் அவ்வாறு கேட்டதும் அவனுக்கு திவ்யாவின் முகம் தான் நியாபகம் வந்தது.. இருந்தும் அதை ஒதுக்கி வைத்து “அப்படி எல்லாம் யாரும் இல்ல ஜிவி.. அத்தை யாரை சொன்னாலும் எனக்கு ஓகே..” என்று கூறினான்… அவன் அதை சந்தோசமாக கூறினாலும் திவ்யாவை பற்றிய யோசனை அவனுக்கு இருந்து கொண்டே தான் இருந்தது…

Advertisement

கவினோ “பொண்ணு எல்லாம் ரெடி நீ ஓகே சொன்னா நாளைக்கே கூட கல்யாணத்தை வெச்சுக்கலாம்.. என்ன சொல்ற நீ” என்று கேட்டான்…

“மாமா என்ன சொல்றிங்க எனக்கு புரியல..” என்று கூறினான்…

வாசுவோ “அம்முவோட பிரென்ட் திவ்யா தான் உனக்கு ஓகேவா..” என்று கேட்டான்…

Advertisement

திவ்யா என்ற பெயரை கேட்டதும் கண்கள் மின்ன “எனக்கு ஓகே டா… ஆனா எனக்கு அவங்க கூட கொஞ்சம் பேசனும்… என்னை பிடிச்சு இருக்கானு நான் கேட்கனும்” என்று கூறினான்…

“சரி ஓகே கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு… நான் அம்மா கிட்ட பேசிட்டு உங்கிட்ட சொல்றேன்… நீ போய் பேசு…” என்று கூறி வாசு சென்று விட கவினோ திலீப்பை தான் யோசனையுடன் பார்த்து கொண்டு இருந்தான்…

“என்ன மாமா என்னை அப்படி பாக்குறீங்க…” என்று கேட்டான்..

அதற்கு அவனோ “இல்லை.. உனக்கு திவ்யாவ பிடிக்குமா… பிடிக்கும்னா லவ் அந்த மாதிரி… ஏன்னா திவ்யா தான் பொண்ணுனு சொன்னதும் உன் முகத்துல லைட் எரிஞ்சது… அது தான் கேட்டேன்…” என்று கூறினான்..

“அப்படி எல்லாம் இல்ல மாமா…எனக்கு அந்த பொண்ணு பேரு தெரியும்… ஆனா இது வரைக்கும் பார்த்தது இல்ல… பாப்பா திருச்செந்தூர் போனால அன்னிக்கு தான் அவங்களை நேர்ல பாத்தேன்… இதுல நான் எங்க லவ் பண்றது போங்க மாமா” என்று கூறி விட்டு அந்த இடம் சென்றுவிட்டான்…

வாசுவும் இளவரசியிடம் கேட்டு திவ்யாவை மாடியில் செல்ல கூறிவிட்டு திலீப்பையும் மாடிக்கு செல்ல கூறினான்… அங்கு திவ்யா வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க திலீப் நடந்து வந்து அவளை விட்டு தள்ளி நின்றான்…
இருவருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை… சிறிது நேர அமைதிக்கு பின் திலீப்பே பேச ஆரம்பித்தான்…

“என்னை பத்தி என்ன உங்களுக்கு தெரியும்னு தெரியல.. நானே சொல்லிடுறேன்… எனக்குனு சொல்லிக்க வாசு குடும்பத்தை தவிர யாரும் இல்ல… சின்ன வயசுலேயே அப்பா அம்மா இறந்துட்டாங்க… சொந்தக்காரங்க சொத்துக்காக என்னை கூட வெச்சுக்குறேன்னு சொன்னாங்க… ஆனா எனக்கு அவங்க கூட போக பிடிக்கல… சக்ரவர்த்தி மாமா அப்பாவோட பிரென்ட்… அவர் கிட்ட சொல்லிட்டேன்.. எனக்கு இவங்க கூட போக பிடிக்கல என்னை ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்கனு… ஹாஸ்டல் எல்லாம் வேண்டாம் எங்க வீட்டுலயே தங்கி படினு சொன்னாங்க… எனக்கு ஒரு மாதிரி இருந்தது… அதனால நான் ஹாஸ்டல்ல தங்கி தான் படிச்சேன்..”

“மெரிட்ல டாக்டர் சீட் கிடைச்சது டாக்டருக்கு படிச்சேன்… இப்போ ஒரு கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்றேன் வாசு என்னை அவங்க ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ண சொல்லிட்டு இருக்கான்.. நானும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லி இருக்கேன்… அப்பா அம்மாவோட சேவிங்ஸ் என் பேருல பேங்க்ல இருக்கு… அடுத்து அம்மாவோட நகை லாக்கர்ல அப்டியே இருக்கு… அதுக்கு அப்றம் கொஞ்சம் கோவம் வரும்… என்னோட கோவம் வாசுவுக்கு கூட தெரியாது… கோவம் வந்தா என்ன பேசுவேன்னு எனக்கே தெரியாது இது தான் நான்… இனிமே உங்க விருப்பம்” என்று கூறி அவளை தான் பார்த்தான்…

அவளோ “எனக்கு என்ன சொல்றதுனு நிஜமாவே தெரியலங்க… நீங்களாச்சும் அம்மா அப்பானு அவங்க கூட வாழ்ந்து இருக்கீங்க… ஆனா எனக்கு அவங்க யாருனே தெரியாது… ஆசிரமத்தில் தான் இருந்தேன்… ஸ்கூல்ல சைந்தவி பிரென்ட் ஆனா… அவளால் தான் இளா அம்மா பழக்கம் ஆனாங்க… அப்போ தான் அம்மாவோட பாசம்னா என்னனே உணர்ந்தேன்… அவங்க எது சொன்னாலும் எனக்கு சம்மதம்… எனக்கு உங்களை பத்தி நிஜமா எதுவும் தெரியாது.. கண்டிப்பா உங்களை பத்தி தெரிஞ்சிக்கிட்டு உங்க கூட சந்தோசமா வாழ்வேன்… உடனடியா நடக்குமா தெரியல… ஆனா கண்டிப்பா நடக்கும்…” என்று சிரித்தவாறு கூறி முடித்தாள்..

திலீப் அவள் கூறியதை கேட்டு விட்டு “கண்டிப்பா… சின்ன வயசுல நீங்க அனுபவிக்க நினைச்ச எல்லாமே நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் நீங்க அனுபவிப்பீங்க.. இது என்னோட சத்தியம்…” என்று கூறினான்

அதன் பின் இருவரும் இணைந்து கீழே சென்று சம்மதம் கூற உடனடியாக கல்யாண ஏற்பாடு செய்ய ஆரம்பித்தனர்…. இன்னும் ஒரு மாதத்தில் வரும் நல்ல நாளில் திருமணம் முடிவு செய்து இருந்தனர்….

அன்று அனைவரும் அங்கேயே தங்க வீடே கலகலப்பாக இருந்தது.. என்ன தான் நால்வரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டாலும் பேச நினைத்த அனைத்தும் பேசிட முடியாது… அனைவருக்கும் வேலை இருக்கும்… இன்று தான் அனைவரும் சந்தோசமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்…
மதிய உணவு உண்டு முடித்து விட்டு அனைவரும் வெளியில் சென்று வரலாம் என யோசித்து அனைவரும் வெளியில் கிளம்பினர்… இரவு உணவு வெளியில் முடித்து விட்டு அனைவரும் வாசுவின் வீட்டிலேயே உறங்கினர்….

அடுத்த நாள் இளவரசி திவ்யாவிடம் நம் பள்ளியை என்னுடன் சேர்ந்து நீ தான் பார்க்க வேண்டும் வேலையை விட்டு நின்று விடு என்று கூறினார்…. அவளுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று கூட தெரியவில்லை அதை அவள் கூறி விட்டாள் அவரிடம் “அம்மா எனக்கு செய்யனும்னே தெரியல… நீங்க எனக்கு கல்யாணம்னு சொன்னதே என்னால நம்ப முடியல அதுக்குள்ள ஸ்கூல்ல பாத்துக்கனும்னு சொல்றது என் மேல மலையை தூக்கி வைக்குற மாதிரி இருக்கு ம்மா.. நான் பாத்துக்குறேன்… ஆனா கொஞ்ச கொஞ்சமா பாத்துக்குறேன்… நார்மல் டீச்சர்ரா ஜாயின் பண்ணிக்குறேன்… எதுவும் சொல்லாதீங்க ம்மா” என்று கெஞ்சல் குரலில் கூறினாள்..

இளவரசி மறுத்து எதோ கூற வர அதற்கு முன் வாசு “ம்மா விடுங்க… ஓரடியா திணிக்காதிங்க…. கிளம்புற பொண்ணு கிட்ட அது இதுனு சொல்லிட்டு இருக்கீங்க…நீ எதை பத்தியும் யோசிக்காத… உனக்கு எப்போ வேலையை விட தோணுதோ அப்போ விடு… கல்யாணத்துக்கு அப்பறமும் உனக்கு வேளைக்கு போக தோணுதா போ… நாங்க யாரும் எதுவும் சொல்ல மாட்டோம்… திலீப்பும் சொல்ல மாட்டான்… இது வரைக்கும் பாசமா கூட பேசுனது இல்ல… ஆனா உனக்கு இந்த அண்ணா இருக்கேன் டா.. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லனும்னு டா… கல்யாணத்துக்கு அப்பறமும் இந்த பையன் எதோ பிரச்சனை பண்ணா சொல்லு.. உண்டு இல்லைனு பண்ணிடலாம்…” என்று இளவரசியிடம் அதட்டி கூறிவிட்டு திவ்யாவிடம் தன் பாசத்தையும் அதட்டி தான் கூறி முடித்தான்…

திவ்யாவும் கண்ணீருடன் சரி என்று தலையசைத்தாள்… அவள் பஸ்சில் செல்வதாக தான் ஏற்பாடு… ஆனால் திலீப்பும் திவ்யாவும் பேசி பழக வேண்டும் என நினைத்து வாசு திலீப்பை திருச்செந்தூர் சென்று விட்டு வர கூறினான்.. திலீப் உடனடியாக சரி என்று கூறினாலும் திவ்யாவிற்கு தான் கொஞ்சம் கூச்சமாக இருந்தது… வாசு சொன்னதால் அவனுடன் செல்ல ஒத்துக்கொண்டாள்..

அனைவரிடமும் விடைபெற்று இருவரும் திருச்செந்தூர் நோக்கி கிளம்ப மீண்டும் வாசு சைந்தவி வாழ்க்கையில் மெல்ல மெல்ல பிரச்சனை தொடங்க ஆரம்பித்தது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!