“இங்க பாரு பூரணி , நா சொல்றத செய் உனக்கு என்ன தேவையோ அத நா கொடுக்குறேன்”, என்ற மாமியாரை பயத்தோடு பார்த்தார் அவர்.
“அத்த எனக்கு பயமா இருக்கு , எதுக்கு இதல்லாம் பண்ணனும் அந்த பொண்ணு நமக்கு என்ன பிரச்னை குடுக்குது , அது பாட்டுக்கு இருக்கு பாவம் அத்த , ரொம்ப நல்ல பொண்ணு வெகுளி , வேண்டாம்த்தை” என்க.
“ஏய் கிளிப் பிள்ளைக்கு சொல்லற மாதிரி சொல்லறேன் , திரும்ப திரும்ப அதேயே பேசுற “.
“உன் பொண்ணு கல்யாணம் இருக்கு , ஆசையா வாங்கின வீட்ல இருக்குணுமா வேண்டாமா , நா சொல்றத கேட்டினா.. எனக்கு எங்க வீட்ல போட்டது என் புருஷன் போட்டது எல்லாம் அப்படியே இருக்கு கிட்டத்தட்ட நூத்தியம்பது பவுனு”.
“சொத்துல எது வேணா உனக்கு கொடுக்குறேன்” என்க.
யோசனை இருந்தாலும், செய்து தான் ஆக வேண்டும் தங்களுடைய சூழ்நிலை அப்படி “என்ன செய்யணும்” என்றார் அவரிடம்.
“இவ அண்ணன் இருக்கான்ல அங்க கேரளால, அவன் நம்பர் கண்டுபிடி”.
“எப்படி அத்த !! அவனை உங்களுக்கு எப்படி தெரியும்”.
“நா அங்க போய் ஆறு மாசம் நின்னது உனக்கு மறந்துடுச்சா , அப்போ தானே என் பேரன இவ மயக்கி வெச்சிருந்தது எனக்கு தெரிஞ்சது”.
“அவ கிட்ட அப்போவே சொன்னேன், அதான் என் மூத்த மறுமவ கிட்ட கேட்டாளா ? இப்போ இவ்ளோ பிரச்சனைக்கும் காரணம் இவளும் இவ குடும்பமும் தானே”.
“அவன் நம்பர் நமக்கு எதுக்கு அத்த”.
“இவ சரி ஆகக் கூடாது , ஜெகா வேலைக்கு போனதும் இவளுக்கு பழைய மாதிரி அந்த மருந்தை குடுத்து இவளை பைத்தியமா தான் வெக்கணும்”.
“இவகூட அவன் வாழக் கூடாது , சொந்தத்துல நல்ல அம்சமா பொண்ணுங்க இருக்க இவளை போய் பிடிச்சுட்டு வந்திருக்கான்”.
“நம்பரை எப்படி அத்தை கண்டு பிடிக்கிறது”.
“என்ன இழவுக்கு ஒன்னும் இல்லாத வீட்ல இருந்து வந்தாலும் , என் மகன் ஆசப்பட்டான்னு உன்னைக் கட்டி வெச்சேன் , படிச்சிருக்கியே நல்ல வேலை இருக்கேனு தான்”.
“ஊருக்குள்ள மறுமவ பெரிய வேலை பாக்குறானு சொல்லலாமே அதான் , எல்லாத்தையும் நானே யோசிக்கணுமா கண்டுபிடி” என்று பூரணியை கடித்துக் குதறி விட்டு சென்று விட்டார்.
வெளியில் சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தவன் , அம்முவாயும் ரூபா விமல் மற்றும் வினிதா அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான்.
உத்தமப்பாளையம் நுழைந்த உடன் வரும் பாலத்தின் கீழ் முல்லை பெரியார் நதி பாய்கிறது.
படிகளில் தண்ணீர் நிரம்பி வழியும் அழகோடு பாய்ந்தோடும் , பாலத்தின் இரு பக்கமும் நதியை அடைய வழி உண்டு.
அதில் நடப்பதே தனி சுகம் தான், அதன் அழகை ரசித்துக்கொண்டே அவளுடன் கைக் கோர்த்து நடந்து சென்றான் .
சிறிது நேரம் பிள்ளைகள் தண்ணீரில் ஆட்டம் போட, அம்முவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை, நீரைக் கண்டால் அவளுக்கு வேறு எதுவும் வேண்டாமே.
ஆட்டம் போட்டு முடித்து சிலு சிலு என்று அடிக்கும் காற்றில் உடைகள் காயும் வரை நின்று விட்டு , பிறகு தேனீ சென்றார்கள்.
அங்கு அனைவருக்கும் உடைகள் மற்றும் அவர்கள் கேட்ட அனைத்தையும் வாங்கி கொடுத்து , ரூபாவின் பொறுப்பில் இளையவர்கள் இருவரையும் அங்கிருந்த உணவகத்தில் விட்டு அதன் அருகில் இருந்த மனநல மருத்துவரை காண சென்றான்.
முன்பே அவரிடம் பதிவு செய்திருந்தான், அம்முவின் பைல் அனைத்தையும் அவருக்கு மெயில் செய்திருந்தான் .
அவளை தன் அறையில் இருத்தி அவளுடன் பேசிப்பார்த்தவர் , பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு ஜெகனை உள்ளே அழைத்தார்.
“மிஸ்டர் ஜெகன்நாதன் , உங்க மனைவி ரொம்ப நல்லா குணமாயிட்டு வராங்க , நல்ல முன்னேற்றம் தெரியுது”.
“இந்த ரிப்போர்ட் வெச்சு பாக்கும்போது நீங்க பர்ஸ்ட் டே அவங்க எப்படி இருக்காங்கனு அனுப்பின வீடியோக்கும் , இப்போ நா பாக்குற , பேசுற அம்முவுக்கும் நிறைய மாற்றங்கள்”.
“கூடிய சீக்கிரம் அவங்க நினைவுகள் திரும்பிடும், எந்த மருந்தும் குடுக்கவேண்டாம் , அவங்க மூளை செல் கொஞ்சம் கொஞ்சமா தன்னை தானே சரி பண்ணுது”.
“அத நாம தொல்லை பண்ண வேண்டாம் இப்போ எப்படி இருக்காங்களோ அப்படியே இருக்கட்டும் , நீங்க சொன்ன அம்மு இப்படி தான இருந்தாங்க அந்த பழைய காலத்துக்கு தான் அவங்க போறாங்க”.
“அது நல்ல விஷயம் , ரசிச்சு பிடிச்சு எல்லாம் அவங்க செய்யட்டும், அது மட்டுமே அவங்கள உங்ககிட்ட திரும்ப கொண்டு வரும், நவ் ஷி இஸ் பெர்பெக்ட்லி குட்” என்க அத்தனை நேரம் இருந்த அழுத்தம் குறைந்த போல.
“தேங்க்யூ டாக்டர்” என்று கை குலுக்க.
“உங்க ஜாப் பத்தி முழுசா சொல்ல வேண்டாம் , லைக்… எவ்ளோ நாள் அங்க இருக்கணும் , அதெல்லாம்… வேலைக்கு போறேன் வந்துடுவேன் அப்படி லைட்டா சொல்லி கன்வின்ஸ் பண்ணுங்க” என்றவர் விடை கொடுத்தார்.
நாளை விருந்து முடிந்து இரவு அவன் செல்ல வேண்டும் எப்படி அவளுக்கு இதை புரிய வைப்பது என்று இன்னும் அவனுக்கு தெரியவில்லை.
இரவு மாதவி பெண்கள் அனைவருக்கும் மருதாணி வைத்துவிட்டுக் கொண்டிருந்தார் , சித்தப்பாவும் மாமாவும் தூர இருந்து வந்த சொந்தங்கள் சிலருக்கு தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.
இவன் அவன் அறையில் புறப்பட தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.
கொஞ்சம் நேரத்திற்கு முன்பு வந்த தொலைப்பேசி அழைப்பில் இருந்தது அவன் நினைவுகள் , கிருஷ்னன் மற்றும் சங்கரன் சிறையில் இருக்க ராஜீவ் கிருஷ்ணாவிற்கு எதிராக ஆதாரம் இல்லாமல் விடுதலை ஆகி இருந்தான்.
சொத்துக்கள் முடக்கப் பட்டிருக்கிறது , இப்பொழுது அவர்களுக்கு பண தட்டுப்பாடு நிறைய.
ஆனால் ராஜீவ் கோபம் கொள்ளும் ஒரு சம்பவம் இன்று அங்கு நடந்தது , “தரவாடு வீடு அதன் அருகில் இருக்கும் வீடு அதை சுற்றிய இடம் மற்றும் மலையில் இருக்கும் இருபத்தி ஐந்து ஏக்கர் ரப்பர் தோட்டம் கார்தும்பிக்கு மட்டும் சொந்தமானது”.
“அதும் இவை அனைத்தும் பூர்விக சொத்து அதை முடக்க கூடாது” என்று இவனின் வக்கீல் வாதாடி அவளுடைய சொத்துக்களை மீட்டு விட்டார்.
அவனின் அதிர்ச்சி சுமந்த முகம் பார்க்க மிக திருப்தியாக இருந்தது ஜெகனிற்கு.
இவை அவளின் சொத்துக்கள் என்று இன்று வரை அவளே அறிந்ததில்லை.
நேரே வீட்டிற்கு வந்த ராஜீவ் அவன் பாட்டி லக்ஷ்மியம்மாவின் முன் கண்களில் கனலோடு நின்றான் “என்ன நினைச்சுட்டு இருக்கான் அவன்”.
“இந்த சொத்து எப்படி அவளுக்கு மட்டும் சொந்தம் ஆகும் , அது எப்படி அச்சுதன் சித்தப்பாக்கு மட்டும் இவ்ளோ சொத்து” என்று இரைந்தவன்.
“ஜெகன்.. ஜெகன்.. என் வாழ்க்கையும் இவனால நாசமா போச்சு , இப்போ சொத்தும் போச்சு” என்று தலையில் கை வைத்து அமர.
“அவன் எந்த தப்பும் பண்ணல , நீங்க என்ன வினையை விதைச்சீங்களோ அத இப்போ அறுவடைப் பண்றீங்க அவ்ளோ தான்”.என்றார் லக்ஷ்மியம்மா.
“எனக்கு தெரியணும் , எப்படி அவளுக்கு மட்டும் இது எல்லாம் சொந்தம்”.
“ஏன்னா இது அவ அப்பா சொத்து இல்ல , அவ அம்மா ஸ்ரீ நந்தினியோட சொத்து” என்க.
“என்ன!! அவ அம்மாக்கு சொத்து இருக்கா” என்றான் அதிர்ச்சியாக.
“இவ்ளோ தாண்டா நீ … என்ன தெரியும் உனக்கு அவளப் பத்தியோ அவ அம்மாவைப் பத்தியோ , இன்னும் சொல்லனும்னா அவ அம்மா சொத்துல தான் உன் அப்பன் சித்தப்பன் நீ எல்லாம் வாழ்ந்தீங்க செத்துப் போன உன் தாத்தா உட்ப்பட”.
“எந்த உண்மையையும் உங்க யார்கிட்டயும் சொல்லாம மறச்சு வெச்சு யோக்கியனுங்க மாதிரி சுத்துனாங்களே உன் அப்பனும் சித்தப்பனும் , அவனுங்க கிட்ட கேளு”.
“அப்பறம் உன் அச்சுதன் சித்தப்பா , என்னைக்கு என் ஸ்ரீநந்தினி இறந்தாலோ அன்னைக்கே உன் தாத்தாவும் சித்தப்பாவும் எண்ணப் பொறுத்த வரைக்கும் செத்துட்டாங்க” என்றவர் உள்ளே செல்ல.
மரணத்தின் கடைசி நொடியில் மனைவியை பார்க்க ஏங்கிய கணவரை, அவரின் உடல் சிதையில் எரியும்போது கூட பார்க்க செல்லாத லக்ஷ்மி பாட்டி இப்பொழுது நினைவு வந்தார் அவனுக்கு.
வாயிலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தான் ராஜீவ் கிருஷ்ணா.
“ஏதோ உங்க அப்பாவும் சித்தப்பாவும் தப்பு பண்ணி இருக்காங்க உங்களக்கு பங்கு இல்லையேன்னு நினைச்சு எங்க பொண்ணு வாழ்க்கையை யோசிச்சு உங்கள காப்பாத்த நெனச்சோம்”.
“ஆனா உங்க குடும்பத்துல ஏதோ பெரிய ரகசியம்லாம் இருக்கு போலயே , உங்க கூட வாழ என் பொண்ணு தயாரா இல்ல அனுப்ப நாங்களும் விரும்பல , இதோட முடிச்சிடலாம்” என்ற ராஜீவின் மாமனார்.
“பிரச்னை பண்ணாம கையெழுத்து போட்ருங்க , ஏன்னா உங்க குடும்பம் மேல இப்போ நிறைய பழி இருக்கு , அதால எங்களுக்கு ஈஸியா டிவோர்ஸ் கிடைச்சுடும்”.
“வீனா அதுக்கும் அசிங்கப்படாதீங்க” என்க.
“என்ன பேசுறீங்க அதெல்லாம் ஒன்னும் இல்ல , இது அந்த ஜெகன் வேணும்னே செஞ்சது , நாங்க தப்பு பண்ணலன்னு நிரூபிப்போம்”
“இத விரல் சப்புற குழந்தைகிட்ட சொல்லுங்க , ஆதாரத்தோடு உங்கள அந்த தம்பி பிடிச்சுருக்கு , ஏதோ பொண்ணு சவகாசம்னு நினைச்சோம் எல்லாரும்”.
“அப்பறம் தான தெரியுது பொண்ணுங்க மூலமா போதை மருந்தும் தங்கமும் கடத்தி இருக்கீங்க , அதும் ரெண்டு வருஷம் உங்கள கண்காணிச்சு ஆதாரத்தை அந்த பையன் சேர்த்துருக்கான்”.
“அதோட முடிஞ்சுதா , நாலு வருஷம் முன்னாடி நடந்த தற்கொலை சம்பவத்துல உங்க எல்லார்க்கும் பங்கு இருக்கு அதோட ஆதாரமும் குடுத்து ஜெகன் இவங்க எல்லாரையும் கதறவிடப் போறாரு”.
பேசவேண்டியதை பேசிவிட்டு மகளை அழைத்துக் கொண்டு அவர் செண்டு விட்டார்.
மொத்தமே மூன்று நாட்கள் தான் மனைவியோடு இருந்தான், அதும் அவர்களுக்குள் ஒன்றுமே நடக்கவில்லை , தாலி காட்டியதோடு சரி, மூன்று நாட்களில் திருமண பந்தம் முடிந்து விட்டது.
வெகு நேரமாக அடித்த அலைப்பேசியை எடுத்தவன் புதிய எண்ணைப் பார்த்து ஒரு நிமிடம் தயங்கி பிறகு எடுத்தான் “ஹலோ” என்க.
“இங்க குடு” என்று அவளிடம் இருந்து போனை வாங்கிய நீலவேணி “உன் தங்கச்சி இங்க எங்களுக்கு தேவை இல்லை , அவளை முதல்ல முடக்கணும் பழைய மாதிரி , அப்பறம் இங்க இருந்து கடத்தணும், உன்னால முடியுமா ??” என்க.
அவன் மூளை வேகமாக வேலை செய்தது , அவளை இங்கு கொண்டு வந்து விட்டால் சொத்துக்களை மாற்றிக்கொள்ளலாம்.
அவளை வைத்து ஜெகனிடம் இருக்கும் தந்தை மற்றும் சித்தப்பாவுக்கு எதிரான ஆதாரத்தை அழிக்கலாம் , “முடியும்” என்றான்.
“அவன் நாளைக்கு கிளம்பிடுவான் , நீ முதல்ல மருந்து என்னனு சொல்லு , மிச்சத்தை நா பாத்துக்குறேன்” என்க.
அம்முவின் அறையில் அவளுக்கு கொடுத்துக்கொண்டு இருந்த மருதின் மிச்சம் மீதி பார்த்து அதன் பெயர்களை கூறினான்.